சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

பிரிட்டனில் வெளிநாட்டு “மாணவர் விசா” புதிய நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகம்

flag_uk.jpgஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்காத நாடுகளின் மாணவர்களுக்கான புதிய விசா நடைமுறையொன்றை பிரிட்டிஷ் அரசாங்கம் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தியிருக்கிறது. குடிவரவை கட்டுப்படுத்துவதும் மோசடிகளைத் தடுப்பதுமே இந்த புதிய நடைமுறைக்கான நோக்கமென்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புள்ளி அடிப்படையிலான விசா வழங்கும்திட்டத்தின் நான்காவது படிமுறையின் ஒரு அங்கமாக கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய ஏற்பாடுகள் விசா வழங்கும் செயன்முறைகளை எளிதாக்கும் என்பதுடன் கூடுதலான அளவுக்கு வெளிப்படைத்தன்மையுடையதாகவும் குடிவரவு முறைமை துஷ்பிரயோகம் செய்யப்படுவதை தடுப்பதாகவும் அமையும் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் ஜாக்குயி சிமித் கூறியிருக்கிறார்.

வெளிநாட்டு மாணவர்களை ஆட்திரட்டும் பிரிட்டனில் உள்ள சகல கல்வி வழங்கும் நிறுவனங்களும் ( பாடசாலைகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள்) நேற்றுமுதல் பிரிட்டனின் எல்லை பாதுகாப்பு அமைப்பிடம் (UK Border Agancy) தங்களை பதிவு செய்துகொள்ளவேண்டும். அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்ட அனுசரணையாளர்களாகுவதற்காக (Licensed Sponsors) 2,100 க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களும் சுயாதீன பாடசாலைகளும் கல்லூரிகளும் விண்ணப்பம் செய்திருக்கின்றன.

பிரிட்டனில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தங்களுடைய விசா நிபந்தனைகளுக்கு இசைவாக நடப்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு இனிமேல் இந்தக்கல்வி நிறுவனங்களினுடையதே. எந்தவொரு மாணவரும் விசாவுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்னதாக அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமொன்றிடமிருந்து நிபந்தனையற்ற முறையில் தனக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

தனது கற்கை நெறிக்கான கட்டணங்களைச் செலுத்துவதற்கும் பிரிட்டனில் தங்கியிருந்து கல்விகற்கும் காலகட்டத்தில் தனது வாழ்க்கைச் செலவுக்கும் போதுமான நிதி தன்னிடம் இருப்பதை மாணவர்கள் சான்றாதாரங்களுடன் நிரூபிக்க வேண்டியதும் அவசியமாகிறது.

குறிப்பிட்ட ஒரு கல்வி நிறுவனத்தில் கல்வி கற்பதற்கான விசாவே வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். பட்டப்படிப்பு அல்லது அதற்கு மேலான கற்கைநெறி என்றால் அதைப் பூர்த்தி செய்வதற்கான முழுக்காலகட்டத்துக்கும் விசா வழங்கப்படும்.

பிரிட்டனில் கல்வி கற்பதற்கு செல்கின்ற வெளிநாட்டு மாணவர்களும் அவர்களைக் கற்பிப்பவர்களும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பதை புதிய நடைமுறை உறுதிசெய்யும். பிரிட்டனில் கல்விகற்பதற்கு உண்மையில் யார் வருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் போலி கல்லூரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் புதிய விசா நடைமுறை அனுமதியளிக்கிறது என்று உள்துறை அமைச்சர் சிமித் தெரிவித்திருக்கிறார்.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டேன் – ஜனாதிபதி தெரிவிப்பு

mahinda-rajapaksha.jpgஎவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும், பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக நான் முன்வைத்த காலை ஒருபோதும் பின்வைக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட அமைப்பாளர்களை அலரிமாளிகையில் திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் மேற்கண்டவாறு, அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:

பயங்கரவாதத்தை ஒழித்து, நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத் திட்டங்களை சீர்குலைப்பதற்கு பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எவ்வாறான அழுத்தங்கள் கொடுக்கப்பட்டாலும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக முன்வைத்த காலை எக்காரணத்திற்காகவும் பின்வைக்க மாட்டேன்.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு உலகமே எதிர்ப்புத் தெரிவித்தாலும், நாட்டு மக்கள் எனக்கு பின்னால் நிற்கின்றனர். மக்களின் ஆணையின் பிரகாரம் அபிவிருத்திகளும் முன்னெடுக்கப்படும் என்றார்.

இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் – ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்தித்துப் பேச்சு

mahi-hasan.jpg உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடா நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இச்சந்திப்பின் போது இருநாடுகளுக்குமிடையிலான விசா தவிர்ப்பு முக்கிய ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது.

நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன்னே மற்றும் இந்தோனேசியத் தூதுவர் டிஜார்ஹ¥கன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் மேற்படி ஒப்பந்தத்தில் இலங்கையின் சார்பில் வெளி விவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவும் இந் தோனேஷிய அரசின் சார்பில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹசன் விராஜுடாவும் கைச்சாத்தி ட்டுள்ளனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இவ் உத்தியோகபூர்வ சந்திப் பின் போது இருநாடுகளும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகள் பல கலந்துரையாடலுக்கு உட்படுத்தப் பட்டுள்ளது. அத்துடன் உலக பொருளாதார நெருக்கடி நிலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடவ டிக்கைகள் இலங்கையில் தற்போதைய அபிவிருத்திச் செயற்திட்டங்கள் பற்றியும் விரிவாகக் கலந்துரையாடப் பட்டுள்ளன.

இக்கலந்துரையாடலின் போது இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் விசேட வேலைத் திட்டங்கள் பற்றியும் இந்தோனேசிய அமைச்சருக்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

‘மோதல் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை இந்தியா வரவேற்கும்’- சிவ்சங்கர் மேனன்

menon.jpgஇலங்கையில் வடபகுதியில் மோதல் நடக்கும் இடங்களில் தாக்குதல்களை இடைநிறுத்தி அங்கு அகப்பட்டுள்ள பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆராய்வதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதை இந்தியா வரவேற்பதாக இந்திய வெளியுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன் டெல்லியில் தெரிவித்திருக்கிறார்.

மோதல் பகுதிகளில் அகப்பட்டுள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நோக்கில், ஒரு தாக்குதல் நிறுத்தம் உட்பட பல வழிவகைகள் குறித்து ஆராய தாம் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் கூறியிருப்பதாக அண்மையில் வரும் செய்திகளை இந்தியா வரவேற்கின்றது என்றார் சிவ்சங்கர் மேனன்.

இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த சிவ்சங்கர் மேனன் அவர்கள், அவருடைய விஜயம் மிகவும் சிறப்பாக அமைந்தது என்று கூறினார்.

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை உள்ளடக்கிய ஒரு அரசியல் திட்டத்தை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும் என்பது குறித்து முக்கியமாக அந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கத்தரப்பினருடன் நாயர் அவர்கள் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்தார்.

அதேவேளை, போரில் அகப்பட்டுள்ள மக்களுக்கான மனித நேயப் பணிகள் மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவை குறித்தும் அவர் இலங்கை அரசாங்க அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுடன் விவாதித்ததாகவும் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான உணர்வை சிங்கள மக்கள் மத்தியில் அரசு தூண்டி விடுவதாக விசனம் -ஹக்கீம்

hakkeem.jpgகிழக்கில் ஒரு குழு ஜனநாயக நீரோட்டத்துக்கு வந்ததாக வெளி உலகுக்குக்காட்டிய வண்ணம் அரசு ஆதரவோடு தொடர்ந்தும் ஆயுதங்களை வைத்துக் கொண்டு இயங்கி வருவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் காரணமாக கிழக்கு மாகாண முஸ்லிம்களும், அங்குழுவுக்கு எதிரான தமிழ் மக்களும் பெரும் அச்சம் பீதி கொண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

யுத்த வெற்றிப்பேரிகை முலக்கத்தின் மூலம் அரசாங்கம் சிங்கள மக்கள் மத்தியில் சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான உணர்வுகளைத்தூண்டி விட்டுக் கொண்டிருப்பதாகவும் ரவூப் ஹக்கீம் கடும் விசனம் வெளியிட்டார்.

தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இஸ்லாமும் பன்மைத்துவமும் எனும் கருப்பொருளிலான தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மாநாட்டில் நாட்டின் சகல மாவட்டங்களையும் சேர்ந்த சுமார் 300 பேராளர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியதாவது;  எமது நாடு இன்று பல்வேறு பட்ட சவால்களை எதிர் கொண்டிருக்கும் நிலையில் இத்தகையதொரு மாநாடு இடம் பெறுவதானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நாம் கருத வேண்டியுள்ளது. சர்வதேசத்தின் கவனம் இன்று தென்னாசியாவில் வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் பக்கம் திருப்பப்பட்டிருப்பதை காணலாம். அமெரிக்க ஜனாதிபதி பாராக் ஒபாமாவின் அண்மைய அறிக்கையையும், அமெரிக்க இராணுவத்தின் அறிக்கையும் தென்னாசிய சிறுபான்மை முஸ்லிம்களை பயங்கரவாதிகளாகவும், ஆயுதப் போராட்டக் குழக்களாகவும் பார்க்கின்ற ஒரு போக்கையே காண முடிகிறது. மேற்குலக போக்கு உலகில் முஸ்லிம்கள் தான் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்பதாகவே உள்ளது. இது இஸ்லாமிய உலகம் இன்று எதிர் கொண்டிருக்கும் பெரும் சவாலாகவே காணப்படுகின்றது.

இது இவ்விதமிருக்க இலங்கையிலும் காலத்துக்குக்காலம் முஸ்லிம்கள் உட்பட சிறுபான்மைச் சமூகங்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்ட வண்ணமே உள்ளனர். முஸ்லிம்கள் பெரும்பான்மை கலாசாரத்தின் பக்கம் புகுந்து விடாமலும் மேலாதிக்க தேசியவாதத்துக்கு அடிபணியாமல் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். இலங்கை முஸ்லிம்கள் ஒருபோதுமே ஆயதப் போராட்டத்துக்கு முயற்சிக்கவுமில்லை. அதற்குத்துணைபோகவுமில்லை. தெற்கில் முஸ்லிம்களும், சிங்களவரும் சமாதானமாகவும், சகிப்புத்தன்மையுடனும், புரிந்துனர்வுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.. இதேபோன்று வடக்கிலும், கிழக்கிலும் முஸ்லிம்களும், தமிழரும் ஒன்றாக ஒரு தாய்பெற்ற பிள்ளைகள் போன்று சமர சமாகவும், புரிந்துணர்வுடனும் வாழ்ந்து வந்தனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் பேரினவாதச் சக்திகள் பெரும்பான்மை சிங்கள சமூகத்தவர் மனங்களில் நச்சுவிதையை விதைக்கும் வேலையை தொடங்கினர். இதன் மூலம் படிப்படியாக தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு வளர்க்கப்பட்டது. இதன் தாக்கத்தை வடக்கு கிழக்கு தமிழ்மக்கள் உணரத்தலைப்பட்டனர். தேசிய அரசியலிலிருந்து தமிழர் ஓரங்கட்டப்படுவதை உணரத் தொடங்கியதும் அந்தச் சமூகத்தின் இளைஞர்கள் தங்களது உரிமைக்காக ஆயுதமேந்த முன்வந்தனர்.

இதேபோன்று இன்று வடக்கு, கிழக்கு இணைப்பு நீக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போதைய சூழ்நிலையில் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள் அங்கு வாழும் தமிழ் மக்களால் ஓங்கட்டப்படுமோ என்ற அச்சமும் இன்று உருவாகியுள்ளது.

இன்று அரசு பிரலாபித்துவரும் யுத்த வெற்றிப் பேரிகை முழக்கத்தின் மூலம் சிங்கள மக்களுக்கு என்ன செய்தியை சொல்லவிளைகின்றது. பேரினவாதத்துக்குத் துணை போயுள்ள அரசாங்கம் சிங்கள மக்களின் உணர்வுகளை சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக தூண்டிவிட்டுள்ளது. இதன் விளைவுகள் எதிர்காலத்தில் மிகப் பாரதூரமானவையாகவே அமையலாம். இதுதான் தமிழ், முஸ்லிம், மக்கள் அச்சமும், பீதியும் கொள்ளக் காரணமாகும்.

இத்தகையதொரு நெருக்கடி மிக்க காலகட்டத்தில் இஸ்லாம் பற்றியும் பன்மைத்துவம் பற்றியும் பேசமுற்பட்டிருப்பது மிகப் பொருத்தமுடையதாகவே நாம் காண்கின்றோம். பன்மைத்துவத்தின் அடிப்படையே சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு என்பவையாகும். இதனை மேற்குலகம் தெரிந்து வைத்திருந்தாலும் கூட முஸ்லிம் உலகை தன் காலடிக்குக் கொண்டுவர வேண்டுமென்பதற்காக தென்னாசியாவில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாத முத்திரை குத்தி செயற்பட முனைகின்றது. பாகிஸ்தானைப் பயங்கரவாதத்தின் மோட்சம் எனக்காட்ட மேற்குலகம் முனைகிறது எனவும் ரவூப்ஹக்கீம் தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம்

mahinda-in-gr.jpg* 156 ஏக்கர் நிலப்பரப்பு * றகர், உதைபந்தாட்ட மைதானத்தில் 3000 பேர் அமரும் வசதி * மெய்வல்லுனர் போட்டிகளை 10,000 பேர் கண்டுகளிக்கலாம் * முதற்கட்டப்பணி ஏப்ரலில் பூர்த்தி

ஹோமாகம, தியகம பகுதியில் 156 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதான நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நேரில் சென்று பார்வையிட்டார்.

சூழலுக்கு ஏற்ற வகையில் மைதானத்தை நிர்மாணிக் குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு மைதானம் சகல வசதிகளுடனும் கூடியதாக அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு மெய் வல்லுநர் போட்டிகளுக்கான விளையாட்டுத் திடல், ரகர் மைதானம் உதைபந்தாட்ட மைதானம், நீச்சல் தடாகம், குறிபார்த்துச் சுடும் பிரிவு என்பனவும் நிர்மாணிக்கப் பட்டு வருகின்றன.

இது தவிர விளையாட்டு வீர வீராங்கணைகளுக்கான உடற் பயிற்சி நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறியது. சூழலுக்கு உகந்த வகையில் இயற்கையான சூழலுடன் கூடியதாக இந்த நவீன விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதோடு இங்கு தென்னை, இளநீர், மாங்காய், நாக மரம் என்பனவும் நடப்படவுள்ளன. இங்கு பசுமை வலயமொன்றை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரகர் மற்றும் உதைபந்தாட்ட மைதானங்களில் ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் கண்காணிக்கக் கூடியவாறு பார்வையாளர் அரங்கும் நிர்மாணிக்கப்படும். இத்தோடு மெய்வல்லுநர் போட்டிகளை 10 ஆயிரம் பேர் கண்டு களிக்கக் கூடிய வசதிகளும் செய்யப்படவுள்ளன.

முதலாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாதமளவில் பூர்த்தி செய்யப்படவுள்ளன. நிர்மாணப் பணிகளை இராணுவத்தின் 7ஆவது பொறியியல் சேவைப்படையணி முன்னெடுத்து வருகின்றது. இலங்கையில் சகல வசதிகளுடனும் கூடிய முதலாவது சர்வதேச விளையாட்டு மைதானம் இதுவாகும்.

ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் காமினி செனரத், விளையாட்டு அமைச்சின் செயலாளர் எஸ். லியனகம, கடற்படை உப லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ ஆகியோரும் விளையாட்டு மைதானத்தை பார்வையிடச் சென்றனர். இதே வேளை பிலியந்தலை மடபாத பகுதியில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச பெளத்த மத்திய நிலையத்தையும் ஜனாதிபதி நேற்று (29) நேரில் சென்று பார்வையிட்டார்.

ஈழத்தமிழருக்காக இரண்டு முறை திமுக ஆட்சி கலைக்கப்படவில்லை: கலைஞருக்கு ராமதாஸ் பதில்

26-ramsoss.jpgமுதல்வர் கருணாநிதி சில தினங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் பிரச்சனையால்தான் இரண்டு திமுக ஆட்சியையே பறிகொடுத்தது.   எங்களுக்கா ஈழத்தமிழர் நலனில் அக்கறை இல்லை என்று ராமதாசுக்கு கேள்வி கேட்டு அறிக்கை விடுத்திருந்தார்.

இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பதில் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில்,

’’இலங்கை தமிழர்களுக்காக, இரண்டுமுறை ஆட்சியைப் பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று கலைஞர் கூறிவருகிறார். இரண்டு முறை ஆட்சியை இழந்தது ஈழத் தமிழர்களுக்காகவா? என்பதை அலச வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய அரசான காங்கிரஸ் அரசால், அன்றைய தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

பிறகு, ஆட்சி கலைப்புக்கு என்ன காரணம்? நெருக்கடி நிலைக்கு எதிராக தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அம்மையார் மிகவும் கோபம் கொள்கிறார். அதைத் தொடர்ந்து 1977-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ந் தேதி ஆட்சி கலைக்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த கால கட்டத்தில் ஈழத்தில் ஆயுத போராட்டம் ஆரம்பிக்கப்படவே இல்லை.

1983-ம் ஆண்டில் தான், இலங்கை இனப்பிரச்சினை தலைதூக்கத் தொடங்கியது. அப்போது, கலைஞர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியை ராஜினாமா செய்யும்படி அப்போது யாரும் அவரை நிர்ப்பந்திக்கவில்லை. அவராகவே ராஜினாமா செய்தார்.
 
இந்திய அரசு ராணுவத்தை அனுப்பி ஈழத் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறி விட்டது; எத்தனையோ வெளிநாடுகளின் பிரச்சினையை ஐ.நா. கவனத்திற்கு கொண்டு சென்று உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த இந்தியா, இலங்கைத் தமிழர் பிரச்சினையில் பாரா முகமாக இருந்துவிட்டது.

நண்பர் பழ.நெடுமாறனின் தியாகப் பயணத்தையும் தடுக்க முனைகிறது என்றெல்லாம் குற்றம்சாற்றி ராஜினாமா செய்தார். ஆனால், அதற்கு அடுத்த ஆண்டிலேயே மேல் சபைக்கு போட்டியிட்டு உறுப்பினராகிவிட்டார் என்பது வேறு விவகாரம். அதற்கு பின் தி.மு.க. ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. கூட்டணி கண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டது.

37 தொகுதிகளில் அக்கூட்டணி வெற்றி பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். ஆட்சியை இந்திராகாந்தியின் துணையுடன் கலைத்தார்.  அடுத்து நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மை பெற்று மீண்டும் எம்.ஜி.ஆர். முதல்வரானார். இது வரலாறு.

1991-ம் ஆண்டு இரண்டாம் முறையாக அதே ஜனவரி மாதத்தில் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது. அதற்கு என்ன காரணம்? வி.பி.சிங்குடன் மிக நெருக்கமாக இருந்தார் என்பதற்காக, அப்போது தி.மு.க. அரசு ராஜீவ்காந்தியின் ஆசியோடு கலைக்கப்பட்டது. அதற்கு சொல்லப்பட்ட பல காரணங்களில், ஒன்று விடுதலைப்புலிகளை அடக்கத் தவறிவிட்டார் என்பதாகும்.

எனினும், அரசியலை நன்கு அறிந்த அனைவருக்கும் தெரியும், அப்போது எதற்காக தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டது என்று சுருங்கச் சொன்னால் இரண்டு முறை தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்டதற்கு உள்ளூர் அரசியல், டெல்லியில் ஏற்பட்ட அதிகார மாற்றங்கள், உருவான கூட்டணி மாற்றங்கள் எனப் பல காரணங்கள் இருக்கின்றன.

ஈழத் தமிழர்களுக்காக மட்டுமே கலைஞரின் ஆட்சி பறிக்கப்படவில்லை. எனவே, ஈழத் தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை பலி கொடுத்தவர்கள் நாங்கள் என்று இனிமேலும் கூறினால் அதனை தமிழ் கூறும் நல்லுலகம் ஏற்காது’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்தோனேஷியா – இலங்கை நாளை விசா தவிர்ப்பு ஒப்பந்தம்

hasan.jpgஇந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர் ஹஸன் விராஜுதா இன்று இலங்கை வருகிறார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் இவர், அமைச்சர் ரோஹித போகொல்லா கமவுடன் இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க ஆகியோரை நாளை 30 ஆம் திகதி இவர் சந்தித்துப் பேசவுள்ளார். அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விசா தவிர்ப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவார்கள்.

இதேவேளை, இந்தோனேஷிய வெளிவிவகார அமைச்சர், “இந்தோனேஷிய வெளிவிவகாரக் கொள்கையும் ஏசியானும், “எனும் தொனிப்பொருளில் விரிவுரை நிகழ்த்துவார். கொழும்பு, சர்வதேச உறவுகளுக்கான கதிர்காமர் நிலையத்தில் இந்த சொற்பொழிவு இடம்பெறும்.

முஸ்லிம்களின் கல்வி வளர்ச்சிக்கு பதியுதீன் மஹ்மூத் காலம் முதல் இன்று வரை அரசாங்கம் பாரிய பங்களிப்பு – கல்வி அமைச்சர் சுசில்

முஸ்லிம்களது கல்வி வளர்ச்சிக்கு முன்னாள் கல்வி அமைச்சர் பதியுத்தீன் மஹ்மூத் காலத்திலிருந்து தற்போது வரை அரசாங்கம் பாரிய பங்களிப்பைச் செய்து வருகிறதென கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார். கொழும்பு நவரோதய மண்டபத்தில் நடைபெற்ற முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் 39வது வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது, முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் தலைவர் என். எம். அமீன் கொழும்பு மாவட்டத்தில் உள்ள (23) முஸ்லிம் பாடசாலைகள் பிரச்சினைகள் பற்றி இங்கு உரையாற்றினார். ஆனால் அவர் தமிழ் மொழி மூலம் உள்ள றோயல், டி. எஸ்., இசிப்பத்தன போன்ற பாடசாலைகளது கல்வி வளர்ச்சியைப் பற்றி இங்கு பேசவில்லை.

மட்டக்குளியில் உள்ள சிங்கள மொழி மூலமான பாடசாலையில் கடந்த ஆண்டு க. பொ. த. (சா.த.) பரீட்சை எடுத்த எந்தவொரு மாணவரும் க. பொ. த. (உ.த.) கற்பதற்கு தகுதி பெறவில்லை. கொழும்பு மத்தியில் உள்ள சிங்கள, தமிழ், முஸ்லிம் சகல பாடசாலைகளது கல்வி முன்னேற்றம் இந்த நிலையில்தான் உள்ளது. இருபது வருடங்களுக்குப் பிறகு மெளலவி ஆசிரியர் பரீட்சை நடத்தியுள்ளோம். அந்நியமனமும் மிக விரைவில் வழங்கப்படும்.

காலஞ்சென்ற கல்வி அமைச்சர் ரிச்சர்ட் பத்திரனவின் முயற்சியில்தான் முஸ்லிம் பெண்களுக்காக அளுத்கம கல்விக் கல்லூரி திறந்து வைக்கப்பட்டது. கண்டியில் தேசிய பாடசாலை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். மாத்தளை ஸாஹிராவுக்கு 40 பேர்ச் காணி எடுத்துக் கொடுத்துள்ளோம்.

கடன் வழங்க சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 17 நிபந்தனைகள் – விரட்டியோர் இன்று மண்டியிடுவதாகக் கூறுகிறது ஐ.தே.க.

spdesanayaka.jpgசர்வதேச நாணய நிதியத்தை விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் மண்டியிட்டுவருவதாக தெரிவித்த மத்திய மாகாண எதிர்க்கட்சித்தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி தேசிய அமைப்பாளருமான எஸ்.பி.திசாநாயக்க, 17 நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே கடனு தவியைப்பெற்றுக் கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நாட்டில் அடிப்படை மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஊழல், மோசடிகள், வீண்விரயங்களைத் தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கவும் அரசு தவறினால் கடனுதவி கிடைப்பது சந்தேகத்துக் கிடமானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே எஸ்.பி.திசாநாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

உலகப் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் எமது நாட்டைப்பாதிக்காது என்று அரசு கூறிவந்தது இன்று பொய்யாகிவிட்டது. நாட்டின் நிதி நெருக்கடியும், பொருளாதார நெருக்கடியும் ஒரே சமயத்தில் விஸ்வரூபமெடுத்துள்ளது. 2002 இல் ரணில் விக்கிரமசிங்க வின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதமாக வளர்ச்சிகண்டு படிப்படியாக 2007 ஆம் ஆண்டாகும் போது 4.9 சதவீதம் வரை உயர்ச்சியடைந்தது. 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வீழ்ச்சியின் ஆரம்பம் இன்று முற்றிலும் எதிர்மறையான நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது. 0.5 சதவீத படுமோசமான வீழ்ச்சிநிலையை அடைந்துள்ளது. உலகின் எந்தவொரு நாடும் காணாத பொருளாதார வீழ்ச்சி நிலைக்கு எமது நாடு தள்ளப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய பங்குச் சந்தை நிறுவனமான சி.ரி.ஸ்மித் நிறுவனத்தின் அண்மைய அறிக்கையின் பிரகாரம் பங்குச்சந்தை 81 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இதில் இலங்கையும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்ற 16 இலட்சம் பேரில் மூன்று இலட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்து நாடு திரும்பியுள்ளனர்.

பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி இருப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையிலேயே அரசு கட்டுப்படுத்தவில்லை. புதிதாக நாணயத்தாள்களை புழக்கத்தில் விடுவதைத் தவிர்த்து வருவதால் டொலரின் பெறுமதி கட்டுப்படுத்தப்படுகின்றது. அதன் காரணமாக பண வீக்கத்தை ஒரே நிலையில் வைத்திருக்க முடிகிறது.அரசாங்கத்தின் கடன் பளு படுமோசமாக அதிகரித்துள்ளது. இதனால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் காணப்படுகிறது. இந்தநிலை மேலும் தொடருமானால் 1970-77 காலப்பகுதிக்கு நாடு மீண்டும் தள்ளப்படலாம். கியூவும் உருவாக்கக்கூடிய அபாயம் தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியிடம் கைநீட்டப் போவதில்லை எனவும் அதில் அடிக்கப்பட்ட ப்ளக் கழற்றப்படுமெனவும் வீராவேசம் பேசிய அரசாங்கம் இன்று சர்வதேச நாணய நிதியிடம் மண்டியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியின் உறுப்பு நாடுகளில் இலங்கையும் ஒன்று அதில் நிதிஉதவி கோருவது தவறென்று நான் கூறப்போவதில்லை அதிலிருந்து உதவி பெறும் உரிமை இலங்கைக்கு இருக்கின்றது.

ஆனால், அதன் உதவி தேவையில்லை என்று அதன் அனுபவத்திலேயே மூடச்செய்து விரட்டியவர்கள் இன்று அதன் காலடியில் வீழ்ந்துள்ளனர். சர்வதேச நாணயநிதி கேட்டவுடன் அள்ளிக் கொடுக்கும் நிலையில் இல்லை. அதன் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டால் மட்டுமே நிதி உதவி கிடைக்கும் . இந்தத் தடவை 17 நிபந்தனைகளை சர்வதேச நாணய நிதியம் முன்வைத்திருப்பதாக நான் அறிய வருகின்றேன். இதில் நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கை, அடிப்படை மனித உரிமைகளுக்குட்பட்ட பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் பேணப்படுதல், ஆட்கடத்தல்களுக்கு முற்றுப்புள்ளி, ஊழல், மோசடி, வீண் விரயங்களைத் தவிர்த்தல் போன்றவை முக்கிய அம்சங்களாகக் காணப்படுகின்றன. இந்த 17 நிபந்தனைகளுக்கும் அரசாங்கம் இணங்கியே ஆகவேண்டும்.

அரசாங்கம் நிதியை வீண்விரயம் செய்யவில்லை என்று கூறுவதை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம். 108 அமைச்சர்களைக் கொண்ட அரசு எவ்வாறு நடந்துகொள்கின்றது என்பதை பார்த்தாலே இதனை புரிந்துகொள்ள முடியும். அமைச்சர்களுக்கு எத்தனை வாகனங்கள், எத்தனை பாதுகாப்பு அதிகாரிகள், வீதியில் அவர்கள் போகும்போது பொதுமக்களுக்கு எவ்வாறு நெருக்கடி என்பதையெல்லாம் காணும்போது வீண்விரயம் செய்யவில்லை என்பதை நம்ப முடியுமா? அரசு நிவாரணத்துக்காக ஒதுக்கும் நிதியை விட இரண்டுமடங்கு நிதி அமைச்சர்களுக்காக ஒதுக்கிக் கொடுத்துள்ளது.

60 வருடங்களில் முன்னெப்போதும் காணப்படாத மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர் கொண்டுள்ளது. இதிலிருந்து விடுபட சரியான பொருளாதாரக் கொள்கையொன்று வகுக்கப்படாவிட்டால் நாடு பிச்சைக்கார நாடாக மாறும் அச்சுறுத்தலை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும் அவர் எச்சரித்தார்.