எழுத்தாளர்கள்
எழுத்தாளர்கள்
ஹிந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ள நடிகை அசின் மீது நடவடிக்கை எடுப்பது உறுதி என்று ராதாரவி கூறியுள்ளார்.
இலங்கையில் தமிழர்களின் நிலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், படப்பிடிப்புக்காக நடிகர் நடிகைகள் இலங்கை செல்ல வேண்டாம் என்றும் தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு கேட்டுக்கொண்டது. இந்த வேண்டுகோளை ஏற்று தமிழ் நடிகர் நடிகைகள் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு செல்லவில்லை.
இந்நிலையில் நடிகை அசின், ரெடி என்ற படப்பிடிப்புக்காக இலங்கை சென்றுள்ளார். தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு விதித்த தடையை மீறி அசின் இலங்கை சென்றிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி அறிவித்தார்.
உகண்டாவில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் இலங்கையர் ஒருவர் உட்பட 74 பேர் பலியாகியுள்ளனர்.
உகண்டா தலைநகர் கம்பாலாவில் இடம்பெற்ற இக்குண்டுத்தாக்குதலுக்கு அல் குவைதாவுடன் தொடர்புடைய அல் சஹபாப் எனும் சோமாலிய தீவிரவாத இயக்கம் உரிமை கோரியுள்ளது.
இலங்கையர் ஒருவர் இத்தாக்குலில் பலியாகியிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை உதைபந்து போட்டி யின் தங்க காலணி விருது ஜேர்மனியின் இளம் வீரரான தோமஸ் முல்லருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் ஸ்பெயினின் டேவிட் வில்லா, நெதர்லாந்தின் ஸ்னைடர், உருகுவேயின் ஃபோர்லன் ஆகியோர் 5 கோல் அடித்திருந்தனர்.
உருகுவே – ஜேர்மனி இடையிலான ஆட்டத்தில் அடித்த கோல் மூலமாக முல்லரும் இவர்களுடன் இணைந்து கொண்டார். இந்த நிலையில், இறுதிப் போட்டியில் வில்லாவும், ஸ்னைடரும் கோல் அடிக்கத் தவறிவிட்டனர். இதனால் மேற்கூறிய 4 பேருமே 5 கோல் அடித்து சமநிலையில் இருந்தனர். இதனால், அதிக கோலடிக்க உதவியவர் யார் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன்படி தனது அணி வீரர்கள் 3 கோல் அடிப்பதற்கு முல்லர் உதவியிருந்தார்.
மற்றவர்கள் தலா ஒரு முறை மட்டுமே பிறர் கோலடிக்க உதவியிருந்தனர். இதையடுத்து கோல்டன்ஷ¥ விருது முல்லருக்குக் கிடைத்தது. இதுதவிர, போட்டியின் சிறந்த இளம் வீரர் விருதும் முல்லருக்குக் கிடைத்திருக்கிறது.
2006ம் ஆண்டு போட்டியில் ஜேர்மனியின் குளோஸ¤க்கு தங்க காலணி விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
தனிப்பட்ட தேவைகளுக்காக அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது. நாட்டைப் பற்றி நன்றாக சிந்தித்துத் தெளிவான நோக்கத்தின் பேரிலேயே அதனை ஏற்படுத்துவதே அவசியமானது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதிகள் மற்றும் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரநிதிகளுக்கும் இடையே நேற்று (12) மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கூறியவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி அச்சந்திப்பில் மேலும் கூறியதாவது:- தற்போது உள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை விட நாட்டுத் தலைவர் பதவி பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும், பாராளுமன்றத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படும், பாராளுமன்றத்துடன் சேர்ந்து இயங்கக் கூடிய பதவியாக மாற்றப்பட வேண்டும் என்பதே 40 வருடங்காலம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து பெற்ற அனுபவத்தின் மூலம் தனது நம்பிக்கையாக உள்ளது என்று ஜனாதிபதி இங்கு மேலும் கூறினார்.
சர்வகட்சிக் குழுவுக்கு ஸ்ரீலங்கா சுதந் திரக் கட்சி முன்வைத்த ஆலோசனையான பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக இங்கு விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் அரசிலமைப்பு திருத்தங்கள் மூலம் பாராளுமன்றத்துக்குப் பொறுப்புக் கூறும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை ஏற்படுத்துவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர் இங்கு இணக்கம் தெரிவித்தனர்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் இங்கு கேட்டுக்கொண்ட நிலையில் அவர்களுக்கு அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பசில் ராஜபக்ஷ அகியோர் விளக்கமளித்தனர். அத்துடன் 17ஆவது திருத்த சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்படும் நிறுவனங்களை வலுப்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினரினதும் அவதானம் செலுத்தப் பட்டது.
அவ்வாறு வலுப்படுத்தவும் அந்த நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அமைச்சரவைக்கு பொறுப்புக் கூற வேண்டுமென்றும் இங்கு இணங்கப்பட்டது. அத்துடன் எந்த அரசாங்கத்தின் கீழும் நிலையான ஆட்சி இடம்பெற வேண்டும் என இரு தரப்பினரும் இங்கு கொள்கை யளவில் இணக்கப்பாட்டுக்கு வந்ததுடன் எதிர்காலத்தில் இடம்பெறும் அரசியல மைப்பு திருத்தத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்றும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர். இரண்டு தரப்பினரின் பிரதிநிதிகளால் உருவாக்கப்படும் குழுவின் மூலம் இணங்கப்பட்ட மேற்படி விடயங்களை செயற்படுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் கரு ஜயசூரிய, காமினி ஜயவிக்கிரம பெரேரா, திஸ்ஸ அத்தநாயக்க, ஜோஸப் மைக்கல் பெரேரா ஆகியோரும் பொதுஜன ஐக்கிய முன்னணி அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, நிமல் சிறிபால டி சில்வா, சுசில் பிரேமஜயந்த், ஜீ. எல். பீரிஸ், தினேஷ் குணவர்த்தன, பசில் ராஜபக்ஷ, டலஸ் அலகப்பெரும ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் விதத்தில் உரையாற்றிய குற்றச்சாட்டின் பேரில் தென்னிந்திய திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ் நாடு சென்னை ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சீமான் வன்முறையையும், பிரிவினையையும் தூண்டும் விதத்தில் உரையாற்றினார் என பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர்.
இவ்வழக்கின் அடிப்படையில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
சிறிலங்கா ஜனாதிபதியின் பாரியார் உள்ளிட்ட அரசஅதிகாரகள் குழுவினர் தென்னிந்திய திரைப்பட நடிகை அசினுடன் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு விஜயம் செய்தனர். அங்கு கடந்த மூன்று தினங்களாக நடைபெற்ற கண் சத்திரசிகிச்சை முகாமின் இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர்கள் அங்கு வருகை புரிந்தனர்.
தென்னிந்திய நடிகை அசின் மற்றும் இந்தி நடிகர் சல்மான்கான் ஆகியோரின் நிதியுதவியில் புனரமைக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்பட்டுள்ள யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்சிகிச்சை நிலையத்தில் இந்திய கண்சிகிச்சை நிபுணர்களால் விழி வெண்படல சத்திரசிகிச்சை முகாம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இக்குழுவினர் நேற்றுக் காலை வவுனியா வைத்தியசாலைக்கும் விஜயம் செய்தனர். நடிகை அசின் வருகை தந்த செய்தி கசிந்ததும் வைத்தியசாலையை நோக்கி பல இரசிகர்கள் படையெடுக்கத் தொடங்கினர் இருந்தபோதும், இவர்களின் வருகையை முன்னிட்டு வவுனியா, யாழ்.வைத்தியசாலைகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
தமிழ்நாடு திரைப்பட அமைப்பினரின் பணிப்பை மீறி இலங்கையில் நடைபெற்ற திரைப்பட விழாவிற்கு சென்ற காரணத்தினால் தமிழ் படங்களில் நடிப்பதற்கு நடிகை அசினுக்கு தடைவிக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் (10-07-20100) அன்று வேலணை வைத்தியசாலையில் மர்மமான முறையில் தூக்கிட்டு சடலமாக மீட்கப்பட்ட மருத்துவமாதுவான சரவணை தர்சிகாவின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மரணம் தொடர்பாக அவ்வைத்திய சாலையின் பொறுப்பதிகாரி டொக்ரர் பிரியந்த செனவிரட்னவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். விசாரணகள் முடியும் வரை குறிப்பிட்ட வைத்தியர் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறுவதற்கு தடைவிதிக்கபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை. தர்சிகாவின் மரணம் தற்கொலையாக இருக்க முடியாது என அவரது பெற்றோரும், உறவினர்களும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பூரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தமக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோப்பாயில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் ‘மாவீரர் துயிலுமில்லத்தை’ இடித்தழிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டிருப்பதால் அப்பகுதியில் தற்காலிகமாக தங்கியுள்ள குடும்பங்களை உடனடியாக வெளியேறுமாறு படையினர் கோரியுள்ளனர். உயர்பாதுகாப்பு வலயமான வலிகாமம் குரும்பசிட்டி தெற்கிலிருந்து இடம்பெயர்ந்த இவர்கள், 1994ம் மாதம் இடம்பெற்ற இடப்பெயர்வின் போது வன்னிக்குச் சென்று கிளிநொச்சி அக்கராயன் குளத்தில் வசித்து வந்தனர்.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரில் குடும்பத் தலைவர்களை இழந்த நிலையில் வவுனியா அகதி முகாமிலிருந்து விட்டு தற்போது யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் கூடாரங்கள் அமைத்து இவர்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களின் நிலை குறித்து அறிவதற்காக இன்று பிற்பகல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் இரா.சங்கையா, அதன் ஊடகச் செயலாளர் த.கஜன் ஆகியோர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்குச் சென்று அம்மக்களைப் பார்வையிட்டு, அவர்களின் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தனர்.
தாங்கள் மிகவும் வறியநிலையில் வாழ்வதாகவும் தங்களுக்கான நிவாரண உதவிகள் கூட மூன்று மாதங்களாக நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். தங்களின் சொந்தக் காணிகள் உயர்பாதுகாப்பு வலயத்துள் இருப்பதால் அங்கு செல்ல முடியாமலிருப்பதாகவும், தங்களுக்கு தங்கியிருப்பதற்கான மாற்று இடங்களும் காட்டப்படாத நிலையில் எங்கு செல்வதென தெரியாத நிலையிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இம்மக்களின் பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூட்டணியினர் அம்மக்களிடம் தெரிவித்தனர்.
