எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மேலதிக விசாரணைக்காக கொழும்பில் பிரபாகரனின் பெற்றோர்

வவுனியாவிலுள்ள முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் கடந்த வாரம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி ஊடகங்களில் நேற்று திங்கட்கிழமை செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டே பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வேலுப்பிள்ளை பார்வதிபிள்ளை ஆகிய இருவரும் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பான இடமொன்றில் வைத்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் மேற்குறித்த இராணுவ அதிகாரி தெரிவித்திருக்கிறார். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயப் பகுதியிலிருந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வந்த மக்களுடன் சேர்ந்து இடம்பெயர்ந்து வந்திருந்த இவர்கள் இருவரும் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக படையினரால் கைது செய்யப்பட்டதாகவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், பிரபாகரனின் பெற்றோர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து இராணுவப் பேச்சாளரான பிரிகேடியர் உதய நாணயக்காரவிடம் வினவியபோது அது பற்றி உத்தியோக பூர்வமாக தனக்கு எதுவும் அறிவிக்கப்படவில்லையெனக் கூறினார்.

பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் புதுக்குடியிருப்பில் கண்டுபிடிப்பு

topetro1111.pngகப்பலை மூழ்கடிக்கும் பாரிய நீர்மூழ்கி வெடி குண்டுகள் இரண்டையும் அதனை ஏவும் கருவியொன்றையும்  இராணுவத்தின் 8 ஆவது அதிரடிப்படையினர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் நேற்று தேடுதல் நடத்திய படையினர் நிலத்தின் கீழ் புதைத்து வைக்கப்பட்டிருந்த இந்த பாரிய குண்டுகளையும் ஏவியையும் மீட்டுள்ளனர்.

குண்டுகளை ஏவும் கருவி 28 அடி நீளமும் 5 அடி 10 அங்குல் சுற்றளவும் கொண்டது. நீர்மூழ்கி வெடி குண்டுகள் 26 அடி நீளமும் 5 அடி 07 அங்குல சுற்றளவும் கொண்டவை எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

முப்படைகளுக்கும் புதிதாக 50 ஆயிரம் பேர் சேர்த்துக்கொள்ளப்படுவர்

keheliya-111.jpgயுத்தம் முடிவடைந்துள்ளபோதும் பலமான பாதுகாப்புப் படைகள் நாட்டுக்கு அவசியம் என்பதால் மேலும் 50 ஆயிரம் பேர் முப்படைகளுக்கும் பொலிஸ் சேவைக்கும் புதிதாகச் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர் என தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது,

பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் முடிந்து விட்டதால் படையனரின் எண்ணிக்கை குறைக்கப்படுமா என்றொரு கேள்வி எழுகின்றது. எனினும் அவ்வாறு நடைபெறாது. இனி இராணுவத்தினருக்கு வேலையில்லை அவர்கள் வீடு செல்லவேண்டியதுதான என சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். இது தவறான கணிப்பீடாகும்.

மூன்று தசாப்தங்களாக அரசின் கட்டுப்பாட்டில் இருக்காத 16 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இப்போது முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது. எனவே இங்கு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த பலம் வாய்ந்த கூடுதலான படையினர் தேவைப்படுகின்றனர். அதற்காவே முப்படைக்கும் பொலிஸ் சேவைக்கும் புதியவர்களைச் சேர்த்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

“13 ஆவது திருத்தம் வெறும் சட்ட ஏற்பாடே’

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிவாரணியாகத் தெரிவிக்கப்படும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தமானது “சட்டரீதியான ஏற்பாடு’ என்பதற்கு அப்பால் வேறு ஒன்றும் இல்லை என்று பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்ப தொழில் நிபுணர்களின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள தமிழர்களின் தற்போதைய நிலைமை தொடர்பான மாநாடொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜேந்திரன் தெரிவித்ததாவது;

இலங்கையிலுள்ள தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு 13 ஆவது திருத்தம் தீர்வாக அமையுமென மக்களில் ஒரு சாரார் கூறுகின்றனர். ஆனால், சிங்களவர், தமிழர் என்ற இரு வேறுபட்ட இனங்கள் அங்கிருப்பதைக் கூட திருத்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.

பிரேரணைகள் ஒற்றையாட்சியை வலுப்படுத்துவதாகவும் மாகாண சபைகளை உருவாக்குவதாகவுமே உள்ளன. ஆனால், மாகாண சபைகளில் உள்ள அமைச்சர்களுக்கு எந்த அதிகாரங்களும் இல்லை. மாகாண சபையின், ஆளுநரின் அடிவருடிகளாக இருப்பதற்கு அப்பால் அமைச்சர்களால் எதுவும் செய்யமுடியாது. ஆளுநரை ஜனாதிபதியே நியமிக்கிறார்.

பொது நிர்வாகம், நிதி, காணி என்பன உட்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பாக மாகாண அமைச்சர் சபைக்கு 13 ஆவது திருத்தம் அதிகாரங்களை வழங்கவில்லை. ஆளுநருக்கே முக்கியமான விடயங்கள் தொடர்பான அதிகாரங்கள் உள்ளன. அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் வெறும் நிர்வாக செயற்பாடுகளே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் திணைக்களம் மத்தியிடமே உள்ளது. வருடாந்த வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக அதிகாரங்களையோ சனத்தொகைப் பரம்பல் மாற்று நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான அதிகாரங்களையோ மாகாண சபைகள் கொண்டிருக்கவில்லை. காணி விவகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றும் இராஜேந்திரன் குறிப்பிட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்திச் சேவை நேற்று திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.

இராணுவ வெற்றியை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்த தடை

lakshman_hulugalla_.jpgதேர்தல் பிரசாரங்களின்போது, இராணுவ வெற்றிகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சுவரொட்டிகள், பதாதைகள் அல்லது ஊடகங்களில் எந்தவொரு வேட்பாளரும் இராணுவத்தினரின் பிரதிமைகளைப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது.  தேர்தலில் போட்டியிடுகின்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் தேர்தல் பிரசாரங்களில் இத்தகைய படங்களை பயன்படுத்த விரும்பினால் அதற்காக அவர்கள் பாதுகாப்பு அமைச்சிடமிருந்து எழுத்துமூலமான அனுமதியைப் பெற்றிருக்கவேண்டுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரியில் தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்

images.jpgஇரத்தின புரியின் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக களுகங்கை உட்பட பல ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பாளர் கேணல் பிரியங்கர தெரிவித்தார்.

தற்போது 17 அடி 8 அங்குலத்தில் காணப்படும் களு கங்கை ஆற்றின் நீர் மட்டம் 19 அடிக்கு மேல் உயருமாயின் இரத்தினபுரி பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் பட்சத்தில் அங்கு உதவிகளை வழங்குவதற்கு மாவட்ட செயலகம்,பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ குழு மற்றும் தொண்டு நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது 

பெட்ரிகா உலக சாதனை

petrica.jpgபெண் களுக்கான 400 மீற்றர் பிறீ ஸ்டைல் நீச்சல் போட்டியில் இத்தாலியின் பெட்ரிகா பெலிகிரினி புதிய உலக சாதனை பøடத்தார்.  இத்தாலியில் நடைபெற்றுவரும் மெடிடெரனின் போட்டியில் பெட்ரிகா 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.41 வினாடிகளில் முடித்தே இந்த உலக சாதனையை படைத்தார்.

இதன்போது அவர் பிரித்தானியாவின் ஜொவான் ஜக்ஸன் படைத்திருந்த சாதனையையே முறியடித்தார். ஜக்ஸன் 400 மீற்றர் பிறீ ஸ்டைல் போட்டியை 4 நிமிடம் 0.66 வினாடிகளில் முடித்து உலக சாதனை படைத்திருந்தார்.

முன்னாள் புலி உறுப்பினர்களுடன் நாமல் ராஜபக்ஷ சந்திப்பு

namal_rajapaksa_visit.jpg‘இளைஞர் களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ, வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்து புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் இருக்கும் சரணடைந்துள்ள புலி உறுப்பினர்களை நேரில் சந்திதது உரையாடினார். படையினரிடம் சரணடைந்த 663 புலி உறுப்பினர்கள் பூந்தோட்டம் நிவாரணக் கிராமத்தில் புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கான அனைத்து வசதிகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது.

புலிகள் அமைப்பில் தலைமைப் பதவி வகித்தவர்களும் இந்நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு விசேட புனர்வாழ்வளிக்கும் நடவடிக்கைகளை எதிர்காலத்தில் செயற்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கும் பயிற்சி நிலையத்தில் தங்கியிருக்கும் முன்னாள் புலி உறுப்பினர்களது பொழுதுபோக்கிற்காக ‘இளைஞர்களுக்கு நாளை’ அமைப்பின் தலைவர் நாமல் ராஜபக்ஷ இரண்டு தொலைக்காட்சிப் பெட்டிகளை அன்பளிப்பாக வழங்கினார்.

புலிகள் அமைப்பின் காவல்துறையில் பணியாற்றிய அ. அஜந்தன்,  பயங்கரவாதத்தால் நாட்டுக்கு நல்லது எதுவும் நடைபெறவில்லை. தமிழர்களின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. ஜனாதிபதிக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க நாம் தயார். இனி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டோம் என்றும் கூறினார்.

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காது தடுக்க வன்னியில் மீளக்குடியமர்வின் பின்னரும் மக்களுடன் படையினர் தங்கியிருப்பர்.

udaya_nanayakkara_brigediars.jpgவன்னியில் மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மீண்டும் தமது பகுதிகளில் குடியேற்றப்பட்ட பின்னரும் அவர்களுடன் படையினர் தங்கியிருப்பர் என்று இராணுவப் பேச்சாளர்  பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் இரண்டு இராணுவத் தலைமையகங்கள் ஏற்படுத் தப்படுகின்றன. படையினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் பி.பி.ஸியிடம் இதுகுறித்து பி.பி.ஸி. வெளியிட்ட செய்தி வருமாறு:

மற்றுமொரு தீவிரவாத எழுச்சியை ஒடுக்குவதற்கும் அபிவிருத்தித் திட்டங்களில் உதவுவதற்கும் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க அரசுஎண்ணியுள்ளது எனப் பாதுகாப்பு அமைச்சுவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்தவர்கள் இவ்வருட இறுதிக்குள் மீளக் குடியேற்றப்படுவார்கள் எனத் தெரிவிக்கும் அரசு, அதற்குப் பிறகும்  குறிப்பிட்ட காலம் வரை இராணுவம் அவர்களுடன் தங்கியிருக்கும் எனவும் கூறுகின்றது. வடக்கில் இரண்டு இராணுவத் தளங்கள் அமைக்கத் தாங்கள் எண்ணியுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார  தெரிவித்தார்.

“தற்போது முல்லைத்தீவிலும் கிளிநொச்சியிலும் இரு இராணுவத் தலைமையகங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்தத் தலைமையகங்களின் கீழ் முகாம்கள் அமைக்கப்படும். இதன் அர்த்தம் மக்கள் அங்கு மீளக் குடியேற முடியாது என்பது அல்ல. மக்கள் மீளக் குடியேறலாம்.  எனினும், அந்தப் பகுதியில் நடைபெறும் நடவடிக்கைகளை நாங்கள் கண்காணிக்க வேண்டும். எதிர்காலத்தில் அந்தப் பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம்”என்றார்.

சிறுமி உட்பட 3 பெண்களின் சடலங்கள் நுவரெலியா பகுதி வீடொன்றிலிருந்து மீட்பு – 3 வயதுச் சிறுவனைக் காணவில்லை

நுவரெலியா, அம்பேவல பட்டிப்பொல பகுதியில் வீடொன்றிலிருந்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் மூவரது சடலங்கள் நேற்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவர் உட்பட 3 பெண்களது சடலங்களே மீட்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். பட்டிப்பொல ஜனப்பதிய என்ற கிராமத்தில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது; சந்திரதிலக என்பவர் மகியங்கனை தெகியத்தகண்டியில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி, பிள்ளைகள் ஜனப்பதிய கிராமத்தில் வசித்து வந்தனர்.

சந்திரதிலக ஞாயிற்றுக்கிழமை வீட்டிற்கு வந்துள்ளார். எனினும் வீடு பூட்டியிருக்கவே அந்தக் கிராமத்தில் உள்ள மைத்துனரின் வீட்டிற்குச் சென்று தங்கிவிட்டு நேற்றுக் காலை அங்கு வந்தபோதும் வீட்டுக் கதவுகள் மூடப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டுக்கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, மனைவியும் அவரது தாயும் மகளும் இறந்துகிடந்தனர். இது குறித்து அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு தெரிவிக்கவே பொலிஸார் அங்கு வந்து சேர்ந்தனர்.

இறந்துகிடந்த மூவரும் தலையில் பலமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதேநேரம், வீட்டிலிருந்த 3 வயது மகன் காணாமல் போயுள்ளார். பிரேமவதி (80 வயது) அவரது மகளும் சந்திரதிலகவின் மனைவியுமான மல்லிகா (35 வயது) மற்றும் அவரது 10 வயது மகளுமே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படுகொலைக்கான காரணம் குறித்து நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேத பரிசோதனைக்காக 3 சடலங்களும் நானுஓயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டன. காணாமல் போன சிறுவனை பொலிஸார் தேடி வருவதுடன், கொலையாளிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.