எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மலையகம் நாவலப்பிட்டியில் போக்குவரத்துப் பயணிகள் திடீர் சோதனைக்குட்பட்டனர்!

கண்டி மாவட்டத்திலுள்ள நாலப்பிட்டியில் நேற்று பாதுகாப்புப் படையினரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாவலப்பிட்டி நகரூடாகச் சென்ற சகல போக்குவரத்து வாகனங்களும் இடைநிறுத்தப்பட்டு, பயணிகள் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் தேசிய அடையாள அட்டைகள் இராணுவத்தினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் தென்னிலங்கைப் பகுதிகளிலோ, மலையகப் பகுதிகளிலோ போக்குவரத்து வாகனங்கள் இடைமறிக்கப்பட்டு பயணிகள் சோதனையிடப்படும் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருந்தன. தற்போது சிறிது சிறிதாக இந்நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.  இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலையை எற்படுத்துவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

yko_03.jpgதமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வைகோ உள்ளிட்ட சிலரை திருச்சிக்கும், நெடுமாறன் உள்ளிட்ட சிலரை கடலூருக்கும், நடராஜன் உள்ளிட்ட சிலரை மதுரைக்கும் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். பெண்களை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியர் நதீகாவின் மரணம்; அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

mosquito.jpgடெங்கு நோய்க்கு உள்ளாகி உயரிழந்த பதுளை ஆஸ்பத்திரி வைத்தியரின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய வைத்தியர் நதீகா லக்மாலி விஜயநாயக்க டெங்கு நோய்க்கு உள்ளாகி பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். இவ்வாறான நிலையில் இவரது தந்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பதுளை ஆஸ்பத்திரியில் தமது மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததன் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வைத்தியர் நதீகாவின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். டெங்கு நோய்க்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்ட்டுக்குப் பொறுப்பான வைத்தியரான நதீகா அந்த ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுள்ளார்.  இருப்பினும் இவரது ஆரோக்கியத்தில் அங்கு பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உரிய கவனம் செலுத்தினார்களாக என உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேநேரம் டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி டெங்கு ஒழிப்பு தொடர்பான துரித வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. “இவ்வேலைத்திட்டம் தொடர்பான பொறுப்புக்கள் மாகாண சபை களுக்கும், உள்ளூராட்சி மன்றங் களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புக்களை எவரும் தவிர்ந்து நடக்க முடியாது.  டெங்கு நோயை ஒழிப்பதற்காக எல்லோரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்புக்கென பி.ரி.ஐ. பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் மேலதிக செய லாளருக்கு அறிவுறுத்தல் வழங்கி யுள்ளார்.

அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படமாட்டாது – அமைச்சர் கெஹலிய

வட பகுதியில் உள்ள அதிஉயர் பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட மாட்டாது என, இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதுவரையில் 2,91,198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இதுவரையில் 2 லட்சத்து 91 ஆயிரத்து 198 கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார். குறிப்பாக பொலன்னறுவை அனுராதபுரம் உள்ளிட்ட 1746 சதுர பரப்பளவைக்கொண்ட நிலப்பகுதியிலேயே கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய மெதவெல தெரிவித்துள்ளார்

மகள் மீது பாலியல் வல்லுறவு; தந்தைக்கு 10 வருட கடூழியச் சிறை

தனது 14 வயதான மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி புத்தளம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புத்தளம் மேல்நீதிமன்ற நீதவான் எஸ்.டி. அப்ரா தாஸிம் இந்த தீர்ப்பை நேற்று முன்தினம் வழங்கினார்.

2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி மேற்படி தந்தை தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கின் சந்தேக நபரான ஆனமடுவ திறல்வெவ வட்டகெதர வாசியான சோமதாஸ என்பவருக்கே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்தத் தவறின் மேலதிகமாக மூன்று மாதம் கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 25,000 ரூபாவை நஷ்டஈடாக வழங்கவும், நஷ்ட ஈட்டை செலுத்தத்தவறின் மேலதிகமாக ஆறுமாதகால கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் புத்தளம் மேல் நீதிமன்ற நீதவான் தீர்ப்பளித்துள்ளார்.

4 குழந்தைகளின் தந்தையான இவர் தனது மனைவி வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பெற்றுச் சென்றுள்ள சமயம் பாட்டியின் பாதுகாப்பிலிருந்த தனது மூத்த மகளையே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

பாங் கி மூனின் ஆலோசனைக் குழுவை எதிர்த்து ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம்

ஐ. நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் இலங்கை தொடர்பில் நியமித்த ஆலோசனைக் குழுவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று ஜெனீவாவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகம் முன்பாக ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஜெனீவாவில் நேற்று நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி, நோர்வே உட்பட ஐரோப்பிய நாடுகளிலுள்ள இலங்கையர்கள் சுவிஸ் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் இறைமையை பாதுகாப்பதற்கான அமைப்பொன்றினாலேயே இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இதேவேளை, நியூயோர்க், பிரித்தானியா, ஜேர்மன், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளிலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடல் மட்டம் உயர்வு

இலங்கை, இந்தோனேஷியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரித்துள்ளதால் இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவின் Colorado பல்கலைக்கழகம், அந்நாட்டு தேசிய சுற்றுச் சூழல் ஆய்வு மையம் ஆகியன இந்து சமுத்திரம் தொடர்பாக நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வு நடத்தின.

பேச்சுவார்த்தையில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டும். – மனோ கணேசன்

அரசியல் சாசனத் திருத்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சிறுபான்மை கட்சிகளும் உள்ளடக்கப்பட வேண்டுமென ஜனநயாக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். சிறுபான்மை கட்சிகளின் பங்களிப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடமும் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

”எல்ரிரிஈ இன் சரணடையும் கோரிக்கை மிகவும் காலம் தாழ்த்தியே வந்தது. முன்னரே சரணடைந்து இருந்தால் பல்லாயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும்” எரிக் சொல்ஹைம்

Erik_Solheim_Pirabaharan_Vதமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்து இருந்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும் என நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் எல்ரிரிஈக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகித்தவரான எரிக் சொல்ஹைம் தெரிவித்துள்ளார். இலங்கை சண்டே ரைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்து உள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் எல்ரிரிஈ இறுதிநேரத்தில் சரணடையும் முடிவை எடுத்தபோது அது மிகவும் காலம் தாழ்த்திய முடிவாகி இருந்தது என்று கூறினார்.

எல்ரிரிஈ தங்கள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைய வேண்டும் என்ற கோரிக்கை 2009 பெப்ரவரி முற்பகுதியிலேயே தேசம்நெற் இல் வைக்கப்பட்டது. எல்ரிரிஈ சரணடைவதன் மூலமே மனித அவலத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை அப்போது வலியுறுத்தி வந்தோம். 2009 பெப்ரவரி அளவில் 2000க்கு உட்பட்டவர்களே கொல்லப்பட்டனர். ஆனால் அதற்குப் பின்னைய நாட்களில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டு எல்ரிரிஈ இன் தலைமை கொல்லப்படுகின்ற இறுதி நேரத்திலேயே அவர்கள் சரணடைய முன்வந்திருந்தனர்.

எரிக் சொல்ஹைம் தனது நேர்காணலில் ”நாங்கள் எல்ரிரிஈ யை ஒழுங்குமுறையில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி (சரணடையும்படி) கேட்டிருந்தோம். அப்படி நடந்திருந்தால் ஆயிரக்கணக்காண உயிர்கள் காப்பாற்றப்பட்டு இருக்கும். இந்த யுத்தம் ஐக்கிய நாடுகள் சபை இந்தியா அமெரிக்கா மற்றும் சிலரின் கண்காணிப்புடன் நடைபெற்று இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

தான் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருந்ததாகவும் ஐநா பிரதிநிதிகள் வே பிரபாகரனுடக் தொடர்பில் இருந்ததாகவும் அனால் இரு தரப்பும் வேறு வேறு காரணங்களுக்காக யுத்தத்தை தொடர்ந்தனர் என்றும் எரிக் சோல்ஹைம் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் மே 17 2009ல் புலிகளுடைய தலைவர்கள் பா நடேசன் எஸ் புலித்தேவன் ஆகியோரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் அவர்கள் சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்படி தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார். எல்ரிரிஈ சரணடைவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு ஐசிஆர்சி ஐநா ஆகிய அமைப்புகளையும் கேட்டிருந்ததாகவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார்.

”(எல்ரிரிஈ இன் வேண்டுகோளை) நாங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினோம். எல்ரிரிக்கு அவர்களுடைய (சரணடையும்) கோரிக்கை மிகத் தாமதமாக வந்ததைத் தெரியப்படுத்தினேன். அவர்கள் சரணடைவதாக இருந்தால் வெள்ளைக்கொடியைத் தூக்கிக் கொண்டு சென்று சரணடையும்படி கூறினேன். ஆனால் சிறிது நேரத்தின் பின் அவர்கள் இறந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டேன்” என எரிக் சொல்ஹைம் எல்ரிரிஈ, க்கும் தனக்குமான கடைசி உரையாடல்கள் பற்றிக் குறிப்பிட்டார்.

ஆனால் எரிசொல்ஹைம் எல்ரிரிஈ சரணடைய முன்வந்துள்ளனர் என்ற தகவலை இலங்கை அரசில் உள்ள யாரிடம் தெரிவித்தார் என்பதை வெளியிட மறுத்துள்ளார். மேலும் இந்த சரணடையும் பேச்சுவார்த்தையில் வேறு சிலரும் தொடர்புபட்டு இருந்ததாகவும் கூறியுள்ள சொல்ஹைம் அவர்களின் பெயரையும் வெளியிட மறுத்துள்ளார்.

”யுத்தத்தை மீள ஆரம்பிப்பதற்கு சர்வதேச சமூகம் ஆதரவளிக்காது. யுத்தத்தில் விருப்பம் இல்லை என்பதை புலம்பெயர் தமிழர்களுக்கு சொல்கிறேன். ஆனால் தமிழர்களின் உரிமைக்கு சர்வதேச சமூகத்திடம் பாரிய ஆதரவு உண்டு” எனவும் எரிக் சொல்ஹைம் தெரிவித்தார். இலங்கை ஊடகங்கள் தன்மீது பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

‘இந்தியா இந்தோனேசியா மலேசியா நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கான உரிமைகளை இலங்கையும் வழங்க முன்வர வேண்டும்’ என்றவகையிலும் எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டு இருந்தார். ”தென்னிந்திய மாநிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுக்குப் பல உரிமைகள் உள்ளது. அரசியல் உரிமைகளுக்குப் பலமான ஆதரவு உள்ளது. ஆனால் யுத்தத்தை மீய ஆரம்பிக்க ஆதரவு இல்லை. இதுவே நோர்வேயின் நிலைப்பாடு. இதுவே உலகில் உள்ள பெரும்பாலான அரசுகளின் நிலைப்பாடும்” எனவும் சொல்ஹைம் தெரிவித்தார்.

தற்போது ஜநா வினால் உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவையும் வரவேற்று எரிக் சொல்ஹைம் கருத்து வெளியிட்டார்.

இலங்கைத் தமிழர்களின் வரலாறு காணாத இந்த அழிவையும் அவலத்தையும் நிறுத்தியிருக்கக் கூடிய மட்டுப்படுத்தி இருக்கக் கூடிய வாய்ப்புகள் தமிழ் அரசியல் தலைமைகளிடமும் புலம்பெயர்ந்த தமிழ் தலைமைகளிடமும் இருந்தது. ஆனால் இவர்கள் தமிழ் மக்களின் அவலத்தை இன்னமும் தூண்டி விடுவதன் மூலம் சர்வதேச கவனத்தை திருப்பலாம் என்று வன்னி மக்கள் கொல்லப்படுவதற்கு துணை போயினர்.

இப்போது எந்த அரசாங்கத்திற்கு எதிராக இத்தலைமைகள் கடந்த 30 வருடமாக ஆயுதம் ஏந்திப் போராடினார்களோ அந்த அரசாங்கம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக கோசமிடுகின்றனர். ஆனால் அம்மக்களுக்கு வலிந்து தம் தலைமையைத் திணித்து இந்த அழிவை ஏற்படுத்தியதில் தமக்குள்ள பங்கு பற்றி மெளனமாகவே உள்ளனர்.

கடந்த 30 ஆண்டுகாலம் (சுதந்திரம் அடைந்தது முதல்) எதிரியாக கருதப்பட்ட வந்த அரசிடம் நியாயம் கேட்கும் தமிழ் தலைமைகள் தங்கள் தலைமைத்துவத்தின் வக்கற்ற அரசியலை தொடர்ந்தும் செய்வதற்காக தங்கள் தலைமையை தொடர்ந்தும் தக்க வைக்க இலங்கை அரசு மீது முழுப்பழியையும் போட்டுவிட்டு தாங்கள் தப்பிக்க இலங்கை அரசின் மனித உரிமை மீறலுக்குப் பின் தாங்கள் பதுங்கிக் கொள்கின்றனர்.

வெள்ளம் வருமுன் அணைகட்டப்பட வேண்டும். மனித உரிமைகள் மீறப்படமுன் அதனை தடுப்பதற்கான சூழலை உருவாக்க வேண்டும். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம் அர்த்தமற்றது.