போர் முடிவுற்றது : வேட்டுக்கள் தீர்த்துப் படையினர் வன்னியில் நேற்று ஆரவாரம்

last-mulli.jpgகடந்த பல நாட்களாக, வாரங்களாக, மாதங்களாக, வருடங்களாக மூண்டுக் கொண்டிருந்த – உக்கிரமடைந்து கொண்டிருந்த தமிழீழ விடுதலை புலிகள் – இலங்கைப் படையினருக்கிடையிலான யுத்த சூழ்நிலை ஒருவாறு முடிவுக்கு வந்துவிட்டது.  தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த போர் முடிவுற்றதை நேற்று புதன்கிழமை பாதுகாப்பு படையினர் வெற்றி வேட்டுக்கள் தீர்த்து அறிவித்தனர்.

வன்னிக்கான கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரிய தலைமையில் இந்நிகழ்வு நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றது. கட்டளைத் தளபதி தேசியக்கொடியை ஏற்றிவைக்க, வன்னிக்கான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட படையணிகளின் கொடிகளும் அந்தந்தப் படையணிகளின் தளபதிகளால் ஏற்றி வைக்கப்பட்டன. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் முல்லைத்தீவு கிழக்கு கடற்கரையை நோக்கி ஆட்டிலறி எறிகணை மற்றும் யுத்த தாங்கிகளை இயக்கித் தமது இறுதி மரியாதை வேட்டுக்களையும் தீர்த்ததுடன் அணிவகுப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது வன்னிப் போர் முன்னரங்குகளில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள், போர் தளபாடங்கள் போன்றவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அத்துடன் தாக்குதலுக்கு இலக்காகி சேதமடைந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கப்பல் பாரா 3 உம் அருகே நங்கூரமிடப்பட்டிருந்தது.

முல்லைத்தீவை நோக்கிய இறுதிக்கட்ட போர்க்களமான முள்ளிவாய்க்கால் பகுதியில் விடுதலை புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட வீரர்கள் தளபதிகளுடன் இணைந்து குழுவாக புகைப்படம் எடுத்தனர். தமது வெற்றியை வன்னி முழுவது கேட்கும் வகையில் கோஷமெழுப்பி, வேட்டுக்கள் தீர்த்து மகிழ்ந்தனர்.

மாவிலாறு அணைக்கட்டுடன் ஆரம்பமான ‘கிழக்கின் உதயம்’ இன்று வடக்கினை மீட்பதற்கான ‘வடக்கின் வசந்தத்’துடன் நிறைவடைவது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட மோதலினையடுத்து அப்பகுதி புகைமூட்டமாகக் காணப்பட்டது. இம்மோதல்களின் போது விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் உட்பட 25 சிரேஷ்ட உறுப்பினர்களின் சடலங்களைப் பாதுகாப்புக் படையினர் மீட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதையும் பாதுகாப்புப் படையினர் விடுதலை புலிகளிடம் இருந்து விடுவித்ததையடுத்து நேற்றைய தினத்தை ஜனாதிபதி தேசிய விடுமுறை தினமாக அறிவித்தார்.

இதனை முன்னிட்டு கொழும்பு மாநகரில் மக்கள் ஆரவாரக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களிலும், வர்த்தக நிலையங்கள் மீதும் வீடுகளின் முன்னாலும், வீதிகளிலும் தேசியக்கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

அதேவேளை, விடுதலை புலிகளிடம் இருந்து நாட்டினை மீட்ட முப்படையினரைக் கௌரவக்கும் தேசிய விழா நாளை வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மைதானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Show More
Leave a Reply to chandran.raja Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

2 Comments

  • palli.
    palli.

    வேட்டுகள் தமிழர் மீதா?
    அல்லது வானம் பார்த்தா??

    Reply
  • chandran.raja
    chandran.raja

    இன்றைய நிலையில் தமிழ்மக்களிடையே தோன்றிய பயங்கரவாதம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டது. இது தமிழ்மக்களால் இயலாமல் போனது தமிழ்மக்களின் அரசியல் வறுமையையே காட்டி நிற்கிறது. தமிழ்மக்களின் அரசியல் பரிமாணம் புதிய கட்டத்தை எட்டிப்பிடிக்கும். ஈழத்தமிமக்கள்
    கடந்த கால அனுபவத்தை கவனத்தில் எடுத்து ஆயுதப்போராட்டத்தை நிராகரித்து ஜனநாயக வழிக்குட்பட்ட போராட்டத்தையே முன்னெடுப்பார்கள் என்றே நம்பலாம். இதற்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு கூட்டம் புலம்பெயர் இடத்தில்லிருந்து கொண்டே இருக்கும். அதற்கு “லிபு” எனப்பெயரிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. தமிழ்மக்களை பயங்கரவாதத்தில்லிருந்து விடுவித்த மகிந்தராஜயபக்சா அரசை சரண் அடைந்தவர்களை கொலைசெய்ததிற்கான போர்குற்றம் அவர்கள் கழுத்தை நெரிக்கப்போகிறது என்பது மற்றொரு உண்மை.

    Reply