எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இதையடுத்து கழகப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றிச் சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.

புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. சென்னையில் இலங்கை வங்கியும், இலங்கை துணைத் தூதரகமும் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டன. இந்த நிலையில் புதுவையிலும் இலங்கையர்களுக்கு எதிரான தாக்குதல் பரவியுள்ளது. புதுச்சேரி காந்தி வீதி – படேல் சாலை சந்திப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் உள்ளது. நேற்று நள்ளிரவு 8 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஹோட்டல் மீது அவர்கள் திடீரென்று சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் செந்தில் குமார், ஊர்காவல் படை வீரர் நாராயணசாமி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ்காரரும், ஊர் காவல் படைவீரரும் காயம் அடைந்தனர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர் பூமியான் பேட்டையை சேர்ந்த செல்வம் (32) என்றும், அவர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர் என்றும் தெரிய வந்தது.

உடனடித்தேவை – ஒன்றுபட்ட போராட்டம் : சேனன்

இலங்கை தமிழ் மக்கள் வரலாறு காணாத அழிவை நோக்கி தள்ளப்பட்டுள்ளார்கள். யுத்த பிரதேசத்துக்குள் அகப்பட்டுள்ள 250 000க்கும் அதிகமான மக்கள் சாவை எதிர்கொண்டுள்ளார்கள். எந்தவிதமான உணவு -மருத்துவ – மற்றும் தங்கும் வசதியின்றி உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கும் இம்மக்கள்மேல் குண்டுமழை பொழிந்து கொண்டிருக்கிறது இலங்கை இராணுவம். அந்த சந்தோசத்தை வெடி கொழுத்தி கொண்டாடுகின்றன தெற்கு ஆழும் வர்க்க துவேசிகள்.

மக்கள் அகப்பட்டுள்ள பகுதிக்குள் கடந்த பல நாட்களாக எந்த நிவாரணமும் அனுமதிக்கப்படவில்லை. உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் நிவாரண நிறுவனங்கள் எதையும் இப்பகுதிக்குள் அனுமதிக்க கடும் தடை விதித்துள்ளது அரசு. அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வலயத்துக்குள் இவ்வளவு மக்களும் வரக்கூடிய எந்த வசதியும் செய்யப்படவில்லை. அங்குகூட உணவு நிவாரண பொருட்கள் எடுத்துச்செல்ல அரசு அனுமதிக்கவில்லை.

குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பசியாலும் இராணுவத்தின் தாக்குதல்களாலும் சாவை எதிர்நோக்கியுள்ள நிலையின் கோரம் ‘அமைதி சுனாமி’ என்று வர்ணிக்கப்படுகிறது. உணவுசாலைகள், வைத்தியசாலைகள், கூடாரங்கள் எதுவுமற்ற பிரதேசத்தில் குழந்தைகளுடன் மரங்களுக்குள் – வயல்வெளிகளுக்குள் பதுங்கி எப்பக்கத்தால் ஆமி வரப்போகிறது, எங்கிருந்து சூடு விழப்போகிறது,எங்கு குண்டு விழுகிறது என்று ஒவ்வொரு வெடிச்சத்தத்திலும் உயிரை துடிக்க விட்டுக்கொண்டிருக்கும் மக்களை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். குழந்தைகள் படக்கூடிய அவலத்தை நினைத்துப் பாருங்கள். எத்தனை நாளைக்கு இந்த மக்கள் உணவில்லாமல் சமாளிக்கப் போகிறார்கள்? இலை குலைகளை உண்டா வாழ்வது? குடிக்கத் தண்ணியில்லாத நிலையில் கழுவித்துடைப்பது பற்றி அவர்களால் அக்கறை கொள்ள முடியுமா? காயங்களுக்கு பரவப்போகும் வியாதிகளுக்கு மருந்து எங்கிருந்து வரப்போகிறது.

மக்கள் இவ்வளவு கேவலப்பட வெற்றி பூரிப்பில் விழாக்கான தூண்டுகின்றனர் ஜனாதிபதியும் அவர் குடும்ப அரசும். இப்படியொரு அரசை ஆட்சியில் இருக்கவிட்டு பார்த்துக் கொண்டிருப்பதா? இந்த இனத்துவேச அரசுக்கெதிராக தொழிலாளர்களும் வறிய மக்களும் ஒன்றுபடவேண்டும்.

நாட்டை இராணுவ மயப்படுத்துவதில் மும்முரமாயிருக்கும் அரசு தமக்கெதிரான எல்லாகுரல்களையும் ஒடுக்கி வருவது உலகறிந்ததே. தமது வன்முறை நடவடிக்கைக்கு நாட்டு மக்கள் ஆதரவு இருப்பதாக வேறு காட்டிக்கொள்ள முயல்கிறது இந்த அரசு. அந்த பச்சை பொய்யை உடைத்து சிங்கள் தமிழ் முஸ்லிம் மக்கள் யுத்தத்துக்கும் வன்முறை ஆட்சிக்கும் எதிராக ஒன்றுபடவேண்டும்.

யுத்தம் பிரச்சினைக்கு தீர்வல்ல. யுத்த வெற்றி பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரப்போகிறது என்பது பச்சை பொய். தெற்கில் வறிய மக்கள் படும் அவலத்தை குறைக்க ஒன்றும் செய்யாத இந்த இனவாத அரசு வடக்கு மக்களுக்கு விடிவை கொண்டுவரும் என்று எதிர்பார்ப்பது கேலிக்கிடமானது. எதிர்கட்சியோ அல்லது ஆட்சி பகிரும் எந்த தமிழ் குழுக்களோ மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுப்பது சாத்தியமில்லை. தமது நலன்களை மட்டும் குறிவைத்து இயங்கும் இவர்கள் எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிடப் போவதில்லை.

இன்று மக்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. ஆயுத குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பின்னால் நின்று அடிவாங்கியது போதும். எமது போராட்ட முறை மாறவேண்டிய தருணம் இது. ஒன்றுபட்ட மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட வேண்டிய தருணம் இது. எல்லா ஆழும் வர்க்கமும் மக்களை சுரண்டுவதே இயல்பாககொண்டவை –அதற்காக அவர்கள் இனத்துவேச பிரச்சாரங்களில் இறங்கி மக்களை மக்களுக்கெதிராக மோதவிட்டு பெருங்கொலைகள் செய்வர் – என்பதை அறிந்து அவர்களை முறியடிக்க ஒன்றுபடவேண்டிய கட்டம் இது.

எந்த ஆழும் வர்க்கமும் மக்கள் பிரச்சினையின் தீர்வை நோக்கி இயங்கிய வரலாறு கிடையாது. சுறண்டல் லாபத்தை குறிவைத்து இயங்கும் அவர்களை எவ்வாறு முறியடிப்பது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

வறுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் சிங்கள மக்களுக்கு ‘தேசிய வெறியை’ ஊட்டுவதன் மூலம் அடக்கி ஆழலாம் என்று அவர்கள் கனவு கான்கிறார்கள். தேவைகள் நிவர்த்தி செய்யப்படாத அவர்களும் எல்லா பக்கத்தாலும் ஒடுக்கப்படும் முஸ்லிம் மக்களும் கிளர்ந்தெழுவது வெகு விரைவில் நிகழத்தான் போகிறது. ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மலையக மக்கள் ஆழும் வர்கத்துக்கெதிரான போராட்டத்தில் இணைவதும் தவிர்க்கமுடியாதது. வாழும் உரிமை உட்பட அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு மிக மோசமாக ஒடுக்கப்பட்டுகொண்டிருக்கும் தமிழ் மக்கள் ஒடுக்கப்படும் சக மக்களுடன் இணைந்த ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இனம் மொழி மதம் என்று எம்மை கூறுபோட்டு தின்றுகொண்டிருக்கும் ஆழும் வர்க்கத்தின் உயிரில் அடிக்க அதுவே வழி.

சற்று யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மை மக்கள் இன்று பட்டினியில் வாழ்கிறார்கள். ஆழும் வர்க்க முதலைகளில் யாருக்காவது பசி தெரியுமா? பெரும்பான்மை மக்கள் சரியான தங்கும் வசதியின்றி வாழ்கிறார்கள். ஆழும் வர்க்கம் மாட மாளிகைகள் ஆள் நடமாட்டமற்று கிடக்கின்றன. சழூகத்து ஏற்றத்தாழ்வின் வித்தியாசம் வரலாறு காணாத உச்சம் கண்டுள்ளது. ஆழும் வர்க்க சிறு தொகையினர் அனுபவிக்கும் சொத்துக்கள் யாருடயவை? நாட்டின் வளங்கள் யாருடயவை? எம்மை சூறையாடி வியாபாரம் செய்வது போதாதென்று வன்முறைசெய்து அவர்கள் எமது உரிமைகளை பறித்துக்கொண்டிருக்க பார்த்துக்கொண்டிருப்பதா? –ஒடுக்கப்படும் நாம்தான் பெரும்பான்மை. நாம் ஒன்றுபட்டால் எமது பலம்தான் பெரிது. ஏற்றத்தாழ்வற்ற – வர்க்கமற்ற சமுதாயத்துக்கான போரை நாம்தான் முன்னெடுக்கவேண்டும்.

வடக்கு கிழக்கில் ஜந்து நட்சத்திர விடுதிகள் கட்டுவதாலோ விலை உயர்ந்த உல்லாச கடற்கரைகள் உருவாக்குவதாலோ பெரும் கம்பனிகள் சுரண்டுவதற்கு வசதியாக வர்த்தக வலயங்கள் உருவாக்குவதாலோ எந்த பிரச்சினைக்கும் தீர்வு கொண்டுவந்துவிட முடியாது. ‘வளர்ச்சியடைந்த’ நாடுகள் என்று சொல்லப்படும் மேற்கத்தேய நாடுகளிள் வசதிகளை குவித்துள்ள சிறு மேல் வர்க்க குழுவுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு பெருமளவில் வெடித்துக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் – முதலாளித்துவ பொருளாதாரம் மற்றும் திறந்த பொருளாதார கொள்கை உலகமயமாக்கல் முதலியன பெரும் தோல்வி கண்டுள்ளன என்பதை மேற்குலக ஆழும் வர்க்கங்களே ஒத்துக்கொள்ளும் இத்தருணத்தில் இலங்கையில் இந்த பருப்பு வேகும் என்ற கனவு எவ்வளவு பொய் என்பதை நாம் உணர வேண்டும்.

காலம் காலமாக ஒடுக்கப்படுபவர்கள் அடக்குமுறைக்கு எதிராக ஒன்றுபடவேண்டிய தருணமிது.

நாகேஷ் இன்று மரணம் அடைந்தார்!

nagesh.jpgநகைச் சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன.

காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

redcrose2801.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு ஆறு அம்புலன்ஸ்களில் படுகாயமடைந்தவர்களும் ஐந்து பஸ்களில் சிறுசிறு காயமடைந்தவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களுமென 226 பேர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து 50 சிறுவர்கள் உட்பட 226 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் உதவிசெய்து பராமரிப்பதற்காக சேர்ந்து வந்த 139 பேரும், ஆஸ்பத்திரிக்குள் காயமடைந்தவர்களுடன் கூடச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கைகால்கள் முறிந்த நிலையிலும், அவயங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

fonseka2.jpgஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் இராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர் என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதில் மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், இராணுவ நடவடிக்கைகள் மேற்பார்வையிடவும் பென்சேகா  வன்னிக்கு வந்ததார் என இராணுவத் தரப்பு தெரிவித்தது. சரத் பொன்சேகா இப்பயணத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 57, 58, 59 ஆவது படை அணிகளின் தளபதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து போர் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ஜனாதிபதியின் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்த பின்னர் முழுவீச்சில் தாக்குதலை நடத்த இராணுவம்திட்டமிட்டுள்ளது என்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவே பொன்சேகா போர்முனைக்குச் சென்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விரும்பினால் வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

tna.jpgஇலங்கையின் ஜனாதிபதி வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், அவ்வாறு மக்கள் வெளியேற விரும்பினால், அதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் தெரிவித்தார்.

எனினும், அப்பகுதியிலிருந்து வெளியேறுவது குறித்த முடிவை அங்கிருக்கும் மக்கள்தான் எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாததற்கு விடுதலைப் புலிகள் மட்டுமே காரணம் என்று கூறப்படுவது ஏற்க முடியாதது என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோருகிறது

SL_Army_in_Killinochieசுய நிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கைத் தீவில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான அவலத்தையிட்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது தீவிர கவனத்தை கொள்கின்றது. வடக்கு வன்னிப்பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் கடும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தப் போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் போரானது ஒரு இனப் படுகொலைக்குரிய நிலையை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளது. பெரும் உதவிகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக போரில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி செய்ய வேண்டும்.

அதேநேரம், இரு பகுதியினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஒரு நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்குமாறும் ஆபரிக்க தேசிய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
 

இலங்கை அரசு அவகாசம்: தமிழக சட்டமன்றத்தில் விவாதம்

assembly.jpgஇலங்கையின் வடக்கே புலிகளின் கட்டுபாட்டுப் பிரதேசங்களில் இருக்கும் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இலங்கை அரசு அறிவித்துள்ள 48 மணிநேர கால அவகாசம் குறித்து தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் வெள்ளியன்று விவாதிக்கப்பட்டது.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்து வந்ததன் விளைவாகவே இந்த அறிவிப்பு வந்துள்ளது என்றும், இந்த நல்ல சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி மோதலில் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா பீட்டர் அல்ஃபோன்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் சார்பாகப் பேசியவர்கள் இலங்கை அரசின் அறிவிப்பைத் தாங்கள் ஏற்கவில்லை என்று கூறினர். ஆளும் திமுக சார்பில் பேசிய நிதியமைச்சர் க.அன்பழகன், இலங்கை அரசின் அறிவிப்பை ஏற்று அப்பாவிப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குள் செல்வதை விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இலங்கையில் மோதலில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை குறித்து ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழு கவலை

navaneetham-pilli.jpgஇலங்கையில் வடபகுதியில் இலங்கைப் படையினருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடக்கின்ற மோதல்களில் அகப்பட்டுள்ள சுமார் இரண்டரை லட்சம் மக்களின் நிலை குறித்து தான் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவியான நவநீதம் பிள்ளை கூறியுள்ளார். பல மாதங்களாக தொடரும் மோதல்களும், பல தடவைகள் ஏற்பட்ட இடப்பெயர்வுகளும், மடுமையான மழை மற்றும் வெள்ளமும் அங்கு மக்களுக்கு மிகுந்த ஆபத்தான நிலைமை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மோதல் பகுதிகளில் இருந்து தப்ப முற்படும் மக்கள் ஒன்றில் தடுக்கப்படுவதாகவோ அல்லது அவர்களது விருப்புக்கு மாறாக சிறப்பு மையங்களில் தடுத்து வைக்கப்படுவதாகவோ செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் மோதலில் ஈடுபடுகின்ற இருதரப்பினர் மீதும் கண்டனம் தெரிவித்துள்ள ஐ. நா. மனித உரிமைகள் ஆணையர், மோதலில் அகப்பட்டுள்ள மக்களின் நலன்களுக்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளார்.