தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை

தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுங்கள் – சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் !

தைரியம் இருந்தால் நாடாளுமன்றுக்கு வெளியேவந்து நீதிபதிக்கு எதிரான கருத்தை வெளியிட்டு காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவிற்கு வவுனியா சட்டத்தரணிகள் சங்கம் சவால் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்த கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்..

 

இதன்போது கருத்து தெரிவித்த போதே வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அன்ரன் புனிதநாயகம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

மேலும் நீதி துறையில் அரசியல் தலையிடு இல்லாமல் நீதிபதிகளை சுதந்திரமாக செயற்படவிடுங்கள் என்ற பலவேறு கோரிக்கைகளையும் அவர்கள் இதன்போது முன்வைத்தனர்.

 

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து பாரிய இனக்கலவரத்தை ஏற்படுத்த திட்டம்- புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை !

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து எவ்வேளையிலும் இனக்கலவரம் மூளலாம் என்ற இந்திய புலனாய்வுபிரிவிரின் எச்சரிக்கையை அலட்சியம்செய்யவேண்டாம்  என உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக ஐலண்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முல்லைத்தீவு குருந்தூர்மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அனைத்தரப்பினர் மற்றும் தனிநபர்கள் குறித்து தகவல்களை திரட்டுமாறும் எச்சரிக்கையாகயிருக்குமாறும்  உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் தங்கள் புலனாய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளன என ஐலண்ட் தெரிவித்துள்ளது.

குருந்தூர் மலை தொடர்பில் உடனடி மதக்கலவரம் சாத்தியம் என்ற இந்திய புலனாய்வு பிரிவினரின் எச்சரிக்கையை தொடர்ந்தே உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள்  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன.

குருந்தூர்ஆலய பகுதியினை உரிமை கொண்டாடுவதற்காக பௌத்த இந்து உணர்வுகளை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் கண்காணிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக  உள்நாட்டு புலனாய்வு பிரிவுகளின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என  ஐலன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் இனக்கலவரத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன இந்த வன்முறைகள் 2019 தேர்தலிற்கு முன்னர் இடம்பெற்ற வன்முறைகளை விட மோசமானவையாக காணப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கையை இந்திய பத்திரிகைகள் சில வெளியிட்டுள்ளன.

“கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்குக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.” – உதய கம்மன்பில

“முன்று தலைமுறைகளாக கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்புகின்றார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எனவும்  கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறும்  பிவித்தூறு ஹெல உறுமய அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தமது யூரியூப் சமூக வலையத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவித்துள்ளார்.

குறித்த காணொளியில் மேலும் பேசியுள்ள அவர்,

தமிழ் இனவாத கொள்கையுடைய பொன்னம்பலம் பரம்பரையின் மூன்றாவது தலைமுறையான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை குருந்தூர் மலைக்கு சென்று அரங்கேற்றிய நாடகத்தை நாங்கள் அனைவரும் பார்த்தோம். தமிழ் அடிப்படைவாதிகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நீதிமன்ற அனுமதியை பெற்று அங்கு வருகை தந்ததால் நாங்கள் அவர்களை தடுக்கவில்லை.

நீதிமன்றத்தின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக கருதப்படும் என்பதால் நாங்கள் அமைதியாக இருந்தோம். தொடர்ந்து அமைதியாக இருப்பது அவர்கள் வெற்றிப் பெற்றார்கள் என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்கும். குருந்தூர் விகாரை 2200 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கள மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட பௌத்த விகாரை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. குருந்தூர் மலையை சூழ்ந்த பகுதிகளில் புராதன தொல்பொருள்கள் பௌத்த உரிமையை பறைசாற்றுகின்றன.

குருந்தூர் மலை குறித்து மகாவசம்சம் உள்ளிட்ட பௌத்த நூல்களில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குருந்தூர் விகாரை பௌத்தர்களுக்கு சொந்தமானதா என்பது சந்தேகத்துக்குரியதொரு விடயமல்ல. குருந்தூர் மலை தமிழர்களுக்கு சொந்தமானது என்பதற்கும் அங்கு இந்து கோயில் இருந்ததற்கும் எவ்வித தொல்பொருள் சான்றுகளும் கிடையாது.

இதனடிப்படையில், அங்கு சென்று மத வழிபாடுகளை மேற்கொள்ள கஜேந்திரகுமாரருக்கு முடியாது. விகாரையில் உள்ள தூண்களில் ஒரு தூண் வட்ட வடிவில் உள்ளது. இந்த தூண் சிவலிங்கம் என்று குறிப்பிட்டு முறையற்ற தர்க்கத்தை முன்வைத்துள்ளார்கள். இதற்கமைய, குருந்தூர் மலை இந்துக்களுடையது என்ற போலியான தர்க்கத்தையும் முன்வைக்கிறார்கள். இந்த நாடகத்தை அரங்கேற்ற அரசாங்கம் இடமளித்துள்ளது. ஆனால் பௌத்த மரபுரிகளை பேணி பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையுடைய பௌத்தர்களுக்கு இந்த நாடகத்தை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.

தமிழ் அடிப்படைவாதிகளின் நாடகத்துக்கு இடமளித்தால் பௌத்தர்களின் மரபுரிமைகள் இல்லாதொழிக்கப்படும். பௌத்த மரபுரிமைகளை அழிக்கும் செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு அரசாங்கம் கோழைத்தனமாக இருக்கலாம். ஆனால் பௌத்தர்கள் கோழைத்தனமாக இருக்க மாட்டார்கள்.

ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் இருக்கும் காலத்தில் தான் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள பௌத்த தொல்பொருள் மரபுரிமைகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. அழிக்கப்பட்டுள்ளன. ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சியில் வேண்டியதை செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளதால் தமிழ் அடிப்படைவாதிகள் பௌத்த மரபுரிமைகளை அழிக்கிறார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொள்ளுப்பிட்டியில் வாழ்கிறார். அவரின் தந்தையும் கொழும்பில் வாழ்ந்தார் . அவரது பாட்டனாரும் கொழும்பில் வாழ்ந்தார். இவர் கொழும்பில் வாழ்ந்துகொண்டு விடுமுறை நேரத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சென்று இனவாதத்தை பரப்பி அதனூடாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி சுகபோகமாக வாழ்க்கையை வாழ்கிறார்.

அவர் கொழும்பில் வாழ்வதற்கு எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. அவரது பரம்பரைக்கும் எவரும் இடையூறு விளைவிக்கவில்லை. கொழும்பில் உள்ள இந்து கோயில்களுக்கு நாங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுகிறோம். கொழும்பில் இருந்துகொண்டு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களை இனவாத செயற்பாடுகளில் ஈடுபட தூண்டிவிடும் வரிசையில் பொன்னம்பலம், சுமந்திரன், சம்பந்தன் உள்ளிட்ட அனைவரும் உள்ளடங்குகிறார்கள்.

தெற்கில் இவர்கள் வாழ்வற்கு உள்ள சுதந்திரத்தை வடக்கில் சிங்களவர்களிடமிருந்து பறிப்பதற்கும் தடையேற்படுத்துவதற்கும் இவர்களுக்கு தார்மீக உரிமையில்லை. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழ் அரசியல்வாதிகள் தெற்கில் சுதந்திரமாக வாழ்வதை போன்று சிங்களவர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் சுதந்திரமாக வாழ வேண்டும். அந்த கோரிக்கையை முன்வைக்க எமக்கு உரிமை உண்டு.

ஆகவே சிங்களவர்களின் உரிமைகளை வென்றெடுக்க இந்த வாரம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கொழும்பில் வசிக்கும் வீட்டின் முன்பாக ஆரப்பாட்டத்தில் ஈடுபடுவோம்.

இதில் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டும். இனவாத கொள்கையற்ற தமிழர்களும் கலந்துக் கொள்ள வேண்டும்” – என்றார்.

“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” – துரைராசா ரவிகரன்

“மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தமிழர்களை தள்ளுவதற்கு  சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.” என முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, பாராளுமன்ற உறுப்பினர்களான ஜயந்த சமரவீர மற்றும் சரத் வீரசேகர ஆகியோர் தெற்கில் உள்ள பெரும்பான்மையின மக்களின் மன நிலையைக் குழப்பி, இனவாதத்தைத் தூண்டி அரசியலில் ஈடுபடும் அரசியல் நோயாளிகள் எனவும் இவ்வாறான அரசியல் நோயாளிகளை பெரும்பான்மையின மக்கள் அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ரவிகரன் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

முல்லைத்தீவு குருந்தூர் மலையை பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்திருப்பது மிகவும் வேடிக்கையானது.  குருந்தூர் மலையும், குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு கிராமமும் தமிழ் மக்களுக்கு உரியவையாகும்.  முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு பகுதியானது சைவத் தமிழ் மக்களின் பூர்வீக கிராமமாகும். அங்கு பரம்பரை பரம்பரையாக சைவத் தமிழ் மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்கள் பாரியளவில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதுமாத்திரமின்றி தேன் எடுத்தல், மிருகங்களை வேட்டையாடுதல் உள்ளிட்ட செயற்பாடுகளிலும் அங்கு வாழ்ந்த பூர்வீக தமிழர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இவ்வாறாக, தண்ணிமுறிப்பில் வாழ்ந்த பூர்வீகத் தமிழர்கள் நெல் மற்றும் சிறுதானியங்களுடனும், பால், தயிர், நெய், தேன், இறைச்சி என்பவற்றோடு பாலை, வீரை, முரளி உள்ளிட்ட காட்டுப் பழங்களை உணவுகளாக உட்கொண்டு தன்னிறைவாக வாழ்ந்துவந்துள்ளனர்.

தண்ணிமுறிப்பு கிராமத்தை தழுவி ‘நிலக்கிளி’ எனும் நாவல் இலக்கியமொன்று எழுதப்பட்டுள்ளது. அந்த நாவலை எழுத்தாளர் அண்ணாமலை பாலமனோகரன் எழுதியுள்ளார். தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த பூர்வீகத் தமிழ் மக்களின் வாழ்வியலை இந்நாவல் தெளிவாகக் கூறுகிறது. அந்த நாவலில் கூட எமது தமிழ் மக்கள் குருந்தூர் மலையில் சைவ வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. சைவ வழிபாட்டு அடையாளமான சூலம் இருந்ததாகவும் குறித்த நாவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 1984ஆம் ஆண்டு இந்த தண்ணிமுறிப்பு பகுதியில் வாழ்ந்த சைவத் தமிழ் மக்கள், அப்போது நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக அங்கிருந்து இடம்பெயர்ந்திருந்தனர். குறிப்பாக, 1984இல் முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பின் பக்கத்து கிராமங்களான ஆண்டான் குளம், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, ஒதியமலை உள்ளிட்ட பகுதிகளில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ் மக்கள் கூட இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர்.

இவ்வாறு இடப்பெயர்வை சந்தித்த தமிழர்களின் பூர்வீகக் கிராமங்களிலேயே குருந்தூர் மலை அமைந்துள்ள தண்ணிமுறிப்பு, ஆண்டான்குளம் ஆகிய கிராமங்களில் இதுவரையில் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை. குறித்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல தடவை தம்மை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துமாறு கோரியும் இதுவரை மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

இவ்வாறு அங்கு வாழ்ந்த பூர்வீகத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்யாமல், திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகளை செய்துவருகின்றனர்.  அந்த திட்டத்தின்படி, அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை என்பதுடன், தண்ணிமறிப்பு பாடசாலை தற்போது பூதன்வயல் கிராமத்தில் இயங்கிவருகிறது.

இவ்வாறான சூழலில் தொல்லியல் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்து, எம்மை குருந்தூர் மலைப் பகுதிக்குள் போகவிடாமல் தடுத்து, அங்கிருந்த சைவ வழிபாட்டு அடையாளமான திரிசூலத்தையும், முன்னே இருந்த கல்லையும் காணாமல் ஆக்கியுள்ளனர். அத்தோடு, அங்கு புதிதாக பாரியளவில் விகாரையொன்று நிறுவப்பட்டது.

இவ்வாறு தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையில் விகாரையை அடாத்தாக அமைத்துவிட்டு, அதை பௌத்த சின்னமாக அறிவிக்க கோருவது மிகவும் அபத்தமானது.

மேலும், அங்கே அகழ்வாய்வுகளின்போது சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டிருந்தது. அவ்வாறு அகழ்வாய்வுகளில் பெறப்பட்ட சிவலிங்கமானது எட்டுப் பட்டை கொண்ட எண்முகத் தாராலிங்கம் என பல ஆய்வாளர்களாலும் சொல்லப்பட்டது. குறித்த சிவலிங்கம் பல்லவர் காலத்துக்குரியதாக இருக்கலாம் எனவும் ஆய்வாளர்களால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் அவ்வாறு பெறப்பட்ட சிவலிங்கத்தை எடுத்து தற்போது பௌத்த விகாரையின் உச்சிப் பகுதியில் வைத்துள்ளனர். இந்த சிவலிங்கத்தை விகாரையின் ஒரு பாகமாக சித்திரித்துள்ளனர்.

இப்படியாக அங்கு திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 2009ஆம் ஆண்டு எமது தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு பாரியதொரு இன அழிப்பை மேற்கொண்டது.

தற்போது எமது தமிழர்களின் பூர்வீகம், இருப்பு, பண்பாடு, பாரம்பரியம் என்பவற்றை கேள்விக்குள்ளாக்குகின்ற விதத்தில் திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசாங்கமும் பௌத்த சிங்கள பெருந்தேசியமும் இணைந்து முன்னெடுத்துள்ளது.

குருந்தூர் மலை விவகாரத்தில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு வேலைகள் கட்டங்கட்டமாக நகர்த்தப்படுவதை எம்மால் உணரமுடிகிறது.

குருந்தூர் மலையில் அகழ்வாய்வு என்ற போர்வையில் அங்கிருந்த தமிழர் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டன. அதேவேளை அங்கு புதிதாக பௌத்த விகாரை அமைக்கப்பட்டு, பௌத்த வழிபாட்டு இடத்தைப் போன்று சித்திரிப்பு வேலைகள் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்ந்து தண்ணிமுறிப்பு பூர்வீகத் தமிழ் மக்கள் வாழ்ந்த காணிகள், தமிழ் மக்களின் விவசாயக் காணிகள் உள்ளடங்கலாக சுமார் 632 ஏக்கர் காணிகளை விகாரைக்குரிய காணிகளாக அபகரித்துள்ளனர்.

இவ்வாறு புதிதாக அமைக்கப்பட்ட விகாரைக்கு கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் போலியான வரலாற்றுத் தகவல்கள் எழுதப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில், ஜயந்த சமரவீர குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவிக்கும்படி கூறுகின்றார்.

இவ்வாறாக எமது தமிழர்களின் பூர்வீக வரலாற்று இடத்தை அத்துமீறி அபகரித்து வைத்துக்கொண்டு, தமிழர்களின் வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு, அதற்கு மேல் பௌத்த வரலாறுகள் இங்கு புதிதாக எழுதப்படுகின்றன.

இதன் மூலம் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாக்கப்படுகிறது. தமிழர்களான எமக்கு இந்த நாட்டிலே வரலாறுகள் இல்லை. தமிழர்கள் இந்த நாட்டில் ஏதிலிகளாக வந்தவர்கள் என காட்டுவதற்கு சிங்களம் முயற்சிக்கிறது. இந்த நாட்டின் பூர்வீகக்குடிகளான எம்மால் சிங்களத்தின் இத்தகைய செயற்பாட்டை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாட்டுத்தலம் இருந்தது என பொய்களை கூறும் பௌத்த துறவிகள், சிங்கள கடும்போக்காளர்கள், சரத் வீரசேகர மற்றும் இந்த ஜயந்த சமரவீர போன்ற சிங்கள இனவாதிகளாலேயே இங்கு இனங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

குருந்தூர் மலையை பௌத்த சின்னமாக அறிவித்தால் இங்கு இனங்களுக்கிடையில் பாரிய பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புக்கள் இருக்கின்றன. இவ்வாறான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால்தான் இந்த நாட்டில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இந்நிலையில், அந்த ஆயுதப் போராட்டத்தால்  எமது தமிழ் மக்கள் பல உயிர்களை இழந்துள்ளனர். அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு நலிவடைந்திருக்கின்ற எமது மக்கள் மீது இவ்வாறான அழுத்தங்களை பிரயோகித்து, அவர்களை மீண்டும் ஓர் ஆயுதக் கலாசாரத்துக்கு தள்ளுவதற்கு இந்த சிங்கள இனவாதிகள் முயற்சிக்கின்றனர்.

தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மையின மக்களுக்கு பொய்யான தகவல்களை இந்த இனவாதிகள் தெரிவிக்கின்றனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (21) துரைராசா ரவிகரன் உள்ளிட்டவர்கள் குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜயந்த சமரவீர என்னும் இனவாதி பாராளுமன்றில் கருத்துத் தெரிவித்துள்ளார்.

உண்மையில், நாம் கடந்த 20ஆம் திகதி (வியாழக்கிழமை) குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதாக இருக்கவில்லை. அப்படியிருக்கும்போது தெற்கில் இருக்கின்ற பெரும்பான்மை இன மக்களை வன்முறைக்குத் தூண்டும் விதமாக அவர் இவ்வாறு போலியான தகவல்களை தெரிவித்து வருகிறார்.

குறிப்பாக, சரத் வீரசேகர, ஜயந்த சமரவீர போன்றவர்கள் தெற்கில் தமது வாக்கு வங்கியை பலப்படுத்துவதற்காக போலியான, இனவாதத்தைத் தூண்டும் விதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்தும் அவர்கள் பாராளுமன்ற கதிரைகளில் அமர வேண்டுமெனில், இவ்வாறு இனவாதத்தை கக்கவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது. இவர்கள் தமது அரசியல் இருப்புக்காக எதையும் செய்யக்கூடிய அரசியல் மனநோயாளிகள் என்றே சொல்லவேண்டும்.

கனேடிய உயர்ஸ்தானிகரை வெளியேற்றச் சொல்வது, முல்லைத்தீவு தமிழ் நீதிபதியை விமர்சிப்பது, கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்தவர்களை இந்த நாட்டிலிருந்து நீக்கச் சொல்வது உள்ளிட்ட விடயங்களை பார்க்கும்போது, சரத் வீரசேகரவை இந்த அரசியல் மனநோய் எவ்வளவு தூரம் ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறது.

அதேபோல ஜயந்த சமரவீரவும் நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லி, தமிழர்களின் தொல்லியல் இடத்தை பௌத்த தொல்லியல் இடமாக அறிவிக்குமாறு கூறி, தெற்கில் உள்ள பெரும்பான்மை இன மக்கள் மீது இனவாதத்தை விதைத்து, அப்பாவி சிங்கள மக்களிடமிருந்து வாக்குகளை அறுவடை செய்வதற்கு முயற்சிக்கின்றார்.

இவ்வாறான அரசியல் மனநோய் உள்ளவர்களை தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் இனங்கண்டு, இவர்களை அரசியலில் இருந்து ஓரங்கட்டவேண்டும்.

தமிழ் மக்களான நாங்கள் எமது பூர்வீக வாழ்விடங்களில் எமது பூர்வீக, பண்பாட்டு, வாழ்வியல் அம்சங்களுடன் சிறப்பாக வாழ விரும்புகின்றோமே தவிர, இவ்வாறான இனவாதத்தையோ, பிரிவினையையோ, வன்முறையையோ ஒருபோதும் விரும்பவில்லை என்றார்.

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில் கடந்த 14.07.2023 அன்று சைவவழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை தொடர்பில் மனிதஉரிமை ஆணைக்குழுவில் திங்கட்கிழமை 17.07.2023 முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாடானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், சமூகசெயற்பாட்டாளர்களான அன்ரனிஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன், இரத்தினம் ஜெகதீசன், ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் ஆகியோரால் வவுனியாவில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்தியக் காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டது.

குறிப்பாக குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று, பிரதோச தினத்தில் சைவத் தமிழ் மக்கள் சிலர் விசேட பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளச் சென்றபோது பெரும்பாண்மை இனத்தவர்களாலும் மற்றும், பௌத்த துறவிகளாலும் குழப்பம் விளைவிக்கப்பட்டதுடன், பொங்கலுக்காக அங்கு தீமூட்டப்பட்டபோது பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவராலும், பெரும்பாண்மை இனத்தவர் ஒருவராலும் சப்பாத்துக்கால்களால் மிதிக்கப்பட்டு அணைக்கப்பட்டது.

அத்தோடு வழிபாடுகளை மேற்காள்ள வருகைதந்த சைவத்தமிழ் மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும், சமூகசெயற்பாட்டாளர்களும் பொலீசாரால் தாக்கப்பட்டுமிருந்தனர்.

இந் நிலையில் குறித்த இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசார் அங்கு சைவழிபாட்டுரிமையினைத் தடுக்கும் வகையில் செயற்பட்ட பௌத்த தேரர்களுக்கும், பெரும்பாண்மை இனத்தவர்களுக்கும் ஆதரவாகச் செயற்பட்டிருந்ததுடன், சைவ வழிபாட்டுரிமைகளைத் தடுக்கின்ற செயற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

அத்தோடு குறித்த நாளில் குருந்தூர்மலையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் பொலிசாரால் தள்ளிவிடப்பட்டு அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தார்.

குறிப்பாக சைவ வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமை மற்றும், ஊடக அடக்குமுறை என்பவற்றில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும், பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.