சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

இலங்கைத் தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் கருணாநிதி செய்கிறார்:திருமா

thiruma_8-4.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

தி.மு.க. அரசின் மீது எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அதனால்தான் ஈழப் பிரச்னையை எதிரணியினர் தேர்தல் பிரச்னை ஆக்குகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியைப் பறி கொடுத்தவர் கருணாநிதி. அவரும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர். இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் அழைத்து மதுரையில் டெசோ மாநாடு நடத்தினார். இப்போது கூட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்த எங்கள் கூட்டணி இயற்கை கூட்டணி. கூட்டணிக் கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கத் தெரிந்தவர் கருணாநிதி. உண்மையான தலைவர்கள் இல்லாத கட்சிகளும், விபத்தில், வன்முறையில், சாதி உணர்வுகளைத் தூண்டி தலைவர் ஆனவர்களும் உள்ள கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி. நான் தவறானக் கூட்டணியில் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் அவர் உள்ள கூட்டணிதான் தமிழர்களுக்கு எதிரான கூட்டணி.

ஸ்லம்டாக் மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு : விலை $400,000

rubina.jpgபல ஆஸ்கார்களை குவித்துள்ள “ஸ்லம்டாக்  மில்லியனர்” திரைப்படத்தில் வரும் சிறுவர்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அதில் தேவன் படேல் மற்றும் ப்ரீடோ – லத்திக்காவின் சிறு வயது சிறுவர்களாக இஸ்மாயிலும் ருபீனாவும் நடித்திருந்தார்கள். நேற்று ஒரு பிரிடிஷ் நாளிதழ் “ஸ்லம்டாக்  மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு விலை USD $400,000 என்று அறிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ருபீனாவின் தந்தை ” குப்பத்தில் கஷ்டப்படும் எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை. எங்கள் குழந்தை ருபீனாவின் நட்சத்திர அந்தஸ்தால் அவரை தத்தெடுக்க பலர் முன் வரலாம். அதனால் இந்த விலையை நிர்ணயித்துள்ளோம். இவரது விலையால் அவளது எதிர்காலத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் நல்லது” என தெரிவித்திருந்ததாக பிரிடிஷ் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிஎனென்-ஐபிஎன்னுக்கு நேரடியாக பேட்டியளித்துள்ள அவரது தந்தை இந்த செய்தியில் உண்மையில்லை. ஆனால் நாங்கள் வறுமையில் வாடுவதும், எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை என்பதும் உண்மை என தெரிவித்துள்ளார்.

கருணாநிதி சிறந்த சாணக்கியன்:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

epdp-sec.jpgதமிழக முதல்வர் கருணாநிதி ஓர் சிறந்த சாணக்கியன் என சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் உணர்வு பூர்வமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரபாகரணை தனது நண்பர் என அவர் வெளியிட்டுள்ள கருத்து முழுக்க முழுக்க அரசியல் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்டதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

“கருணாநிதி, எந்த நேரத்தில் எவ்வாறான ஓர் கருத்தை முன் வைக்க வேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்தை நன்கு தெரிந்தவர். வன்னிப் பிரதேசத்தில் பிரபாகரனினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 70,000 பொதுமக்களை விடுதலை செய்வது குறித்து கருணாநிதி அக்கறை காட்ட வேண்டும்” என அமைச்சர் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்: வைகோ

india-election.jpgவிடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு, கருணாநிதி முன்கூட்டியே இரங்கல் கவிதை எழுதி வைத்திருப்பார். ஆனால், அவரது கனவு பலிக்காது. பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார் என்று வைகோ பேசினார். அமைந்தகரையில் நடந்த தென்சென்னை மாவட்ட ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர்,

இலங்கை தமிழர் பிரச்னைக்காக தீக்குளித்த மூன்று பேருக்கு மட்டுமே கருணாநிதி இரங்கல் தெரிவித்தார். தற்போது, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாளர் என்பது போல கபடநாடகம் ஆடுகிறார். சேது சமுத்திர திட்டம் குறித்து நான் சொன்ன கருத்தை வைத்து, அ.தி.மு.க.,வுடன் நெருடல் இருப்பதாக ஒரு ‘டிவி’ பொய் பிரசாரம் செய்கிறது. ஆனால், அதற்கு அடுத்த கேள்விக்கு இந்திய பிரதமராக வர அனைத்து தகுதியும் உள்ளவர் ஜெயலலிதா என்று நான் கூறிய கருத்தை வெளியிடவில்லை.

தற்போது, தனித்தமிழ் ஈழம் அமைய அ.தி.மு.க., பாடுபடும் என்று அ.தி.மு.க., அறிவித்திருப்பது மிக முக்கியமான விஷயம். முடிவெடுத்தால் அந்த முடிவில் உறுதியாக இருக்கக்கூடியவர் ஜெயலலிதா என்பது அனைவருக்கும் தெரியும். பிரபாகரன் பிடிபட்டால் போரஸ் மன்னனை போல் நடத்த வேண்டும் என்று கருணாநிதி அறிக்கை விடுத்தார். ஆனால், தற்போது தனியார் ‘டிவி’ ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘பிரபாகரன் எனது நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. பிரபாகரன் கொல்லப்பட்டால் வருத்தப்படுவேன்,’ என்று கூறியிருக்கிறார். பிரபாகரன் எப்போது சாவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர் கருணாநிதி

ஈழத்தமிழர் பிரச்னைக்காகவே மருத்துவமனைக்கு சென்று படுத்துக் கொண்டவர் அவர். முன்கூட்டியே பிரபாகரனுக்கு இரங்கல் கவிதையை கருணாநிதி எழுதி வைத்திருப்பார் என்பது எனக்கு தெரியும். அவர் எண்ணம் பலிக்காது; பிரபாகரன் 100 ஆண்டுகள் நலமுடன் வாழ்வார்.எனக்கு மரண தண்டனை விதித்தாலும், பிரபாகரனுக்கு ஆதரவாகத் தான் பேசுவேன்.

சோனியாவே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா? – கருணாநிதி

20-karunanithi.jpgசோனியா காந்தியே நளினியிடம் இரக்கம் காட்டியபோது நான் காட்டாமல் இருக்க முடியுமா என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

என்டிடிவிக்கு அவர் அளித்த பேட்டியின் இன்னொரு பகுதியை அந்த டிவி வெளியிட்டுள்ளது.

அதில், நளினியை விடுதலை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, நளினியை விடுதலை செய்வது என்பது மாநில அரசின் கையில் இல்லை. அந்த அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது என்றார்.

பின்னர், கொள்கை அடிப்படையில், அனுதாபத்தின் அடிப்படையில் நளினி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா என்ற கேள்விக்கு, சோனியா காந்தி அவர்களே நளினியிடம் இரக்கம் காட்டியபோது, நான் காட்டாமல் இருக்க முடியுமா என்றார் கருணாநிதி.

இதற்கிடையே, சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு கருணாநிதி அளித்த ஒரு பேட்டியில், ராஜீவ் காந்தி படுகொலையை நான் மன்னிக்க மாட்டேன். அதை செய்த இயக்கத்தையும் நான் மன்னிக்க மாட்டேன் என்றார் கருணாநிதி.

பெப்ரவரி முதல் இதுவரை 10.000 நோயாளிகள் அரச பகுதிக்கு வருகை!

taking-to-green-ocean.jpgகிரீன் ஓசன் கப்பல் மூலம் கடந்த பெப்ரவரி முதல் இதுவரை சுமார் 10 ஆயிரம் நோயாளிகள் புலிகளின் பகுதியில் இருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்து வரப்பட்டதாக ஐ. சி. ஆர். சி. தெரிவிக்கின்றது. கடந்த இரு தினங்களில் புதுமாத்தளன் பகுதியிலிருந்து மேலும் 940 நோயாளிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். இவர்கள் கடந்த 17ஆம் 18ஆம் திகதிகளில் ஐ. சி. ஆர். சி.யினூடாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இவர்களுடன் நோயாளிகளின் உறவினர்களும் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு அழைத்துவரப்பட்டனர். நோயாளர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

தமிழ் சிங்களப் பாடசாலைகளின் இரண்டாம்; தவணை நாளை ஆரம்பம்!

schools_stu.jpgநாட்டி லுள்ள தமிழ் – சிங்கள – பாடசாலைகளின் முதலாம் தவணை விடுமுறை இன்றுடன் முடிவடைவதுடன் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக தமிழ் – சிங்கள பாடசாலைகள் நாளை 21 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளன.

இதேவேளை முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பமாகின்றது. தமிழ் – சிங்கள பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் ஜுலை மாதம் 31 ஆம் திகதி நிறைவடைய உள்ளதுடன்,  முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக் கல்விச்செயற்பாடுகள் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளன.

இந்த வருடத்தின் பாடசாலைக் கல்வி; நடவடிக்கைகள்; யாவும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளதாக் கல்விமையமைச்சு அறிவித்துள்ளது.

நோர்வே தூதரகம் முன் கொழும்பில் ஆர்ப்பாட்டம்

norway-colombo.jpgநோர் வேயின் ஒஸ்லோ நகரில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய சுதந்திர முன்னணி மற்றும் ஹெல உறுமய ஆகியன இணைந்து கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டன.

நோர்வே அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு சார்பான வகையிலான கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகத் தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஒஸ்லோ நகரில் உள்ள இலங்கை தூதுவராலயத்தைத் தாக்கியவர்கள் குறித்து நோர்வே அரசாங்கம் மௌனப் போக்கினை கடைப்பிடிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

காணாமற்போன சிறுவனும் சிறுமியும் சடலமாக மீட்பு- அக்மீமனை கிராமத்தில் துயரம்

baby-01.jpgகாலி மாவட்டம் அக்மீமன பகுதியில் கடந்த வாரம் முதல் காணாமற் போயிருந்த சிறுவனும் சிறுமியும் சடலங்களாக மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமியும் கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனுமே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாகத் தெரிவிக்கபடுவதாவது:- அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொனாமுள்ள நுகேகந்த கிராமத்தைச் சேர்ந்த மேற்படி சிறுவனும் சிறுமியும் கடந்தவாரம் முதல் காணாமற் போயுள்ளார்கள். ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே இவ்விருவரும் காணாமற் போயுள்ளனர். சிறுவனும் சிறுமியும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.

இரு குடும்பத்தாரும் தமது பிள்ளைகள் காணாமற் போனது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாகத் திரண்டு பிள்ளைகளைத் தேடியும் வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை (18) நண்பகல் வேளையில் பாடசாலை மாணவியான தனுஜா ஐராங்கனி (10) எனும் சிறுமி தனது வீட்டு வளவுக்குள்ளிருந்த பழைய மலசல கூடமொன்றிலிருந்து அக்மீமன பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தாரும் ஊர் மக்களும் பொலிஸாரின் உதவியுடன் சிறுவனைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இருப்பினும் துர்திஷ்டமாக கவின் ரஸ்மிக்க (03) எனும் சிறுவனும் நேற்று (19) காலை சடலமாகவே கண்டெடுக்கப்பட்டார். துகேகந்த கிராமத்தில் ஜயந்தி எனும் சந்தியிலிருந்த காட்டுக்குள்ளிருந்த வீடொன்றின் அருகிலிருந்தே சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இம்மர்ம கொலைகள் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். பெரியவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு சிறுவர்கள் பலிக்கடாவாக்கப் பட்டிருப்பதாகவும் பொலிஸார் கூறினர். இரண்டு குடும்பங்களுடனும் கோபமுள்ள ஒருவராலேயெ இப்பிள்ளைகள் கடத்தப்பட்டிருக்க வேண்டுமெனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.கொல்லப்பட்டுள்ள சிறுவனதும் சிறுமியினதும் சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளன.

இதுவரையில் இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையர் 5400 பேருக்கு கொரியாவில் வேலைவாய்ப்பு – ‘கோட்டா’ முறையில் இலங்கைக்கு மூன்றாமிடம்

krambukkela.bmp

இலங்கையைச் சேர்ந்த 5400 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் கொரியாவில் வேலை வாய்ப்பினை வழங்க அந்நாட்டு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பேச்சாளர் எஸ். போபிட்டிய தெரிவித்தார்.

வேலையாட்கள் கோரி, கொரிய அரசாங்கத்தினால் 15 நாடுகளுக்கு வெளியிடப்பட்ட ‘கோட்டா’ முறையின் கீழ் இலங்கை இம்முறை மூன்றாம் இடத்தைத் தட்டிப்பிடித்துள்ளது. இது நாட்டுக்குக் கிடைத்த பெரும் கீர்த்தியும், வெற்றியுமாகுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏப்ரல் மூன்றாம் திகதி முதல் டிசம்பர் 31ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதிக்குள் 15 நாடுகளிலிருந்து 59 ஆயிரம் பேருக்கு தொழில்வாய்ப்பினை வழங்க கொரிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வேலையாட்கள் கோரி, கொரிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் ‘கோட்டா’ வில் மூன்றாம் இடத்தை எய்தியிருக்கும் இலங்கையிலிருந்து 5 ஆயிரத்து 400 பேருக்கு இவ்வருட இறுதிக்குள் கொரியாவில் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

முதலாம் இடத்தில் வியட்நாமும் இரண்டாம் இடத்தில் பிலிப்பைன்சும் இருப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் மேலும் கூறினார். கொரியாவுக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு நலன்புரியமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அந்நாட்டின் வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார்.

இலங்கையிலிருந்து கொரியா வரும் தொழிலாளிகள் பெற்றிருக்கும் விசேட பயிற்சி முறைகள் மற்றும் அவர்களுடைய திறமைகள் காரணமாக அந்நாட்டில் அவர்களுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டிருப்பதாக இச்சந்திப்பின் போது கொரிய அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே கடந்த வருடம் இருந்த ஸ்தானத்திலிருந்து முன்னேறி இலங்கை இம்முறை மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். கொரியா செல்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் ஏற்கனவே 7 ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கூடுமானவரையில் இவர்களனைவரையும் இவ்வருட இறுதிக்குள் கொரியா அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம் எனவும் அமைச்சர் கெஹெலிய நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தற்போது கொரியாவில் இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார். இதேவேளை கொரியா செல்ல விருப்போருக்கு மேலும் விசேட பயிற்சி முறைகளை வழங்குவது குறித்து அமைச்சு ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.