விஸ்வா

விஸ்வா

சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பதற்கான செயலமர்வு.

சரணடைந்துள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்களை சமூகத்துடன் இணைப்பது தொடர்பாக நேற்று செவ்வாய் கிழமை மட்டக்களப்பில் விழிப்புணர்வு செயலமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு டேபோ மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

புனர்வாழ்வு ஆணையாளர் சுசந்த ரணசிங்க தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் பிரதேசச்செயலர்கள் மற்றும், சமய சமூகத்தலைவர்கள் ஆகியோர், கலந்து கொண்டனர்.

சரணடைந்து புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு அவர்களை மீள்குடியேற்ற புனர்வாழ்வு ஆணையாளர் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதன் ஒரு கட்டமாகவே இவர்களை சமூகத்துடன் இணைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்களுக்கு நிவாரணப்பொதிகள் வழங்கப்படவுள்ளன.

அண்மைக் காலமாக பெய்து வரும் கடும்மழை காரணமாக வடபகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க 45 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்ற அமைச்சில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின் போது மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ண வீரக்கோன் இத்தகவலைத் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் பாவனைப் பொருட்களடங்கிய நிவாரணப் பாதி வழங்கப்படவுள்ளதாகவும் இந்நிவாரணப் பொதி ஒவ்வொன்றும் 4ஆயிரத்து 500 ரூபா பெறுமதியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி தொடக்கம் 24ஆம் திகதி வரை வடபகுதிக்கு சென்று நேரில் இவற்றை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வன்னி இறுதிக்கட்டப் போரில் திறமையாக பணியாற்றிய படை வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு.

வன்னியில் இறுதிக்கட்டப்போரில் ஈடுபட்ட படைவீரர்களில் ஆயிரம் பேருக்கு நேற்று செவ்வாய் கிழமை பதக்கங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் இறுதிக்கட்டப் போரில் மிகவும் திறமையாக செயற்பட்ட முப்படைகளையும் சேர்ந்த ஆயிரம் படைவீரர்களுக்கே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டன.

அலரிமாளிகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது. பிரதமர் டி.எம்.ஜயரட்ண, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, முப்படைத் தளபதிகள், பொலிஸ் மாஅதிபர் ஆகியோரும் இந்நிழ்வில் கலந்து கொண்டனர்.

இராணுவத்தைச்சேர்ந்த 680 பேருக்கும், கடற்படையைச் சேர்ந்த 170 பேருக்கும், விமானப்படையைச் சேர்ந்த 85 பேருக்கும், பொலிஸ் துறையைச் சேர்ந்த 65 பேருக்குமே இப்பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து ஆராய தமிழ்தேசியக் கூட்டமைப்பு சார்பில் மூவர் தெரிவு.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக கூட்டமைப்பின் சார்பில் மூவர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகிய மூவருமே கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் ஒன்றிணைந்து செயற்படுவது என கடந்த சனிக்கிழமை பத்து தமிழ் கட்சிகள் இணைந்துள்ள தமிழ் கட்சிகளின் அரங்கமும் தமிழ்தேசியக் கூட்டமைப்பும் கலந்துரையாடி இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதையடுத்து இதற்காக இருதரப்பிலிருந்தும் ஆறு பேர் கொண்ட குழுவொன்றினை அமைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதனடிப்படையிலேயே கூட்டமைப்பு தங்கள் சார்பில் மூவரைத் தெரிவு செய்துள்ளது. தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் சார்பிலும் மூவர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரு இறங்குதுறைகள் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளன.

புனர்நிர்மானம் செய்யப்பட்ட காக்கைதீவு, நாவாந்துறை ஆகிய இரு இறங்குதுறைகளும் மக்களின் பாவனைக்குத் விடப்படவுள்ளன. எதிர்வரும் 19ஆம் திகதி வைபவ ரீதியாக இப்பாதைகள் மக்கள் பாவனைக்கு அனுமதிக்கப்பட வுள்ளதாகவும், இந்நிகழ்வில் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும், சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜெய்கா’ நிறுவனத்தின் 30 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் இவ்விரு இறங்குதுறைகளும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றப்படவுள்ளன.

யாழ்.மாநகரசபையின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட வீதிகள் ‘காப்பெற்’ வீதிகளாக மாற்றியமைக்கப்படவுள்ளதாக யாழ்.மாநகரசபை முதல்வர் திருமதி யோ.பற்குணராசா தெரிவித்துள்ளார். இதன்படி சிறு வீதிகளும் இவ்வாறு மாற்றியமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்துள்ள வீதிகள் துரிதகதியில் திருத்தியமைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது யாழ்.ஸ்ரான்லி வீதி இவ்வாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 வருடங்களின் பின் களுவாஞ்சிக்குடியில் நீதவான் நீதிமன்றினை இயங்கச் செய்ய நீதிஅமைச்சர் இணக்கம்

களுவாஞ்சிக்குடியில் 26 வருடங்களின் பின்னர் நீதவான் நீதிமன்றத்தை இயங்கச் செய்வதற்கு புதிய நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீம் இணக்கம் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடியில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்நீமன்றம் யுத்தம் காரணமாக 1984 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கவில்லை. இந்த நீதிமன்றக் கட்டடத்தில் தற்போது விசேட அதிரடிப்படையினரின் முகாம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமை சந்தித்து இது தொடர்பாக அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்தே களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றினை மீண்டும் இயங்கச் செய்ய அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் காலம் கடந்த பிறப்புப் பதிவுகளுக்கு நடமாடும் சேவை.

யாழ்.மாவட்டத்தில் காலம் கடந்த பிறப்புகள் பதிவு தொடர்பாக நடமாடும் சேவை நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால், இந்த நடமாடும் சேவைகளுக்கு பிள்ளைகளுடன் தாய்மார்களே 95 சத வீதம் வருகை தருவதாகவும் தந்தைமார் வருவதில்லை எனவும் பதிவாளர் நாயகம் என்.சதாசிவ ஐயர் தெரிவித்துள்ளார்.

இதனால் தந்தையரின் விபரங்களைப் ஆவணங்கள் மூலமாகப் பெறுவதில் நேர விரயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தந்தைமார் பிள்ளைகளுடன் வரும்பொழுது அவர்களது கையெழுத்துடன் பதிவுகளை இலகுவாக மேற்கொள்ள முடியும் எனவும். காலம் கடந்த பிறப்புப் பதிவுகளை மேற்கொள்ளும் போது தந்தைமார் இவ்விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 211 பேர் இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சித்தி.

000stud.jpgதடுப்பு முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிப் போராளிகளில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் இம்முறை 360 பேர் தோற்றியதாகவும் அவர்களில் 211பேர் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க தகுதியைப் பெற்றுள்ளனர் எனவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சசந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இவர்களில் 40பேர் பல்கலைக்கழத்திற்குத் தெரிவாகும் வாய்புக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்மையில் வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 1இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுளளனர். ஆனால் புள்ளிகளின் அடிப்படையில் 22ஆயிரம் பேர் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்வாங்கப்படுவர் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட மாணவிகள் மத்தியில் நடத்தைப் பிறழ்வுகள் அவதானிக்கப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டப் பாடசாலை மாணவிகளின் மத்தியில் நடத்தைப்பிறழ்வுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சமகாலத்தில் 15 வயது தொடக்கம் 19 வயது வரையிலான மாணவிகள் மத்தியில் இந்நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பெண் நோயியல் வைத்திய நிபுணர்களும் உளநல மருத்துவ நிபுணர்களும் இணைந்து பெற்றோர் ஆசிரியர்களை ஒன்று கூட்டி கலந்துரையாடி வருகின்றனர்.

மாணவர்களின் நடப்தைப்பிறழ்வுகள் தொடர்பான காரணிகளை ஆராய்ந்து பெற்றோர், ஆசிரியர்கள் எவ்வாறு அவர்களை வழிநடத்தலாம் என்பது குறித்து இக்கலந்துரையாடல்களில் ஆராயப்பட்டு வருகின்றது. யாழ் நகரிலுள்ள பெண்கள் பாடசாலைகளில் வகுப்பு ரீதியாக பெற்றோர் ஆசிரியர்களை உள்ளடக்கி இக்கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாணவிகள் தினமும் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பாதிப்புகள், யாழ்.போதனா வைத்தியசாலையில் அவர்கள் எதிர்கொள்ளும் வைத்தியப் பிரச்சினைகள் குறித்து வைத்திய நிபுணர்களும் உளமருத்துவ நிபுணர்களும் உணர்வு பூர்வமாக பெற்றோர் ஆசிரியர்களுக்கு விளக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.