தமிழர்கள் சமாதானத்தைப் பெற மேயர் ரொபின் வேல்ஸ் பொங்கல் வாழ்த்து!!!

Mayor_and_Cllr_Pongal_14Jan10”இலங்கைத் தமிழர்களுக்கு கடந்த ஆண்டு மிகுந்த நெருக்கடியான ஆண்டு. எதிர்வரும் ஆண்டுகளில் அவர்கள் சமாதானத்தைப் பெறவேண்டும்” என நியூஹாம் மேயர் ரொபின் வேல்ஸ் இன்று தெரிவித்தார். லண்டனில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரே மேயரான ரொபின் வேல்ஸ் இன்று (டிசம்பர் 14) நியூஹாமில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார். இன்றைய நிகழ்வில் நியூஹாம் பிரதான வீதியான ஹைஸ்ரீற் நோத்தில் உள்ள அலங்கார விளக்குகளை ஏற்றி வைத்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலகிலேயே அதிகமாக பல்வேறு இனத்தவர்கள் இணைந்து வாழ்கின்ற  நகரமாக நியூஹாம் உள்ளது எனக் குறிப்பிட்ட மேயர் இங்குள்ள 86 வீதமான மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதாகக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் நியூஹாமிற்கு வழங்கியுள்ள பங்களிப்பையிட்டு தான் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த மேயர் இன்றைய பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு பெருமைப்படுவதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் ஏற்பாட்டாளரான கவுன்சிலர் போல் சத்தியநேசன் உரையாற்றுகையில் தமிழ் மக்கள் பிரித்தானியாவுக்கு கணிசமான அளவில் வர ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகின்றது என்றும் நியூஹாம் தமிழ் மக்களுக்கு இருப்பிடம் வழங்கவில்லை அவர்களுக்கு உன்னதமான வீடாகி உள்ளது என்று தெரிவித்தார். தமிழ் மக்கள் இதுவரை அனுபவித்த துயரங்கள் நீங்கி எதிர்காலத்தில் அவர்கள் சமாதானத்துடன் வாழ்வதற்கு வழியேற்படும் என அவர் தெரிவித்தார்.

Mayor_Pongal_14Jan1075 பேர்வரை கலந்துகொண்ட இந்நிகழ்வின் இறுதியில் பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்பட்டது. ஐரோப்பாவிலேயே பல்லினங்கள் நெருக்கமாகவும் பெரும்பான்மையாகவும் வாழும் நகரமாக நியூஹாம் அமைந்துள்ளது. வீதியால் பயணித்தவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு பொங்கல் சிற்றுண்டிகளைச் சுவைத்து மகிழ்ந்தனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்ற போதும் தனிப்பட்ட கோபதாபங்களுடன் சில விசமத்தனமான பிரச்சாரங்களும் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது. இவற்றையெல்லாம் மீறியும் இந்நிகழ்வு இடம்பெற்று வருவது இதன் சிறப்பம்சம். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று கேட்டு தனக்கு 5 தொலைபேசி அழைப்புகளிற்கு மேல்வந்ததாக கலந்துகொண்ட ஒரு வர்த்தகர் தேசம்நெற் க்குத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்  ”நாங்கள் எல்லாவற்றிற்கும் எதிராகவே செயற்பட்டு பழகிவிட்டோம். இப்போது பொங்கலுக்கும் எதிராக நோட்டிஸ் விடுகிற அளவுக்கு வந்துவிட்டோம்” எனச் சலிப்புடன் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு எதிராக விடப்பட்ட துண்டுப் பிரசுரம்:

நியூஹாம் வாழ் தமிழ் உறவுகளே!
உங்களுக்குத் தெரிந்தவை தான்
முள்ளிவாய்க்காலில் நடந்தேறிய
மரண ஓலங்கள்
உயிர்ப்பலிகள்
கற்பழிப்புகள்
பொருளாதாரத் தகர்ப்புகள்
இன்றும் முட்கம்பித் தடுப்பு முகாமில்
ஏதும் இன்றி நிற்கதியாகத்
தவிக்கும் தமிழ் உறவுகள்…..

தொப்புள் கொடி உறவுகளே!
இவைகளை நாம் எளிதில் மறந்துவிட முடியுமா?
இன்றைய காலகட்டத்தில் இனம்சார்ந்த குதூகல வைபவங்கள் எங்களுக்கு வெறுப்பெற்றவில்லையா?

இந்த நிலையில் தமிழ் தேசியத்திற்கு தொடர்ச்சியாகத் துரோகம் இழைப்பவர்களால் 14.01.2010 இல் பொங்கல் விழா என்ற பெயரால்  நடைபெறவுள்ள கொண்டாட்டம்  எங்களுக்கு அவசியம் தானா?

இனமான உணர்வுடன்  நிதானமாகச் சிந்திக்கும் ஒவ்வொரு தமிழரும் இந்தக் கொண்டாட்டத்தை பகிஸ்கரிப்பார்கள் என்பது நிச்சயம்.

சிந்தியுங்கள் அன்பான
நியூஹாம் தமிழ் உறவுகளே!

இதற்குப் பின்னாலுள்ள நபர்கள் தங்கள் சுய விளம்பரத்திற்காக தமிழ் மக்களின் அவலங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகக் குற்றம்சாட்டிய கவுன்சிலர் போல் சத்தியநேசன் இவ்வாறான சமூகப் பீடைகள் தவிர்க்க முடியாமல் ஒவ்வொரு சமூகத்திலும் காணப்படுவதாகவும் இவர்களை உதறிக்கொண்டு சமூகம் தன் பயணத்தைத் தொடரும் என்றும் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இன்றைய பொங்கல் நிகழ்வில் நியூஹாம் வர்த்தகர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் சமய ஸ்தாபனங்கின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

._._._._._.

ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன

Paul_Sathyanesan_Cllrதமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற நகரமான ஈஸ்ற்ஹாமில் 10வது ஆண்டாக பொங்கல் விளக்குகள், வியாழக்கிழமை 14ம் திகதி மாலை 4 மணிக்கு ஏற்றப்பட உள்ளன. மத வேறுபாடுகளுக்கு அப்பால் உலகத் தமிழ் மக்கள் ஒன்றாகக் கொண்டாடும் விழாவாக தமிழர் விழாவாக தைப்பொங்கல் அமைந்துள்ளது. ஈஸ்றஹாம் பொங்கல் விழாவின் போது ஈஸ்ற்ஹாம் நகரபிதா தெருவிளக்குகளை ஏற்றி வைப்பார்.

கடந்த 10 ஆண்டுகளாக ஈஸ்ற்ஹாம் நகரசபையின் அணுசரனையுடன் கவுன்சிலர் போல் சத்தியநேசன் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றார். வழமை போல் இம்முறையும் இந்து கிறிஸ்தவ இஸ்லாம் மதப் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில கலந்து சிறப்பிப்பார்கள் என கவுன்சிலர் சத்தியநேசன் தெரிவித்தார்.

ஈஸ்ற்ஹாம் மகாலட்சுமி ஆலயம் முன்பாக உள்ள தெரு வெளியில் மக்கள் ஒன்றாகக் கூடி மேளவாத்தியத்துடன் நகரபிதாவால் தெருவிளக்குகள் ஏற்றி வைக்கப்படும். அனைத் தொடர்ந்து நகரபிதாவினதும் மற்றும் சிலரினதும் சிற்றுரைகளும் இடம்பெற்று பொங்கல் சிற்றுண்டிகள் பரிமாறப்படும்.

இவ்வாண்டும் வழமைபோன்று இலங்கையிலும் உலகிலும் சமாதானத்தை வேண்டி இப்பொங்கல் விளக்குகளை ஏற்றி வைப்போம் என ஏற்பாட்டாளர் கவுன்சிலர் போல் சத்தியநேசன் தெரிவித்தார்.

சென்ற ஆண்டில் நாட்டில் நிலவிய யுத்தநிலையைக் காரணம் காட்டிச் சிலர் இந்நிகழ்வை இடைநிறுத்த முற்பட்ட போதும் சமாதானத்துக்காக நடாத்தப்படும் இந்நிகழ்வை கவுன்சிலர் சத்தியநேசன் தொடர்ந்தும் நடாத்தி வருகின்றார்.

இந்நிகழ்வு சிறிய அளவில் இடம்பெற்றாலும் உலகத் தமிழர்களின் உழைக்கு மக்களின் இந்நிகழ்வை ஐரோப்பிய நாடோன்றில் தொடர்ச்சியாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கல் தொடர்பாக கவுன்சிலர் சத்தியநேசன் வெளியிட்ட பொங்கல் செய்தியில் ”உலகத் தமிழர்களின் தினமான பொங்கல் நாளில் சமாதானமும் அமைதியும் மலர்ந்து அனைவரும் இன்புற்றிருக்க அனைவருக்கும் எனது தைப்பொங்கல் வாழ்த்துக்கள்!!!”  எனத் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • பல்லி
    பல்லி

    பெரியாரின் பகுத்தறிவும்;அண்ணாவின் தமிழ் பற்றும் உழைப்பாழியின் கனவுகளும் ஒன்றென கலக்கும் இந்த தை திருநாளில் மனிதத்தை நேசித்து மனிதராய் வாழ இயற்க்கையை வேண்டி அனைத்து தமிழ்மக்களுக்கும் பல்லி குடும்ப திருநாள் வாழ்த்துக்கள்;
    அன்புடன் பல்லி குடும்பம்;

    Reply
  • NANTHA
    NANTHA

    பொங்கல் நாளில் தமில் ஈழம் வருகிறது என்று பல தடவை பிரசாரங்கள் செய்யப்பட்டது.

    இந்த பொங்கலில் அந்த கதையையே காணவில்லை.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நந்தா,
    அதான் நாங்க இப்ப “அ” விலிருந்து திரும்ப ஆரம்பிச்சீட்டோம்ல. 33 வருடங் கழிச்சு வட்டக்கோட்டைத் தீர்மானத்தை கையிலெடுத்தது ஏனுங்கோ. இன்னும் 35 வருடங்களுக்கு இதை வைச்சே அசத்திடுவோம்ல.

    Reply
  • babu
    babu

    இன்றும் முட்கம்பித் தடுப்பு முகாமில்
    ஏதும் இன்றி நிற்கதியாகத்
    தவிக்கும் தமிழ் உறவுகள்…..//

    அன்பான நோட்டீஸ்காரர்களே புலிகளுக்கு என்று வெளிநாடுகளில் சேர்த்த பணத்தை தமது பெட்டிக்குள் பதுக்கும் வெளிநாட்டுப் புலிகளிட்டை பணத்தை வாங்கி இந்த தொப்புள்கொடி உறவுகளிட்டைக் குடுக்க மாட்டீங்களோ.

    Reply
  • nadesh
    nadesh

    ஈஸ்ட்காம் மகாலெட்சுமி அம்மன் கோவில் பொங்கல் பகிஸ்கரிப்புக்காக பூட்டப்பட்டதா?
    அல்லது அன்றைய தினம் விசேட பொங்கல் பூசைகள் அபிசேசங்கள் பகிஸ்கரிக்கப்பட்டதா?
    இந்த நோட்டீசு யாரும் அடித்ததாக சொல்லப்பட்டிருந்ததா? இல்லையா?

    Reply