விஸ்வா

விஸ்வா

குடாநாட்டில் இளவயதில் தாயாகும் பெண்களின் தொகை அதிகரிப்பு!

Jaffna_Hospitalயாழ். குடாநாட்டில் இளவயதில் தாயாகும் பெண்களின் தொகை அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட தாய் சேய் நல மருத்துவர் திருமதி. திருமகள் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓரிரு வருடங்களில் இத்தொகை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இவ்வாறு இளம் வயதில் காப்பமாகும் பெண்களுக்கு 35 வயதிற்குப்பின் கருப்பைக் கழுத்து புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆபத்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இளவயது பிரசவங்களால் பிரசவ நேரச் சிக்கல்கள், தாயின் குருதிச்சோகை காரணமாக அதிக இரத்தப்போக்கு, இதனால் தாய் மரணிக்கும் நிலமை, குழந்தையின் எடை குறைவாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதோடு பல்வேறு சமூகப்பிறழ்வுகளும் ஏற்படக்கூடிய நிலையுள்ளதாகவும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 குடாநாட்டில் கடந்த 2008ஆம் ஆண்டு 442 பெண்களும், 2009ஆம் ஆண்டு 374 பெண்களும், கடந்த ஆறு மாதக்காலத்தில் 234 பெண்களும் இளவயதில் தாயாகியுள்ளதாக பதிவுகளின் மூலம் தெரியவருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குக்குலெகம தமிழ் குடும்பங்கள் குடியிருப்பிற்குத் திரும்பின. நட்டஈடு பெற்றுக் கொடுக்க வாசுதேவ நடவடிக்கை.

Vasudeva Nanayakaraஇரத்தினபுரி நிவித்திகலை குக்குலேகம  தோட்டத்தில் வன்முறை அச்சம் காரணமாக வெளியேறிச் சென்ற மக்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ள நிலையில், அவர்களுக்கான நட்ட ஈடுகளை வழங்க இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Ratnapuri_Map_of_SLகுக்குலேகம தோட்டத்தில் கடந்த மாதம் 13ஆம் திகதி பெரும்பான்மை இன்ததைச் சேர்ந்த காவலாளி ஒருவரின் மரணத்தையடுத்து இரவு வேளையில் தமிழ்மக்களின் குடியிருப்புக்கள் தாக்கப்பட்டன. அக்குடியிப்பில் வாழ்ந்த 37 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இரவோடு இரவாக இடம்பெயர்ந்து சென்றனர். பல நாட்கள் அவர்கள் அச்சத்தினால் திரும்பி வராமலிருந்தனர். இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவின் முயற்சிகளின் காரணமாக தற்போது அவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட இக்குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளில் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Article:

இடம்பெயர்ந்த இரத்தினபுரி குக்குலேகம மக்கள் இன்னும் குடியிருப்புக்குத் திரும்பவில்லை!

கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் 29 பேர் உயிரிழப்பு! 2,867 பேர் பாதிப்பு.

Kallappu_Battiஇவ்வருடம் கிழக்கு மாணத்தில் 2,867 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கிழக்கு மாகாண அமைச்சின் பொதுச் சுகாதர சேவைப் பணிப்பாளர் மருத்துவர் ஜே.ஞானகுணாளன் அறிக்கையொன்றில்  தெரிவித்துள்ளார்.

Kallappu_Battiவருட ஆரம்பத்திலிருந்து இதுவரை திருகோணமலை, கிண்ணியா, கந்தளாய், தம்பலகாமம், ஆகிய பிரதேசங்களில் 11 பேர் உயிரிந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். கல்முனை பிராந்திய சுகாதார சேவைப்பிரிவில் கல்முனைத் தெற்கு, வடக்கு, காரைதீவு, சாய்ந்தமருது, நிந்தவூர், ஆகிய பகுதிகளில் 7 பெரும், மட்டக்களப்பு சுகாரார சேவைப்பிரிவில் 11பேரும், அம்பாறை சுகாதர சேவைப் பிரிவில் ஒருவரும் டெங்கு நோயினால் உயிரிழந்துள்ளதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெலிக்கடைச் சிறையிலுள்ள புலிகளால் சரத் பொன்சேகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் கரு ஜயசூரிய

Karu_Jeyasuriyaசிறைச் சாலையில் விடுதலைப்புலி உறுப்பினர்களும் உள்ள நிலையில் சிறையிலடைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிற்க புலிகளால் அச்சறுத்தல் உள்ளதெனவும், அவ்வாறு எதுவும் நடந்தால் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதித் தவைருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

வெலிக்கடைச் சிறையில் வைக்கப்பட்டுள்ள சரத்பொன்சேகாவை நேற்று திஙகள் கிழமை கரு ஜயசூரிய சென்று பார்வையிட்டார் அதன் பிறககு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சரத்பொன்சேகாவின் உயிருக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாத த்தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களும் வெலிக்கடைச் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களால் சரத்பொன்சேகாவின் உயிருக்கு ஆபத்துள்ளது என அவர் தெரிவித்தார்.

அரசியல் பழிவாங்கல் காரணமாகவே சரத்பொன்சேகா இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார் எனவும், ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தின் இவ்வாறான ஜனநாயக விரோதச் செயல்களைக் கண்டித்து நாடு முழுவதும் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

கிளிநொச்சியில் மழையினால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவி.

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கியிருந்து தற்போது பெய்து வரும் மழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழைக்காலத்தில் தாக்குப்பிடிக்கக் கூடியதான தற்காலிக கூரைத்தகடுகளுடனான வீடுகள் அமைத்துக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஈ.பி.டி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இதே வேளை, மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தற்போது கூரைக் தகரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரனும் தெரிவித்துள்ளார். மழையினால் பாதிக்கப்பட்டுவரும் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களும் தற்போது உதவிகளை வழங்கி வருவதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி உட்பட வன்னியில் மீள்டியமர்ந்துள்ள மக்களின் வீடுகள் பல முற்றாக அழிந்துள்ள நிலையிலும் சேதமுற்றுள்ள நிலையிலும் தற்பொது பெய்து வரும் கடும் மழையினால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

“கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தால் நாம் கலந்து கொண்டிருப்போம்”: பா.அரியநேத்திரன்.

இன்று திங்கள்கிழமை நடைபெறும் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்படவில்லை என கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அழைப்பு விடுக்கப்பட்டிருந்தால் அரசியலை ஒருபுறம் வைத்து விட்டு இக்கூட்டத்தில் தாங்கள் பங்கு பற்றியிருப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி குறித்து ஆராயும் இக்கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான பல விடயங்களையும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் எம்மால் சுட்டிக்காட்டியிருக்க முடியும் என அரியநேத்திரன் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் தலைமையில் கிழக்கு மாகாண அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று திருகோணமலையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையுடன் கூடிய மின்னல் தாக்கியதில் ஐந்து பேர் வரை உயிரிழப்பு! வெள்ளப் பெருக்கினால் பலரைக் காணவில்லை!

இலங்கையின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில், மின்னல் தாக்கியதில் ஐந்து பேர்வரை உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கம்பஹா, மொனராகலை, இரத்தினபுரி மாவட்டங்களில் மின்னல் தாக்கியதால் இவ்வுயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய இணைப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல பகுதிகளிலும் தொடாச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவம் இதனால், பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மண்சரிவினால் மலையகத்தில் பதுளைக்கும் அப்புத்தளைக்குமிடையிலான வீதி முடப்பட்டு போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாகவும், காலி மாவட்டத்தில் பல வீதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரசபை முன்னாள் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மறுப்பு.

கடந்த யூன் மாதம் கொழும்பு மாநகர சபை கலைக்கப்பட்டு அதன் மேயராக பதவி வகித்த முகமட் உவைஸ் இம்தியாஸை மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேறுமாறு கோரப்பட்ட நிலையில், தொடர்ந்தும் அங்கு வசித்து வரும் இம்தியாஸ் அங்கிருந்து வெளியேறுவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் உத்தரவு வரும் வரை தாம் வெளியேறப் போவதில்லை என தெரிவித்திருக்கும் அவர் ஜனாதிபதியிடம் தனது வீட்டுப்பிரச்சினை குறித்து கூறியிருப்பதாகவும், வீடமைப்பு அதிகாரசபை ஊடாக விரைவில் தனக்கு வீடொன்றைப் பெற்றுத்தருவதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளதாகவும், அது வரை மேயர் இல்லத்தில் இருக்குமாறு அவர் கூறியதாகவும் இம்தியாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பு மாநகர சபையின் விசேட ஆணையாளர் ஓமர் காமில் தெரிவிக்கையில், இம்தியாஸ் மேயர் வாசஸ்தளத்திலிருந்து வெளியேற மூன்று மாதங்கள் கால அவகாசம் கோரியதாகவும் அது வழங்கப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த பின்னரும் அவர் மேயர் இல்லத்திலிருந்து வெளியேறவில்லை எனவும், இதனால், மேயர் வாசஸ்தளத்திற்கு நீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணம் செலுத்துவதை கொழும்பு மாநகரசபை நிறுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

பொன்சேகாவிற்காக நூறு பிக்குகளுடன் தானும் சிறைசெல்லத் தயார் என மாதுலுவாவே தேரர் தெரிவிப்பு

முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்கோவிற்கு பதிலாக தாம் சிறையிலிருக்கத் தயார் என கோட்டை நாகவிகாரையின் விகாராபதி வண. மாதுலுவாவே தேரர் தெரிவித்துள்ளார்.

போன்சேகாவிற்குப் பதிலாக நூறு பிக்குகளுடன் தானும் சிறைச்சாலையில் இருப்பதற்குத் தயாரெனத் தெரிவித்துள்ள அவர் இலங்கையின் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் நன்றிகெட்ட விதமாக நடந்துள்ள இந்நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டு அதை ஒன்று படுத்திய பொன்சேகாவிற்காக தாம் எதனையும் செய்யத் தயாராகவுள்ளதாகவும் மாதுலுவ தேரர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து செல்வதாக அதிர்ச்சித் தகவல்!

யாழ்ப்பாணத்தில் மாணவர்களின் நடத்தைகள் சீரழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இணையம் எனபனவற்றினால் யாழ். பாடசாலை மாணவர்கள் தவறான நடத்தைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். அரசஅதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டபோது இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீருடையுடன் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மாற்றுடைகளையும் அவர்களின் பைகளில் எடுத்துச் செல்வதாகவும், பாடசாலை விட்டதன் பின்னர் மாற்றுடையுடன் தவறான நடத்தைகளில் ஈடுபடுவதாகவும், இணைய வசதிகள் வழங்கும் (நெற்கபே) நிலையங்களுக்குச் சென்று ஆபாச இணையத்தளங்களைப் பார்வையிடுவதாகவும், கையடக்கத் தொலைபேசி மூலம் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆள்நடமாட்டமற்ற பகுதிகளில் – கட்டடங்களில் துஸ்பிரயோக நடவடிக்கைகளில் மாணவர்கள் ஈடுபடுவதாகவும் குறித்த கூட்டத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நடைபெற்ற இக்கூட்டம் தொடர்பாக அரசாங்க அதிபர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். மாணவர்களின் செயற்பாடுகள் தொடர்பாக அதிபர்களும் ஆசிரியர்களும் விழிப்பாக இருக்க வேண்டும். அவர்களின் புத்தகப் பொதிகளை தேவைப்பட்டால் சோதனையிட வேண்டும். பெற்றோர் தங்களின் பிள்ளைகளின் செயற்பாடுகள் குறித்து கவனமாகவும் அக்கறையாகவும் இருக்க வேண்டும். இணைய நிலையங்களின் உரிமையாளர்கள் 18 வயதிற்கு குறைந்த மாணவர்களை இணையத் தளங்கள் பார்வையிட அனுமதிக்கின்ற போது தடுப்புகளற்ற திறந்த வெளியமைப்பில் அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்றும், சிறுவர்களை வேலைக்கமர்த்துதல் உள்ளிட்ட சிறுவர் துஸ்பிரயோக நடவடிக்கைகளை பொலிஸாரின் உதவியுடன் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.