சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கையின் மனித அவலங்களைச் சுட்டிக்காட்டி 38 அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிண்டனுக்குக் கடிதம்

hillary-clinton.jpgஇலங்கையில் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழப்பு, அவலங்கள் என்பவற்றைச் சுட்டிக்காட்டி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சூசன் றைஸுக்கும் அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் 38 பேர் கையெழுத்திட்டுக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அமெரிக்க செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வன்னிப் பகுதியில் அப்பாவித் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மனிதப் பேரழிவு குறித்தும், அப்பகுதியில் இருந்து வெளியேறி வந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம்களில் நிலவும் மோசமான நிலைமை குறித்தும் அந்த கடிதத்தில் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்தப் பிரச்சினையை ஐ.நாவின் பாதுகாப்புச் சபைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும், நீண்ட காலமாக இழுபறிபடும் அரசியல் தீர்வை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கத் தலைமை முயற்சி எடுக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் மோறன் தலைமையிலான இந்த 38 பேர் குழுவில், டொம் லான்டொஸ், மனித உரிமைக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மெக்கவர்ன், அனைத்து மனித உரிமைச் சிக்கல்களையும் எழுப்புவதில் முன்னணி வகிக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வொல்ஃப், மக்கள் பிரதிநிதிகள் சபையின் மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா தொடர்பான வெளியுறவுத் துறை துணைக் குழு உறுப்பினரான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொன் பேர்ட்டன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு

tco-child-killed-01.jpgகடந்த இரு தினங்களுக்கு முன் திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு வயது சிறுமியைப் பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.

சிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் ஒரு மில்லியன் ரூபாவை அவரது குடும்பத்தினரிடம் கப்பமாகக் கேட்டிருந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: புகைப்படம் lankadeepa.lk

tco-child-killed-01.jpg

மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டது யாழ்தேவி வவுனியா வரையிலான சேவை இடைநிறுத்தம்

railways-in-jaffna.jpgகொழும்பு வவுனியா யாழ்தேவி கடுகதி ரயில் சேவை நேற்று வியாழக்கிழமை முதல் மதவாச்சி வரையே நடைபெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடபகுதி பயணிகள் மறுஅறிவித்தல்வரை மதவாச்சி சென்றே கொழும்புக்கான ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இந்த ரயில்சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாததுடன் மீண்டும் வவுனியாவுக்கான சேவை எப்போது நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படவில்லை. நீண்டகால இடைவெளிக்குப்பின்னர் பல்வேறு முயற்சிகளின் மத்தியில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கான பகல்நேர ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் இடையிடையே இந்த ரயில் சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மறுஅறிவித்தல் வரை இந்த ரயில்சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடி அதிகரிப்பு

karachci.jpgபாகிஸ்தானில் அரசியல் மோதல்கள் உச்சகட்டத்தை அடைந்திருக்கும் நிலையில் இராணுவம் தலையிடுவதற்கான சாத்தியமும் அதிகரித்திருக்கிறது. தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி அரசின் தடை உத்தரவை மீறி எதிரணி ஆதரவாளர்களும் வழக்கறிஞர்களும் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை ஆரம்பித்துள்ளனர்.

நாடளாவிய ரீதியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமாபாத்திற்குச் சென்று பாராளுமன்றக் கட்டிடத்தை முற்றுகையிடப் போவதாக எதிரணியினரும் சட்டத்தரணிகளும் சூளுரைத்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி பதவிநீக்கம் செய்த நீதிபதிகளை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக ஜனாதிபதி சர்தாரி அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றுமாறு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் சங்கமும் வலியுறுத்தி வருகின்றனர். பதவி வகிக்கமுடியாமல் தடுக்கும் தீர்ப்பொன்றைக் கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கும் அவரின் சகோதரருக்கும் வழங்கியிருந்தது. அத்துடன் இத்தீர்ப்பையடுத்து பஞ்சாப் மாகாண அரசை பாகிஸ்தான் மத்திய அரசு பதவிநீக்கியிருந்தது. இது ஜனாதிபதி சர்தாரி மீது நவாஸ் ஷெரீப்பின் ஆத்திரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை சகல நகரங்களிலுமிருந்தும் ஊர்வலமாகச் சென்று பாகிஸ்தான் பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாக நவாஸ் ஷெரீப்பும் சட்டத்தரணிகளும் அறிவித்ததன் பிரகாரம் நேற்று நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். இதனால் பல இடங்களில் சட்டத்தரணிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டன.

இதேவேளை பாகிஸ்தானின் இராணுவத் தலையீடு தொடர்பான ஊகங்கள் அதிகரித்துவரும் நிலையில், இராணுவம் நிர்வாகத்தை கைப்பற்றும் சாத்தியம் அறவே இல்லையென நவாஸ் ஷரீப் தெரிவித்திருக்கிறார். 1999 இல் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஷெரீப் பதிவிநீக்கம் செய்யப்பட்டவராகும். நீதிபதிகள் மீண்டும் பணிக்கமர்த்தப்படும் வரை தமது நீண்ட யாத்திரை தொடரும் என்று ஷெரீப் அறிவித்திருக்கிறார். முன்னர் வாக்குறுதியளித்ததன் பிரகாரம் நீதிபதிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தியதன் பின்பே சர்தாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஜனாதிபதி சர்தாரி செயற்படும் விதம் குறித்து அதிருப்தியடைந்துள்ள இராணுவத் தளபதி கயானி அரசியல் குழப்பத்துக்கு விரைவில் முடிவுகட்டுமாறு கேட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார்

omakuchi.jpgநகைச் சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் காலமானார். அவருக்கு வயது எழுபத்து மூன்று.

தமிழ் திரையுலகில் ஔவையார் படத்தின் மூலம்  பதிமூன்றாவது வயதில் அறிமுகமான இவர் எழுபத்து மூன்று வயதுவரை தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை சிரிக்கவைத்தார். திரைப்படங்களில் மட்டுமல்லாது தொடர்ந்து நாடகங்களிலும் நடித்து வந்தார். சூரியன்,முதல்வன் என சில படங்களில் தலைகாட்டிய இவர்  சமீப காலமாக திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தினார். திருவல்லிக்கேணியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.

ஐ.தே.க, த.தே.கூ, ஜேவியி சர்வகட்சிக்குழுவில் இணையத்தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்படும் – திஸ்ஸவிதாரண

this_vitharana_.jpgசர்வ கட்சிக்குழுவின் அழைப்பையேற்று ஐ.தே.க மக்கள் விடுதலை முன்னணி, த.தே.கூ ஆகியன தமது தீர்வுத்திட்டத்தினை முன்வைக்கவேண்டும் அவ்வாறு செய்யாதுவிடின் ஏற்கனவே குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து தீர்வுத்திட்டத்தினை தயாரித்து ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவிடம் கையளிக்கும் என சர்வ கட்சிக்குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண தெரிவித்துள்ளார். 

சர்வகட்சிக்குழுவின் தற்போதய செயற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சர்வகட்சிக்குழு தீர்வுத்திட்டத்தினைத் தயாரிப்பதற்கு இதுவரையில் 107 தடைவைகள் கூடி ஆராய்ந்துள்ளன. இதில் 13 அரசியல் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.

சர்வகட்சிக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு தமது தீர்வுத்திட்ட ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு வெளியிலுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துவருகின்றோம். அவை தம்மை இதில் இணைத்துக் கொள்ள தவறும் பட்சத்தில் தீர்வுத்திட்டம் தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

நிவாரணக் கிராமங்களில் மாணவர் குறை நிறைகளை கண்டறிய கல்வி அபிவிருத்திக் குழு

school-sri-lanka.jpgவவுனியா மாவட்ட பாடசாலைகள் உட்பட நிவாரணக் கிராமங்கள் இடைத்தங்கல் முகாம்களில் கல்வி பயிலும் சுமார் 30,000 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் குறைவின்றி வழங்கப்படுகின்றனவா என்பதை கண்டறிவதற்கும் குறைநிறைகளை நிவர்த்திக்கும் நோக்குடனும் கல்வி அபிவிருத்திக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் கதிர்காமர் நிவாரணக் கிராமங்கள் உட்பட இடைத்தங்கல் முகாம்களுக்கு தினமும் சென்று கல்வி நடவடிக்கைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதே மேற்படி குழுவின் பிரதான நோக்கம் என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்தது.

வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் நிவாரணக் கிராமங்களில் இடம்பெயர்ந்து வந்துள்ள ஆசிரியர்களுக்குரிய பெப்ரவரி மாத கொடுப்பனவுகளையும் வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் வழங்கியுள்ளது.

நிவாரணக் கிராமத்தில் 1147 மாணவர்களும், இடைத்தங்கல் முகாம்களில் 7964 மாணவர்களும், வவுனியா மாவட்ட மாணவர்கள் 20,000 பேரும் கல்வி பயில்கின்றனர்.

எல்லாவற்றையும் இழந்த நிலையில் வந்துள்ள மக்கள் கல்விச் செல்வத்தை மட்டும் இழந்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடன் 379 இடம்பெயர்ந்துவந்துள்ள ஆசிரியர்களின் உதவியுடன் கற்பித்தல் நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன என வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலக பிரதம லிகிதர் எஸ். எம். ஜவாத் தெரிவித்தார். வவுனியா மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்களாக உபயோகிக்கப்பட்டு வருவதால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 20,000 மாணவர் கள் கல்வி பயிலும் விதத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வவுனியாவிலுள்ள பொதுக் கட்டடங்கள் பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், காலை முதல் மாலை வரை மூன்று பிரிவுகளாக கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆரம்ப பிரிவு வகுப்புகளும், காலை 11.30 முதல் பிற்பகல் 2.00 மணிவரை இடைப் பிரிவு வகுப்புகளும், பிற்பகல் 2.30 மணிமுதல் மாலை 4.00 மணி வரை உயர்தர வகுப்புகளும் நடத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியா இல்லாமலேயே ஈரானிலிருந்து குழாய் வழி எரிவாயு – பாகிஸ்தான்

ஈரானிலிருந்து குழாய் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை இந்தியாவை விட்டுவிட்டு மேற் கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. ஈரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எரிவாயு கொண்டு வரும் திட்டத்தை மூன்று நாடுகளும் இணைந்து மேற்கொள்வதாக முன்னர் முடிவு செய்யப்பட்டது.

7500 கோடி டாலர் மதிப்பிலான இத்திட்டத்துக்கு ஈரான் – பாகிஸ்தான் – இந்தியா குழாய்ப் பாதை திட்டம் (ஐ.பி.ஐ) என பெயரிடப்பட்டது. மூன்று நாடுகளும் இணைந்து இத்திட்டத்தை மேற்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது. பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி ஏற்றவுடன் ஆஸிப் அலி ஜர்தாரி, முதல் முறையாக ஈரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஈரான் புறப்படுமுன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்திட்டத்துக்கு இந்தியா ஒத்து ழைக்கவில்லை எனில் இந்தியாவை விட்டுவிட்டு பாகிஸ்தான் மேற்கொள்ளும் என்று தெரிவித்தார், சுமார் 2600 கி.மீ தொலைவு குழாய்வழி எரிவாயுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான 1994 ஆம்ஆண்டு முன்மொழியப்பட்டது.

ஆனால் மூன்று நாடுகளிடையே நிலவிய கருத்து வேறுபாடுகள், எரி வாயு விலையை நிர்ணயிப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படாதது. எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டண நிர்ணயம் (டிரான்ஸிட் ஃபீஸ்) உள்ளிட்டவை காரணமாக இத்திட்டத்தைச் செயல்படுத்துவது காலதாமதமானது.

தடையற்ற எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என்று இந்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் அதற்கு அத்தகைய உறுதியையும் ஈரான் அளிக்கவில்லை இதனாலும் இத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது.

தனது பயணத்தின் போது இத்திட்டத்தை நிறைவேற் றுவது குறித்து ஈரான் அதிகாரிகளுடன் விவாதிக்கப் போவதாக அவர் கூறினார்.

இது தொடர்பாக ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அகமதி நிஜாத்துடன் பேசுவதோடு இரு நாடுகளிடையேயான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப் போவ தாகக் கூறினார்.

குறிப்பாக ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினை குறித்து விவாதிக்கப் போவதாக குறிப்பிட்ட அவர் ஈரானில் நடைபெறும் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்ப போவதாகக் கூறினார்.

இரு நாடுகளும் பயனடையும் வகையில் பலதரப்பு விஷயங்கள் குறித்து ஈரான் ஜனாதிபதியுடன் விவாதிக்கப் போவதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அப்துல் பாசித் தெரிவித்தார். இம் மாநாட்டுக்கு முன்னதாக சுற்றுச் சூழல் மாநாடும் நடைபெறும்.

இம்மாநாட்டில் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஜனாதிபதிகள் பங்கேற்கின்றனர். இதை அடுத்து நடைபெறும் பொருளாதார கூட்டுறவு மாநாட்டில் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்படும். இம் மாநாட்டில் அஜர்பெய்ஜான், தஜகிஸ்தான், துருக்கி அதிபர்கள் மட்டுமன்றி இப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.

வடக்கு கிழக்குக்கு ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பம்

susil_prem_minister.jpgஆங்கிலம் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கல்வியின் மேம்பாட்டுக்கான ஜனாதிபதி செயலணியின் இணைக் குழு ஒன்றை வடக்கு கிழக்குக்கு நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்பித்திருந்தார்.

2009 ஆம் ஆண்டை ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆண்டாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்  பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனையொட்டி இத்துறை சார்பாக ஜனாதிபதி செயலணி ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.வடக்கு மற்றும் கிழக்குக்கு இந்தச் செயலணியின் இணைக்குழு அமைக்கப்படுவதன் மூலம் அப்பிரதேச மக்கள் மத்தியில் கல்வி மற்றும் தொழில் மேம்பாட்டை உருவாக்க முடியும் என  எதிர்பார்க்கப்படுகிறது.வடக்கு கிழக்கில் இந்தத்துறையில் பயிற்சி பெறுகின்றவர்களின் அபிவிருத்திக்கென கல்வி அமைச்சு விசேட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.

மீலாத் விழா பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக அரசை குற்றம்சாட்டுகிறது ஐ.தே.க.

unp_logo_1.jpgமாத்தறை, அகுரஸ்ஸவில் நடந்த மீலாத் விழாவுக்கான பாதுகாப்பு தொடர்பில் பாதுகாப்புத்தரப்பு பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ள பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி பயங்கரவாத அச்சுறுத்தல் நாடு முழுவதும் காணப்படுகின்ற சூழ்நிலையில், அரசு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அசிரத்தைப் போக்குடன் செயற்படுவதாகவும் விசனம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாத்தறை அக்குரஸ்ஸ பள்ளிவாசல் முன்பாக இடம் பெற்ற தாக்குதலைக் கண்டித்து ஐக்கிய தேசியக்கட்சி விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது;

நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை யொட்டி கொடப்பிட்டிய ஜும் ஆப் பள்ளிவாசலில் தேசிய விழா இடம்பெற்ற வேளையில் ஊர்வலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலை ஐக்கிய தேசியக்கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

மனிதப் படுகொலைகளால், வன்முறைகளால், பயங்கரவாதத்தால் பிரச்சினைகளுக்குத்தீர்வு காணவே முடியாது என்ற உறுதியான நிலைப்பாட்டை ஐக்கிய தேசியக்கட்சி கொண்டுள்ளது.

அதேசமயம், பயங்கரவாதம் மேலோங்கிக் காணப்படும் பின்னணியில் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தும் கடப்பாட்டை அரசு கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

அரசின் சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட இந்த விழா தொடர்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பாதுகாப்பு நடவடிக்கை குறித்து முரண்பாடுகள் காணப்படுவதாக அவதானிக்க முடிகிறது.

எதிர்காலத்தில் அமைச்சர்களுக்குப்போன்றே பொதுமக்களதும் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறிவைக்கின்றோம்.

இந்த துக்ககரமான நிகழ்வில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.