இலங்கைக்கு போதைப்பொருள் கடத்துவதில் தமிழக மீனவக் கிராமங்கள் நுழைவாயில் ! இந்திய மத்திய உளவுத்துறை
இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க மட்டும் வருவதில்லை. அவர்கள் அங்கிருந்து போதைப்பொருட்களையும் பெருமளவில் கொண்டுவருகின்றனர் என்பதை இந்திய மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. வட இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து இருப்பதற்கு எல்லைதாண்டி வந்து மீன் பிடிப்பவர்களும், அவர்களுடைய ஏஜென்டுகளாகச் செயற்படும் எம்மவர்களும் காரணமாக உள்ளனர். சென்னையின் திருவொற்றியூர் தொடங்கி ராமேஸ்வரம் வரையுள்ள மீனவக் கிராமங்கள் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தலுக்கான நுழைவாயிலாக மாறியிருப்பதாக இந்திய மத்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் பாவனைக்கு வடக்கு இளைஞர்கள் அடிமையாகி, தங்கள் இளமையையும் வாழ்வையும் தொலைப்பது பற்றி எவ்வித அக்கறையும் இல்லாமல் வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மௌனமாகவே உள்ளனர். இந்திய மீனவர்கள் மூலமே பெரும்தொகையான போதைப்பொருள் யாழ் வருகின்றமையை மூடிமறைத்து, சிங்களவர்களும் முஸ்லீம்களும் தான் போதைப்பொருட்களை திட்டமிட்டு தமிழ் இளைஞர் மத்தியில் பரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டிவிட்டு பொலிஸாரும் படையினரும் தான் இதற்குக் காரணம் எனவும் தெரிவித்துவிட்டு, அவர்கள் தங்களுடைய அரசியல் பிரச்சாராத்திற்காக இதனைப் பயன்படுத்தி வந்தனர். இதனால் இளைய சமூகம் சீரழிந்தது தான் மிச்சம்.
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள மீனவக் கிராமங்களைக் கண்காணிப்பதற்கான குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு கடத்துவதற்காக் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பின்பு அங்கிருந்து மண்டபம் முகாமுக்கு வந்து தமிழக மீனவக் கிராமங்களிலும் அவர்களுடைய படகுகளிலும் பதுக்கி வைக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்படுகின்றது என தமிழக காவல்துறை தலைவர் சங்கர் ஜீவால் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் தமிழக மீனவக் கிராமங்களில் கண்காணிப்புக் குழக்களை அமைக்க காவத்துறைத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்
