பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் அடக்கி ஒடுக்க முடியுமென்றால் ஏன் கொழும்பு உள்ளிட்ட தென்பிரதேசங்களில் இருக்கும் கொலையாளிகள் சிலரை அரசாங்கத்தால் பிடிக்கவோ அடக்கி ஒடுக்க முடியாதென முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா குமாரதுங்க கேள்வி எழுப்பியிருக்கிறார். படுகொலை செய்யப்பட்ட “சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்கவின் பூதவுடலுக்கு பத்தரமுல்லையிலுள்ள அன்னாரது பாரியாரின் வீட்டில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இறுதி அஞ்சலி செலுத்தியதன் பின்னரே சந்திரிகா குமாரதுங்க இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் இங்கு மேலும் பேசுகையில்;
இது ஜனநாயகத்துக்கும் நாட்டின் சுதந்திரத்துக்கும் விழுந்த பாரிய அடியாகும். லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை மட்டுமல்லாது 2 தினங்களுக்கு முன்னர் வெட்கமில்லாமல் சிரச ஊடக நிறுவனத்துக்கும் தீ வைத்திருத்தினர். கடந்த 2 வருடங்களிலேயே நாட்டில் அதிகமான ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டிருக்கின்றன. ஊடகவியலாளர் கீத் நொயரை தாக்கிவிட்டு நாட்டை விட்டுச் சென்றனர். யாழ்ப்பாணத்திலும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். அவர், இவர், சர்வதேச சதித் திட்டமென ஒவ்வொருவரையும் குற்றஞ்சாட்டிக் கொண்டிருப்பதில் பலன் இல்லை. நாட்டில் 12 வருடங்களாக அரசாங்கத்தை நிர்வகித்தவரென்ற வகையில் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்திற்குரியது. எனினும் இன்று நாடு படுகுழியில் விழுவதற்கு அரசாங்கமே இடமளித்திருக்கின்றமை குறித்து நான் கவலையடைகின்றேன்.
அரசாங்கத்தினால் பிரபாகரனையும் விடுதலைப்புலிகளையும் அடக்கி ஒடுக்க முடியுமானால் கொழும்பு மற்றும் தென்பகுதியிலுள்ள சில கொலையாளிகளை ஏன் அரசாங்கத்தால் அடக்கி ஒடுக்க முடியாது? இதற்கான பொறுப்பை நான் அரசாங்கத்தின் மீதே சுமத்துகிறேன். லசந்த விக்கிரமதுங்கவுக்கும் எனக்குமிடையில் பல பிரச்சினைகள் இருந்தன. எனினும் அவரை, கொல்வேன் என்று நான் ஒரு போதும் தொலைபேசியில் மிரட்டியதில்லை. எனவே இந்த பயணத்தை நிறுத்த வேண்டும், நிறுத்தப்பட வேண்டும். ஏதாவதொன்று செய்தாக வேண்டும். வேண்டுகோள் விடுக்கிறேன். ஒவ்வொருவர் மீதும் பழி சுமத்தும் வகையிலான பொய்ப் பிரசாரங்கள் நிறுத்தப்பட வேண்டும். இன்று இதனை கூறியதற்காக நாளை எனக்கும் வீதியில் வைத்து என்ன நடக்குமென்று தெரியாது. கடந்த 3 வருடங்களில் எனது பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் செய்வதற்கு ஒன்றுமில்லை. உண்மை பேச வேண்டும் என்று கூறினார்.