எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கருணாநிதிக்கு பிரபாகரன் கடிதம் எழுதவில்லை – புலிகள் மறுப்பு

ltte.jpgதமிழக முதல்வர் கருணாநிதிக்கு விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கடிதம் எழுதியதாகவும், மறைந்த அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனை சந்தித்துப் பேசியதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என்று விடுதலைப் புலிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

பாலசிங்கத்தின் மனைவியார் அடேல், வாஷிங்டனில் ஹில்லாரியை சந்தித்துப் பேசியதாகவும், அதேபோல பிரபாகரன், முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதியதாகவும் சில தமிழக மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

அடேல்- ஹில்லாரி சந்திப்பு குறித்த செய்தியை விடுதலைப் புலிகளின் வானொலியான “புலிகளின் குரல்” ஒலிபரப்பியதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது.

இதை விடுதலைப் புலிகள் மறுத்துள்ளனர்.

இதுகுறித்து விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தரப்பில் கூறுகையில், உண்மைக்குப் புறம்பான இவ்வாறான செய்திகள் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஏதாவது ஒரு வகையில் பாதிப்பதாகவே அமையும்.

போராட்டத்திற்கு ஆதரவான செய்திகளை வெளியிடும் ஆர்வத்தில் – சில சமயங்களில் – மீள உறுதிப்படுத்தப்படாமல் வெளியிடப்படும் இவ்வாறன செய்திகள் தமிழர்களுக்கு நன்மை எதனையும் விளைவிக்காது என்று தெரிவிக்கப்பட்டது.

மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைக்காமல் யுத்தத்தை முன்னிலைப்படுத்தி அரசு தேர்தல் பிரசாரம் – சாடுகிறது ஜே.வி.பி.

jvp-net.jpgமக்கள் பிரச்சினையை தேர்தல் தொனிப்பொருளாக முன்வைக்காது யுத்தத்தை முன்னிறுத்தி பிரசாரத்தில் அரசாங்கம் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ள ஜே.வி.பி, மாகாண சபைகளுக்கு அமைச்சர்களின் உறவினர்களையும் சமூக விரோதிகளையும் அனுப்ப முயற்சிப்பதாகவும் சாடியுள்ளது.

இத்தகைய கும்பலிடம் மாகாண சபைகள் சிக்கிவிடாது பாதுகாப்பதற்கு மக்கள் தமது வாக்குகளை நாட்டின் பிரிவினைக்கு இடமளிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக செயற்படும் ஜே.வி.பி.க்கே வாக்குகளை அளித்து சக்தியளிக்க வேண்டுமென அக்கட்சி கோரியுள்ளது.

கொழும்பு தேசிய நூலகத்தில் ஜே.வி.பி நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் ரில்வின் சில்லா கலந்து கொண்டு பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில்:

வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு தனது முழுப்பலத்தையும் பயன்படுத்துகின்றது. அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்வதுடன் தேர்தல் சட்ட விதிகளை மீறுவது மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதென அனைத்தையும் மேற்கொள்கின்றது.

தேர்தல் வன்முறைச் சம்பவங்களை எடுத்து நோக்கும் போது அரசாங்கமே அதிகளவான வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதைக் காணலாம். அச்சுறுத்துவது முதல் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்வது மற்றும் தேர்தல் சட்டவிதிகளை மீறுவது என அனைத்திலுமே பெரியளவில் ஈடுபட்டதனையும் அவதானிக்கலாம்.

அரச கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை தனது தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துவதுடன், அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்திற்கு ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றது. சட்ட விதிகளின் படி ஒரு வேட்பாளர் ஒரு ஒலிபெருக்கி வாகனத்தை மட்டுமே பயன்படுத்த முடியுமென்ற நிலையில் அரச தரப்பு தேர்தல் வேட்பாளர்கள் ஒன்றுக்கு அதிகமான ஒலிபெருக்கி வாகனங்களை பயன்படுத்துகின்றனர்.

அது மட்டுமன்றி, வரம்புக்கு மிறிய வகையில் ஒலி பெருக்கியின் சத்தங்களையும் கூட்டியும் பிரசாரத்தில் ஈடுபடுவதால் ஒலி மாசடைதலை ஏற்படுத்தி வருகின்றனர்.

அரசாங்கம் தனது வெற்றிக்காக இது மட்டுமன்றி, மக்களின் வாக்குகளை பிரித்தெடுத்து வெற்றிபெறுவதற்கு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து பேசாது இராணுவத்தினர் தமது உயிர்களை தியாகம் செய்து பெற்றுவரும் வெற்றிகளை பொய்களைக் கூறி தனது வெற்றியாக காட்ட முனைகின்றது.

இவ்வாறு செய்து வெற்றி பெற்று மாகாண சபையை அரசாங்கம் கைப்பற்றுவதற்கு காரணம். அங்கும் குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கேயாகும். இரு மாகாண சபை வேட்பாளர்களை பார்க்கின்ற போது அமைச்சர்களின் சகோதரர்களாகவும் மாமன், மருமகன் போன்ற உறவு முறையை நாம் காணலாம். அது போல் மாகாண சபையை அதிகாரத்துடன் கொண்டு நடத்த குண்டர்கள் பாதாள உலகத்தினர் குடுகாரர்கள் போன்ற சமூக விரோதிகளையும் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது.

இவர்களின் வெற்றிக்காக அரச ஊடகங்களை பயன்படுத்துகின்றது. இவர்களுக்காக பிரசாரம் செய்யும் ஊடகங்கள் அரச ஊடகங்கள் அல்ல. அது மாறாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடகமாகும். தனது வெற்றிக்காக அரசாங்கம் யுத்த வெற்றியையும் சகல பலத்தினையும் பாவித்து மக்களை ஏமாற்றுவோரை நிராகரித்து உங்கள் வாக்குரிமையை பாதுகாக்குமாறு கோருகின்றோம் என்றார்.

வன்னி மக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பிரார்த்தனை

university-srilanka.jpgவன்னி மக்களது பாதுகாப்பிற்கான வலியுறுத்தல் பிரார்த்தனை நிகழ்வு 9 ஆம் திகதியிலிருந்து யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வருகிறது. போர் நெருக்கடிகளால் எல்லா வகையிலும் பாதிப்படைந்துள்ள எமது மாணவர்களது உளநிலைக்கான அமைதிக்கும் எமது மக்களின் பாதுகாப்பான வாழ்வுக்கான வலியுறுத்தலாகவும் “மௌனப் பிரார்த்தனையும் உபவாசமும்’ என்ற இந்த நிகழ்வை யாழ்.பல்கலைக்கழக சமூகம் நடத்தி வருகிறது.

ஈழத்தில் என்றுமில்லாதவாறு மக்களது சாவுகளும் துன்பங்களும் அதிகரித்துள்ளன. உணவு, உடை, தஞ்சமடைவதற்கான இடம் என்பவற்றுக்காக அப்பாவி வன்னி மக்கள் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொள்ளுகிறார்கள். தாங்க முடியாத அனுபவிக்க முடியாத இந்த துன்பங்களிலிருந்து எமது மக்களை காப்பாற்றும்படி அனைவரையும் அவசரமாக வேண்டிநிற்கிறோம்.

வகைதொகையற்ற அழிவுகளையும் கசப்புகளையும் தருகின்ற போரை நிறுத்துவதன் மூலம் எமது மக்களை அழிவிலிருந்து காப்பாற்ற மனிதநேய அடிப்படையில் முன்வரும்படி அனைவரையும் வேண்டுகிறோம். இன்றைய மிகவும் துன்பகரமான சூழ்நிலையில் அமைதியான வழியில் தீர்வு காண்பதற்கும் மக்களை அழிவிலிருந்து காப்பதற்கும் பின்வரும் கோரிக்கைகளை யாழ்.பல்கலைக்கழகம் வலியுறுத்துகிறது. மக்களின் உயிர்ப்பலியை உடனடியாக தடுப்பதுடன், இடம்பெயரச் செய்தல் போன்ற நெருக்கடிகளை தவிர்க்க வேண்டும். இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டு பிரதேசங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் வன்னி மக்களை மனிதாபிமான முறையில் நடத்த வேண்டும். போர் நடவடிக்கையில் இருந்து விடுபட்டு சமாதானத்திற்குச் சென்று அமைதியை உருவாக்க வேண்டும். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த்தேசியம் என்பவற்றுக்குள்ளான தீர்வை வழங்கவேண்டும். ஈழத்தில் சமாதானத்தை ஏற்படுத்த சர்வதேச சமூகம் உடனடியாக வலியுறுத்த வேண்டும்.

எமது மக்களது சாவுகளும் அவர்கள் அனுபவிக்கின்ற துன்பங்களையும் தவிர்த்து, அமைதியை ஏற்படுத்தும்படி மிகவும் அவசரமான வலியுறுத்தலாகவும் எமது மாணவர்களின் ஆத்ம அமைதிக்காகவும் இந்த பிரார்த்தனையும் உபவாசமும் நாள்தோறும் நடைபெறுகின்றது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தலை முன்னிட்டு இரு மாகாணங்களில் மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும்

election_ballot_.jpgமத்திய மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்கான தேர்தலின் நிமித்தம் இரு மாகாணங்களையும் சேர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் இரு தினங்களுக்கு மூடப்படுமென அரசாங்க தகவல் திணைக்களம் வியாழக்கிழமை அறிவித்திருக்கிறது.

மாகாண சபைத் தேர்தலின் பொருட்டு  சனிக்கிழமை 14 ஆம் திகதியும், 15 ஆம் திகதியும் மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களைச் சேர்ந்த அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுமென கலால் திணைக்கள ஆணையாளர் டி.ஜி.எம்.வி. அப்புஆராச்சி அறிவித்திருப்பதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் விடுக்கப்பட்டிருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கைக்கு செய்து வரும் உதவிகளை இந்தியா நிறுத்த வேண்டும்: ராமதாஸ்

போரை நிறுத்தாவிட்டால், இலங்கையில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிபுணர்களை உடனடியாக திரும்ப அழைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.

இலங்கை இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என்றும், அதற்கு முதலில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவரின் உரையின் வாயிலாக இந்திய பேரரசு அறிவித்திருக்கிறது. இலங்கையில், தமிழினப்படுகொலைக்கு காரணமான போர் நிறுத்தப்பட வேண்டும் என்றும், அதற்கு இந்திய பேரரசு நடவடிக்கை வேண்டும் என்றும் தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கொந்தளித்துக் குரல் எழுப்பி வருகிறார்கள். அதற்கு இப்போது ஓரளவு பலன் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு விடுதலைபுலிகளும், இலங்கை அரசும் பேச்சுவார்த்தையின் மூலம் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை காண வேண்டும் என்று இந்தியா அறிவித்திருப்பதும் ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இந்த ஆறுதலான நிலைப்பாடு இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவு நிலைப்பாடாக மாற வேண்டும். போர் நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு இலங்கை அரசு உடனடியாக செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக இலங்கையில் உள்ள அனைத்து தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்தியா உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும்.

போரை ஊக்கப்படுத்தும் வகையில் எந்த உதவிகளையும் அளிக்க மாட்டோம் என்று எச்சரிப்பதுடன், இதுவரையில் அத்தகைய உதவிகளை அளித்து வந்திருந்தால் அவற்றையும் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் வகையில் உணவு மற்றும் மருந்து பொருட்களை பன்னாட்டு சேவை நிறுவனங்கள் மூலம் வழங்கவும் இந்தியா முன்வரவேண்டும். இத்தகைய ஆதரவு நடவடிக்கைகளின் மூலம் இலங்கை அரசை பணிய வைக்க முடியும். எனவே, அடுத்த கட்டமாக இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

தமிழ் இளைஞர் (முருகதாசன்) ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தீக்குளித்து மரணம்

murugathasan_.jpgசுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் ஐக்கிய நாடுகள் சபையின் முன்பாக  திடீரென நேற்று வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இளைஞர் தீக்குளித்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  எனினும் இளைஞர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்து விட்டார்.

லண்டனில் இருந்து வந்த இந்த இளைஞரின் பெயர் முருகதாசன் எனவும் இவருக்கு 27 வயது இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர், 7 பக்கங்களுக்கு தாயக பிரச்சினை தொடர்பாக ஒரு மரண சாசனம் எழுதி வைத்து தீக்குளித்துள்ளார். முருகதாசன் தீக்குளித்த இடத்தில் மலர்கள் வைத்து மக்கள் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம்

நேற்று ஐக்கிய நாடுகள் சபை முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தப்பட்டது. சுவிஸ் தமிழ் இளையோர்களால் குறுகிய காலத்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் ஒன்றுகூடலிற்காக ஐக்கிய நாடுகள் சபை முன்றலிற்கு தமிழ் மக்கள் அணிதிரண்டனர். ஈழத்தமிழரின் இன்னலைத் தீர்க்க சர்வதேச சமூகம் தலையிடக்கோரி 12.02.2009 வியாழக்கிழமை இரவு 08.30 மணியளவில் தீக்குளித்த பிரித்தானியாவில் வசித்து வந்த ஈழத்தமிழரான முருகதாசனிற்கு தமது மலர் அஞ்சலியைச் செலுத்தினர். கட்டுப்படுத்த முடியாத உள்ளுணர்வுகளினால் ஒன்றி நிற்கும் மக்கள் காவற்துறையினரின் தடைகளையும் மீறி ஐ.நாவின் பிரதான வாசலை முற்றுகையிட்டு உள்ளே செல்வதற்கு முயற்சித்த வண்ணம் இருந்தனர். அவர்களின் உணர்விற்கு மதிப்பளித்த காவல்துறையினர் பிரதான சாலையை மூடி உதவினர். இறுதியில் முருகதாசனின் மரண சாசனம் வாசிக்கப்பட்டு நிகழ்வு நிறைபெற்றது.

swiss_13_2_09-01.jpg

முல்லைத்தீவிலிருந்து காயமடைந்த 400 பேர் கப்பல் மூலம் திருகோணமலைக்கு வருகை

ship-10022009.jpgமுல்லைத் தீவு, புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்று வியாழக்கிழமையும் காயமடைந்தோர், நோயாளிகளென 400 பேர் திருகோணமலைக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளனர். சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினால் (ஐ.சி.ஆர்.சி.) வாடகைக்கு அமர்த்தப்பட்ட “கிரீன் ஓசியன்’ கப்பல் மூலமே இவர்கள் அரச கட்டுப்பாடற்ற பிரதேசமான புதுமாத்தளன் பகுதிக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் இதே கப்பல் மூலம் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகள் 240 பேரும், அவர்களுக்கு உதவியாக வந்த 116 பேரும் ஐ.சி.ஆர்.சி.யின் உதவியுடன் புதுமாத்தளன் பகுதியிலிருந்து, திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டிருந்தனர். இதில் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேநேரம், நேற்று மாலை கப்பல் மூலம் திருகோணமலைக்கு கொண்டு வரப்பட்டவர்களில் நோயாளிகள் மற்றும் காயமடைந்தோர் எத்தனை பேர் என்பது தொடர்பாக சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என ஐ.சி.ஆர்.சி.யின் கொழும்பு அலுவலக பேச்சாளர் சரசி விஜேரட்ன தெரிவித்தார். புதுமாத்தளன் பகுதியிலிருந்து நேற்றுக் கொண்டு வரப்பட்ட நோயாளிகளும், காயமடைந்தவர்களும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். அதுமட்டுமல்லாது, ஐ.சி.ஆர்.சி.யினால் 160 மெத்தைகளும், மருத்துவ விநியோக உதவிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும் சரசி விஜேரட்ன தெரிவித்தார்.

அத்துடன், புதுமாத்தளன் பகுதியில் இன்னும் நோயாளிகளும், காயமடைந்தவர்களும் இருப்பதாகவும், அவர்களையும் கப்பல் மூலம் எடுத்து வரும் ஐ.சி.ஆர்.சி.யின் பணிகள் தொடருமென்றும் சரசி விஜேரட்ன மேலும் கூறினார். இதேநேரம், திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் நேற்று முன்தினம் மட்டும் 120 பேருக்கு சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. அத்துடன், மேலதிக சிகிச்சைக்காக 6 பேர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன

எந்தவித சர்வதேச அழுத்தங்களாலும் புலிகள்மீதான போரை நிறுத்த முடியாது : -மைத்திரிபால சிறிசேன

maithiripala.jpg“எந்த வகையான உள்நாட்டு மற்றும் சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டாலும் விடுதலைப்புலிகள் மீதான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படவே மாட்டாது” என அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்து விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு அப்பகுதி முற்று முழுதாக அரசின் கீழ் கொண்டு வரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுக் காலை வடமத்திய மற்றும் மத்திய மாகாணசபை தேர்தல் தொடர்பிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இறுதி செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

முல்லைத்தீவிலிருந்து வைத்தியர்கள் வெளியேற்றம்

doctors.jpgமுல்லைத் தீவு மாவட்டத்திலிருந்து வைத்தியர்கள் வெளியேறியிருப்பதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவில் தற்பொழுது காணப்படும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு வைத்தியர்களுக்கும், திணைக்கள அதிகாரிகளுக்கும் சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தல் விடுத்திருந்தது. இதற்கமைய புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்தும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்தும் வைத்தியர்கள் பலர் ஏற்கனவே வவுனியாவுக்கு வந்துவிட்டதாக சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் மொன்டிஸ் கூறினார்.

“மோதல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதால் அங்கிருந்து வெளியேறுவதே சிறந்த வழி” என அவர் தெரிவித்தார். இதேவேளை, வன்னியிலிருந்து மேலும் 400 சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருகோணமலைக்கு அழைத்துச் சென்றுள்ளது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தால் இவர்கள் கப்பல் மூலம் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டனர்.

புதுமத்தாளன் பகுதியிலிருந்து காலை புறப்பட்ட கப்பல் நேற்றுமாலை திருகோணமலையைச் சென்றடைந்ததுடன், நோயளர்கள் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமையும் முல்லைத்தீவிலிருந்து 240 நோயளர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர். நேற்றுமுன்தினம் திருகோணமலை வைத்தியசாலையில் 120 பேருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருமலையில் ஈபிடிபியினர் மக்களுக்காக இரத்த தானம்

blood.jpgமுல்லைத் தீவு பகுதியிலிருந்து செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் கப்பல்கள் மூலம் அழைத்துவரப்பட்டு திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்த மற்றும் நோயாளர்களுக்கு தேவைப்படும் குருதித் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கோடு திருமலை மாவட்ட ஈபிடிபியினர் இன்று இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

இதேவேளை நேற்றைய தினம் இரத்ததானம் செய்ய விரும்பும் பொதுமக்களை இரத்த தானம் செய்யுமாறு  பொதுவான வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தனர். நேற்றைய தினம் ரெலோ அமைப்பினரும் திருமலை வைத்தியசாலையில் இரத்ததானம் செய்திருந்தனர். திருமலை வைத்தியசாலையில் 778 பேர் வன்னியிலிருந்து அழைத்துவரப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.