எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் மாநாடு

moon.jpgஹிஜ்ரி 1431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு நாளை (9) வியாழக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மத்ரஸதுல் ஹமீதிய்யா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள் கிறது. அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது 011-5234044, 2432110, 2390783 மற்றும் 0777-366099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரியபள்ளி வாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுக்கொள்கின்றார்.

உலமாக்கள், கதீப்மார்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய கலாசார திணைக்கள, ஷரீஆ கவுன்ஸில் பிரதிநிதிகள் ஜும்ஆப் பள்ளி வாசல், தக்கியாக்கள், சாவியாக்களின் நிர்வாகிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அவசரகால சட்டம் வாக்கெடுப்பின்றி ஒரு மாத காலத்திற்கு நீடிப்பு

parliment.jpgஇலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று அவசரகால சட்டம் வாக்கெடுப்பு இன்றி மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 18 வது அரசியல் அமைப்பு சீர்திருத்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தாம் உட்பட்ட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுடன் வெளியேறினார்.

இதன் பின்னர் அவசரகால சட்டம் தொடர்பில் வாக்களிப்பு நடத்துவதற்கு எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் இல்லைமை காரணமாக வாக்கெடுப்பு இன்றி அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது.

உலக வர்த்தக நிலைய தாக்குதலைக் கண்டித்து புனித குர்ஆன் பிரதிகளை எரிக்க தேவாலயம் முடிவு

w-t-c.jpgபுனித குர்ஆன் பிரதிகளை எரிக்கும் அமெரிக்க தேவாலயத்தின் தீர்மானத்தைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் பெருந்தொகையான மாணவர்களும் கலந்து கொண்டனர். அமெரிக்கா ஒழிக, ஏகாதிபதியம் அழிக, மதக் குரோதத்தை வளர்க்காதே எனப் பலவகையாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

இந்நிலை ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படைகளை மேலும் ஆபத்துக்கள்ளாக்கும் என அங்குள்ள நேட்டோ படைத்தளபதி எச்சரித்துள்ளார். அத்துடன் குர்ஆன் பிரதிகளை எரிக்கும் தீர்மானத்தை அமெரிக்க தேவாலயம் கைவிட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்ட தினம் செப்டம்பர் 11 இல் நினைவு கூரப்படவுள்ளது. இது 2001 செப்டம்பர் 11 இல் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இத் தாக்குதலைக் கண்டித்தும் இதற்குத் தூபமிட்டதாக தேவாலயம் கருதும் புனித குர்ஆன் வசனங்களை எரிக்கவும் அமெரிக்காவிலுள்ள தேவாலயம் எண்ணியுள்ளது.

இதைக் கண்டித்தே ஆப்கானில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. இதன் எதிரொலிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளுக்கும் பரவும் அபாயத்தையும் சுட்டிக்காட்டிய நேட்டோ தளபதி அரபுலகிலும், இஸ்லாமிய நாடுகளிலும் சமாதானத்தைக் கொண்டுவர அமெரிக்கா எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் இது தவிடு பொடியாக்கும் என்றும் கூறினார். உலகிலுள்ள 1.5 பில்லியன் முஸ்லிம்களின் மனங்களையும் புண்படச் செய்யும் இவ்வாறான வேலைகளால் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நீண்ட கால சமாதானக் கனவு சிதைக்கப்படும் ஆபத்துக்களையும் விளக்கினார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களைத் தோற்கடிக்க பொது மக்களின் ஆதரவு அமெரிக்க இராணுவத்துக்குத் தேவைப் படுகின்றது.  தலிபான்களையும், ஆப்கான் பொதுமக்களையும் வேறுபடுத்தி தலிபான், அல் கைதாக்களை தனிமைப்படுத்த மேற்குலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை குர்ஆன் பிரதிகளை எரிக்கும் இச்செயல் சீரழிக்கும் என்றும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மற்றும் தலிபான், அல் கைதா அமைப்புகள் தேவாலயத்தின் இத் தீர்மானத்தை சாதகமாகப் பயன்படுத்தவும் வாய்ப்புகள் ஏற்படலாமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழாவில் நேற்று வரலாறு காணாத ஜன சமுத்திரம்

nallur01.jpgநல்லூர்க் கந்தன் ஆலய தேர்த்திருவிழா நேற்று 7ம் திகதி நடைபெற்ற போது பெருமளவிலான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேர்த்திருவிழா நேற்று அதிகாலை ஆரம்பமானது. தேர்த்திருவிழாவினைக் காண யாழ். குடாநாட்டில் இருந்தும் தென் இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் வருகை தந்திருந்தனர். இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்வோரும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

18ஆவது திருத்தத்துக்கு எதிராக பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆர்ப்பாட்டங்கள்

ஜனாதிபதியின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்தக்கூடிய உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு எதிராக பாராளுமன்றத்திற்கு வெளிப்புறத்தே பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க., ஜே.வி.பி.கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தன.

இன்று புதன்கிழமை உத்தேச திருத்தப் பிரேரணை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்புப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி உள்ளன. இந்த அரசியலமைப்புத் திருத்தங்களுக்கு கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் எத்தனை தடவையேனும் போட்டியிடுவதற்கு வழிசெய்யும் வகையிலான இந்தத் திருத்தங்களை ஐ.தே.க., ஜே.வி.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

ஸ்ரீ ரங்காவும் ஆதரவு?

sriranga.gif18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரபல ஊடகவியலாளரான ஜெய் ஸ்ரீ ரங்கா ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாக அரச தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை.

parliment.jpgஅரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களுக்கு எதிராக ஜேவிபி உச்சநீதிமன்றில் வழக்கு பதிவு செய்திருந்தது. அவ்வழக்கில் யாப்பில் மாற்றம் செய்வதாயின் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை மேற்கொண்டு மக்களின் ஆணையை பெறவேண்டும் என வேண்டப்பட்டிருந்தது.

இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பினை உச்ச நீதிமன்று அறிவித்துள்ளதாகவும் , அரசியல் யாப்பு மாற்றத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை எனவும் பாராளுமன்றில் 2/3 பெரும்பாண்மையின் அங்கீகாரத்துடன் அரசியல் யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் எனவும் அத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட ஐ.தே.கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்சா அரசின் பக்கம்

upeksha.gifபபா என அழைக்கப்படும் கம்பஹா மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் உபேக்சா சுவர்ணமாலி சற்றுமுன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது 18 ஆவது அரசியல்யாப்பு திருத்தத்திற்கு ஆதவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாராளுமன்றத்தின் முன்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசியல்யாப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது

Operation Loan Shark கிழக்கு லண்டன் ஈஸ்ற்ஹாமில் தமிழர் சிலர் கைது!!!

Operation_Loan_Shark‘ஒப்ரேசன் லோன் சார்க்’ பொலிஸ் நடவடிக்கையின் கீழ்  ஈஸ்ற்ஹாமில் சில தமிழர்களும் கைது செய்யப்பட்டு உள்ளனர். பொருளாதார ரீதியில் பலவீனமான நிலையில் பொருளாதார அறிவு குறைந்தும் வேறு வழிகளில் பொருளாதார உதவியைப் பெற முடியாதவர்கள் சில தனிப்பட்டவர்களிடம் இருந்து கடன் (லோன்) பெறுகின்றனர். வங்கிகள் போன்ற நிறுவனங்களிலும் பார்க்க அதிகப்படியான வட்டிக்கு கடன்பெறுகின்ற இவர்கள் இக்கடனை மீளச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

தங்கள் கடன் அதற்கான வட்டி மாதாந்தம் கிடைக்கத் தவறும் பட்சத்தில் கடன் வழங்கியவர் பல்வேறு அழுத்தங்களையும் மிரட்டல்களையும் கடன் வாங்கியவர்கள் மீது செலுத்துகின்றனர். இதற்கு வன்முறையும் பயன்படுத்தப்படுகின்றது. இந்தக் கடன் மற்றும் அதனுடன் தொடர்பான பிரச்சினைகளை பொலிஸ் பிரிவின் ‘ஒப்பிரேசன் லோன் சார்க்’ கையாண்டு வருகின்றது.

சில மாதங்களாக லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற ஈஸ்ற்ஹாம் பகுதியில் ஒப்பிரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில தமிழர்களும் வர்த்தக நிறுவனங்களும் மாட்டியுள்ளனர். வட்டி மகேஸ், கணக்காளர் தர்மலிங்கம் போன்றவர்கள் இந்த ஒப்ரேசன் லோன் சார்க் நடவடிக்கையில் சில மாதங்களுக்கு முன்பாக மாட்டிக் கொண்டனர். இவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டனர். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தொடரப்பட்டு உள்ளது.

இந்தப் பொலிஸ் நடவடிக்கையின் உதவியால் நாடு முழுவதும் 13500 பேரின் 25 மில்லியன் பவுண்கள் பெறுமதியான சட்ட விரோதமான கடன்கள் இல்லாமற் செய்யப்பட்டு உள்ளது என இந்நடவடிக்கைக்குப் பொறுப்பான பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

லண்டன் குரலில் இச்செய்தி வெளியான பின் லண்டன்குரல் உடன் தொடர்பு கொண்ட திருமதி தர்மலிங்கம் தனது கணவர் தவறான தகவல்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகவும் தற்போது அவர் மீது எவ்வித வழக்குகளும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தார். தனது கணவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை எனக் காணப்பட்டு அவரூடைய பெயர் மீது இருந்த களங்கம் நீக்கப்பட்டதாகவும் திருமதி தர்மலிங்கம் தெரிவித்தார். தனது கணவர் தற்போது தொடர்ந்தும் கணக்காளராகப் பணியாற்றி வருவதாகவும் அவர் லண்டன் குரலுக்குத் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாமில் இது தொடர்பான மற்றுமொரு வழக்கு தற்போது நடந்து கொண்டுள்ளது. இவ்விசாரணை வழக்கு இன்னும் சில வாரங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈஸ்ஹாமில் வதியும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பவர் மீதே ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். நாடராஜா வட்டிக்குப் பணம் கொடுத்ததாகவும் அது பற்றி கடன் பெற்ற ஒருவர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து நடராஜா ஏப்ரல் 2010ல் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின் மறுநாளே விடுவிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு உள்ளது.

இவர் தீபம் தொலைக்காட்சி சித்திரா நாடகம் மூலம் அறியப்பட்டவர். இந்நாடகத்தில் இவரது மனைவியும் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்போது இவர்கள் இவ்வழக்குத் தொடர்பான காரணங்களுக்காக பரவலாக அறியப்பட்டுள்ளனர்.

இவ்விவகாரம் பற்றித் தெரியவருவதாவது புகார் வழங்கியவர் நிதி நெருக்கடியில் இருந்த போது தனது இரண்டாவது வீட்டை  வாடகைக்கு வழங்கி முகாமைத்துவம் செய்ய அதனை செலெக்ற் புரொப்பற்டீக்கு வழங்கி உள்ளார். அதன் மூலம் ஏற்பட்ட நட்பினால் தனது நிதி நெருக்கடிக்கு செலக்ற் புரப்பற்டீயின் உரிமையாளர் வி ஜே போஸை அணுகியுள்ளர். அதற்கு முன்னர் சிறு சிறு உதவிகளைச் செய்துவந்த போஸ் தற்போது கேட்ட 5000 பவுண் உதவியை வழங்க முடியாதுள்ள நிலையை விளக்கி உள்ளார். ஆனால் தனது நிதிநெருக்கடியை வலியுறுத்தி வற்புறுத்திக் கேட்கவே வி ஜே போஸ் நடராஜாவை அறிமுகப்படுத்தினார்.

நிதி நெருக்கடியில் இருந்தவர் நடராஜாவுக்கு அறிமுகமில்லாதவராகையால் நடராஜா ஆரம்பத்தில் பணத்தை வழங்கத் தயங்கினார். பின்னர் நகைகயை பொறுப்பு வைத்து 5000 பவுண்களைப் பெற்றுக்கொண்டார். இப்பரிமாற்றம் இடம்பெற்றது 2007ல்.

இந்தப் பரிமாற்றத்தில் நடராஜா கைது செய்யப்படுவதற்கு அண்மை வரை கடனைப் பெற்றுக் கொண்டவருக்கு வழங்க வேண்டிய வீட்டு வாடகையில் இருந்து 150 பவுண்களை செலக்ற் புரப்பற்டீஸ் கழித்து வந்துள்ளது.

மாதங்கள் ஓடியது. தவணைகள் ஒன்றன் பின் ஒன்றாக கடந்தது. இந்நிலையில் கடனைப் பெற்றுக் கொண்டவர் செலக்ற் புரப்பற்டீஸிடம் வாடகை முகாமைத்துவத்திற்கு வழங்கிய வீட்டை அவர்களிடம் இருந்து மீளப் பெற்றுக்கொண்டார். மாதாந்தம் வழங்கிய 150 பவுண்கள் நடராஜாவுக்கு செல்வது தடைப்பட்டது. கடனை மீளளிக்காத பட்சத்தில் நகைகள் விற்கப்படும் என கடன் பெற்றவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இறுதித் தவணையும் வழங்கப்பட்டது.

இறுதித் தவணை வழங்கப்பட்ட அன்று ஏப்ரல் 2010ல் ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள செலக்ற் புரப்பற்டீஸ், லக்ஸ்மி ஜிவலர்ஸ், மற்றும் நடராஜா வீடு ஆகிய இடங்களை ஒரே நேரத்தில் முற்றுகையிட்ட ஒப்ரேசன் லோன் சார்க் பொலிஸார் அங்கிருந்த ஆவணங்கள் பதிவேடுகள் சிலவற்றை குற்றப் புலனாய்வு விசாரணைகளுக்காக எடுத்துச் சென்றனர். நடராஜாவும் கைது செய்யப்பட்டார்.

இவ்வட்டிக்கடன் விவகாரத்தில் கடன் பெற்றவரிடம் பொறுப்பாகப் பெற்றுக்கொண்ட நகைகள்  லக்ஸ்மி ஜீவலர்ஸில் விற்கப்பட்டதாக புகார் செய்யப்பட்டு இருந்ததாகவும் அதனாலேயே லக்ஸ்மி ஜீவலர்ஸ் இவ்விவகாரத்தில் தொடர்புபட்டதாகவும் தெரிய வருகின்றது.

இப்பின்னணியில் வழக்குத் தொடர்கின்றது.

தீர்ப்பு: பிரசவத்தின் போது ஏற்பட்ட மரணத்திற்கு கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல.

Kingston_Hospitalசுகதேகி யான ஆண் குழந்தையொன்றை கிங்ஸ்ரன் வைத்தியசாலையில் பிரசவித்த தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக இறந்தமை தொடர்பாக விசாரணைகள் நடைபெற்றுள்ளது. சிறிலங்கா போக்குவரத்து இணைப்பாளர் சசித்ரா கலேலுவ (38) பிராங் அவன்யூ நியுமெய்டனில் வசிக்கும் இவர் கடந்த வருடம் மார்ச் மாதம் 25ம் திகதி 1 மணியளவில் இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு அதனைத் தொடர்ந்து மரணமானார். மரணவிசாரணை அதிகாரி டொக்டர் பீற்றர் எலியாஸ் வாக்கு மூலத்தை நெறிப்படுத்தினார்.  திருமதி சசித்ரா கலேலுவவின் மரணத்தைப் பற்றிய முழு விபரங்களையும் விளக்கினார். அந்நேரம் சசித்ரா கலேலுவவின் கணவரும் பிரசன்னமாயிருந்தார்.

லண்டன் தென்மேற்கு மரணவிசாரணை அதிகாரியின் விசாரணையின் போது டொக்டர் மற்றும். பிரசவ வைத்திய நிபணர், பதிவாளர் போனறோர் குழந்தையின் பிரசவத்திற்கு சுகாதார முறைப்படி கருவிகளை பாவித்ததைத் தெளிவு படுத்தினர்.

ஓர் பாதூரமான விசாரணை இந்த மரணம் தொடர்பாக நடந்துள்ளது. டொக்ரர் அந்த நோயாளியின் பெண்ணுறுப்பில் உள்ள ஒரு சிறு நரம்பு இரத்த ஓட்டமின்றி தடைப்பட்டதை விசாரணையின் போது தெரிவித்தார். இந்த முறைப்பாட்டின் முடிவை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என டொக்டர் எலியாஸ் சசித்திரா கலேலுவவின் கணவரை வினவிய போது, இந்த விசாரணை முடிவை மாற்றியமைக்க முடியுமென்று தான் எண்ணவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் அவர்  ஒரு தாதி மாணவியை இரத்தம் ஏற்றுவதற்கு உடனடியாக அதனைக் கொண்டு வரும்படி அழைத்தபோது அவர் 35 நிமிடங்கள் கழித்தே கொண்டு வந்துள்ளார். எப்படி இருப்பினும் இறுதித்தீர்ப்பில் கிங்ஸடன் வைத்தியசாலை பிரசவ பகுதி ஊழியர்களோ அல்லது நிர்வாகமோ பொறுப்பல்ல. இங்கு நடைபெற்ற விசாரணையில் கடும் தண்மையை கருத்தில் கொண்டு தனிப்பட்ட முறையில் சமாதானமாகின்றோம் எனத்தெரிவித்தார். கிங்ஸடன் வைத்தியசாலை பேச்சாளர் தமது ஆழந்த அனுதாபங்களை திருமதி கலேலுவ குடும்பத்தினருக்கு தெரிவித்ததுடன் இது ஒரு துரதிஸ்ட விதமான சம்பவம் என்றும் தெரிவித்தார்.

நோயாளிகளின் பராமரிப்பும், பாதுகாப்பும் முன்னுரிமையிலும் நம்பிக்கையிலுமே தங்கியுள்ளது. ஜனவரி மாதம் இவ்வைத்தியசாலை நிர்வாகம் இத்தவறுக்கும், பாதுகாப்பின்மைக்கும் மன்னிப்புக் கேட்டது.