புலிகளிடம் மேலுமொரு சிறிய ரக விமானம்?

வன்னியில் விடுதலைப் புலிகள் வசம் மேலுமொரு சிறியரக விமானம் இருப்பதாகவும் இதனால் கொழும்பு மிகுந்த உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
செக் குடியரசு தயாரிப்பான “சிலின் சற் 143′ இலகு ரக விமானமொன்றே புலிகள் வசமிருப்பதாகவும், அண்மையில் கொழும்பில் தாக்குதல் நடத்திய இரு விமானங்களும் அழிந்து போனதால் வேறு விமானங்கள் இல்லையெனவும் கூறப்படுவதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

பொதுமக்களதும் புலனாய்வுத் தகவல்களதும் அடிப்படையில், கொழும்பில் அழிக்கப்பட்ட இரு விமானங்களைப் போன்று இயங்கக்கூடிய நிலையில் ஒரு விமானம் மட்டுமே இருப்பதாகவும் படைத்தரப்பு கருதுவதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

குடிசை ஒன்றினுள் இந்த விமானம் நிறுத்தப்பட்டிருப்பதை பொதுமக்கள் பலரும் பலதடவைகள் பார்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விமானம் பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து, புலிகள் விமானத் தாக்குதலை நடத்தலாமென்ற அச்சுறுத்தலால் அதி உயர் விழிப்புடனிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அந்த விமானம் நிறுத்தப்பட்டிருக்கும் குடிசைக்குள் விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பவியலாளர்கள் விமானத்தின் திருத்த வேலைகளை மேற்கொண்டதையும் அந்த விமானம் இயங்கு நிலையிலிருந்ததையும் பொதுமக்கள் கண்டதாகவும் எனினும் அந்த விமானம் பறந்ததை அவர்கள் ஒரு போதும் பார்க்கவில்லையெனவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

வன்னியில் தற்போது இடம்பெற்று வரும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் ஏழு விமான ஓடுபாதைகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் விமானங்களின் பல உதிரிப்பாகங்களையும் அவற்றின் மொடல்களையும் வெவ்வேறு பகுதிகளில் வைத்து தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும் முன்னர் படையினர் தெரிவித்திருந்தனர்.

புலிகளின் பெரும்பாலான விமானத் தளங்களைத் தாங்கள் கைப்பற்றி விட்டதாக படையினர் கூறிவந்த நிலையிலேயே புலிகள் இரு விமானங்களை கொழும்புக்கு அனுப்பி தாக்குதலை நடத்தியிருந்தனர். புலிகள் நவீனரக உதிரிப்பாகங்களை தருவித்து புதிய விமானமொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும் படைத்தரப்பு கூறுகின்றது.

Show More
Leave a Reply to sapi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • sapi
    sapi

    புலிகளின் விமானங்கள் என்ன அள்ள அள்ள குறையாதா அட்சய பாத்திரமா?

    Reply
  • thamilan
    thamilan

    நான் இது பற்றி முதலே கூறியுள்ளேன்

    Reply