இந்திரன்

இந்திரன்

யாழில் இந்திரன் பல்கலைக்கழகம் கட்டுகிறாரா? இந்திர(ன்)லோகக் கன்னிகைகள் கழகம் கட்டுகிறாரா?

யாழில் பெப்பரவரி 9 அன்று இந்திய நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. ரம்பாவின் கணவர் என்றும் இந்திரன் என்றும் அறியப்பட்ட இந்திரகுமார் பத்மநாதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ் தமிழ்த் தேசியவாதிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது. ஆயினும் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்க்க இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களின் இருக்கை மற்றும் அவர்கள் பார்ப்பதற்கான திரைகள் எதனையும் ஏற்பாடு செய்யாத நிலையில் இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்து தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்ந்ததுடன் ஒளி, ஒலி அமைப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மேடைகளிலும் ஏறி நிகழ்வுகளைப் பார்க்க முயன்றனர். ரசிகர்கள், நிகழ்வுக்கு சுற்றிவரப் போட்ட வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவியது. எழுபதுகளில் தமிழாராச்சி மாநாட்டில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதம் அதிஸ்ரவசமாக அன்று நிகழவில்லை. நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வந்திருந்த கலைஞர்களும் ரசிகர்களை அமைதிகாக்கச் சொல்லிக் கெஞ்சிய போதும் நிகழ்ச்சியை முழுமையாக திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வை இந்திரன் ஆரம்பிக்கப்போகின்ற நோர்தேர்ன் யூனி வர்சிற்றிக்கான விளம்பரமாகவே ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் எனப் பலரும் யாழ் வந்திருந்தனர். நேற்றைய நிகழ்வானது தமிழக சினிமா உலகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் சில நடிகர்இ நடிகைகளுக்கு எதிராக அவர்களுடைய நிகழ்வுகளைக் குழப்பியிருந்தனர். தற்போதைய இந்நிகழ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

“இது இசை நிகழ்ச்சி அல்ல இது ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி….. இலவசம் எனக் கூறி எமது இளைஞர் பரம்பரையை அவமானப்படுத்திஇ அவர்களைக் கோபம் கொள்ள வைத்த கூத்து… இந்த நிகழ்ச்சிக்கு எம்மவர்கள் குடும்பம், குடும்பமாக சென்றது எமது பிழை….” என்கிறார் ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பினைச் சேர்ந்த தம்பி தம்பிராசா.

இது தொடர்பாக தேசம்நெற்க்குத் தெரிவித்த இந்நிகழ்வை ஒளிப்பதிவு செய்யச் சென்ற முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரான த ஜெயக்குமார், “அமையப் போகின்ற பல்கலைக்கழகம் ஒரு திரைப்படத்துறை சார்ந்த பல்கலைக்கழகம் என்றால் கூட தம்மன்னா கோஸ்டியைக் கொண்டு வந்து இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமற்றது. ஆனால் நொதேர்ன் யூனிவர்சிற்றி, Sri Lanka Institue of Information Technology – SLIIT உடன் இணைந்து கணணித்துறைசார்ந்த கற்கைநெறிகளையே மேற்கொள்ள உள்ளது. இதற்கு தம்மன்னா கோஸ்டி எதற்கு?” என்றார். இதே கேள்வி கல்வியியலாளர்கள் பலரிடமும் எழுந்துள்ளது.

இந்திரன் என்று அறியப்பட்ட நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ் சுதுமலையிலிருந்து கனடாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர். அங்கு வெற்றிகரமாக “மஜிக் வூட்ஸ்”மற்றும் பல துணை நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அக்காலகட்டத்தில் புலிகளும் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது தமிழகத்திலும் புலிகள் சில பல முதலீட்டு முயற்சிகளில் ஒன்று இந்த மரங்களை தளபாடங்களை உற்பத்தி செய்வதும் ஏற்றுமதி செய்வதும். அவ்வேளையில் புலிகள் தங்கள் முதலீட்டுக்கு நம்பகரமான ஒரு நபர்களைத் தேடிய போது ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல்’ இந்திரனுக்கு அடித்தது அதிர்ஸ்ட்டம். இத்தகவலை புலிகள் அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்ட நம்பகமான ஒருவர் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். இது தொடர்பாக இந்திரனுடைய பள்ளி நண்பரும் தமிழீழ விடுதலைப் புலிகளில் மாத்தையா அணியில் இருந்தவருமான தேவன் குறிப்பிடுகையில், அது இந்திரனின் முதலீடு மட்டுமே எனத் தெரிவித்தார்.

இந்த மஜிக் வூட்ஸின் விளம்பரத்திற்கு வந்தவர் தான் ரம்பா. அப்போது இவர் தயாரித்த ‘திறி ரோசஸ்’ என்ற படம் தோல்வியடைந்த நிலையில் மிகுந்த பண நெருக்கடியில் இருந்த போது இந்திரன் அவரைக் கண்டு காதல் வசப்பட்டார். ரம்பாவின் கடனையும் அடைத்தார். அத்தோடு முதல் மனைவியை விவாகரத்துச் செய்து ரம்பாவைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து பிரபல்யமானார்.

நேற்றைய நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிகழ்வு முகாமைத்துவம் இன்மையே காரணம் என ஜேர்மனியில் வாழும் சமூகச் செயற்பாட்டாளரும் தொழில் முனைவருமான இரத்தினசாமி ரமேஸ்வரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஆயினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல இளைஞர்கள் மதுபோதையிலும் போதைப்பொருட்கள் பாவித்த நிலையிலுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்சியைத் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது. ஆனாலும் இவ்வாறானவர்களை நிகழ்வில் பங்கேற்க விடாமல் தடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பும் கூட. ஒரு பொதுவான களியாட்ட நிகழ்வை எப்படி நடத்தக்கூடாது என்ற வரலாற்றுப் படிப்பினையை இந்திரன் ஈழத்தமிழர்களுக்கு கற்றுத் தந்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் யாழில் வந்து செய்கின்ற செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லை என்று குறிப்பிடும் தம்பி தம்பிராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியை மோசடி செய்த பலர் தற்போது தாயகம் திரும்பி யாழ் சமூகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாகத் தெரிவிக்கின்றார். இந்தப் பட்டியலில் வரக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தம்பி தம்பிராசா, குறிப்பிடாத சிலர்:
வலன்ரைன்ஸ் டேய்க்கு பிரான்ஸ், லண்டன் ஸ்ரைலில் பூட்டுப் போடவும், காதல் செய்யவும் தங்கள் ரீட்சா ஹொட்டலுக்கு கூவி அழைக்கும் ஐபிசி பாஸ்கரன்,
யாழ் ஆணாதிக்க வெள்ளாள சைவப் பழம் ஆறுதிருமுருகனிடம் ஆசீர்வாதம் பெற்று யாழில் மதுவும் மாதுவுமாக டிஸ்கோ கிளப் நடாத்தும் திருவள்ளுவருக்கு திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் வைத்து வள்ளுவரின் வரலாற்றை யாழில் மாற்றியமைத்த புலிகளின் ஆணிவேர் படத் தயாரிப்பாளரும் ரில்கோ ஹொட்டல் உரிமையாளருமான திலகராஜா,

 

பிரான்ஸ் லாக்குர்னே சிவன் ஆலயம் நடத்தும் நல்லூரில் உள்ள காமவிடுதி லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரன்,
(அண்மையில் யாழில் பிறந்தநாள் கொண்டாடிய ஒரே மகனின் மனைவி) மருமகளிடம், அவரின் தாயும் தங்கையும் குடியிருந்த கொழும்பு வீட்டை சீதனமாக எழுதித்தரச்சொல்லி வற்புறுத்திய கொடைவள்ளல் சுவிஸிலிருந்து வந்து எம்ஜிஆர் வேசம் போடும் ‘தியாகி’ அறக்கட்டளையின் வாமதேவன் தியாகேந்திரன் (இவர் லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரனின் சகோதரர்.)

லண்டனில் உள்ள சில புலி ஆதரவு ஆர்வக்கோளாறுகள் எவ்வாறு இந்திய உளவுத்துறை றோ உடன் சேர்ந்து தமிழீழம் காணப் போகிறோம் என்று கூறுகிறார்களோ அதே போல் மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசோடும் புலனாய்வுத்துறையோடும் சேர்ந்து யாழில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். யாழ் சட்டத்தரணி செலஸ்ரினின் மொழியில் சொன்னால், “தம்மன்னாவை அழைத்து இளைஞர்களை எழுச்சிபெற வைத்து தமிழ் தேசியத்தை எழுச்சி பெறச் செய்கின்றனர்”.

யாழில் இந்திரன் பல்கலைக் கழகம் கட்டுகிறாரோ இல்லையோ இந்திரலோகக் கன்னிகைகள் கழகம் கட்டுவார் என்பதை மட்டும் உறுதியாகத் தெரியப்படுத்தியுள்ளார். உலகில் கவர்ச்சி நடனம் ஆடி பல்கலைக்கழகம் கட்டிய முதல் தமிழன் என்ற பெருமை இந்திரனையே சேரும். தவறணைக்கும் பாருக்கும் கவர்ச்சி நடனம் போட்டு ஆண்களை வரவழைப்பது மேற்குநாட்டுக் கலாச்சாரம். அது லண்டனில் தவறணை நடத்தும் கொன்ஸ்ரன்ரைனின் வியாபார தந்திரம். அதையே இந்திரன் யாழில் பல்கலைக்கழகத்திற்கும் பயன்படுத்தியுள்ளார். பதிவு செய்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்று சொல்லிஇ இளைஞர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்கள் தகவல்களைச் சேகரித்தனர். காரியமானதும் ரிக்கற்றுகளுக்கு பணம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஹொட்டல்காரர்கள் யாழை அந்தப்புரமாக்க, இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இந்திரலோகக் கன்னிகைகள் கழகத்தை கொண்டுவந்து ஒரு சிக்ஸரே அடித்துள்ளார். யாழின் தமிழ் தேசியம் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. இவர்களினால் ஈர்க்கப்பட்டு இன்னும் பல வெளிநாட்டு வியாபாரப் புள்ளிகள் யாழில் ஹொட்டல் கட்ட ஓடித்திரிகின்றனர்.

எண்பதுகளில் ஈபிஆர்எல்எப் ஆல் கடத்தப்பட்ட அமெரிக்க அலன் தம்பதிகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தும் சுழிபுரத்தில் புளொட்டின் மிருகத்தனமான கோரப் படுகொலையை படமெடுத்தும் பிரபலமான லண்டன் தவறணை பார் உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைன் சட்டத்தரணி தேவராஜனிடம் மண்கவ்வி நீண்டகாலம் தன்னை மௌனமாக்கிக் கொண்டவர். கோமாவில் இருந்து எழுந்து தமிழ் தேசியவாதியாகியுள்ளார். தற்போது தனது தவறணை வியாபாரத்திலிருந்து ஓய்வுபெறப்போவதாக லண்டன் சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் வட்ஸ்அப் குறுப்பில் குமுறியிருந்தார், ஓய்வூதியர் கொன்ஸன்ரைன் யாழ் தமிழ்ப் பத்திரிகைகளை வடஸ்அப் குறுப்பில் பகிர்வதை தனது தமிழ் தேசியக் கடமையாக எண்ணிச் தன் ஓய்வுக்காலத்தை மிகப்பெறுமதியாகக் களித்து வருகின்றார். அவர் கொன்ஸ்ரன்ரைன் அசோசியேட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி யாழில் ஹொட்டல் கட்டும் திட்டத்தை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இவரொரு கிறிஸ்தவர் என்பதால் கோயில்கட்ட முடியாததால் ஹொட்டல் கட்டும் தமிழ்த் தேசிய நிரோட்டத்தில் ஒரு வழியாக தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை ஹொட்டலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற புதமொழியை ஹொட்டலியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என யாழ் சிவனடியாரான சிவநாதன் நளினமாகத் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அ அமிர்தலிங்கம் நிச்சாம சாதியத்துக்கு எதிரான கிளர்ச்சி பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நிச்சாமம் பீக்கிங்காக மாறுகிறது எனச் சினந்துகொண்டார். யாழில் சாதிய ஒடுக்குமுறை சங்கிகளினாலும் தமிழ் தேசியவாதிகளினாலும் கூர்மையடைந்திருக்கும் இந்நிலையில் யாழை தாய்லாந்தின் பட்டாயாவாக்கும் கைங்கரியத்தில் தமிழ் தேசிய ஹொட்டலியர்கள் ஆறுதிருமுருகனின் ஆசீர்வாதத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இந்திரன் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்ச்சி முற்றிலும் தவறானது என்று தட்டிக்கழித்துவிடவும் முடியாது. அந்த நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்றுதான் பல லட்சம் பேர் விரும்பியுள்ளனர். ஆனால் அடிப்படையில் இந்நிகழ்ச்சியை இந்திரன் ஏற்பாடு செய்த நோக்கம், நிகழ்ச்சி ஏற்பாடு, அந்த மண்ணின் மரபுகளை கருத்திலெடுக்காதது, வியாபார உத்திக்காக குறிப்பாக நடிகைகளை போகப்பொருளாக இளைஞர்கள் முன் நிறுத்தியது என்பன மிகமோசமான மன்னிக்க முடியாத செயல். உலகின் முன் யாழ் சமூகத்தை, யாழ் இளைஞர்களை பாலியல் இச்சைக்கு அலைபவர்களாக சித்தரிக்க வைத்துள்ளார். ஒரு சில இளைஞர்கள் தவறான முறையில் நடந்துகொள்வார்கள் எனற கணிப்பில்லாமல் இவ்வாறானதொரு களியாட்ட நிகழ்வை நடத்தியது அவருடைய முட்டாள்தனம். இதில் யாழ் இளைஞர்கள் மீதோ யாழ் மக்களின் மிதோ எவ்வித தவறும் கிடையாது.

மேற்கு நாடுகளின் தவறணைகளில், பார்களில் சில பத்துப்பேர் கலந்துகொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கே வாயில் காப்பாளர்கள் இருப்பதும் பொலிஸார் வரவழைக்கப்படுவதும் நாளாந்த நிகழ்வு. இந்திரன் இந்நிகழ்வை நடத்துவதற்கு முன், லண்டன் தவறணை உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைனிடம் ஆலோசணை பெறாதது, மிகப்பெரும் வரலாற்றுத் தவறு.

இதே போல் ரோ தமிழீழம் பெற்றுத்தரும் என்று ஆர்ப்பரிக்கும் வட்ஸ்அப் போராளி நிலா பிரபாகரன் தன்னை மதியுரைஞராக வைக்காமல், கிறிஸ்தவரான சிஐஏ ஏஜென்டான அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்ததால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18, 2009இல் தோல்வியடைந்ததாக உறுதியாக நம்புகிறார். முன்னையது இந்திரன் விட்ட வரலாற்றுத் தவறு. பின்னையது வே பிரபாகரன் விட்ட வரலாற்றுத் தவறு. இதுதான் காலக்கொடுமை என்பது.

யாழ் மக்களும் இளைஞர்களும் ‘மானாட மயிலாட’ பார்க்கத்தான் வேண்டும். ஆனால் அதனை நேர்மையுடன் பார்வையாளர்களை ரசிகர்களை மதித்து, வரக்கூடிய விளைவுகளை அறிந்து முற்கூட்டியே திட்டமிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சரிவரச் செய்து நடத்த வேண்டும். லண்டனில் வோல்தம்ஸ்ரோவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமாருடனான ஒரு உரையாடல் ஒன்று 2009இல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்ததின் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை லண்டன் திருக்கோயில்கள் ஒன்றியக் கோயில்களில் ஒன்றின் தர்மகர்த்தாவும் பாஉ சிறிதரனின் நிதியாளருமானவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட போதையூட்டப்பட்ட தமிழ் தேசிய புலி ஆதரவாளர்களைக் கொண்டு கூட்டத்தைக் குழப்ப மூன்று மணிநேரம் போராடினார். ஆனால் கொன்ஸ்ரன்ரைன் மிகச்சாதுரியமாக இரு பட்டாலியன் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரை இறக்கி கூட்டத்தை மிகவெற்றிகரமாக நடத்தினார். இந்திரன் கொன்ஸ்ரன்ரைனோடு ஒரு கொன்ஸ்பிரன்ஸ் ஹோல் போட்டிருந்தால் இன்றைய தலைப்புச் செய்திகளே வேறுமாதிரி அமைந்திருக்கும். உங்களுக்கு என்ன தெரியும் என்பதிலும் உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது மிக முக்கிய பாடம். இதுதான் இந்திரன் மூலம் ஈழத் தமிழர்கள் 2024 பெப்ரவரி 9இல் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்.

தமிழ் தேசியத்தை போர்துக்கொண்டு ஹொட்டலியர்களோடும் கள்ளச்சாமிகளோடும் ஆறுதிருமுருகன் போன்றவர்கள் போடும் கூத்திலும் பார்க்க யாழ் இளைஞர்கள் தம்மன்னாவின் நடனத்தை பார்த்து ரசிக்கச் சென்றதில் எந்தத்தவறும் கிடையாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்தை உங்கள் அந்தப்புரமாக்காமல், பாலியல் சுரண்டலில் ஈடுபடாமல் அங்குள்ள மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னேற்றும் வைகயில் செயற்பட வேண்டும். அதுவொன்றே அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறி தங்களை வளர்த்துக்கொள்ள உதவும்.

மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள் இலங்கை மற்றும் நாடுகளினது உளவு அமைப்புகளின் முகவர்களோடும் இலங்கையில் உள்ள தவறணை ஒப்பந்தங்களை விநியோகிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளான தற்போதைய தேசியத் தலைவர் சிறிதரன் போன்றவர்களுக்கு வாரி இறைத்து அங்குள்ள இளைஞர்களை போதையில் மிதக்க விடாமல் அந்த இளைஞர்களின் கல்வி, பொருளாதார மற்றும் தனிமனித ஆளுமைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

இலங்கையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதைக் கொண்டுவந்தவர் கல்வி அமைச்சராக இருந்த கன்னங்கரா. இந்த இலவசக் கல்வித்திட்டத்தின் பின் இடதுசாரிகளினது உழைப்பும் கணிசமானது. செல்வந்த நாடுகளான மேற்குலகில் கூட பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி என்ற நிலையில்லை. ஆனால் வறிய நாடான இலங்கையில் பல்கலைக்கழகப் படிப்பு முடியும்வரை இலவசக் கல்வியுள்ளது. ஆனால் அண்மைய காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உலகவங்கியின் அழுத்தம் காரணமாக அரசு தனது பொறுப்புக்களைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. காலப்போக்கில் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் திட்டம் நாசுக்காக நடந்தேறி வருகின்றது.

இலங்கையில் தனியார் கல்வி ஸ்தாபனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்துள்ளன. கல்விக்கடன் பெற்று படிக்கச் செல்லும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் வந்து, பொதுமருத்துவமனைகள் வினைத்திறனற்றவையாகிக் கொண்டுள்ளன. அதனால் பணம் உள்ளவரே சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை பணமுள்ள மாணவர்களுக்கே கல்வி என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

“இந்திரனால் ஒருநாள் களியாட்ட நிகழ்வையே திட்டமிட்டு குழப்பமின்றி நடத்த முடியவில்லை. இவர் எப்படி பல்கலைக்கழகம் நடத்துவார்?” என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் லாப நோக்கத்திற்காக மட்டும் நடத்தப்படும் இந்த தனியார் பல்கலைகழகங்கள் இப்போது இருக்கின்ற கல்விக்கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்து, சமூகத்தில் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளியை அதிகரிப்பதோடு சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தும். இது விழிம்புநிலை மக்கள் மீது நடத்தப்படும் அப்பட்டமான சுரண்டல். அம்மக்களை தொடர்ந்தும் ஏழ்மையில் தங்களுக்கு சேவகம் செய்யும் கூலிகளாக தம்மன்னாவைக் கண்டவுடன் ஓடிச் சென்று விசிலடிச்சான் குஞ்சுகளாக வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரல்.

மேலும் பெண்களை போகப்பொருட்களாக முன்னிறுத்துவதும் அவர்களை இந்த ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் வட்ஸ்அப் குறுபிப்பில் போட்டு பந்தாடுவதும் மிகக்கீழ்த்தரமான செயல். அவர்கள் நடிகைகளாக இருந்தாலும் அது அவர்களுடைய உத்தியோகம். அவர்களை விபச்சாரிகளாகச் சித்தரித்து பாலியல் இச்சைகளுடன் எழுதி சிற்றின்பம் காண்கின்ற கீழ்த்தரமான செயல்களை தமிழ் தேசியம் முற்றாகக் கைவிடவேண்டும்.

ஆறுதிருமுருகன் தன்னைப் பெற்றெடுத்த தன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதுவதைக்காட்டிலும் தன்னைப் போன்ற தன்னோடு கூடி உறவாடும் ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் எப்படி நடந்துகொள்வது என்று எழுதினால் யாழ் சமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகனுக்கு ஆறாவது அறிவு கொஞ்சமாவது இருக்கவேண்டும். அத்தோடு சற்று சமூக அக்கறையும் இருக்க வேண்டும்.

ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடக்கூடாது என்பது பழமொழி. ஒரு காலத்தில் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் கீழ் இலங்கை முழவதற்குமே எடுத்துக்காட்டாக விளங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக அதற்கான திறமையின்றி நியமிக்கப்பட்டு பதவி விலகிய ஆறுதிருமுருகன், யாழில் வழிதவறிய ஆண்கள் தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கும், தொலைக்கப் போகும் ஒழுக்கத்தை ஏன் பெண்களிடம்; தேடுகின்றார்? யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் படுத்துக் கிடந்து என்னதான் செய்தார் ஆறுதிருமுருகன்?

புலம்பெயர்ந்த ஹொட்டலியர்கள், கோயில் கடைக்காரர்கள்;, வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மண்ணின் பண்புகளை மதித்து தாயகமக்களின் இயலாமையை பலவீனங்களை தமிழ் தேசியம் என்ற போர்வையில் முதலீடாக்காமல் அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை சுயமரியாதையோடும் கௌரவத்தோடும் வாழவிடுங்கள். காலம் காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதில் தமிழ் தேசியவாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே முன்னிற்கின்றனர். இவ்வாறான அனைத்து பிற்போக்குத் தனங்களையும் களையெடுத்து ஏனைய சமூகங்களோடு, மதப்பிரிவினரோடு, சக இனத்தவரோடு கைகோர்த்து அனைத்து மக்களிற்குமாக குரல்கொடுக்கின்ற முற்போக்குத் தேசியம் கட்டியமைக்கப்பட வேண்டும். அதுவொன்றே இலங்கையர் அனைவருக்குமான விடுதலைக்கு வித்திடும்.