சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்களை நினைவுகூர்ந்தவர்களை இலங்கை அதிகாரிகள் அச்சுறுத்தினர் தடுத்துவைத்தனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மே 18ம் திகதி 2009இல் முடிவடைந்த இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டோர் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்காக சர்வதேச விசாரணைகள் மற்றும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என மே 17ம் திகதி ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது தங்கள் படையினர் இழைத்த அநீதிகளை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் இதன் காரணமாக உண்மை நீதி இழப்பீடு போன்றவற்றை வழங்குவதற்கு பதில் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களின் சமூகத்தினரையும் மௌனமாக்க முயல்கின்றது என தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்ட்ட மக்களிற்கு நிவாரணம் வழங்குவதற்கும் துஸ்பிரயோகங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் மேலும் சர்வதேச நடவடிக்கைகள் அவசியம் என்பது புலனாகின்றதுஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மே 18ம் திகதி நினைவேந்தல் தினத்திற்கு முன்னர் வடக்குகிழக்கில்நினைவேந்தல் நிகழ்வுகளை இலங்கை பொலிஸார் குழப்ப முயன்றனர் யுத்தத்தின்போது நிலவிய பட்டினி நிலையை குறிக்கும் விதத்தில் வழங்கப்படும் கஞ்சியை தயாரித்து வழங்கியமைக்காக நால்வரை கைதுசெய்து ஒருவாரம் தடுத்துவைத்திருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காணாமல்போனவர்களின் உறவினர்கள் சிலரும் ஏனையவர்களும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்வதை தடை செய்யும் விதத்தில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை பெற்றிருந்தனர் என சர்வதேச மனித உரிமைகள்கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் பொலிஸார் தலையிட்டு நிகழ்வுகளை தடுத்தனர் அல்லது மக்கள் அங்கு செல்வதை தடுத்தனர் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் புதிய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும் என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள படி வலிந்து காணாமலாக்கப்பட்டமை இலங்கையில் இடம்பெற்றது என்பதையும் அதன் அளவையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் உடனடி நம்பகதன்மைமிக்க விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும்,பாரியமனித புதைகுழிகளை தோண்டுவதற்கு சர்வதேச தொழில்நுட்ப உதவியை பெற்றுக்கொள்ளவேண்டும்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை அரசாங்கம் ஒரு சுதந்திரமான வழக்குரைஞர் அதிகாரத்தை ஏற்படுத்த வேண்டும் பயங்கரவாததடைச்சட்டம் உட்பட துஸ்பிரயோகங்களிற்கு வழிவகுக்கும் அனைத்து சட்டங்களையும் நீக்கவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை வெளிநாட்டு அரசாங்கங்கள் ஐக்கியநாடுகள் அமைப்புகள் நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களிற்கு கடும் வேதனையைதுன்பத்தை ஏற்படுத்தும் வலிந்து காணாமலாக்கப்பட்ட வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது என தெரிவித்துள்ள சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பசுபிக் இயக்குநர் எலைன்பியர்சன் மேலும் இது நாட்டில் மேலும் துஸ்பிரயோகங்கள் நிகழும் ஆபத்தை ஏற்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்திற்கான ஆணையை செப்டம்பர் அமர்வில் ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவை புதுப்பிப்பது மிகவும் அவசியம் என தெரிவித்துள்ள அவர் அந்த குற்றங்களிற்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கு உலகெங்கிலும் உள்ள வழக்குரைஞர்கள் இந்த ஆதாரங்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் வீழ்ச்சி அடையும் மணித உரிமைகள் – உலக நாடுகளின் தலைவர்களே காரணம் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு !

உலக நாடுகளின் தலைவர்கள் சட்டங்களை நடைமுறைப்படுத்த தவறுவதால் சர்வதேச அளவில் மனித உரிமைகள் வீழ்ச்சியடைந்துள்ளன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச சட்டங்களை நிறைவேற்ற வேண்டிய தங்கள் கடப்பாட்டினை உலக தலைவர்கள் புறக்கணிப்பதால் உலகம் முழுவதும் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச அளவில் அதிகரிக்கும் மனித உரிமை நெருக்கடிகள் குறித்து அந்த அறிக்கையில் கடுமையாக எச்சரித்துள்ளது.

யுத்தகால அநீதிகள் பலமடங்காக அதிகரிக்கின்றன, மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறை, சர்வதேச மனித உரிமை கொள்கைகள் சட்டங்கள் தாக்குதலிற்குள்ளாகின்றன, அரசாங்கங்கள் அவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன எனவும் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் சர்வதேச மனித உரிமை சட்டங்கள் குறித்து அரசியல் தலைவர்கள் அக்கறையின்மையை வெளிப்படுத்துவதை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவுசெய்து சீற்றத்தை வெளிப்படுத்துதல், பரிவர்த்தனை இராஜதந்திரம், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சட்டங்களை அங்கீகரிப்பதில் இரட்டை நிலைப்பாடுகள் போன்றவற்றினால் ஆயிரக்கணக்கான உயிர்களிற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகியகால ஆதாயங்களிற்காக அரசாங்கங்கள் மனித உரிமைகள் தொடர்பான சட்டபூர்வமான கடமைகளில் இருந்து விலகி அதிகாரத்தை உறுதிப்படுத்த முயல்வதால் உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் நிறைவேற்று இயக்குநர் டிரான ஹசன் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் வெளிப்படையாக தெரியும் இரட்டை நிலைப்பாடுகளிற்கு அப்பால் ஏனைய பல மனித உரிமை விவகாரங்களிலும் இரட்டை நிலைப்பாடுகள் காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை மனித குலத்திற்கு எதிரான சீன அரசாங்கத்தின் குற்றங்கள் தொடர்பில் மௌனம் கடைப்பிடிக்கப்படுகின்றது, உக்ரைனில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறலும் நீதியும் அவசியம் என உரத்த குரலில் வேண்டுகோள்கள் விடுக்கப்படுகின்றது.

அதேவேளை ஆப்கானில் அமெரிக்காவின் மனித உரிமை துஸ்பிரயோகங்கள் குறித்து மௌனம் காக்கப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.