அருட்சல்வன் வி

அருட்சல்வன் வி

இலங்கை அதிகாரிகள் இன்று இந்தியாவுக்கு அவசர பயணம்

drage.jpgஅரசாங்க ஆஸ்பத்திரிகளில் தற்போது தட்டுப்பாடு நிலவும் 95 வகையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களை உடனடியாகக் கொள்வனவு செய்யவென அரசாங்கம் விசேட குழுவொன்றை இன்று (17 ம் திகதி) இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றது.

சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஏற்பாட்டில் இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவில் மருந்துப் பொருள் விநியோகப் பிரிவு பணிப்பாளர், அரசாங்க மருந்துப் பொருள் கூட்டுத்தாபன பிரதி முகாமையாளர், தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையின் மருந்தாளர், சுகாதார அமைச்சின் பிரதம மருந்தாளர், நிதியமைச்சு பிரதிநிதி ஆகியோர் அடங்கியுள்ளனர்.

இன்று இந்தியாவுக்கு பயணமாகும் இக் குழுவினர் இலங்கைக்கு மருந்துப் பொருட்களை விநியோகிக்கும் இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகளை மும்பாய் நகரில் சந்திக்கவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மேற்படி 95 அத்தியாவசிய மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை இக் குழுவினர் இந்திய நிறுவனங்களிடமிருந்து இன்று பெற்றுக் கொள்ளவிருக்கின்றனர்.  இந் நிறுவனங்கள் தங்களிடமுள்ள மருந்துப் பொருட்களின் அளவு, அவற்றின் விலை, இலங்கை தேசிய மருந்துப் பொருள் அதிகார சபையில் மருந்து பொருளை விநியோகிப்பதற்குப் பதிவு செய்துள்ள விபரம் என்பவற்றை இக் குழுவினருக்கு சமர்ப்பிக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கேள்விபத்திரங்களைப் பெற்றுக் கொண்டதும் அவற்றை பரிசீலனைக்கு உட்படுத்தி மருந்துப் பொருள் விநியோகிக்கவென தகுதியான நிறுவனம் தெரிவு செய்யப்படும்.

அதனைத் தொடர்ந்து விமானம் மூலமோ, கப்பல் மூலமோ குறித்த மருந்துப் பொருட்களை ஒரு வார காலத்திற்குள் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு அந்தவிநியோக நிறுவனம் கேட்டுக் கொள்ளப்படும் என்று அமைச்சு அதிகாரியொருவர் கூறினார். தரமான மருந்துப் பொருட்களைக் குறைந்த விலையில் கொள்வனவு செய்வதில் அதிக கவனம் செலுத்துமாறு அமைச்சர் சிறிசேன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் 2,60,000 வீடுகள் சேதம்

house.jpgஇலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற நான்காம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தின் போது 2 இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் சேதமடைந்திருப்பதாக அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

2 இலட்சத்து 60 ஆயிரம் வீடுகளை மீள நிர்மாணிக்க வேண்டிய தேவையிருப்பதாக அரசாங்க மற்றும் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மதிப்பீடு செய்துள்ளனர் என்றுசர்வதேச செஞ்சிலுவை, செம்பிறைச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

தற்போது உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் வசிக்கும் மக்கள் தமது இருப்பிடங்களுக்கு செல்வதற்கு விடுவிக்கப்படுவார்களென எதிர்பார்க்கப்படுவதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 இலட்சத்து 70 ஆயிரம் இடம்பெயர்ந்த மக்கள் நலன்புரிக் கிராமங்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். வவுனியா, மன்னார், யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள முகாம்களில் 80,246 பேர் தொடர்ந்து இருக்கின்றனர். புனர்வாழ்வு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளோருக்கு பதிவுத்திருமணம்

புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள முறையான திருமணப் பதிவை மேற்கொள் ளாத தம்பதியினருக்கு சட்டபூர்வமான முறையில் திருமணத்தை நடத்தி வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றன.

வடக்கில் யுத்தம் இடம்பெற்று வந்த காலப்பகுதிகளில் கோயில் மற்றும் தேவாலயங்களில் திருணம் செய்துகொண்ட பல தம்பதியினர் தற்போது எமது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புனர் வாழ்வு நிலையங்களில் பயிற்சி பெற்று வருகின்றனரென ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

இத்தம்பதியினர் சேர்ந்து வாழ விரும்பும் பட்சத்தில், அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்களை அழைத்து முறையே பேச்சு நடத்தி, அனைவருக்கும் ஒரே தினத்தில் திருமணம் நடாத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா கலாசார மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் திகதி இத்திருமண வைபவத்தை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மின்னல் தாக்குதலால் இறப்போர் தொகை தொடர்ந்தும் அதிகரிப்பு

lightning.jpgஇடி, மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழப்பவர்களதும் படுகாயமடைவோரதும் தொகை தினமும் அதிகரித்து வருகிறது.

தாக்குதலுக்கு இலக்காவோரில் பலர் படுகாயமடைவதாகவும் பலர் உயிரிழப்பதாகவும் வளிமண்டலவியல் திணைக்கள உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வயல்வெளிகள், கடற்கரைகள், மைதானங்களில் இடி, மின்னல் ஏற்படும்போது நடமாட வேண்டாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

கடந்த இரு மாதங்களில் மட்டும்மின்னல் தாக்கி 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இவர்களில் அதிகமானவர்கள் வயல்களிலும் வெளிகளிலும் மின்னல் நேரம் நின்றவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இடி மின்னல் நேரத்தில் மின் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாமெனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். தற்போது நிலவும் காலநிலை இம்மாத இறுதிவரையும் நீடிக்கும் எனவும் அதனால் இடிமின்னல் குறித்து பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளார்.

ஜீ-15 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த நாளை ஏற்பு – ஈரானில் உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

mahinda-raja_1.jpgஈரான் தலைநகர் தெஹ்ரானில் நாளை (17) ஆரம்பமாகும் ஜீ – 15 நாடுகளின் உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமைப் பொறுப்பை ஏற்கின்றார். ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்கின்றார்.

ஜீ – 15 நாடுகளின் 14 ஆவது உச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இந்த அமைப்பின் அங்கத்துவ நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு தெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

ஜீ – 15 அமைப்பில் அங்கம் வகிக்கும் 18 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்துகொண்டார்கள். ஜீ – 15 அரச தலைவர்களின் 14 ஆவது உச்சி மாநாடு நாளை (17) ஆரம்பமாகிறது. நேற்றைய மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

1989 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பெல்கிரேட்டில் நடைபெற்ற அணிசேரா நாடுகளின் 9ஆவது உச்சி மாநாட்டில் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைய ஜீ – 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் ஒத்துழைப்பின் ஊடாக பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது இதன் நோக்கமாகும்.

பதினைந்து நாடுகளுடன் முதலில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் தற்போது 18 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஈரான், அல்ஜீரியா, ஆர்ஜன்ரீனா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, ஜெமெய்கா, மெக்ஸிகோ, கென்யா, நைஜீரியா, பேரு, செனகல்,  இலங்கை, வெனிசுலா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

இந்த நாடுகள் உலக சனத்தொகையில் 1/3 வீதத்தினரைப் பிரதிநிதித்துவப் படுத்துவதுடன் மசகு எண்ணெய் உற்பத்தியில் 25% இந்த நாடுகளால் மேற்கொள்ளப் படுகின்றன. நாளை ஆரம்பமாகும் 14 ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான இலங்கைக் குழுவினர் தெஹ்ரான் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை கொழும்பில் நேற்று காலமானார்

பிரபல மிருதங்க வித்துவான் கே.சண்முகம்பிள்ளை தனது 92 ஆவது வயதில் நேற்று சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.இலங்கை வானொலியின் ஆரம்பகால கலைஞர்களில் இவரும் ஒருவர். மிருதங்க வித்துவானாக விசேட தரத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணி புரிந்துள்ளார். பல பிரபல இலங்கை, இந்திய கலைஞர்களுக்கு மிருதங்கம் வாசித்து சிறப்பித்தவர்.

மிருதங்கக்கலையை குருகுல வாசம் முறையில் இந்தியாவின் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் கற்றுக்கொண்டவர்.கலாசார அமைச்சு கலாபூஷண விருதையும்,டவர் ஹோல் நிதியம் கலா மாண்ய விருதையும் இவருக்கு வழங்கி கௌரவித்தன.

இவர் கலாசூரி வாசுகி ஜெகதீஸ்வரன் மற்றும் பிரபல ஒலி, ஒளிபரப்பாளர் விஸ்வநாதன் ஆகியோரின் தந்தையுமாவார்.அன்னாரின் பூதவுடல் இல. 89/2, பஸல்ஸ் லேன், வெள்ளவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிக்கிரியைகள் நாளை திங்கட்கிழமை மாலை 3 மணிக்கு கனத்தை இந்து மயானத்தில் நடைபெறும்.

யாழ்ப்பாணத்திலிருந்து பொலிஸ்சேவைக்கு தெரிவானோர் வடக்கில் கடமையாற்றுவர்

sri-lanka-police.jpgயாழ். மாவட்டத்திலிருந்து பொலிஸ் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 355 தமிழ் இளைஞர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டதும் அவர்களுக்கு களுத்துறை பொலிஸ் பயிற்சிக்கல்லூரியில் ஆறு மாதகால பயிற்சியளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சியைப் பெற்ற பின்னர் அவர்கள் தமிழ் பிரதேச பொலிஸ் நிலையங்களில் பணியாற்றுவார்கள்.இவ்வாறு யாழ். உதவிப்பொலிஸ் அத்தியட்சர் நிஹால் மெண்டிஸ் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய நடமாடும் சேவை நேற்று சனிக்கிழமை வேம்படி மகளிர் உயர்தர பாடசாலையில் நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் 1975 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முப்பது வருடங்களின் பின்னர் தற்போதுதான் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படுகின்றனர். அரசின் திட்டத்தின்படி மூவாயிரம் தமிழ் இளைஞர்கள் பொலிஸ் சேவையில் இணைக்கப்படவுள்ளனர்.

எதிர்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமிழ் பொலிஸ் அத்திட்சர்களே கடமையாற்றுவார்கள்.களுத்துறையில் உள்ள பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பொலிஸ் சேவையில் சேர்ந்துள்ள சிங்கள இளைஞர்களுக்கு வழங்கப்படும் அனைத்து பயிற்சிகளும் தமிழ் இளைஞர்களுக்கும் வழங்கப்படும்.தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உங்களின் பகுதிகளில் சேவையாற்றப்போவதை நினைத்து மகிழ்ச்சியடைகின்றேன்.

இங்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ் இளைஞர்களுக்கு விரைவில் நியமனக்கடிதம் வழங்கப்படும் என்றார்.பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் நல்லுறவையும் ஐக்கியத்தையும் வளர்க்கும் நோக்கமாக இடம்பெற்ற இந்த நடமாடும் சேவையில் போக்குவரத்து விதிமுறைகள்,மது,போதைவஸ்து என்பவற்றை தடுப்பது சம்பந்தமான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.வறிய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்ட வெள்ளம் – 37,000 பேர் கடும் பாதிப்பு

9colombo.jpgநாட்டில் பரவலாக பெய்துவரும் கடும் மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் சுமார் 7848 குடும்பங்களைச் சேர்ந்த 37,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்களில் கரையோரத்தை அண்டியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்த போதும் கம்பஹா, களுத்துறை, கொழும்பு மாவட்டங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. கொழும்பு, களுத்துறை மாவட்டத்தில் சுமார் 4108 குடும்பங்களைச் சேர்ந்த 20,540 பேர் பாதிக்கப்பட்ட போதும் நேற்று இவர்கள் தமது வீடுகளுக்குச் செல்ல ஆரம்பித்தனர். எனினும் கம்பஹா மாவட்டத்தில் வத்தளை பகுதியில் தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியதால் சுமார் 3740 குடும்பங்களைச் சேர்ந்த 16,410 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இவர்களுக்கான உடனடி நிவாரண உதவிகளை அந்தந்த கிராம சேவகர் மட்டத்தில் வழங்குவதற்கு அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. வத்தளை பகுதியில் 14 கிராம சேவகர் பிரிவுகளே பெரிதும் பாதிக்கப்பட் டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

களுத்துறை மாவட்டத்தில் மத்துகம, அழுத்கம, பண்டாரகம பகுதியே பெரிதும் பாதிப்புக்குள்ளாகின. பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மதுரமீமுல்ல பகுதியில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் அங்கிருந்த குடும்பங்கள் அப்புறப் படுத்தப்பட்டுள்ளன.  கொழும்பிலும், களுத்துறை மாவட்டத்திலும் மழை வீழ்ச்சி நேற்று குறை வாக காணப்பட்டதால் இடம்பெ யர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களுக்கு நேற்று செல்ல ஆரம்பித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கிறது.

கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சராக சுபைர் நாளை பதவியேற்பு

கிழக்கு மாகாண சபையின் புதிய சுகாதாரத்துறை அமைச்சராக மொகமட் சரிப் சுபைர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை பதவியேற்கிறார்.

கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டி இடுவதற்காக மாகாண அமைச்சர் பதவியையும், சபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்த அமைச்சர் ஹிஸ்புல்லாவின் வெற்றிடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர் சுபைர் புதிய அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

புதிய சுகாதாரத்துறை அமைச்சரின் பதவி ஏற்பு விழா நாளை திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு திருகோண மலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற வுள்ளது. நிகழ்வில் புதிய அமைச்சர் மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம முன்னிலையில் பதவி ஏற்பார் என ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

சிறுமியை ஏமாற்றி அழைத்து சென்றவர் கைது

பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற 14 வயதுடைய பாடசாலைச் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று தடுத்து வைத்த சம்பவம் தொடர்பாக 28 வயது டைய சந்தேக நபர் ஒருவரை பதுரலிய பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பாடசாலைச் சிறுமி மோல்காவ அஸ்கெலிவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனவும் இவர் வைத்திய பரிசோதனைக்காக நாகொட ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. பதுரலிய பொலிஸார் புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.