எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

“யாழ்ப்பாணத்தில் எங்களை பொதுமக்கள் தாக்கவில்லை” -ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவிப்பு.

Sunil_Handunnetti_JVP_MPயாழ்ப் பாணத்தில் ஜே.வி.பியினரை பொதுமக்கள் தாக்கினார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ள செய்தி தவறானது என்றும், தங்கள் மீதான தாக்குதலின் பின்னணியில் புலனாய்வுப்பிரிவினரே செயற்பட்டதாகவும் தாக்குதலுக்குள்ளானவர்களில் ஒருவரான ஜே.வி.பியின் நடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி தெரிவித்துள்ளார்.

நேற்றுக்காலை பத்தரமுல்ல பெலவத்தயில் அமைந்துள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

யாழ்நகரில் தம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பாக தாம் பொலிஸாருக்கு முறைப்பாடு பதிவு செய்வதற்கு முன்னரே யாழ்ப்பாணத்தில் பொதுமக்கள் ஜே.வி.பியினர் மீது தாக்குதல் நடத்தியதாக அரசு தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டது. இதிலிருந்தே தாக்குதலை யார் மேற்கொண்டனர் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ்.வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த போது அங்கு வந்த பொலிஸார் எங்களை உடனடியாக குடாநாட்டை விட்டு வெளியுறுமாறும், தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாது எனவும் தெரிவித்தனர் யாழ். நகரிலும் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் தமிழ் மக்கள் தங்களுடன் நல்லுணர்வுடன் நடந்து கொண்டனர். வைத்தியசாலை வைத்தியர்கள். தாதியர் முதலானோர் தங்களுடன் பண்பாக நடந்து கொண்டதோடு தங்களை சிரத்தையோடு கவனித்தனர் எனவும் அவர் கூறினார்.

வடக்கு கிழக்கில் தற்போது இரண்டாவது பிரபாகரனின் ஆட்சி நடைபெறுகின்றது. கோத்தாபய ராஜபக்ச அங்கு பிரபாகரனாக செயற்படுகின்றார் எனவும், புலனாய்வப் பிரிவினா சிந்திப்பதையும் நினைப்பதையும் பொதுமக்கள் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் எனவும் சுனில் ஹந்துநெத்தி குறிப்பிட்டார்.

அச் செய்தியாளர் மாநாட்டில் அவர் தங்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்களையும் காண்பித்தார்.

விடுதலைப்புலி உறுப்பினர்கள் போரிலேயே கொல்லப்பட்டனர் என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா சாட்சியம்.

விடுதலைப்புலிகளின் தலைவர்கள் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தபோது அவர்களைக் கொலை செய்ததான வழக்கு விசாரணையில் மூன்றாவது சாட்சியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று செவ்வாய் கிழமை இரண்டாவது தடவையாக குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். போரின் போது 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியாக கடமையாற்றியவரும் தற்போது ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதியாக பணியாற்றுவருமான மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வா நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.

விடுதலைப்புலிகளின் சமாதானச் செயலக பணிப்பாளராகவிருந்த புலித்தேவன், அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த நடேசன், புலிகளின் தளபதிகளில் ஒருவராகவிருந்த ரமேஸ் ஆகியோர் யுத்தத்தின்போதே கொல்லப்பட்டனர் என சவேந்திரசில்வா தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர, எச்.என்.பி.பி. வாரவெல, சர்பிக் ரஸீக் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சவேந்திர சில்வா பதிலளித்தார்.

குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சரணடைந்திருந்தால் அதனை தாங்கள் ஏற்றுக்கொண்டிருப்போம் எனவும், ஆனால், அவர்கள் சரணடைய விரும்பவில்லை எனவும், யுத்தத்தின் போதே அவர்கள் கொல்லப்பட்டனர் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்தார்.

இதன்போது அவரிடம் கேட்கப்பட்ட பல குறுக்குக் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

நிதிமோசடியில் தாம் ஈடுபடவில்லை என தெரிவிக்கின்றார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி

Vinayagamoorthy_A_TNA_MPதமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி தாம் நிதிமோசடியில் ஈடுபட்டதாக வெளியாகியுள்ள தகவல்களை மறுத்துள்ளார். தான் அவ்வாறு மோசடியில் ஈடுபட்டமை உறுதிப்படுத்தப்படுமானால் தனது நடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். கொக்குவிலில் அவரது இல்லத்தில் நேற்று செவ்வாய் கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக விளக்கினார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் கூறியதாவது-

“விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரான எழிலனின் மனைவி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதனையடுத்து எழிலனை விடுதலை செய்யுமாறு பயங்கரவாத தடுப்புப்பிரிவு அத்தியட்சகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பினேன். அதன் பின்னர் மேஜர் மதியழகன் எனத் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டு எழிலன் உயிருடன் இருப்பதாகவும், நான் பயங்கரவாதத் தடுப்புப்பிரிவுக்கு எழுதிய கடிதம் தன்னிடமிருப்பதாகவும், எழிலனின் விடுதலை குறித்து அவரது மனைவியிடம் பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். பின்னர் அவரே எழிலனின் மனைவியின் தொலைபேசி இலக்கத்தையும் தந்தார். பின்னர் அவர் எழிலனின் மனைவியுடன் கதைத்து அவரை விடுவிக்கப் பணம் கோரியதாக அறிந்தேன். இதே போன்ற சம்பவங்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான ந.நிதர்சன், சுதாமாஸ்ரர், ஆகியோரின் உறவினர்களுக்கும் நடந்ததாக அறிந்தேன். இந்த விடயங்களை இரணுவத் தளபதிக்கு கடிதம் மூலம் தெரிவித்தேன். புலி உறுப்பினர்களை விடுவிப்பதாகக் கூறி அவர்களின் உறவினர்களிடம் பணம் பறிக்கும் குழுவின் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அதில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், நான் நிதி மோசடியில் ஈடுபட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறு நான் ஈடுபட்டமை ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுமானால் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பேன்”

-இவ்வாறு அவர் தெரவித்தார்.

பாடசாலையில் வைத்து நஞ்சருந்திய நான்கு மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி.

நேற்று செவ்வாய் கிழமை காலை பிரார்த்தனை நிகழ்வு முடிவுற்றதும் பாடசாலையில் வைத்தே நான்கு மாணவிகள் நஞ்சருந்தியுள்ளனர். இம்மாணவிகள் உடனடியாக சங்கத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில அனுமதிக்கப்பட்டனர்.

இம்மாணவிகள் பாடசாலைச் சுவரில் பெயர்களை வெட்டியதற்காக அதிபர் இம்மாணவிகளை அனைத்து மாணவ மாணவிகளுக்கும் முன்னிலையில் கண்டித்தாகத் தெரியவருகிறது. அதனால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமலேயே இம்மாணவிகள் குடிபானம் ஒன்றில் எதனையோ கலந்து அருந்தி உள்ளனர்.

வலிகாமம் பகுதியில் வடலி அடைப்பில் உள்ள பாடசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இம்மாணவிகள் அங்கு ஓஎல் படிக்கின்றனர் எனத் தெரியவருகிறது.

இரண்டாவது பதவிக் காலத்திலாவது சிறைக்கைதிகளை விடுவியுங்கள் – ஜனாதிபதிக்குக் கடிதம்

K Thevathasanபுதிய மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை திரைப்படக் கூட்டுத்தபானத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரும், திரைப்பட இயக்குனருமான கனகசபை தேவதாசனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அவரின் மனைவி சுபத்திரா தேவதாசன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ( பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். ) அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இம்மாதம் 11 ஆம் திகதி முதல் எனது கணவன் தனது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். யுத்தம் முடிவுற்று நாட்டில் அமைதி ஏற்பட்டுள்ளது. தாங்கள் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்யவுள்ளீர்கள். எனது இரு பிள்ளைகளுடன் எவரின் உதவிகளுமின்றி துன்பத்தை அனுபவித்து வருகின்றேன். எனது கணவனை பிணையிலாவது விடுவிக்க நடவடிக்கை எடுங்கள்.தமிழ்மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனக் கூறும் தாங்கள் எதுவித விசாரணையுமின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து அவர்களும் தமது குடும்பத்தினருடன் இணைந்து வாழ இப்பதவியேற்பு காலத்தில் பொதுமன்னிப்பை வழங்கி அல்லது பிணையில் செல்ல அனுமதிக்குமாறும் கேட்டுள்ளார்.

Related News:

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள க தேவதாசன் நீதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கிறார்.

ஐக்கியத்தை உணர்த்தும் ஹஜ்ஜுப் பெருநாள் – ஜனாதிபதி

mahinda-rajapaksa.jpgஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

 இலங்கை உட்பட உலகெங்கிலும் பரந்து வாழும் தங்களது சகோதர முஸ்லிம் மக்களுடன் இணைந்து ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்புவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இப்பெருநாள் வசதி படைத்தவர்கள் ஆவலோடு மேற்கொள்கின்ற புனித ஹஜ் யாத்திரையையும் இஸ்லாம் மார்க்கத்தில் உள்ள உயர்ந்த தியாகத்தையும் நினைவூட்டுவதாய் அமைந்துள்ளது.

இந்த வருடமும் ஹஜ் கடமையை மேற்கொள்வதற்காக இலங்கையிலிருந்து சுமார் 6,000 யாத்திரிகர்கள் புனித மக்கா சென்று பல்வேறு நாடுகளையும் சேர்ந்த இலட்சக் கணக்கான முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டுள்ளனர்.

பல்வேறு தேசங்களைச் சேர்ந்த, பல்வேறு மொழிகளைப் பேசுகின்ற, பல்வேறு கலாசாரங்களை உடைய இலட்சக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இறைவனின் மகத்துவத்தையும் புகழையும் பறைசாற்றுவது ஹஜ் யாத்திரை உணர்த்தும் ஐக்கியத்தை அடையாளப்படுத்தி நிற்கின்றது.

இஸ்லாம் போதிக்கின்ற இந்த ஐக்கியம் அவர்களது வாழ்க்கையில் நீடித்து நிலைத்திருப்பதோடு அவர்கள் அதனை ஏனைய சமயங்களைச் சேர்ந்த சகோதரர்களோடும் மானிட சகோதர உணர்வுடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் எமது நாட்டின் முன்னேற்றத்திற்கும் எமது மக்களின் ஐக்கியத்திற்கும் குறிப்பிட த்தக் களவு பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

பல நூற்றாண்டுகளாக அவர்கள் தாய் நாட்டின் முன்னேற்றத்திற்காக பங்களிப்புச் செய்து எமது நாட்டில் வாழுகின்ற ஏனைய சமூகங்களோடு ஐக்கியத்துடனும் நட்புறவுடனும் வாழ்ந்து வந்துள்ளதோடு அதனைத் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பயங்கரவாதிகளால் தங்களது சொந்த இருப்பிடங்களை விட்டும் வெளியேற் றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களை மீள் குடியேற்றுவதற்கான முன்னெடுப்புக்கள் இடம்பெற்றுவரும் சூழ்நிலையில் இவ்வருட ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இது அவர்கள் ஏற்கனவே வாழ்ந்துவந்த பிரதேசங்களில் சமாதானம், மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் ஒரு நல்லிணக்க ஏற்பாடாகும்.

முஸ்லிம்கள் இன்றைய நாளில் செய்கின்ற பிரார்த்தனைகளில் எமது எல்லா மக்களுக்கும் கெளரவத்துடனான சமாதானம் நீடித்து நிலைப்பதற்காக வுமிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எமது எல்லா முஸ்லிம் சகோதரர்களுக்கும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஈத் முபாரக் வாழ்த்துக்கள்.

தொடர்புபட்ட வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் மனதில் கொள்ள வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் ரணில்

ranil-wickramasinghe.jpgபல இலட்சக்கணக்கான மக்கள் வேற்றுமைகளுக்கப்பால் மக்கா நகரில் ஒன்றுகூடித் தனக்காகவும் ஏனையவர்களுக்காகவும் அதேநேரம் உலக அமைதிக்காகவும் பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் அதனுடன் தொடர்புபட்ட வரலாற்றிலிருந்து பாடங்களையும் படிப்பினைகளையும் மனதில் கொள்ள வேண்டும். இப்ராஹிம் (அலை),இஸ்மாயில் (அலை) அவர்கள் தங்களது தியாகத்தை வெளிப்படுத்தியதையே இந்த ஹஜ் வலியுறுத்தி நிற்கின்றது. இந்த உலகில் இறை கட்டளையை விட எந்தவொரு பொருளும் பெறுமதியற்றது என்ற படிப்பினையை இது எமக்குப் புகட்டுகிறது.

உலோபித்தனம், அளவு கடந்த ஆசை என்பன அழிக்கப்பட்டு உள்ளம் பூரணமாகப் பரிசுத்தப்பட வேண்டும் என்ற படிப்பினையையே இது கற்றுத்தருகிறது. இவ்வாறான உள்ளங்களிலிருந்தே கருணை, அன்பு, பாசம் என்பவற்றை எதிர்பார்க்க முடியும். சுயநலமும் பேராசையும் மலிந்து காண்படுகின்ற இன்றைய காலகட்டத்தில் ஹஜ் எங்களுக்குச் சிறந்த ஒரு படிப்பினையைப் பெற்றுத்தருகிறது.எனவே, உலகில் மனிதத்துவம் மலர இப்புனிதத் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து பிரார்த்திப்போம்.

இன்றைய தினம் ஹஜ்ஜுப் பெருநாளைக் கொண்டாடும் இலங்கை மற்றும் உலகவாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.

முல்லைத்தீவு வெடிவிபத்தில் இரு சிறுவர் காயம்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வெடி விபத்தில் காயமடைந்த இரண்டு சிறுவர்கள் சிகிச்சைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேறிய சிலாவத்தை கிராமத்தில் இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இடம்பெற்றுள்ளது.

வீடு வளவு குப்பைகளை சேகரித்த குடும்பப் பெண் அதனை பனை மரத்தின் கீழ் எரியூட்டியபோது வெடிவிபத்து நடைபெற்றுள்ளது. அப்போது சகோதரர்களான சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட அரசினர் பொது வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண விவசாயிகளுக்கு 100 உழவு இயந்திரங்கள் விநியோகம்

tractor.jpgயாழ்ப் பாணத்தைச் சேர்ந்த விவசாயிகளுக்கு நான்கு சக்கர உழவு இயந்திரங்கள் நூறு அடுத்த வாரம் விநியோகிக்கப் படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் யாழ்ப்பாணத்தில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிகழ்வின் போதே இவை விநியோகிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.  வட மாகாண விவசாயிகளின் நலன் கருதி இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளு க்கிணங்க இந்திய அரசாங்கம் ஐநூறு நான்கு சக்கர உழவு இயந்திரங்களை வழங்க வுள்ளதாக தெரிவித்த ஆளுநர், இவற்றில் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்களில் 52 கடந்த வாரம் வவுனியா பிரதேசத்திலுள்ள விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

எஞ்சிய உழவு இயந்திரங்கள் கிடைக்கப்பெற்றவுடன் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ரிஸானாவின் உயிர் காக்க இராஜதந்திர முயற்சிகள் துரிதம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைக்கு உள்ளாகியிருக்கும் ரிசானா நபீக்கின் உயிரைக் காப்பாற்றுவதற்காக இராஜதந்திர ரீதியிலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக வெளிவிவகார அமைச்சின் தொடர்பாடல் பணிப்பாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.

உத்தியோகப்பற்றற்ற முறையில் பல்வேறு விதமான தகவல்கள் வெளியாகின்றபோதிலும், ரிசானாவைக் காப்பாற்ற அரசாங்கம் தொடர்ச்சியான இராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஜயசேகர தெரிவித்தார்.

றிசானாவுக்கு மன்னிப்பளித்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவூதி அரேபிய மன்னருக்குக் கருணை மனுவொன்றை ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளார். இதனையடுத்து, குறித்த வீட்டுரிமையா ளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு மன்னர் தமது அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியிருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சவூதி அரேபிய அரசிடமிருந்து இன்னும் உத்தியோகபூர்வமான பதில் எதுவும் கிடைக்கப் பெறவில்லையென்று வெளிவிவார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.