‘எனக்கு முன்னிருந்த தலைவர்களால் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. இனிமேல், நான் உட்பட எவரும் யுத்தத்தைக் காரணம் காட்டி நாட்டை அபிவிருத்தி செய்யாமல் இருக்க முடியாது. இதற்காக அனைவரும் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். படைவீரர்களைப் பாராட்டும் விழா நேற்று பாராளுமன்றத்திற்கு முன்னாலுள்ள மைதானத்தில் நடந்தது.
இதில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட ஜனாதிபதி, இலட்சக் கணக்கானோர் கலந்துகொண்ட ஜனசமுத்திரத்தின் மத்தியில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; 30 வருடங்களுக்குப் பின்னர் நாட்டை முழுமையாக மீட்டெடுத்ததன் பின் நடத்தப்படும் முதலாவது தேசிய விழா இது. புலிகள் என்றதும் சிலரின் கால்கள் நடுங்கின. புலிகள் திறமைமிக்கவர்கள், அவர்களுடன் போராடி வெல்ல முடியாது. யுத்தம் செய்ய வேண்டாம் என்றெல்லாம் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களும் இந்த நாட்டிலுள்ள சிலரும் எம்மிடம் கூறினர்.
இந்த நாட்டை ஆட்சி செய்த முன்னாள் தலைவர்களால் கூட புலிகளை தோற்கடிக்க முடியாமல் போய்விட்டது. நாட்டை பிரித்துக் கொடுத்து விடுங்கள் என்று கூட கூறினர். ஆனால் நான் எனது முப்படைத் தளபதிகளை நம்பினேன். இந்நாட்டிலுள்ள தாய்மாரின் புதல்வர்களை நம்பினேன். இந்த நாட்டிலுள்ள அனைவரிடத்திலும் நாட்டுப்பற்று இருக்கிறது. நாட்டின் மீது அன்பும் இருக்கிறது. இவை புதைக்கப்பட்டிருந்தது.
கடற்புலிகளின் தளங்கள் அனைத்தும் கடலுக்குள்ளேயே சமாதியாக்கப்பட்டு விட்டன. எமது பிள்ளைகள் பாடசாலைக்கு சென்ற போது, அங்குள்ள பிள்ளைகள் துப்பாக்கிகளை ஏந்தின. ஆனால் பிரபாகரனின் பிள்ளைகள் பாடசாலை சென்றனர். பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பிவிட்டு எமது தாய்மார் பாடசாலை கதவோரம் நின்று காவல் புரிந்தார்கள். ஏன் குண்டு வெடிக்கும் என்ற பயம் அவர்களுக்கு. இனி அந்த குண்டு வெடிக்காது என்பதை எமது தாய்மார்களுக்கு கூறி வைக்க விரும்புகின்றேன்.
தேசியக் கொடியை வடபகுதியில் பறக்க விட புலிகளிடம் அனுமதி பெற வேண்டியிருந்த காலமொன்று இருந்தது. ஆனால் அந்தநிலை இனி இல்லை. எங்கும் தேசியக் கொடி பறக்கும். தலதா மாளிகைக்கு முன் பறக்க விடப்படும் தேசியக் கொடி தான் புதுமாத்தளனிலும் பறக்கும். இப்போது நாம் பெரும் வெற்றிக்களிப்பில் இருக்கிறோம். இந்த வெற்றி கொண்டாட்டமானது வேறு எவரது மனதையும் புண்படுத்தக் கூடியதாக இருக்கக்கூடாது.
இன்று தமிழ், முஸ்லிம் வீடுகளிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அனைவரும் இந்த நாடு பூரண சுதந்திரம் பெற்றுவிட்டதாகவே கருதுகிறார்கள்.
தீவிரவாதத்தை எவ்வாறு தோற்கடித்தோமோ அதே போன்று போதைப் பொருள் பாவனையையும், சட்ட விரோத மதுபான உற்பத்தியையும் ஒழிக்க வேண்டியுள்ளது. இந்தச் சவாலிலும் ஜெயிப்போம் என்றார் ஜனாதிபதி. பொலிஸ் மற்றும் முப்படை வீரர்களையும் பாராட்டும் தேசிய விழா பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது.