எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கிழக்கு மாகாண பாடசாலைகளில் சாரணியத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

batti_.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சாரணியத்தை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலைகளில் சாரணியக் குழுக்களை அமைத்தல், மாவட்ட சாரணிய சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல், சாரணிய பயிற்சிகளுக்கு உதவுதல், வருடத்திற்கு மூன்று தடவைகள் சாரணிய ஆணையாளரின் ஒன்று கூடலை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் திருகோணமலை துளசிபுரத்திலுள்ள மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம். ஐ.எம். முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் எஸ். இருதயநாதன், திரு கோணமலை மாவட்ட ஆணையாளர் இராஜ ரஞ்சன், கிழக்கு மாகாண சாரண ஆணையாளர் யூ.எல்.எம். ஹாஸிம் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இஸ்ரேல் குண்டு வீச்சில் ‘ஹமாஸ்’ இயக்க அமைச்சர் பலி- ஐ. நா. சபை உதவிக்குழு கட்டடமும் தகர்ப்பு

gaza_war02.jpgபலஸ் தீனத்தின் காஸா நகரம் மீது இஸ்ரேல் விமானங்களும் பீரங்கிப் படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. 21வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நிறுத்தும்படி ஐ. நா. சபை விடுத்த கோரிக்கைகளையும் இரு தரப்பினரும் ஏற்றக்கொள்ளவில்லை.

ஏற்கனவே பலஸ்தீனத்தின் காஸா நகரில் இருந்த ஹமாஸ் இயக்கத்தினரின் அலுவலகங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. 21 நாட்களாக நடந்த தாக்குதல்களில் பலியானவர்கள் எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாகிவிட்டது. இந்த நிலையில் பலஸ்தீனத்தின் ஜபாலியா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் உள்துறை அமைச்சர் சயீத் சலாம் வீடு மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியது. இதில் அந்த அமைச்சர் பலியானார். அவரது மகன் மற்றும் சகோதரரும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

காஸா பகுதியில் தாக்குதலில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரணப் பொருள்கள், மருந்துகள், உணவுப் பொருட்கள் வழங்க ஐ. நா. சபை ஏற்பாடு செய்துள்ளது. காஸா பகுதியில் உள்ள ஐ. நா. சபை கிளை அலுவலகத்தில் டன் கணக்கில் இந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

அந்த கட்டடம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் 3பேர் பலியானதுடன் டன் கணக்கில் மருந்து பொருட்கள் நாசம் அடைந்தன. இஸ்ரேலின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து ஐ. நா. சபை அவசரமாகக் கூடுகிறது.

பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத்தேர்தலை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்தவேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க

tissa.jpgமலையக பெருந்தோட்டத்துறையில் புதிய தலைமைத்துவம் உருவாக இத் தேர்தலை ஒரு தேசிய சந்தர்ப்பமாக பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க நுவரெலியா புதிய நகரமண்டபத்தில்  நடைபெற்ற மத்திய மாகாண சபையின் நுவரெலியா மாவட்ட தேர்தல் செயல் திட்டம் சம்பந்தமாக விளக்கமளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பொழுது வேண்டுகோள் விடுத்தார்.  இக்கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தொடர்ந்தும் உரையாற்றுகையில்; மலையக பெருந்தோட்ட தலைவர்களான ஆறுமுகம் தொண்டமான், சந்திரசேகரன் போன்றவர்கள் ஐக்கிய மக்கள் முன்னணியின் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டாலும் தொழிலாளர்கள் எமது யானை சின்னத்திற்கே வாக்களித்து பழக்கப்பட்டவர்கள்.

நடைபெறவிருக்கும் மாகாணசபை தேர்தலை சாதாரண மாகாணசபை தேர்தலாக நினைக்காமல் பொதுத் தேர்தலாக நினைத்து அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டு  செய்யவேண்டும். சிரச நிலையத்தை தாக்கியதோடு சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவையும் படுகொலை செய்ததற்கு அரசாங்கம் பதில் கூறவேண்டும்.இந்நாட்டில் தற்பொழுது ஜனநாயகம் நீங்கி சர்வாதிகாரம் தலைதூக்கி வருகின்றது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமானால் எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியகட்சி வெற்றிபெற வேண்டும். அரசாங்கத்தின் அராஜகத்திற்கு எதிராக நாம் நடத்திய கண்டன எதிர்ப்பு கூட்டங்களில் விக்கிரமபாகு உட்பட என்றும் எம்முடன் சேர்ந்துகொள்ளாத பல கட்சி தலைவர்கள் இப்போது இணைந்துள்ளனர். எனவே இந்நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி வருவதற்கு ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் பொதுதேர்தல் ஒன்று வரலாம். அத்தேர்தலிலும் ஐ.தே.க. வெற்றிபெற வேண்டும் என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

தமிழக எம்.பி.க்கள் பதவி விலக வேண்டும்: திருமா

thirumavalavan-1601.jpgஇலங்கையில் உடனே போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உடல் நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் கருணாநிதி, அமைச்சர் ஆற்காடு வீராச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டுமென்று திருமாவளவனிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ’’கிளிநொச்சியை கைப்பற்ற நினைத்த இலங்கை ராணுவம் பின்வாங்கும் நிலையில் இருந்தபோது அவர்களுக்கு இந்திய அரசு கடைசி நேரத்தில் ஆயுதங்களையும் படை வீரர்களையும் வழங்கி உதவியதால்தான் அவர்களால் கிளிநொச்சியை கைப்பற்ற முடிந்தது.

இந்திய அரசு இப்படி தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக பச்சைத் துரோகம் செய்து வருகிறது. எனவேதான் வேறு வழியின்றி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினோம். இது தமிழக முதல்வருக்கோ, தமிழக அரசுக்கோ எதிரானது அல்ல. இதனால் முதல்வருக்கு சங்கடம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறேன். முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சித் தலைவர்களும் ஈழ விடுதலை ஆதரவாளர்களும் என்னுடைய போராட்டத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதனை கைவிடுமாறு கூறுவதை விட அனைத்து தலைவர்களும் இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

ஈழ விஷயத்தில் இந்திய அரசை நிர்ப்பந்தப்படுத்த கடந்த ஆண்டு அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட  ஒருமனதான தீர்மானத்தின்படி தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்’’ என்றார்.

ஸ்ரீலங்கன் எயார்வேஸ் விமானத்தில் மோதிய பறவை

images-01.jpg
கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்ற ஸ்ரீலங்கான் எயார்வேஸிக்குச் சொந்தமான விமானமொன்று சென்னை விமான நிலைய ஓடுபாதையை நோக்கி வரும் போது பறவையொன்று மோதி அதன் இயந்திரப் பகுதிக்குள் சென்று விட்டது. இதனையறிந்த விமானி விமானத்தை சமார்த்தியமாக நிறுத்தினார். இந்த விமானத்தில் 89 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் மீண்டும் நேற்றிரவு 11.00 மணிக்குக் கொழும்பு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் புறப்படுவது ரத்துச் செய்யப்பட்டது. இந்த விமானத்தில் கொழும்பு வருவதற்காகவிருந்த 152 பயணிகளும் நேற்றிரவு சென்னையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலையில் இந்த விமானம் பயணிகளுடன் கொழும்பு புறப்பட்டது.

இராமநாதபுரம் விடுவிக்கப்பட்டுள்ளது

truck.jpgஇராணுவத்தின் 57வது படையணியினர் புலிகளின் பிடியிலிருந்து இராமநாதபுரத்தை விடுவித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. 571 மற்றும் 572 வது படைப் பிரிவுகள் இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மேற்கொண்ட தாக்குதல்களை அடுத்தே இன்று பிற்பகல் இந்தப் பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நகருக்கு அடுத்ததாக முக்கிய புலிகளின் தளங்களில் ஒன்றாக இராமநாதபுரம் விளங்கி வந்தது. இராமநாதபுரம் படையினரால் விடுவிக்கப்பட்டதையடுத்து புலிகள் இயக்க உறுப்பினர்கள் முத்தையன்கட்டு காட்டுப் பகுதிகளுக்குள் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா- நெடுங்கேணி பயணிகள் பஸ் சேவை வெள்ளி ஆரம்பமானது

bus-17o1.jpgநெடுங்கேணி பிரதேசம் புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து வவுனியா  நெடுங்கேணியிடையேயான பயணிகள் பஸ் சேவை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இப்பயணிகள் பஸ் சேவை முன்னர் புலிகளின் சோதனைச் சாவடியாயிருந்த ஓமந்தை மற்றும் புளியங்குளம் ஊடாக நடத்தப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தமிழர்களின் பிரதிநிதிகள் அல்ல – ஜெயலலிதா –

jayalalitha-1701.jpgவிடுதலைப் புலிகள்தான் இலங்கை தமிழர்களின் ஒரே பிரதிநிதி என்பதை நாங்கள் நம்பவில்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். சென்னையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் நிருபர்களுக்கு ஜெயலலிதா அளித்த பேட்டி:

கேள்வி: இலங்கை தமிழர் பிரச்சனைக்காக திருமாவளவன் 3வது நாளாக உண்ணாவிரதம் இருக்கிறார். அவரை உங்கள் கூட்டணி கட்சியினரான மதிமுக, சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவளித்துள்ளனர். இதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

ஜெயலலிதா: இலங்கை பிரச்சனையைப் பொறுத்தவரை எங்களுக்கென்று தனிக்கொள்கை உண்டு. எங்கள் கூட்டணியில் சில கட்சிகள் இருந்தால், அவர்கள் அனைவருக்குமே எல்லாப் பிரச்சனையிலும் ஒருமித்த கருத்து இருக்க முடியாது. அவரவருக்கும் ஒரு கொள்கை உண்டு. இந்த உண்ணாவிரதம் கருணாநிதியும் திருமாவளவனும் பேசி வைத்துக் கொண்டு நடத்தும் நாடகம்.

கேள்வி: இலங்கை விஷயத்தில் உங்கள் கட்சியின் நிலை என்ன? மத்திய அரசு இதில் தலையிட வேண்டுமா? கூடாதா?

ஜெயலலிதா: இதுகுறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரச்சனையில் எந்த நாடும் தன்னிச்சையாக தலையிட முடியாது. இலங்கை பிரச்சனையைப் பொறுத்த அளவில் அங்குள்ள தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும். கௌரவமான வாழ்வு அமைய வேண்டும். சிங்கள மக்களைப் போலவே சுதந்திரமான உரிமைகளோடு தமிழ் மக்களும் வாழவேண்டும் என்பது தான். ஆனால் பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. இதை பல நாடுகளும் அறிவித்துள்ளன. பல நாடுகளில் தடையும் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழர்களுக்கான ஒரே பிரதிநிதி விடுதலைப் புலிகள்தான் என்பதை நாங்கள் நம்பவில்லை.

கேள்வி: போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்களே?

ஜெயலலிதா: கருணாநிதியும் திருமாவளவனும் தொடர்ந்து போர் நிறுத்தம் என மக்களை ஏமாற்றுகிறார்கள்.

கேள்வி: 1983ம் ஆண்டில் எம்ஜிஆர் விடுதலைப் புலிகளை முழுமையாக ஆதரித்தாரே?

ஜெயலலிதா: அப்போதிருந்த நிலை வேறு. இப்போதுள்ள நிலைமை வேறு.

கேள்வி: ஈழத் தமிழர்கள் அங்கு கொல்லப்பட்டு வருகிறார்களே?

ஜெயலலிதா: ஈழம் என்ற ஒரு நாடே இல்லை. அவர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர்கள்தான். எங்கு யுத்தம் நடந்தாலும் அங்கு அப்பாவி பொதுமக்கள் சிலர் கொல்லப்படுவார்கள். இலங்கையில் தமிழர்களை கொல்ல ராணுவம் எண்ணவில்லை. போர் நடக்கும் போது அப்பாவிகளும் கொல்லப்படுவார்கள். இதில் எந்த நாடும் விதி விலக்கு அல்ல. இப்போது இலங்கையில் என்ன நடக்கிறது என்றால் அங்குள்ள தமிழர்கள் பாதுகாப்பான இடம் தேடி செல்ல முடியவில்லை. அவர்களை புலிகள் பிடித்து வைத்து, ராணுவத்திற்கு முன் கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே விடுதலைப் புலிகள் நினைத்தால், அப்பாவித்தமிழர்களை சாவிலிருந்து காப்பாற்ற முடியும்.

கேள்வி: ஸ்பெக்ட்ரம் ஊழல் போன்ற பிரச்சனையை மறைப்பதற்காகத்தான் இந்த நாடகமா?

ஜெயலலிதா: ஆமாம். நிச்சயமாக அதுதான் காரணம். சத்யம் என்கிற தனியார் நிறுவனத்தில் ரூ. 7,000 ரூபாய் மோசடிக்கே அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கிறது. போலீசார் ஐபிசியின் கீழ் வழக்குப்பதிவு செய்து முன்னாள் தலைவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் அரசு பணம் எதையும் களவாடவில்லை. ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் இந்திய அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வரையிலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தனியார் மீது வேகமாக நடவடிக்கை எடுத்தவர்கள் இதில் தொடர்புடைய மத்திய அமைச்சர் மீதோ, அதற்கு உடந்தையானவர்கள் மீதோ ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

கேள்வி: சத்யம் நிறுவனத் தலைவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் மத்திய அமைச்சர் ராஜா ஒப்புக் கொள்ளவில்லையே?

ஜெயலலிதா: உங்கள் கேள்வியே தவறு. ஏற்கனவே சந்தனக்கடத்தல் கொள்ளையன் உட்பட பலர் தவறு செய்தார்களே? அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகா அரசு நடவடிக்கை எடுத்தது?

கேள்வி: சத்யம் நிறுவன ஊழலில் அரசியல்வாதிகளும் உடந்தை என சொல்லப்படுகிறதே?

ஜெயலலிதா: யாராக இருந்தாலும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் என்னுடைய கேள்வி என்பது தனியார் நிறுவனத்தின் ரூ. 7,000 கோடிக்கே நடவடிக்கை எடுத்த அரசு ஒரு லட்சம் கோடி அரசுப் பணம் முறைகேட்டின்போது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான்.

கேள்வி: அதிமுக கூட்டணிக்கு பாமகவுக்கு அழைப்புண்டா?

ஜெயலலிதா: நிச்சயம் எங்கள் கூட்டணி மேலும் வலுப்பெறும். போகப் போக அது உங்களுக்குத் தெரியும்

கேள்வி: பாஜக உங்கள் அணிக்கு வருமா?

ஜெயலலிதா: ஏற்கனவே இதற்கு பதிலளித்து விட்டேன். வீணாக என்னை வம்புக்கு இழுக்க முடியாது. என்னை யாரும் கோபப்படுத்த முடியாது.

கேள்வி: வரும் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வருமா? நீங்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ஜெயலலிதா: நான் ஏற்கனவே எம்எல்ஏ மற்றும் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை.

கேள்வி: சட்டமன்றத்திற்கு விரைவில் தேர்தல் வருமா?

ஜெயலலிதா: சட்டமன்றத்துக்கும் தேர்தல் எப்படியாவது வரும். வரவழைப்போம். எப்படியாவது அது வரும்வரை ஓயாது செயல்படுவோம். ஏனென்றால் நாடு விடுதலை அடைந்த பிறகு இந்த அளவுக்கு மிக மோசமான ஊழலாட்சி தமிழகத்தில் நடந்ததில்லை. வரலாறு காணாத ஊழல் ஆட்சியாக திமுக ஆட்சி நடக்கிறது. முதல்வரும் செயல்படவில்லை. கையாலாகாத்தனம், நிர்வாக திறமையின்மை தினமும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு குடும்பம்… குடும்பம் என்றும் சொல்ல மாட்டேன். ஒரு வன்முறை கும்பல் தமிழகத்தையே வேட்டை காடாக்கி வருகிறது. நிர்வாகத்தில் துளியும் அக்கறை இல்லாமல் தமிழகத்தை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எனவே இந்த குடும்பத்தின் ஆட்சியை அகற்றி அழிவுப் பாதையிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு என்ன வழியோ அதற்கான வேலைகளில் நாங்கள் ஈடுபடுவோம். திமுக ஆட்சியை அகற்றி நிச்சயம் எங்கள் இலக்கை அடைவோம் என்றார் ஜெயலலிதா.

நன்றி: வன் இந்தியா

ஒவ்வொரு ஜனவரி 4 ம் திகதியையும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தேசிய தினமாக பிரகடனம்?

sumeda-jayasena.jpgநாட்டின் எதிர்கால சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு சேவைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குழந்தைகளின் திறமைகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒவ்வொரு ஜனவரி 4 ம் திகதியையும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப் போவதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்தார்.

கருணாநிதி வாக்குறுதி: உண்ணாவிரதத்தை திருமா. கைவிட வேண்டும்-ராமதாஸ்

thirumavalavan-1601.jpgமுதல்வர் கருணாநிதி அளித்துள்ள உறுதிமொழியை ஏற்று திருமாவளவன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் நல்லதோர் தீர்வு காண்பதற்கு 50 ஆண்டுக் காலமாக என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன். இன்னும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார். கருணாநிதியை நம்புவோம். பலமுறை வாக்குறுதி அளித்து வந்துள்ள இந்திய பேரரசு மீது முதல்-அமைச்சர் நம்பிக்கை வைத்திருக்கிறார். நாமும் நம்புவோம். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தப் பிரச்சினையில் நாம் விரும்புகின்ற முடிவை மேற்கொள்வார் என்று முதல்வரை நாம் நம்புவோம்.

முதல்வர் பெரிதும் நம்பியிருக்கிற இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளரின் கொழும்பு பயணத்தினால் என்ன விளைவுகள் ஏற்படப் போகிறது என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும். அங்கே நாம் விரும்புகின்ற போர் நிறுத்தம் ஏற்படுமா என்பது முக்கியமாகத் தெரிந்துவிடும். அப்படிப் போர் நிறுத்தம் ஏற்பட வழி பிறக்காவிட்டால் அதன்பிறகு, தமிழக மக்களின் சார்பில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நாம் அனைவரும் கலந்து பேசி முடிவெடுத்து அவரிடம் தெரிவிப்போம்.

எனவே ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் கருதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தனது உண்ணாவிரதப் போராட்டத்தை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அவரது உடல்நிலை குறித்து அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில் முதல்வர் கருணாநிதி புதிதாக அறிவித்திருக்கும் வாக்குறுதியையும், அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கவலையையும் மனதில் கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது உண்ணாவிரதத்தை இன்றோடு முடித்துக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.