சஜீர் அகமட் பி

சஜீர் அகமட் பி

மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்கும் 13 ஆவது அரசியல் திருத்தத்தை வரவேற்கிறேன் – சிவ்சங்கர் மேனன்

18-01menon.jpg
இலங்கையின் மாகாண சபைகளுக்கு அதிகாரத்தை வழங்கும் 13 ஆவது அரசியல் திருத்தம் அமுல்படுத்தப்படுவதை வரவேற்பதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எச்.ஈ.சிவ்சங்கர் மேனன் தெரிவித்ததாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன் கடந்த 16ஆம், 17ஆம் திகதிகளில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயமொன்றை மேற் கொண்டிருந்தார். இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய தூதுவராலயம் வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இவ் விஜயத்தின் போது, இலங்கையின் வெளிவிவகாரச் செயலாளர் கலாநிதி பாலித ஹோஹண, பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோரைச் சந்தித்தார். அத்துடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட தமிழ், முஸ்லிம் சமூகங்களின் பிரபல தலைவர்களையும் சந்தித்துள்ளார். இதன் போதான கலந்துரையாடல்கள் இரு தரப்பு உறவுகள், இலங்கையின் தற்போதைய சூழ்நிலை மற்றும் பிராந்திய அபிவிருத்தி என்பவற்றை உள்ளடக்கியதாக இருந்தது.

இக்கலந்துரையாடல்களில் துரிதமான இராணுவ வெற்றியின் மூலமாக இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் தனது விருப்பத்தை ஜனாதிபதி தெரிவித்தார். இதன் போது சிவ்சங்கர் மேனன் வடக்கு உட்பட முழுநாட்டிற்கும் சமாதான முறையில் பேச்சுவார்த்தையினூடாக தீர்வு காணும்படி வலியுறுத்தினார். அத்துடன் தமிழர் உட்பட அனைத்து சமுதாயத்திற்கும் அமைதியான வாழ்வை அளிக்கும் ஐக்கிய இலங்கைக்கு தேவையான அரசியல் புரிந்துணர்வு பற்றியும் அறிவுறுத்தினார். மேலும், இச் சந்திப்பின் போது இலங்கையின் வடக்குப் பிரதேச மனிதாபிமான நடவடிக்கை தொடர்பில் இந்தியாவின் அக்கறை உள்ளதை தெரிவித்ததுடன் இடம்பெயர்ந்த பொதுமக்களின் பாதுகாப்பு பற்றி உத்தரவாதமளிக்கும் படியும் வேண்டினார்.

அத்துடன் அம்மக்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன் அவ்வாறு செய்யாவிடின் மக்களிடையே பகைமை உணர்வு ஏற்படும் என்பதையும் தெரிவித்தார். மேலும், தற்காலிக தங்குமிடம், மருந்துப் பொருட்கள் அடங்கலாக நிவாரணம், பொருட்களையும் இந்தியா வழங்க எண்ணியுள்ளது என்பதையும் தெரிவித்தார். இதன் ஒரு கட்டமாக மருந்துப் பொருட்களை ஜனாதிபதியின் செயலாளர் பசில் ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். ஏற்கனவே இந்தியாவிலிருந்து 1680 தொன் நிவராணப் பொருட்கள் ஐ.சி.ஆர்.சி.யினூடாக வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிரிட்டிஷ் பிரஜாவுரிமை பெற 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும்

flag_uk.jpgபிரிட்டனிலுள்ள குடியேற்றவாசிகள் அந்நாட்டுப் பிரஜாவுரிமை பெற விண்ணப்பிக்க 10 வருடங்கள் காத்திருக்க வேண்டும். புதிய பரீட்சைகள் மற்றும் நீண்ட நன்னடத்தைக் காலம் என்பவை தொடர்பாக பிரிட்டிஷ் அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைகளால் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்க குடியேற்றவாசியொருவருக்கு 10 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

அரசாங்கத்தின் இந்த யோசனைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்த வருடத்தின் (2009) இறுதிப்பகுதியில் இவை அமுல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய யோசனைகளில் “குடிவரவு வரி’ யும் உள்ளடக்கப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வித்துறை சேவைகளுடன் இந்த வரி மேலதிகமான அழுத்தத்தை குடியேற்றவாசிகளுக்கு ஏற்படுத்தும். தற்போது பிரிட்டனின் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிப்பதாயின் 6 ஆண்டுகள் அங்கு தங்கியிருக்க வேண்டும். ஆனால், புதிய யோசனைகளின் பிரகாரம் 10 வருடங்கள் தங்கியிருக்க வேண்டும்.

ஆங்கிலமொழி ஆற்றல், வரிசெலுத்திய பதிவுகள், சமூகத் தொடர்பாடல் பதிவுகள் தொடர்பாக தமது செயற்பாடுகளை நிரூபிப்பதை உறுதிப்படுத்துவதாக இந்த நன்னடத்தைக் காலம் உள்ளது. சிறிய குற்றங்கள் மற்றும் பரீட்சைகளில் சித்தியடையாவிடின் நன்னடத்தைக்காலம் மேலும் நீடிக்கப்படும். பிரஜாவுரிமையை பெற்றுக்கொள்வதற்கான சோதனைகளில் சித்தியடையும் வரை பிரிட்டிஷ் பிரஜையாக வரும் வரை வெளிநாட்டவர்கள் சில அனுகூலங்களை பெற்றுக்கொள்ள முடியாது.

காஸாவில் இஸ்ரேல் போர் நிறுத்தம்

gaza_war02.jpg
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் கடந்த 22 நாட்களாக நடத்தி வந்த படுகொலைத் தாக்குதலை நிறுத்திக் கொள்வதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேல் நடத்திய பயங்கர ஏவுகணை, விமானப் படை, டாங்கிப் படை தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். காஸா பகுதியின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்தும் நொறுக்கப்பட்டுவிட்டன. மின்சாரம், குடிநீர் சப்ளை கட்டமைப்பையும் இஸ்ரேல் தகர்த்துவிட்டது. மேலும் ஆயிரக்கணக்கான வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், பாலங்கள், சாலைகள் ஆகியவற்றையும் இஸ்ரேல் சிதறடித்துள்ளது.

காஸாவில் தாக்குதலை நிறுத்துமாறு உலக நாடுகள் இஸ்ரேலை வலியுறுத்தினாலும் அதை அந்த நாடு காதில் போட்டுக் கொள்ளவில்லை. இஸ்ரேலை நெருக்குவது போல அமெரிக்கா வழக்கம் போல நடித்தாலும் தாக்குதலை நிறுத்த உருப்படியான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந் நிலையில் போதி அளவுக்கு காஸாவை உருக்குலைத்துவிட்டதையடுத்து போர் நிறுத்தம் செய்வதாக இஸ்ரேல் பிரதமர் எகுட் ஓல்மார்ட் இன்று அறிவித்தார். அதே நேரத்தில் படைகள் தொடர்ந்து காஸா பகுதியில் நிலை கொண்டிருக்கும் என்றார்.

காஸாவில் இயங்கி வரும் ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டதால் தற்போது இந்தப் போரை நிறுத்திக் கொள்வதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இஸ்ரேல் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்று ஹமாஸ் அறிவித்துள்ளது.

சிவசங்கர மேனன் இந்தியா திரும்பினார்.

18-01menon.jpgஇலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர மேனன் இன்று காலை சென்னை வழியாக நாடு திரும்பியுள்ளார். ஆனால் பேச்சுவார்த்தையின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் போர் நிறுத்தம் குறித்து ஏதும் பேசியதாக தகவல் இல்லை. அடுத்த மாதம் கொழும்பில் நடக்கவுள்ள சார்க் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு இரு நாட்டு உறவுகள் என வழக்கமான பேச்சுவார்த்தைகளே நடந்ததாகத் தெரிகிறது. இரு தரப்பு பொருளாதார உறவுகள் இலங்கையின் இப்போதைய அரசியல் நிலைமை ஆகியவை குறித்தே பேசப்பட்டதாக இலங்கை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

90 நிமிட நேரம் நீடித்த இந்த சந்திப்பைத் தொடர்ந்து ஜனாதிபதி  செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே மிக ஆழமான, நெருக்கமான மற்றும் நல்லுறவு நீடித்து வருவதாக சிவசங்கர் மேனன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதத்தை உறுதியோடும், ராணுவ ரீதியாகவும் எதிர்கொண்டு வரும் அதே வேளையில் தமிழர் இன பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதி பூண்டிருப்பதாகவும், வட பகுதிகளில் இருந்து வெளியேறும் தமிழ் அகதிகளுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள்  குறித்து மேனனிடம் ஜனாதிபதி  விளக்கியதாகவும் அதி்ல் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை மேனன் சந்தித்தபோது இலங்கைக்கான இந்தியத் தூதர் அலோக் பிரசாதும் உடனிருந்தார். ராஜபக்சே கண்டியில் இருந்ததால் அவரை மேனன் ராணுவ ஹெலிகாப்டரில் கண்டிக்கு சென்று சந்தித்துள்ளார். இந் நிலையில் தனது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி செல்லும் வழியில் இன்று காலை சென்னை விமான நிலையம்  சிவசங்கர மேனன் வந்தார். அவரை சந்திப்பதற்காக பத்திரிகையாளர்கள் நீண்ட நேரம் விமான நிலையத்தில் காத்திருந்தனர். ஆனால் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்காமல் டெல்லி சென்று விட்டார்.

அவரது வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதே நேரம் மேனன் நடத்திய பேச்சு குறித்து இந்தியாவின் சார்பிலும் அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் சாரணியத்தை அபிவிருத்தி செய்ய ஏற்பாடு

batti_.jpgகிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக சாரணியத்தை அபிவிருத்தி செய்ய கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலைகளில் சாரணியக் குழுக்களை அமைத்தல், மாவட்ட சாரணிய சங்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குதல், சாரணிய பயிற்சிகளுக்கு உதவுதல், வருடத்திற்கு மூன்று தடவைகள் சாரணிய ஆணையாளரின் ஒன்று கூடலை நடத்துதல் போன்ற செயற்பாடுகளுக்கு மாகாண கல்வித் திணைக்களம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது.

இவ் விடயம் தொடர்பான கலந்துரையாடலொன்று கடந்த வாரம் திருகோணமலை துளசிபுரத்திலுள்ள மனிதவள அபிவிருத்தி நிலையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் எம். ஐ.எம். முஸ்தபா, மட்டக்களப்பு மாவட்ட ஆணையாளர் எஸ். இருதயநாதன், திரு கோணமலை மாவட்ட ஆணையாளர் இராஜ ரஞ்சன், கிழக்கு மாகாண சாரண ஆணையாளர் யூ.எல்.எம். ஹாஸிம் உட்பட பல உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

ஸ்ரீலங்கன் எயார்வேஸ் விமானத்தில் மோதிய பறவை

images-01.jpg
கொழும்பிலிருந்து சென்னைக்குச் சென்ற ஸ்ரீலங்கான் எயார்வேஸிக்குச் சொந்தமான விமானமொன்று சென்னை விமான நிலைய ஓடுபாதையை நோக்கி வரும் போது பறவையொன்று மோதி அதன் இயந்திரப் பகுதிக்குள் சென்று விட்டது. இதனையறிந்த விமானி விமானத்தை சமார்த்தியமாக நிறுத்தினார். இந்த விமானத்தில் 89 பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் மீண்டும் நேற்றிரவு 11.00 மணிக்குக் கொழும்பு திரும்ப வேண்டியிருந்தது. ஆனால் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் புறப்படுவது ரத்துச் செய்யப்பட்டது. இந்த விமானத்தில் கொழும்பு வருவதற்காகவிருந்த 152 பயணிகளும் நேற்றிரவு சென்னையிலுள்ள ஹோட்டலொன்றில் தங்க வைக்கப்பட்டனர். இன்று காலையில் இந்த விமானம் பயணிகளுடன் கொழும்பு புறப்பட்டது.

ஒவ்வொரு ஜனவரி 4 ம் திகதியையும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தேசிய தினமாக பிரகடனம்?

sumeda-jayasena.jpgநாட்டின் எதிர்கால சொத்துக்களான குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்துள்ளார். சிறுவர் பாதுகாப்பு சேவைகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்ற போது அங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குழந்தைகளின் திறமைகளை இனங்கண்டு அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு பெற்றோர் முயற்சிக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஒவ்வொரு ஜனவரி 4 ம் திகதியையும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான தேசிய தினமாக பிரகடனப்படுத்தப் போவதாகவும் சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்தி அமைச்சர் சுமேதா ஜி ஜயசேன தெரிவித்தார்.

தர்மபுரத்தில் புலிகளின் முக்கிய நிலகீழ் முகாம் படையினரால் கண்டுபிடிப்பு

_army.jpgபடையினரால் விடுவிக்கப்பட்ட தர்மபுரம் பிரதேசத்திலுள்ள புலிகளின் பல முக்கிய முகாம்களை பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தர்மபுரத்தை நேற்று முன்தினம் கைப்பற்றிய இராணுவத்தின் 58 வது படைப் பிரிவினர் அங்கிருந்து முன்னேறி மேற்கொண்ட தேடுதல்கள் மற்றும் படை நடவடிக்கைகளின் போதே இங்குள்ள முக்கிய முகாம்களைக் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் 12 மணி நேரம் தர்மபுரம் பிரதேசம் முழுவதையும் சுற்றி வளைத்து பாதுகாப்பு படையினர் பாரிய தேடுதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். பெருந்தொகையான குண்டுகளை தயாரிக்கும் பிரதேசம் ஒன்றை கைப்பற்றிய படையினர் அதற்கு அருகிலுள்ள பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலக்கீழ் முகாமிற்கு அடியில் மூன்று மாடிகள் நிர்மாணிக்கப் பட்டிருப்பதாகவும பிரிகேடியர் குறிப்பிட்டார்.

இந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் தேடுதல் நடத்திய படையினர் அங்கு அமைக்கப்பட்டிருந்த புலிகளின் மற்றுமொரு பாரிய பயிற்சி முகாம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர். அந்த முகாமுக்கு அருகிலிருந்து துப்பாக்கி ரவைகள் பெருந்தொகையானவற்றை புதைத்து வைத்திருந்த கிடங்கு ஒன்றையும் பிடித்துள்ளனர்.

ட்ரக் வண்டி-01, மோட்டார் சைக்கிள்-01, உழவு இயந்திரம் –01, முச்சக்கரவண்டி –01 மற்றும் வாகனங்களையும் இந்தப் பிரதேசத்திலிருந்து கண்டெடுத்துள்ளனர் என்றும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார். தற்பொழுது தர்மபுரத்திலிருந்து முல்லைத்தீவை நோக்கி படையினர் தொடர்ந்தும் முன்னேறி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்

இரணைமடு குளமும் அண்மித்த பகுதியும் படையினரின் முழுமையான கட்டுப்பாட்டில்- 6 வது விமான ஓடுபாதையும் நேற்று கண்டுபிடிப்பு:

_army.jpgபுலிகளின் மற்றுமொரு முக்கிய பிரதேசமான இரணைமடு குளக்கட்டையும் அதனை அண்மித்த பிரதேசம் முழுவதையும் பாதுகாப்பு படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். இதேவேளை, இரணைமடு குளத்திற்கு தென்கிழக்கு பிரதேசத்தில் அமைந்துள்ள மற்றுமொரு விமான ஓடுபாதை ஒன்றையும் இராணுவத்தினர் நேற்றுக்காலை கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

புலிகளின் ஆறாவது விமான ஓடுபாதை இதுவென தெரிவித்த இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிவரும் இராணுவத்தின் 57வது படைப் பிரிவினரே இரணைமடு குளக்கட்டு பிரதேசம் முழுவதையும், அதற்கு அண்மித்த பிரதேசத்தில் அமைந்துள்ள விமான ஓடுபாதையையும் தமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

சுமார் ஒரு கிலோ மீற்றர் நீளமும், 200 மீற்றர் அகலமும் கொண்ட விமான ஓடுபாதையை படையினர் நேற்று கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார். இரணைமடு குளக்கட்டு அதன்வான் கதவுகளுடன் மூன்று கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதென தெரிவித்த பிரிகேடியர், இங்கிருந்து இருமுனைகள் ஊடாக இராணுவத்தினர் தமது முன்னேற்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரணைமடு குளமும் அதன் சுற்றுப்புறங்களும் நீண்டகாலமாக புலிகள் வசம் இருந்துள்ளதுடன் புலிகளின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக இந்தப் பகுதி விளங்கியுள்ளது. தற்பொழுது இந்த குளம் முற்றாக நீர் நிரம்பிக் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இரணைமடு குளத்திலிருந்து மேற்கு புறத்தை நோக்கி புலிகள் பாரிய மண் அரண்களை நிர்மாணித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். புலிகளின் ஆலோசகரான (காலஞ்சென்ற) அன்டன் பாலசிங்கம் வன்னிக்கு விஜயம் செய்தபோது இந்த குளத்தில்தான் அவர் பயணம் செய்த கடல் விமானம் தரையிறக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி- முல்லைத்தீவு மாவட்ட எல்லைகளை இணைக்கும் பிரதேசமாக இரணைமடு குளம் விளங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இந்தப் பிரதேசத்தில் புலிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான மோதல்களுக்கு பின்னரே இரணைமடு குளத்தை பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு, விசுவமடு, ராமநாதபுரம் பகுதிகளில் இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த மோதல்களின் பின்னர் படையினர் நடத்திய தேடுதலின் போது கொல்லப்பட்ட புலிகளின் 6 சடலங்கள், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வாகனங்களையும் படையினர் மீட்டெடுத்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

இல‌ங்கை ‌பிர‌ச்சனை‌யி‌ல் ம‌த்‌திய அரசை ந‌ம்பலா‌ம் : கருணாநிதி

karunanithi.jpgஇல‌ங்கை‌ப் ‌பிர‌ச்சனை‌யி‌ல் நலமான முடிவுக்கு ம‌த்‌திய அரசை நாம் நம்பியிருக்கலாம் என்று முத‌ல்வர் கருணாநிதி கூ‌றியு‌ள்ளா‌ர். இதுகு‌றி‌த்து அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இலங்கைப் பிரச்சனையில் கட‌ந்த ஐம்பதாண்டு காலமாக என்னால் முடிந்ததையெல்லாம் செய்து விட்டேன், இன்னும் செய்வதற்கும் தயாராக இருக்கிறேன். என்ன செய்ய வேண்டும் என்பதை உங்கள் ஆலோசனைக்கே விட்டு விடுகிறேன்.

இதனிடையே மத்திய அரசின் அயலுறவு‌ச் செயலர் சிவசங்கர் மேனன், இன்றைக்கு இலங்கை சென்றுள்ளதும் முக்கியமானதாகவே கருத வேண்டியுள்ளது. எனவே, இந்தியப் பேரரசு என்ன முடிவெடுக்கிறது என்பதையும் -இலங்கை அரசு அப்பாவித் தமிழர்களைப் படுகொலைக்கு ஆளாக்குவதை நிறுத்தப் போகிறதா இல்லையா என்பதையும் அறிந்திட சில நாட்கள் பொறுத்திருப்பதுதான் நலம் என்றும் – நலமான முடிவுக்கு இந்தியப் பேரரசை நாம் நம்பியிருக்கலாம் என்றும் கருதுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.