உரிய காலத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கு நேற்று நண்பகல் சுப நேரத்தில் அறிவிக்கப்பட்டதாக அமைச்சரவைப் பேச்சாளரும் தகவல் ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சகல கட்சித் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று காலை சந்தித்தார். ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்தத் தீர்மானித்திருப்பதாக கட்சித் தலைவர்களுக்கு ஜனாதிபதி இங்கு அறிவித்தார்.
ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தை கட்சித் தலைவர்கள் அனைவரும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டதாகவும் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டார். இந்தச் சந்திப்பில் சகல மாகாண சபை முதலமைச்சர்களும் கலந்து கொண்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ 2005 நம்பவர் 18ம் திகதி இலங்கையின் 5வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவரின் பதவிக் காலம் 2011 நவம்பர் 18 ஆம் திகதி நிறைவ டைய உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலை முன்கூட்டி நடத்த ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி தனது முடிவை முறைப்படி கடிதம் மூலமாக நேற்று (23) தேர்தல் ஆணை யாளருக்கு அறிவித்தார். இதன்படி ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்படும் திகதியை தேர்தல் ஆணையாளர் வெகுவிரைவில் அறிவிப்பார் என தேர்தல் செயலக வட்டாரங்கள் கூறின.
நான்காண்டுகள் முடிவடைந்த பின்னர் எந்த நேரத்திலும், மேலுமொரு தவணைக்குப் பதவி வகிப்பதற்காக தேர்தல் மூலம் ஆணையொன்றுக்கென மக்களை வேண்டி நிற்பதற்கான தமது முன்னத்தை பிரகடனம் மூலம் வெளிப்படுத்தலாம் என அரசியலமைப்பின் 31 (3) (அ) (1) இந்த சரத்து ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. இதன்படி முன்கூட்டி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
ahmed
ஜனாதிபதித் தேர்தல் நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு உத்தியோக பூர்வமாக அறிவுறுத்தி உள்ளதாகத் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்க நேற்று நள்ளிரவு வெளியிட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
தேர்தல் விதிகளின் பிரகாரம் நவம்பர் 30 ஆம் திகதி அளவில் ஆணையாளரின் ஜனாதிபதித் தேர்தல் குறித்த பிரகடனம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசெம்பர் மத்தியில் தேர்தலில் போட்டியிடுவோர் நியமனப்பத்திரங்களைத் தாக்கல் செய்வதற்கான காலத்தை நிர்ணயித்து ஆணையாளர் அறிவிப்பார்.
நியமனப்பத்திரங்கள் தாக்கல் செய்வதற்குரிய கடைசி நாளில் இருந்து நான்கு வாரங்களில் பின்னரான ஒரு திகதியை நிர்ணயித்து அதனை ஜனாதிபதித் தேர்தலுக்குரிய நாளாக ஆணையாளர் பிரகடனப்படுத்துவார்.
ahmed
2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றத்திற்கான தேர்தலில் வடக்கு கிழக்கு மாவட்டங்களில் இருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவித்தலை, தேர்தல்கள் ஆணையாளர் தயாநந்த திஸாநாயக்க, நேற்று இரவு வெளியிட்ட விசேட வர்த்தமானியில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் இருந்து 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும், மட்டக்களப்பில் இருந்து 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும், திருகோணமலையில் இருந்து 4 உறுப்பினர்களும், வன்னி மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்களும், திகாமடுல்லையில் இருந்து 7உறுப்பினர்களுமாக 31 பேர் தெரிவு செய்யப்படவுள்ளனர்.