E-Cigarettes

E-Cigarettes

இலங்கையின் கிராமப்புறங்களை ஆக்கிரமிக்கும் E-Cigarettes !

இலத்திரனியல் சிகரெட்கள் (E-Cigarettes) இலங்கையில், குறிப்பாக கிராமப்புறங்களில் வேகமாக பரவி வருவதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் ஜா-எல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சுமார் 500,000 ரூபா பெறுமதியான இ-சிகரெட் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ள நிலையிலேயே திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் பாணந்துறை பிரதேசங்களிலும், அதிக மக்கள் தொகை கொண்ட பிரதேசங்களிலும், பாடசாலை மாணவர்கள் மற்றும் 40 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், அதிகளவில் இ-சிகரெட்க்க்களை பாவனை செய்வது விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குணசிறி தெரிவித்தார்.

இந்த இ-சிகரெட்டுகள் படிப்படியாக தொலைதூரப் பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

இ-சிகரெட்கள் ஒன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும், அவை பெரும்பாலும் ஸ்மார்ட் வாட்ச்கள், பென் டிரைவ்கள், பவர் பேங்க்கள் மற்றும் நறுமணப் போத்தல்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும் குணசிறி மேலும் தெரிவித்தார்.

சாதாரண சிகரெட்டின் கூறுகளைக் கொண்டிருக்காமல், மாம்பழம், ஆரஞ்சு, செர்ரி போன்ற பல்வேறு பழங்களின் வாசனையுடன் இருப்பதால், மின் சிகரெட்களை அடையாளம் காண்பதில் அதிகாரிகள் சிரமங்களை எதிர்கொள்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு இ-சிகரெட்டிலும் 50,000 முதல் 60,000 பஃப்கள் உள்ளன, அது காய்ந்து போகும் வரை எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம், அதே நேரத்தில் அது மின்னணு முறையில் ரீசார்ஜ் செய்யப்படுவதன் மூலம் இயக்கப்படுகிறது, என்றார்.

இந்த இ-சிகரெட்கள் செயற்கையாக புகையை உருவாக்குவதால், அதிக நச்சுத்தன்மை கொண்டவை, அதிக போதைப்பொருள் மற்றும் அதிக புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டவை என்பதால், அவை உலக சுகாதார அமைப்பு மற்றும் அமெரிக்காவால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க விமான நிலையம், கொழும்பு துறைமுகம் மற்றும் ஏனைய கடல் வழிகள் ஊடாக இலத்திரனியல் சிகரெட்கள் இலங்கைக்குள் கொண்டு வரப்படுவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கல்வி, பொலிஸ் மற்றும் கலால் திணைக்களத்தின் அதிகாரிகள் இ-சிகரெட்டுகளின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக கலால் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.