அருட்சல்வன் வி
அருட்சல்வன் வி
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தெளிவான அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சு அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தைக் கோரியுள்ளது.
இது தொடர்பில் நேற்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தகவல் தருகையில்; அவுஸ்திரேலிய எல்லைப் படை யினரால் கைது செய்யப்பட்டுள்ள மேற்படி 45 பேரும் இலங்கையர் கள் தானா என்பதைச் சரியாகத் தெரிந்துகொள்ளும் வகையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் சரியான தகவல்களை இலங்கைத் தூதரகம் பெற்றுத் தரவேண்டுமென கோரியுள்ளதாகவும் தெரிவித்தது.
அவுஸ்திரேலியாவுக்குள் செல்ல முனைந்த 45 இலங்கையர்கள் அந் நாட்டுப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கடந்த இரு தினங்களாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டு வருகின்றன. இது தொடர்பில் வினவிய போதே வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரியொருவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல முனைந்த மேலும் 45 பேரை அவுஸ்திரேலிய படையினர் வழிமறித்து கிறிஸ்மஸ் தீவுகளுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த 45 பேரும் நான்கு நாட்களாக உணவு மற்றும் தண்ணீரின்றி இருந்துள்ளரென அவுஸ்திரேலியாவின் அகதிகள் விவகாரங்களுக்கான அமைப்பு தெரிவிக்கின்றது.
வெளிவிவகார அமைச்சு இதுபற்றி மேலும் தெரிவிக்கையில்; அவுஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்கள் 45 பேரும் இலங்கையர்கள் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்பே வெளிவிவகார அமைச்சு அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடரும் எனவும் அதற்கான பணிப்புரைகளை அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கைத் தூதுவருக்கு வழங்கியுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்தது.
இடம்பெயர்ந்துள்ள சுமார் 70 ஆயிரம் மக்களே மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ளனர் என்று மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியர்த்தும் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியுள்ள 70 ஆயிரம் மக்களும் வெகுவிரைவில் தங்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார். இந்த மக்களை மீளக்குடியமர்த்தும் பொருட்டு சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் வெகுவிரைவாக மேற்கொண்டு வருவதுடன் கண்ணிவெடி கள் அகற்றும் பணிகளும் துரிதப் படுத்தப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, வட மாகாணத்தில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். சுமார் 70 ஆயிரம் இடம்பெயர்ந்தவர்கள் மாத்திரமே தற்போது எஞ்சியுள்ளதாக தெரிவித்த அவர் செட்டிக்குளம் நலன்புரி நிலையத்தை தவிர சகல நலன்புரி முகாம்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் மூவாயிரம் பேர் அடுத்தவாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். இந்த ளளளமக்களை மீளக்குடியமர்த்த தேவையான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.
கிளிநொச்சி, துணுக்காய், தர்மபுரம் பகுதிகளில் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரியில் கடந்த 2ம் திகதி 300 குடும்பங்களைச் சேர்ந்த 1232 பேரும், 3ம் திகதி மடு, விலாத்தி குளத்தைச் சேர்ந்த 49 குடும்பங்களும், 5ம் திகதி துணுக்காயில் 613 குடும்பங்களைச் சேர்ந்த 1500 பேரும் மாந்தை கிழக்கில் 7ம் திகதி 260 குடும்பத்தைச் சேர்ந்த 690 பேரும், மீளக்குடியமர்த்த ப்பட்டுள்ளனர் என்றார்.
இடம் பெயர்ந்தோர் மீள் குடியேற்றப்படுவதற்கு முன்னர் யுத்தத்தினால் சேதமடைந்த சகல அரச கட்டடங்களையும் புனரமைத்து மீள இயங்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தகவல் தெரிவித்த அமைச்சின் செயலாளர் டி. திசாநாயக்க, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களி லுள்ள அரச கட்டடங்களைப் புனரமைக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம் பெறுவதுடன், பெரும்பாலான அரச அலுவலகங்கள் தற்போது இயங்குவதாகவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மாவட்டங்களில் அரச நிறுவனங்கள் புனரமைக்கப்பட்டு தற்போது இயங்கி வருவதுடன் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் சேதமடைந்த அனைத்து அலுவலகங்களையும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்.
யுத்தத்தினால் சேதமடைந்த வடக்கின் 5 மாவட்டங்களிலுமுள்ள அரச நிறுவனங்களை இயங்க வைப்பதற்கான செயற்றிட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. 180 நாள் அவசர புனரமைப்பு, இரண்டு வருட செயற்றிட்டம் என இரண்டு கட்டங்களாக இவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
முதற்கட்டமான 180 நாள் வேலைத் திட்டம் நிறைவுற்றுள்ளதுடன், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாவட்டங்களில் கணிசமான அரச அலுவலகங்கள் தற்காலிகமாகப் புனரமைக்கப்பட்டு இயங்கி வருகின்றன.
இதன்படி மன்னாரில் 5 பிரதேச சபைப் பிரிவுகளில், முல்லைத்தீவில் 3 பிரதேச சபைப் பிரிவுகளில், கிளிநொச்சியில் 4 பிரதேச சபைப் பிரிவுகளில் மற்றும் யாழ்ப்பாணத்தில் ஒரு பிரதேச சபைப் பிரிவில் அரச அலுவலகங்கள் தற்போது இயங்கி வருகின்றன.
இந்த 180 நாள் அவசர புனரமைப்புச் செயற்திட்டத்திற்கென 175 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், 158 மில்லியன் ரூபா செலவிலான திட்டங்கள் முடிவ டைந்துள்ளன. ஏனையவை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் புனரமைப்புச் செய்து இயங்க வைக்கப்படுமென பொது நிர்வாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விமலேந்திர ராஜா நேற்று தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த நான்காயிரம் மாணவர்கள் அவர்களது கல்வி நடவடிக்கைகளை தொடர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய இரண்டாயிரம் மாணவர்கள் வவுனியாவிலுள்ள 59 பாடசாலைகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார். இதேவேளை எஞ்சியுள்ள 2000 சிறுவர்கள் நாளை புதன்கிழமை பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியாவிலுள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கே நாளை புதன்கிழமை இரண்டாயிரம் சிறுவர்கள் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று சுட்டிக்காட்டிய ஆளுநர், காலை, மாலை என்று இரண்டு கட்டமாக வகுப்புகள் நடத்தப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கு தேவைப்படும் இரண்டாயிரம் மேசை, கதிரைகளை கல்வி அமைச்சு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக்கு தெளிவுபடுத்துவதற்காக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடங்கலான குழு நேற்று (08) ஜெனீவா பயணமானதாக மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ சேவை அமைச்சு தெரிவித்தது. சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க இன்று ஐ. நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்தித்து உண்மை நிலைமையை தெளிவுபடுத்த உள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைய வந்த புலிகள் இயக்கத் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோடாபய ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக ஆங்கில வாராந்தப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இந்தக் குற்றச்சாட்டு காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கைக்குப் பல்வேறு அழுத்தங்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
இந்த நிலையில் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் ஐ. நா. மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கும் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகர் நெதோனியோ குட்டரயையும் சந்தித்து உரையாட உள்ளார். தனது விஜயத்தின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க, அடுத்த மாத முதல் வாரத்தில் நடைபெற உள்ள ஐ. நா. மனித உரிமை விசேட செயலமர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்துரையாட உள்ளார். ஐ. நா. மனித உரிமை பேரவை விசேட செயலமர்வில் பொன்சேகாவின் குற்றச்சாட்டு தொடர்பில் விவாதிக்கப் படலாம் என அறியவருகிறது. இந்த அமர்வில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கலந்துகொண்டு இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோக பூர்வ அறிக்கையொன்றை வெளியிட உள்ளார்.
ஜெனீவாவில் இரு நாட்கள் தங்கியிருக்கும் அமைச்சர் அகதிகளுக்கான ஐ. நா. உயர் ஸ்தானிகரை சந்தித்து இடம்பெயர்ந்த மக்கள் வெற்றிகரமாக மீள்குடியேற்றப்படுவது குறித்தும் தெளிவுபடுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது-
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது சரத் பொன்சேகா தெரிவித்தது போன்ற எதுவித சம்பவமும் இடம்பெறவில்லை என இலங்கை அரசாங்கம் ஏற்கனவே மறுத்திருந்தது தெரிந்ததே.
இலங்கையின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொன்சேகா இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி பள்ளேகலவில் தற்போது நடைபெற்றுவரும் தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை பார்வையிடும் இறுதி திகதி எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நேற்று (7) மாலை அறிவித்துள்ளார்.
கடந்த 4ம் திகதி முதல் 10ம் திகதி வரையும் மேற்படி கண்காட்சி இடம்பெறுவதாக அறிவித்திருந்த போதி லும் பொதுமக்களின் வேண்டு கோளுக்கி ணங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலப்பிட்டியவினது ஆலோசனையின் பேரில் இந்த திகதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வடக்கிலுள்ள சகல அரசாங்க நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்க விடுவதற்காக நிதி ஒதுக்கியுள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் நேற்று தெரிவித்தது.
இதன்படி வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகள் பொருத்தப்பட்டு வருவதாக அமைச்சு செயலாளர் திருமதி எம். எஸ். விக்ரமசிங்க தெரிவித்தார்.
மும்மொழிகளிலும் பெயர்ப்பலகைகளை பொருத்த 75 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சகல அரச நிறுவனங்களிலும் மும் மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை பொருத்துவதில் வட மாகாணத்திலுள்ள மாவட்ட செயலாளர்கள் மிகவும் கரிசனை யாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை வட மாகாணத்தில் உள்ள அரச ஊழியர்களுக்கு இரண்டாம் மொழியான சிங்களம் மொழியை கற்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக செயலாளர் தெரிவித்தார். நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ள அரச நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகளை தொங்கவிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) ரஷ்யா போய்ச் சேர்ந்தார். ஜனாதிபதியாக இரண்டாவது தடவையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர் முதலாவது உத்தியோகபூர்வ விஜயமாக ரஷ்யா செல்லும் ஜனாதிபதி இரு நாடுகளுக்குமிடையிலான நட்புறவை வலுப்படுத்தும் வகையில் நாளை (08) ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இதேநேரம், 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கான இருதரப்புக் கடன் உடன்படிக்கையொன்றிலும் ஜனாதிபதி கைச்சாத்திடுகின்றார். இரு நாடுகளுக்கு மிடையிலான இரு தரப்பு உடன்படிக்கைகள் நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காகக் கைச்சாத்திடப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
ஜனாதிபதியின் ரஷ்ய விஜயம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஜனாதிபதிக்கு ரஷ்ய மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தினால் நேற்று மாலை கெளரவ டொக்டர் பட்டம் வழங்குவதற்கு ஏற்பாடாகியிருந்தது. உலக சமாதானத்தைப் பேணி வருவதற்காகவும், பயங்கரவாதத்திற்கெதிரான வெற்றிகரமான செயற்பாட்டுக்காகவும் ஜனாதிபதிக்குக் கெளரவ டொக்டர் பட்டம் வழங்கப்படுகிறது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வீ. லெவ்றோவ் விடுத்திருந்த அழைப்பினை ஏற்றே ஜனாதிபதி ராஜபக்ஷ ரஷ்யா சென்றிருக்கிறார். மக்கள் நட்புறவு பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பங்குபற்றுமாறு ஜனாதிபதி திமித்றி மெத்வதேவின் சார்பிலேயே ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
1995 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு டொக்டர் பட்டங்களை வழங்கி வரும் இந்தப் பல்கலைக்கழகம் கல்வி, விஞ்ஞான துறைகளில் சிறந்த இலக்குகளை எய்தியோருக்கும் உலக சமாதானத்தைப் பேணி வரும் உலகத் தலைவர்களுக்கும் இதுவரை பட்டங்களை வழங்கியுள்ளது. இதுவரை உலகளாவிய ரீதியில் ஐந்து ஜனாதிபதிகளும் இரண்டு பிரதமர்களும் இந்தப் பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு சிறப்பு டொக்டர் பட்டம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்குபற்றவென சுமார் 100 இற்கும் அதிகமான நாடுகளிலிருந்து 6000 இற்கும் அதிகமானோர் அழைக்கப்பட்டுள்ளார்கள்.
இன்று (07) பிற்பகல் மூன்று மணிக்கு பல்கலைக்கழகத்தின் தலைவரைச் சந்திக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, மாலை 3.30 இற்கு மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெறும் சுதந்திரதினக் கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்வார்.
நாளை (08) பிற்பகல் 2 மணிக்கு ரஷ்ய ஜனாதிபதி திமித்றி மெத்வதேவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பார். அதேவேளை 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்கான உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த், சர்வதேச வர்த்தக, ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், கைத்தொழில் அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஆகியோரும் ஜனாதிபதியுடன் ரஷ்யா சென்றுள்ளனர்.