இலங்கை – இந்திய மீனவர்கள்

இலங்கை – இந்திய மீனவர்கள்

இலங்கை இந்திய மீனவர்களை மனிதாபிமானமாக நடத்த வெளியுறவுமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை! 

இலங்கை இந்திய மீனவர்களை மனிதாபிமானமாக நடத்த வெளியுறவுமைச்சர் ஜெய்சங்கர் கோரிக்கை!

 

தமிழக கடற்றொழிலாளர்கள் அத்துமீறும் விவகாரத்தில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு கடந்த 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே மூலகாரணம் ” என இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

கடற்றொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய பாராளுமன்றில் கருத்து தெரிவித்துள்ள கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், இலங்கை சிறைகளில் 97 இந்திய கடற்றொழிலாளர்கள்உள்ளனர்.

இதனை கையாள்வது மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 1974 ல் அப்போது மத்தியில் இருந்த அரசு, மாநில அரசுடன் ஆலோசித்து சர்வதேச கடல் எல்லையை வரையறுத்த போது தான் இந்த பிரச்னை தொடங்கியது. பிறகு 1976 ல் மீன்பிடிப்பது தொடர்பாக எல்லை வரையறை தொடர்பான கடித பரிமாற்றம் நடந்தது. எனவே 1974 மற்றும் 1976 ல் எடுக்கப்பட்ட முடிவுகளே தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக உள்ளது.

இந்திய கடற்றொழிலாளர்கள் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் கையாள வேண்டும் என இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 26 ஆம் திகதி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 40 வரையான இந்திய மீனவர்களை இந்திய மீனவ சங்க பிரதிநிதிகள் பார்வையட்டு கலந்துரையாடினர்.

இதேவேளை அத்துமீறும் மீனவர்களின் கைது மற்றும் வடக்கின் கடல் வளம் அழிக்கப்படுவது தொடர்பாக தமிழக – இலங்கை வடமாகாண மீனவர்கள் இடையான சந்திப்பு ஒன்று வவுனியாவில் நடைபெற்றிருந்தததும் குறிப்பிடத்தக்கது.

மீனவர் பிரச்சினை – கலந்துரையாட இலங்கை வருகிறது இந்திய குழு !

இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக இந்திய பிரதிநிதிகள் குழுவினர் நாளை மறுதினம் நாட்டிற்கு வருகைதரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

12 பேர் கொண்ட குழுவினர் இவ்வாறு நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் எம்.பி.என்.எம் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிக்குமாறு கோரி இந்திய மீனவர்கள் நேற்றைய தினமும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

 

இந்நிலையில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தை சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது !

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் புதன்கிழமை (23) இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

இதன்போது, இந்திய மீனவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக “தி இந்து” செய்தி வெளியிட்டுள்ளது.

 

தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளை மேற்கொள் காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில், இந்திய மீனவர்கள் இலங்கையின் நெடுந்தீவுக்கு தீவுக்கு அருகில் உள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

விசாரணைக்காக அவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேவ‍ேளை, இந்த ஆண்டு இதுவரை இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தமிழகத்தின் ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 450 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் 61 மீன்பிடி இழுவை படகுகளும் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.