எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

பிரான்சில் கறுப்பு யூலை நாளினை முன்னிட்டு ஒன்றுகூடல்

blackjuli.jpgகறுப்பு ஜூலை நினைவாக பிரான்ஸில் இன்றும், நாளை மறுநாளும் ஒன்றுகூடலும் கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறவுள்ளது.  1983 யூலை 23 தமிழ் மக்கள் மாபெரும் இனப்படுகொலையில் சிக்கி ஆயிரக்கணக்கான உயிர்களையும் பெறுமதிமிக்க தமது உடமைகளையும் இழந்த நாள். இந்நாளை நினைவுபடுத்தியும், சிறிலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்புத்தெரிவித்தும் பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கத்தில் நடைபெறவுள்ளது

இடம்  – பிரான்சின் மனிதவுரிமைச்சதுக்கம்
காலம் – 23.07.2009 வியாழக்கிழமை
நேரம் – பி.ப 16.00 மணி தொடங்கி 18.00மணி வரை
Métro  – Trocadéro – Ligne 6, 9

கறுப்பு யூலை நாளை முன்னிட்டு நடைபெறும் ஒன்றுகூடலைத் தொடர்ந்து 24 மற்றும் 26ம் திகதிகளில் பஸ்ரில் பகுதியில் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 19.00 மணிவரை கவனயீர்ப்புப்போராடட்டம் நடைபெறும் அதேவேளை 26ம் திகதி மதியம் இரண்டு மணிக்கு றீப்பப்ளிக் பகுதியிலிருந்து மாபெரும் கண்டனப்பேரணி ஆரம்பமாகி ஏற்கனவே கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் பஸ்ரில் பகுதியை வந்தடையவிருக்கிறது.

மாபெரும் தமிழினப்படுகொலையின் 26 ஆண்டுகள் கடந்தும் இன்றும் திட்டமிட்ட இனப்படுகொலையும், மிகக்கொடுமையான வதைப்புக்களும் நடைபெற்றபடியே இருக்கிறது எமது மக்களைக்காப்பாற்ற பிரான்சு வாழ் தமிழ் அணிதிரள்வோம் என பிரான்ஸ் ஒருங்கமைப்பு குழுக்கள் அழைப்பு விடுத்துள்ளது.

இடம்பெயர் மக்களுக்கு அமெரிக்கா 14 மில். அமெ. டொலர் நிதியுதவி

jams_usa.jpgஇடம் பெயர் முகாம்களில் தங்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களுக்கு உதவிகளை வழங்க அமெரிக்கா நிதியுதவி அளித்துள்ளது.

இடம்பெயர் மக்களது உணவு விநியோகத்தைச் சீர் படுத்தும் நோக்கில் 14 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் வழங்கப்பட்டுள்ளது. உலக உணவுத் திட்டத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களுக்காக இந்நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் பதில் தூதுவர் ஜேம்ஸ் மெர் இந்த நிதியுதவிக்கான காசோலையை வழங்கியுள்ளார். அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய இந்தப் பணம் பயன்படுத்தப்படவுள்ளது.

மீளக் குடியமர்த்துவதற்கு தெளிவான திட்டம். கால அட்டவணை அவசியம் – ஐ.நா

அகதி முகாம்களில் தங்கியிருக்கும் 3 இலட்சம் மக்களை மீளக்குடியமர்த்துவது தொடர்பான தெளிவான திட்டத்தையும் கால அட்டவணையையும் அரசாங்கம் முன்வைக்க வேண்டுமென ஐ.நா. செவ்வாய்க்கிழமை அழைப்பு விடுத்திருக்கிறது. உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு இவை முக்கியமான விடயங்கள் என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

வவுனியா, மன்னார், திருகோணமலை, யாழ்ப்பாண மாவட்டங்களில் 35 முகாம்களில் யுத்தத்தால் இடம் பெயர்ந்த பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்கள் திரும்பிச் செல்வது தொடர்பான தெளிவான திட்டங்களும் கால அட்டவணையும் இருப்பது முக்கியமானது என்று ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதி நீல் புனே தெரிவித்திருக்கிறார்.

“மாதக்கணக்காக நீங்கள் தொடர்ந்தும் 3இலட்சம் மக்களை அங்கு (முகாம்களில்) நீண்டகாலத்திற்கு வைத்திருந்தால் நிதியைப்பெற்றுக்கொள்வது (நிவாரண நடவடிக்கைகளுக்கு) மிகவும் கடினமானதாக இருக்கப்போகின்றது, என்று நான் நினைக்கிறேன்’ என்று நீல் புனே கூறியுள்ளார். நல்லிணக்கத்தின் முதல் கட்டமானது எவ்வாறு (இடம்பெயர்ந்தோர்) நடத்தப்படுகிறார்கள் என்பதாகும். அரசு அதனை அடையாளம் கண்டுள்ளது. நாங்கள் அதனை அடையாளம் கண்டுள்ளோம். ஆனால் இதுவொரு பாரிய சவாலாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இடம் பெயர்ந்த மக்களை பராமரிக்கும் பொது மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டமானது 155 மில்லியன் டொலர் நிதித் தொகையை மதிப்பீடு செய்திருந்தது. ஆனால் அது 270 மில்லியன் டொலராக அதிகரித்துள்ளது. இதுவரை 97 மில்லியன் டொலரே கிடைக்கபெற்றுள்ளது.( தேவைப்படும் தொகையில் 36 ./.) 185 திட்டங்களுக்கு தேவையான 173 மில்லியன் டொலர் பற்றாக்குறையாக உள்ளது. ஆயினும் இடம்பெயர்ந்தோரின் அடிப்படைத் தேவைகளுக்கு நிதி வழங்கப்படுகிறது. விநியோகத்தைப் பெற்றுக்கொள்வதில் இப்போது அதிகளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நான் தற்போது நினைக்கிறேன் என்று புனே கூறியுள்ளார்.

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக வழக்கு – இன்றுமுதல் அமுலில்

mosquitfora.jpgநுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரும் நடைமுறை இன்று முதல் அமுலுக்கு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சட்டத்தை மீறும் அனைத்து அரசாங்க நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்கு எதிராக வழக்குத் தொடருமாறு சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கும் வைத்திய அதிகாரிகளுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.

நுளம்புப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை சரியாக விளங்கிக்கொள்ளாமையின் காரணமாக சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரிகள்  தவறியுள்ளனர். இவர்களுக்கு அரசியல் யாப்பினூடாக மேலதிக அதிகாரங்களை வழங்க முடியாதுள்ளது. எனினும் இச்சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை,  தமது கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாகவுள்ளவர்கள் தொடர்பான விபரங்களைத் தொகுக்குமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியிருக்கிறார். டெங்கு நோயைப் பரப்பக்கூடிய சுற்றுச் சுழலை வைத்திருப்பவர்களுக்கு எதிராக அபராதம் அறவிடுவதுடன் மற்றும் தண்டனை வழங்குவதற்கான சட்டம் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.  இதன்படி குற்றவாளியாகக் காணப்படுகின்றவர்களுக்கு ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்றும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை அணிக்கு 492 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

srilanka-cri.jpgபாகிஸ் தான் அணியுடனான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு 492 ஓட்டங்களை இலக்காகக்கொண்டு இலங்கை அணி தற்போது தனது இரண்டாவது இன்னிங்சுக்காகத் துடுப்பெடுத்தாடி வருகிறது.

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியுடன் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டியிலேனும் தனது ஆறுதல் வெற்றியைப் பெறும் நோக்கில் பாகிஸ்தான் அணி சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடி தனது இரண்டாவது இன்னிங்சுக்காக அதிக ஓட்டங்களைக் குவித்துள்ளது.

இப்போட்டியில் தனது முதலாவது இன்னிங்ஸில் 299 ஓட்டங்களைப் பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கட் இழப்புக்கு 425 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இலங்கை அணி அதன் முதல் இன்னிங்ஸில் 233 ஓட்டங்களையே பெற்றது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணியை விட 66 ஓட்டங்களைக் குறைவாகப் பெற்றிருந்த இலங்கை அணி தற்போது 492 எனும் ஓட்டங்களை இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடி வருகிறது.

போட்டியின் நான்காம் நாளான இன்று சற்று நேரத்துக்கு முன்னர் தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் நிறுத்தப்படும்போது இலங்கை அணி விக்கட் இழப்பின்றி 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

லண்டன் நிலாந்தனின் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை : த ஜெயபாலன்

Nilanthan Moorthiஎந்தத் தாய்க்கும் இந்த வயதில் தன் பிள்ளையை பறிகொடுக்கும் நிலை ஏற்படக்கூடாது!!! என கடந்த ஆண்டு குரொய்டனில் கொலை செய்யப்பட்ட நிலாந்தனின் தாயார் கலா மூர்த்தி லண்டன் குரல் பத்திரிகைக்கு அப்போது தெரிவிததிருந்தார். இந்தக் குற்றத்தைச் செய்தவர் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்று அன்று வேதனையுடன் தெரிவித்த அத்தாயின் வேண்டுகோளுக்கு சட்டம் பதிலளித்துள்ளது. யூன் 26 2009ல் ஸ்னேஸ்புருக் கிறவுண்கோட் ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) இக்கொலையைப் புரிந்ததாகத் நீதிபதி டேவிட் றட்போட் தீர்ப்பளித்து உள்ளார். யூலை 3ல் இதற்கான தண்டனை வழங்கப்பட்டது. வெள்ளை இனத்தவரான குரொய்டனில் வாழ்பவரான ஸ்ரீபன் பிறித்வெயிற் நான்கு குழந்தைகளின் தந்தையாவார்.

ஓகஸ்ட் 16 2008 அதிகாலை 1:30 மணியளவில் குரொய்டனில் இடம்பெற்ற தெருவோரக் கை கலப்பில் நிலாந்தன் கத்தி வெட்டுக்கு இலக்காகி சில சிலமணி நேரங்களில் உயிரிழந்தார். நியூஎடிங்ரன் பகுதியில் வாழும் முன்னாள் அன்ன பூரண உரிமையாளர்களான மூர்த்தி (காங்கேசன்துறை) – கலா (கரணவாய்) தம்பதிகளின் புதல்வனே நிலாந்தன். நிலாந்தனும் அவருடைய நண்பர்களும் நண்பர் ஒருவரின் பிறந்த நாளை குவேசியரும் ஜக் டானியலும் அருந்திக் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அப்போது போதையில் இருந்த நிலாந்தன் தெருவில் சென்று வந்த சிலரை வம்புக்கு இழுத்ததாக இவர்களுடைய நண்பரான மாணவன் ஒருவர் நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்துள்ளார். அப்படி வம்புக்கு இழுக்கப்பட்டவர்களில் ஒருவரே கொலையாளியான ஸ்ரீபன் பிறித்வெய்ற்.

Place_Where_Nilanthan_Murderedஅவ்வழியால் மினிகப்பில் பயணம் செய்துகொண்டிருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை சம்மர் ரோட்டில் உள்ள ரபிக் லைற்றில் வைத்து நிலாந்தன் வம்பிற்கு இழுத்ததாக நிலாந்தனின் நண்பர்களில் ஒருவரான ரக்டிப் சிங் (23) நிதிமன்றத்தில் தெரிவித்து உள்ளார். அப்போது ஸ்ரீபன் பிறித்வெயிற் நிலாந்தனை ‘பக்கி’ என்று இனத்துவேசத்துடன் விழித்துள்ளார். அப்போது நிலாந்தன் மினிகப்பின் பின் இருக்கையில் இருந்த ஸ்ரீபன் பிறித்வெயிற்றை யன்னலினூடாக இழுக்க முயன்றதாக அரச சட்டவாதி கியூசி கிறிஸ்தொப்பர் கின்ச் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தச் சலசலப்பில் அவ்விடத்தை விட்டகன்ற ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் 20 நிமிடங்கள் கழித்து நிலாந்தனுடனான தனது வன்மத்தை தீர்த்துக்கொள்ள கத்தியுடன் வந்துள்ளார்.

கத்தியை விசுக்கி நிலாந்தனின் கழுத்தில் ஆழமான வெட்டை ஏற்படுத்தியதில் நிலாந்தன் நினைவற்று வீழ்ந்ததை அவருடைய நண்பர்கள் நீதிமன்றத்தில் வேதனையுடன் தெரிவித்தனர். நிலாந்தனின் உயிரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடிக் கொண்டிருக்கையில் கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் லண்டன் வீதியில் இறங்கி நடந்து சென்றார். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை அருகில் அடிங்ரன் ரோட்டில் உள்ள குப்பைப் பையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். சம்பவ தினம் தனது நான்கு பிள்ளைகளும் உறங்கிக் கொண்டிருந்த மைத்துனியின் பிளற்இற்கு ஸ்ரீபன் பிறித்வெயிற் சென்றுள்ளார்.

நிலாந்தனை தான் தாக்கியதோ அல்லது நிலாந்தன் கொல்லப்பட்டதோ தனக்கு சில நாட்களின் பின்னர் பத்திரிகையில் பார்க்கும் வரை தெரியாது என கொலையாளி ஸ்ஸ்ரீபன் பிறித்வெயிற் நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தார்.

உடனடியாக மருத்துவவண்டி அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டு காயப்பட்ட நிலாந்தன் அருகில் உள்ள மேடே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவ்விடத்திற்கு வந்த பொலிசார் மதுபோதையில் இருந்த சில தமிழ் இளைஞர்களை அள்ளிச் சென்றனர். அங்கிருந்த மதுப் போத்தல்களையும் அவர்கள் கொண்டு சென்றனர்.

நிலாந்தன் மூர்த்தியுடைய இறுதி நிகழ்வுகள் ஓகஸ்ட் 31 2008ல் ஸ்ரெத்தம் கிரெமற்ரோரியத்தில் இடம்பெற்றது.

நிலாந்தனுடைய கொலை தொடர்பாக சில தினங்களிலேயே ஸ்ஸ்ரீபன் பிறித்வெய்ற் (30) பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கொலைக் குற்றம் பதிவு செய்யப்பட்டது. கொலையாளி சட்டன் மஜிஸ்ரேட் கோட்டில் ஓகஸ்ட் 21 2008ல் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.

Nilanthan’s Final Journeyஓகஸ்ட் 21 2008ல் நிலாந்தனின் துயர சம்பவத்தை அடுத்து நிலாந்தனின் பெற்றோரை லண்டன் குரல் பத்திரிகை சந்தித்தது. அப்போது ”எமது பிள்ளைகள் கால நேரத்துடன் வீடுகளுக்கு வந்துவிட வேண்டும், குழுக்களாக குழுமி நிற்பது போன்றவைகளை தடுக்க நாங்களும் பொலிஸாரும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறான சம்பவங்கள் இனி நடக்கக் கூடாது” என நிலாந்தனின் தாயார் தனது துக்கத்திலும் வேதனையிலும் உறுதியாகத் தெரிவித்து இருந்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் நிலாந்தன் உட்பட ஐந்து தமிழர்கள் வரை பிரித்தானியாவில் வேற்று இனத்தவர்களால் இனத்துவேசத்துடன் கொல்லப்பட்டு உள்ளனர்.

பாகிஸ்தான் அணி வலுவான நிலையில்

pakisthan-cri.jpgஇலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 2 வது இன்னிங்சில் பாகிஸ்தான் 3ம் நாள் ஆட்ட முடிவின்போது 300 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது.

பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் 16 ஓட்டங்களுக்கு 1 விக்கெட் இழந்த நிலையில் நேற்று மூன்றாவது நாள் ஆட்டத்தில் 67 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து இருந்தது. பின்னர் வந்த மலிக், மிஸ்பா உல் ஹக் ஜோடி பாகிஸ்தான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.

இந்த சோடி இணைப்பாட்டமாக 119  ஓட்டங்களைக் குவித்தனர். பாகிஸ்தான் அணி 186 ஓட்டங்களைப் பெற்றிருந்த நேரத்தில் மிஸ்பா 65 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார். பின்பு மலிக்குடன் அக்மல் இணைந்து 3ம் நாள் ஆட்ட முடிவின் போது இணைப்பாட்டமாக 114 ஓட்டங்களை பெற்று அணியை மேலும் ஸ்திரனப்படுத்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது மலிக் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்கங்களையும், அக்மல் ஆட்டமிழக்காது 60 ஓட்டங்கங்களையும் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் அணி முதலாவது விக்கெட்டை 16 ஓட்டங்களுக்கும், 2வது விக்கெட்டை 22 ஓட்டங்களுக்கும் 3வது விக்கெட்டை 54 ஓட்டங்களுக்கும் 4 வது விக்கெட்டை 67 ஓட்டங்களுக்கும் 5 வது விக்கெட்டை 186 ஓட்டங்களுக்கும் இழந்தது.

இலங்கை அணியின் சார்பாக பந்து வீச்சில் ஹேரத் 2 விக்கெட்டையும், துஷார, குலசேகர, மெதிவ்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 3ம் நாள் ஆட்ட முடிவின்போது பாகிஸ்தான் அணி 366 ஓட்டங்கள் முன்னிலை பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Pakistan  1st innings: 299
Sri Lanka 1st innings: 233

PAKISTAN 2nd innings (overnight 16-1)
Khurram Manzoor b Herath    2
Fawad Alam c and b Thushara    16
Younus Khan lbw b Kulasekera    19
Mohammad Yousuf c Sangakkara b Herath    23
Misbah-ul Haq c Sangakkara b Mathews    65
Shoaib Malik not out    106
Kamran Akmal not out    60

Extras: (b6, lb2, w1)     9

TOTAL (for 5 wkts, 95 overs)    300

Fall of wickets: 1-16 (Manzoor), 2-22 (Alam), 3-54 (Younus), 4-67 (Yousuf), 5-186 (Misbah).Bowling: Kulasekera 15-5-33-1 (w1), Thushara 19-2-84-1, Herath 37-6-113-2, Vaas 14-6-29-0, Mathews 10-1-33-1.

மன்னார்-திருமலை பஸ் சேவை இன்று ஆரம்பம்

bus_ctb_logos.jpgமன்னாரி லிருந்து திருகோணமலைக்கு நேரடி பஸ் போக்குவரத்துச் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கைப் போக்குவரத்துச் சபை இதனை ஆரம்பிக்கவுள்ளது.

இன்று காலை 6.30 மணிக்கு மன்னார் அரச பஸ் தரிப்பிடத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றே மன்னாரிலிருந்து திருகோணமலை நோக்கிப் புறப்படவுள்ளது. மன்னாரிலிருந்து காலை 6.30 மணிக்குப் புறப்படும் பஸ், வவுனியா சென்று அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைச் சென்றடையும்.

பின்னர் அதே பஸ் பிற்பகல் 1.30 மணிக்கு திருகோணமலையிலிருந்து அதே வீதியூடாக மன்னாரை வந்தடையும். இச்சேவை நாளாந்தம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 5 வருடங்களின் பின்னர் மன்னாரிலிருந்து திருகோணமலைக்கு அரச பஸ் சேவை, போக்குவரத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ9 பாதை பஸ் சேவைக்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்

bus.jpgஏ9 வீதியூடாக கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ் சேவையை நடத்துவதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் அனுமதி கேட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் அமல் குமாரகே தெரிவித்துள்ளார். ஆனால், அவர்களின் கோரிக்கை தொடர்பாக ஏ9 வீதியூடாக போக்குவரத்து செய்ய பாதுகாப்பு தரப்பினர் அனுமதி கிடைக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.

ஏ9 பாதையூடாகச் செல்வதற்கு கண்ணிவெடிகள், மிதிவெடிகள் அகற்றப்பட்டு அவை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னர் இவர்களுக்கு ஏ9 பாதையூடாகச் செல்ல பாதை அனுமதிப்பத்திரம் வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
 

வன்னி பாதுகாப்புப் படைத் தளபதி கடமைகளைப் பொறுப்பேற்றார்

kamal.jpgவன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது கடமைகளைப் பொறுப்பேற்றதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத் தளபதி லெப்டினன்ற் ஜெனரல் ஜகத் ஜயசுரியவினால் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்துக்கு விஜயம் செய்த மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவை பிரிகேடியர் சுதந்த ரணசிங்க வரவேற்றார். அங்கு நடைபெற்ற சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தமது அலுவலகத்துக்குச் சென்று தமது கடமைகளைப் பொறுப்பேற்றதுடன் முதல் ஆவணத்திலும் கையொப்பமிட்டார். இராணுவத்தின் 53ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய கமல் குணரத்ன வன்னி மனிதாபிமான நடவடிக்கைகளின்போது களமுனையிலிருந்து சிறந்த சேவைகளை வழங்கி வந்தார். இராணுவத்தினர் நந்திக் கடல் களப்பு வரை முன்னேறிச் சென்று மேற்கொண்ட கள நடவடிக்கைகளுக்கு இவர் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.