எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

யாழ்ப்பாணத்தில் மீளக்குடியமர்ந்த முஸ்லிம்களுக்கு பள்ளிவாசல் நிலங்களை வழங்க திட்டம்!

Jaffna_Mosqueயாழ்ப் பாணத்தில் மீள்குடியமர்ந்து வருகின்ற முஸ்லிம் மக்களில் காணி இல்லாதவர்களுக்கு பள்ளிவாசல் காணிகளை வழங்கி குடியயேற்றம் செய்யப்படவுள்ளதாக யாழ். மாநகர சபை உறுப்பினர் மௌலவி ஏ.சுபியான் தெரிவித்துள்ளார். ஏ-9 பாதை திறக்கப்பட்டதன் பின் யாழ்ப்பாணத்தில் இது வரை 59 முஸ்லிம் குடும்பங்கள் யாழ.செயலகத்தில் பதிவுகளை மேற்கொண்டு மீள்குடியமர்ந்துள்ளதாகவும், இது தவிர மேலும் 100 குடும்பங்களும் குடியேறியுள்ளதாகவும், இதில் சொந்தக் காணியுள்ளவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருவதாகவும் அவர் குறிப்பட்டுள்ளார்.

அத்துடன் காணிகளற்றவர்களுக்கு 2002 ஆம் ஆண்டு முதல்  யாழ்ப்பாணத்தில் வசிக்கின்ற குடும்பங்கள் என்கிற முன்னுரிமை அடிப்படையில் சுமார் 20 குடும்பங்களுக்கு யாழ். சின்னப்பள்ளி வாசலின் பின்பறமாக மையவாடிப் பகுதியிலும், 50 குடும்பங்களுக்கு வேலணை சாட்டி பள்ளிவாசல் பகுதியிலும் காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், காணிகள் வழங்குவது தொடர்பாக அரசாங்க அதிபரின் அனுமதி கிடைத்ததும், அவை பகிர்ந்தளிக்கப்பட்டு தற்காலிக வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

போரினால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்குகின்றது.

Killinochee_Hospitalபோர் நடவடிக்கைகளால் சேதமடைந்த கிளிநொச்சி வைத்தியசாலை 2கோடியே 50இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு 28 May 2010 முதல் செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ் வைத்தியசாலை புனரமைப்பிற்கான நிதி யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது. ஒரு கோடியே 50 இலட்சம் ரூபா கட்டட புனரமைப்பிற்கும், ஒரு கோடி ரூபா உபகரணங்கள் கொள்வனவிற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Killinochee_Hospitalஅத்துடன் இவ்வைத்தியசாலைக்கான விசேட வாகனங்கள் ஐந்தும் யுனிசெவ் நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி வைத்தியசாலையின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா, சம்பிக்க ரணவக்க, றிசாத்பதியுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதி யுத்தத்தின் போது கிளிநொச்சி வைத்தியசாலையின் விடுதிகள், உபகரணங்கள் பலவும் சேதமாகின. எனினும் கிளிநொச்சியில் மக்கள் மீளக்குடியமர ஆரம்பித்ததும் ஓரளவிலான பணிகளை பொதுமக்களுக்கு இவ்வைத்தியசாலை மேற்கொண்டு வந்தது. தற்போது புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் முன்னரைப் போல் இவ்வைத்தியசாலை செயற்படக் கூடியதாகவிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை 1800 பேர் மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

வவுனியா ‘மெனிக்பாம்’ முகாமில் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 1800 பேர் நாளை (30-05-2010) அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர் என கிளிநொச்சி மாவட்ட  அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். 480 குடும்பங்களைச் சேர்ந்த 1800 பேரே இவ்வாறு மீள்குடியமர்த்தப்படவுள்ளனர். கண்டாவளை பிரதேசச் செயலகப் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி, பிரபந்தனாறு, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே மிள்குடியமர்த்தப்படவுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 22ஆயிரம் பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படாது எஞ்சியுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இனிமேல் சகல பொலிஸ் நிலையங்களிலும் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்படும் – பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய

Mahinda_Balasuriya_IGPஇலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இனிமேல் தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகள் கொடுப்பது ஏற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் மா அதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில் 26 May 2010 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

”பொலிஸ் திணைக்களத்தை மக்களுக்குரியதாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். அத்தோடு பொலிஸார் தமிழ் மொழி கற்பதை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.  கடந்த காலங்களில் மக்களிடமிருந்து எமக்கு சரியான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால் மக்களின் முறைப்பாடுகளை பெறுவதற்கு விசேட நாட்களை ஒதுக்கியுள்ளோம் அதனால், மக்களிடமிருந்து எமக்கு நல்ல பதில் கிடைத்துள்ளது. பொலிஸாருக்கு ‘டிப்ளோமா’ போன்ற பாடநெறிகளை வழங்கவதற்காக பொலிஸ் கல்லூரிகளை ஆரம்பிக்கவுள்ளோம். தமிழ் மொழி மூலமான முறைப்பாடுகளை பெற முடியாத நிலையைப் போக்குவதற்கான வகையில், ஐந்து மாத தமிழ்மொழிப் பயிற்சியை வழங்குகின்றோம். இவ்வாறான முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டிருப்பது வரலாற்றில் முதற் தடவையாகும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் ‘வெசாக்’ தின களியாட்ட நிகழ்வகளில் அதிக பணம் அறவிடப்படுகின்றன.

‘வெசாக்’ தின வைபவங்கள் யாழ்.குடாநாட்டில் 27 May 2010 முதல் களைகட்டியுள்ள நிலையில். யாழ். கோட்டைக்கு முன்பாக ‘கானிவெல்’ களியாட்ட நிகழ்வுகளும் ஆரம்பமாகியுள்ளன. இந்நிகழ்வுகள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வுகளுக்கு தங்கள் சிறு பிள்ளைகளோடு சென்ற குடும்பத்தினர் பலர் ஏமாற்றங்களுக்குள்ளாகினர். ‘கானிவெல்’ நடைபெறுகின்ற வளவினிற்குள் பிரவேசிப்பதற்கு ஒருவருக்கு 50 ருபா ‘ரிக்கற்’ பெற வேண்டும். அதனை விடவும் உள்ளே சென்று ஒவ்வொரு நிகழ்வுகளையும் பார்வையிட வேறு வேறு கட்டணங்கள் அறவிடப்படுகின்றன. சாதாரணமாக ஒரு குடும்பம் 1000 ருபா இல்லாமல் இந்நிகழ்வுகளைக் கண்டு ரசிக்க முடியாது. போரின் பின்பு சுமுகமான நிலையில் இந்த ‘வெசாக்’ தின நிகழ்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் அதிக பணம் அறவிடப்படுகின்றமை கவலை அளிப்பதாகவுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குவைத்திலிருந்து 100 பணிப்பெண்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைப்பு

house-maid.jpgகுவைத் நாட்டில் வேலை வாய்ப்புத் தேடிச் சென்ற சுமார் 100 பணிப்பெண்கள் நேற்று இலங்கைக்குத் திருப்பியனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விசா காலாவதியான நிலையிலேயே இவர்கள் இலங்கைக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்தது.

யாழ். பெரிய பள்ளி ஜும்ஆவில் நேற்று 5000 பேர் பங்கேற்பு

jaffnamosque.jpgயாழ்ப் பாணம்-பெரிய ஜும்ஆப் பள்ளிவாயல் 20 வருடங்களின் பின்பு நேற்று வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டு முதலாவது ‘குத்பா’ பேருரையும் நிகழ்த்தப்பட்டது.

யாழ்ப்பாணம் முஸ்லிம் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த 3 மாதகாலமாக புனரமைக்கப்பட்டு வந்த இப்பள்ளிவாயல் நேற்று இடம்பெற்ற குத்பா பேருரையை அஷ்ஷெய்க் அப்துல் ஹாலித் நிகழ்த்தினார். நாட்டின் நாலாபாகங்களிலிருந்து வருகைதந்த சுமார் ஐயாயிரம் முஸ்லிம்கள் இங்கு குத்பாப் பேருரையிலும் ஜும்ஆத் தொழுகையிலும் கலந்துகொண்டதுடன் ‘கந்தூரி’யிலும் பங்கு கொண்டனர்.

பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் பெண்களும் ஜும்ஆத் தொழுகையில் ஈடுபட்டதுடன் குத்பாப் பேருரையையும் செவிமடுத்தனர். பெண்களுக்கென பிரத்தியேகமாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்குக்கு விரைவில் மாகாணசபை தேர்தல்

bazil.jpgநாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி வைத்திய சாலையில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார அத்தியட்சகர் கெப் வாகனம் வழங்கும் வைபவத் திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ‘ஜய்க்கா’ நிறுவனங்கள் வடக்கின் சகல மாவட்டங்களிலுமுள்ள சுகாதார அத்தியட்சகர்களுக்கு ‘கெப்’ வாகனங்களையும் ‘குரூஷர்’ வாகனங்களையும் வழங்கியதுடன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கென 20 மோட்டார் சைக்கிள்களையும் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில், வடக்கு மக்களின் சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்களிப்போடு இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும். வடக்கில் மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி உட்பட சகல அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளன.

ஐ.தே.க. தலைவர் பதவியிலிருந்து ரணில் உடன் விலக வேண்டும். சென்னையில் காதர் எம்.பி. பேட்டி

carder.jpgஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று, தலைவர் பொறுப்பிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலக வேண்டும் என்று அக்கட்சியின் கண்டி நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.எம். அப்துல் காதல் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

சென்னையிலுள்ள அபுபேலஸ் ஹோட்டலில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிக சிறந்த நிர்வாகி. அத்துடன் எனது இருபதாண்டு அரசியல் அனுபவத்தில் ராஜபக்ஷவைப் போல மிகச் சிறந்த பண்பாளரை நான் சந்தித்ததில்லை. அவருடைய கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் அனைத்து விடயங்களுக்கும் மிக துல்லியமான தீர்வினை அவர் எடுத்து வருகிறார்.

அவர் எப்போதும் இஸ்லாமியர்களுக்குரிய சலுகைகளை வழங்குவதில் விசேட கவனம் செலுத்தி வருகிறார். இதற்குக் கடந்த அமைச்சரவையில் பதினைந்து இஸ்லாமியர்களுக்குத் தமது அமைச்சரவையில் இடமளித்திருந்தமையே சான்றாகும்.

அவருடைய நிர்வாகத்தில் இலங்கை புது பொலிவுடன் வலிமையாகவும் வளமாகவும் மாறி வருகிறது. யாழில் மக்கள் எவ்வித அச்சுறுத்தலுமின்றி வர்த்தகத்துறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டால், நிச்சயமாக நான் பங்குபற்றுவேன். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தடைப்பட்டிருந்த கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்ற எம்முடைய விருப்பத்தினை நாடாளுமன்றத்தில் எடுத்துரைப்பேன்” என்றார். முன்னதாக அவர் தமிழக அரசியல் கட்சித் தலைவர் அப்துல் சமதைச் சந்தித்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தடம்புரண்ட ரயில் மீது நக்ஷலைட்டுக்கள் தாக்குதல்; பயணிகள் ரயில் மீது – சரக்கு ரயில் மோதி 75 பேர் பலி

naxalattack.jpgமேற்கு வங்கத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலொன்று நேற்று குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் 75 பேர் கொல்லப்பட்டனர்; மேலும் 200க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தத்தாக்குதலுக்கு நக்ஷலைட்டுகளுக்கு சார்பான அமைப்பொன்று உரிமை கோரியுள்ளது. நேற்று நள்ளிரவு 1.35 அளவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலினால் பயணிகள் ரயில் தடம்புரண்டது. இந்த வேளையில், இந்த வழியால் வந்த சரக்கு ரயில் வண்டியொன்று மோதியதிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. மேற்கு வங்க மாநிலம் அவுராவில் இருந்து மும்பை குர்லாவுக்கு நேற்றிரவு ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு சென்றது. நள்ளிரவு 1.35 மணிக்கு அந்த ரயில் மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டம் சரக்பூர் அருகே சர்திகா ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது மாவோயிஸ்டுகள் ரயில் தண்டவாளத்தில் குண்டுகளை வெடிக்க வைத்தனர்.

இதனால் ஞானேஸ்வரி சூப்பர் டீலக்ஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் அடுத்தடுத்து கவிழ்ந்தன. மொத்தம் 13 பெட்டிகள் தடம் புரண்டு விழுந்தன. அந்த பெட்டிகள் அனைத்தும் அருகில் உள்ள தண்டவாளத்தின் மீது சரிந்து கிடந்தன சரக்கு ரயில், கவிழ்ந்து கிடந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் பெட்டிகள் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் நொறுங்கின. சரக்கு ரயிலும் கவிழ்ந்தது.

கண் இமைக்கும் நேரத்துக்குள் இந்த கோர சம்பவம் நடந்தது. ரயில் பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதிய போது அந்த பகுதியே குலுங்கியது. ஏற்கனவே காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகளை சரக்கு ரயில் மோதியதில் பலர் உயிரிழந்தனர். காயங்களுடன் போராடிக் கொண்டிருந்த பயணிகள் மீட்கப்பட்டு ஹெலிகொப்டர்கள் மூலம் சரக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்குள்ள மருத்துவமனைகளில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அதிக காயம் அடைந்தவர்கள் மிட்னாபூர் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். 125க்கும் மேற்பட்ட பயணிகள் ஹெலிகொப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ரயில்வே துறை அமைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.