::யுத்த நிலவரம்

::யுத்த நிலவரம்

இலங்கையில் நடைபெறும் யுத்தம் தொடர்பான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்டோரில் 188 பேர் பதவியா வைத்தியசாலையில்

navy.jpgமுல்லைத் தீவிலிருந்து கடல்மார்க்கமாக வியாழக்கிழமை புல்மோட்டைக்கு கூட்டிவரப்பட்ட 488 பொதுமக்களில் 188 பேர் பதவியா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்களில் 76 பேர் நோயாளர்கள் (பெரியவர்களில் 32 பேர் ஆண்கள், 07 பெண்கள், சிறுவர் 8, சிறுமியர் 5) மற்றும் உதவியாளர்களாக வந்தவர்கள் 112 (பெரியவர்களில் 26 ஆண், 36 பெண், சிறுவர் 23, சிறுமியர் 28) வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்கு 200 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். புல்மோட்டை கள வைத்தியசாலையில் 129 பேருக்கு சிகிச்சை அழிக்கப்பட்டது.

தற்போது புல்மோட்டை கள வைத்தியசாலையில் தற்போது 100 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 பேர் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளர்கள் ஆவர். அவர்களில் பெரியவர்கள் 37 (ஆண்13, பெண்24) சிறார்கள் 10 (ஆண் 7, பெண் 3) உதவியாளர்கள் 53 பேர் (பெரியவர்களில் 10 ஆண்கள், 22 பெண்கள், சிறார்கள் 12, சிறுமியர் 10)

முல்லைத்தீவிலிருந்து கப்பல் மூலம் இன்னொரு தொகுதி நோயாளர்கள் இன்று சனிக்கிழமை மாலை புல்மோட்டைக்கு அழைத்து வரப்படவிருப்பதாக மாகாண சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

‘ புதுமாத்தளன் தற்காலிக மருத்துவமனை அருகே ஷெல் வீச்சுக்களில் 20 பேர் பலி”

இலங்கையின் வடக்கே அரச படைகளுக்கும் வி்டுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் எஞ்சியுள்ள ஒரேயொரு தற்காலிக மருத்துவமனையாகிய புது மாத்தளன் மருத்துவமனையைச் சூழ்ந்த பகுதிகளில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதல்களில் 140க்கும் மேற்பட்ட காயமடைந்தவர்கள் இந்த மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகவும், சிகிச்சை பயனளிக்காத காரணத்தினால் அவர்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பளார் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார்.

வியாழக்கிழமை மாலை வரையில் தொடர்ச்சியாக காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்ததாகவும், ஷெல் தாக்குதல்களில் சம்பவ இடங்களில் இறந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படவில்லை என்றும், டாக்டர் ரீ.வரதராஜா கூறினார்.

புதுமாத்தளன் மருத்துவமனையில் குழந்தைகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுகின்ற விடுதி பக்கமாக உள்ள வேலியருகில் இன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஷெல் ஒன்று வந்து வீழ்ந்து வெடித்ததாகவும், இதனையடுத்து, அந்த குழந்தைகள் விடுதியில் தங்கியிருந்த நோயாளர்கள் அனைவரும் மருத்துவமனையைவிட்டு ஓடிவிட்டதாகவும், தொடர்ச்சியான ஷெல் தாக்குதல்கள் காரணமாக மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்களும் பதட்டத்தி்ற்கு உள்ளாகியிருப்பதாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவித்தார். அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வலயத்தில் உள்ள புதுமாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால், வலயர்மடம் ஆகிய பிரதேசங்களில் இன்று நடத்தப்பட்ட ஷெல் தாக்குதல்களில் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் உட்பட 44 பேர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் தெரிவித்திருக்கி்ன்றார்கள்.

முன்னதாக இன்று அதிகாலை புதுமாத்தளன் மருத்துவமனைமீது நடத்தப்பட்ட தாக்குதலில் 5 நோயாளர்கள் கொல்லப்பட்டதாகவும், இரண்டு மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் காயமடைந்ததாகவும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ரீ.வரதராஜா தெரிவிக்கின்றார்.

மேலும் 485 பொதுமக்கள் புல்மோட்டைக்கு அனுப்பப்பட்டனர்

navy_rescue_civil.jpgஇலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவடத்தில் போர் நடக்கும் பகுதிகளில் காயமடைந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் அடங்கிய சுமார் 485 பொதுமக்கள் வியாழக்கிழமை செஞ்சிலுவை சங்கக் கப்பல் மூலம் திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை தற்காலிக மருத்துவ முகாமுக்கு கொண்டுவரப்பட்டனர்.

இவர்களில் சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தவர்கள் என்றும் பிறர் அவர்களுக்குத் துணையாக வந்த குடும்ப உறுப்பினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

வந்தவர்கள் கடலிலிருந்து படகுகள் மூலம் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இவர்களில் பலருக்கு உடனடி மருத்துவ உதவி, புல்மோடையில் அமைந்துள்ள இந்திய மருத்துவ முகாமில் அளிக்கப்பட்டது.

வன்னியிலிருந்து ஒரு வாரத்தில் ஒன்பதாயிரம் பேர் வருகை

_mullai_1.jpg
வன்னியிலிருந்து கடந்த ஒரு வாரத்தில் சுமார் ஒன்பதினாயிரம் பொதுமக்கள் இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்துள்ளதாகவும் இவர்கள் அனைவரும் செட்டிகுளம் நலன்புரிநிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.  தற்போது வரும் மக்கள் எதுவித மாற்றும் உடைகளுமின்றி வருகின்றார்கள். அவர்கள் மாற்றுவதற்கு உடைகளும் வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

நீண்ட நாட்களாக போசாக்கு உணவு உண்ணாதபடியால் சோர்வான நிலையில் காயங்களுடனும் பயங்கர கோலத்துடனும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்கு இவர்கள் வருவதாக இராணுவ தரப்பினர் தெரிவித்தனர்.

தினமும் குறைந்தது ஆயிரம் பொது மக்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை வந்தடைவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

புலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பில்! அதில் 20 ச.கி.மீ. பாதுகாப்பு வலயம்!

khegeliya_rampukhala.jpgபுலிகள் இப்பொது 21 சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் முடக்கப்பட்டுள்ளனர். அதில் 20 சதுர கிலோ மீற்றர் அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயமாகும் என தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோத அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது.

படையினரால் புலிகள் இப்போது ஒரு சதுர கிலோ மீற்றருக்குள் மட்டுப்படுத்தப்பட்டாலும் அவர்கள் பாதுகாப்பு வலயத்திலும் ஊடுறுவி அங்கிருந்தும் படையினர் மீது தாக்குதல் நடத்துகின்றனர். நேற்று அவாகள் அங்கிருந்து இலங்கை விமானப்படையின் பெல்  212 ரக ஹெலிகொப்டர்கள் மீது நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இதற்கான சான்றாகும்.

புலிகளின் செயற்பாடுகள் இப்பொது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. புலிகளின் கடுமையான எதிர்ப்புக்களை வெற்றிகரமாக சமளித்துக்கொண்டு படையினர் நிதானமாக முன்னேறுகின்றனர்.

புலிகளிடம் சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்களின் நலனில் அக்கரையுள்ள சர்வதேச நிறுவனங்கள் இன்று ஆற்றவேண்டிய முக்கியமான பணி என்னவென்றால். புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் மனித நேய மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்கு அரசுடன் இணைந்த ஆதரவு வழங்குவதாகும் என்றும் அமைச்சர் ;கூறினார். 

புதுவருடத்தை முன்னிட்டு முல்லைத்தீவுக்கு 1000 மெ. தொன் உணவுப் பொருட்கள்!

sb_diwarathnass.jpg தமிழ், சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு அடுத்த வார இறுதியில் முல்லைத்தீவு பிரதேசத்துக்கு 1000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் அனுப்பப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் எஸ்.பி. திவாரத்ன தெரிவித்தார்.

இவை கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளதோடு முல்லைத்தீவு பிரதேசத்துக்கு ஒரே தடவையில் அனுப்பப்படும் ஆகக் கூடுதலான அளவு உணவுப் பொருள் தொகுதி இதுவாகும். இதேவேளை, யாழ். குடாநாட்டுக்கு ஏ-9 வீதி ஊடாக அத்தியாவசிய உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லும் இரண்டாவது வாகனத் தொடரணி நேற்று கொழும்பிலிருந்து புறப்பட்டுச் சென்றது.

உணவு மற்றும் துணி வகைகள் அடங்கிய 300 மெற்றிக் தொன் அளவான இந்தப் பொருட்கள் 20 லொறிகளில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதற்கு முன்னர் அப்பிரதேசத்துக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். 

பொட்டு அம்மானின் பாதுகாப்பு வீடு படையினர்வசம்

pottu_amman-house.pngஎல்.ரீ.ரீ.ஈ. உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மான் பயன்படுத்திய பாதுகாப்பு வீடு படையினரால்  நேற்றுக் கைபற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பயங்கரவாதக் குற்றச் செயல்களுக்காக இலங்கை அரசாங்கத்தினால் தேடப்பட்டுவருபவர்களான  பொட்டுஅம்மான் மற்றும் கபில் அம்மான் ஆகிய இருவரும் இந்த வீட்டை பயங்கரவாத திட்டங்கள் தீட்ட பயன்படுத்தியுள்ளனர் என படையினர் தெரிவிக்கின்றனர்.

பொட்டு அம்மானினால் பாவிக்கப்பட்டதாக நம்பப் படும் ஜீப்வன்டி ஒன்று மற்றும் பெருந் தொகையான மிதிவெடிகள் என்பனவற்றை படையினர் இப்பிரதேசத்தில் மேற்கொண்ட  தேடுதலின்போது  கண்டுபிடித்துள்ளனர் எனவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் அறிவித்துள்ளது. 

ஐரோப்பிய ஆணைக்குழு பிரதிநிதிகள் அகதி முகாம்களுக்கு விஜயம்

lankadisplaced.jpgஐரோப்பிய ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றைய தினம் வவுனியாவில் உள்ள அகதி முகாம்களுக்கு விஜயம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருக்கும் இடம்பெயர் மக்களையும், அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகளையும் குறித்த குழுவினர் நேரில் பார்வையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஆணைக்குழு உறுப்பினர்கள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்து இடம்பெயர் மக்களது நிலைமை குறித்து கலந்துரையாடியதாகவும் கூறப்படுகின்றது. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகியவற்றின் ஊடாக ஐரோப்பிய ஆணைக்குழு இடம்பெயர் மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

விமானப்படையினரின் ஹெலிகொப்டர்கள் இரண்டின் மீது புலிகள் தாக்குதல்

bell80.jpgபுதுக் குடியிருப்பில் மோதல்களில் காயமடைந்தவர்களை அழைத்துச்செல்ல வந்த இரண்டு பெல் 212 ரக  ஹெலிகொப்டர்கள் மீது விடுதலை புலிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொண்டதாகத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலின்போது, காயமடைந்த வீரர்களை ஏற்றிக்கொண்டு  ஹெலிகொப்டர்கள்  விமானிகளினதும் பொறியிலாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக தரையிறக்கப் பட்டதாகவும் இதன்போது ஹெலிகொப்டர்களுக்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை எனவும்   தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகள் இவ்விமான எதிர்ப்பு ஏவுகணைத் தாக்குதலைப் பாதுகாப்பு வலயத்தில் இருந்தே மேற்கொண்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது

949 சிவிலியன்கள் படையினரிடம் தஞ்சம் – உதய நாணயக்கார

navy_rescue_civil.jpgபுலிகளின் பிடியிலிருந்து வந்த 949 பொது மக்கள் பாதுகாப்புப் படையினரிடம் தஞ்சமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இவர்களில் 810 பொது மக்கள் இராணுவத்தினரிடமும், 139 பொது மக்கள் கடற்படையினரிடமும் தஞ்சமடைந்துள்ளனர். புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள இராணுவத்தின் 58வது படைப்பிரிவினரிடம் 810 பொது மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். இதேவேளை டிங்கிப் படகுகள் மூலம் இரு தடவைகளாக 129 பொது மக்கள் கடற்படையினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். முதலாவது குழுவில் 126 பொது மக்களும் இரண்டாவது குழுவில் 13 பொது மக்களும் படகுகள் மூலம் தப்பி வந்துள்ளனர். இவர்களில் 43 ஆண்கள், 43 பெண்கள் மற்றும் 40 சிறுவர்கள் அடங்குவர்.

இவர்களில் காயமடைந்தவர்களுக்கு கடற்படையினர் உடனடி முதலுதவிகளை வழங்கியுள்ளதுடன் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார்.