அறிக்கைகள்

அறிக்கைகள்

கட்சிகள் அமைப்புகள் நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகள்

டெல்லியில் வைகோ (13.02.2009) உண்ணாவிரதம்-அத்வானி சந்திப்பு

1102-vaiko.jpgஇலங்கையில் போர் நிறுத்தம் கோரியும், இலங்கை ராணுவத்துக்கு இந்தியா செய்து வரும் ராணுவ உதவிகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வைகோ தலைமையில் அக் கட்சியினர் இன்று (13.02.2009) டெல்லியில் உண்ணாவிரதம் இருந்தனர்.

டெல்லி ஜந்தர் மந்திர் பகுதியில் நாடாளுமன்றம் அருகே இன்று காலை 8 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான மதிமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அத்வானி வாழ்த்திப் பேச்சு:

உண்ணாவிரத மேடைக்கு வந்த பாஜக தலைவர் அத்வானி பேசுகையில்,

இலங்கை தமிழர்களின் நலம் காக்கப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இங்கு உண்ணாவிரதம் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருந்து வந்து கலந்து கொண்டிருப்பதை காணும்போது உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

டெல்லியில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தாலும், உண்ணாவிரதத்தில் இத்தனை பேர் கலந்து கொண்டதை நான் பார்த்ததில்லை. ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சனையை முக்கிய பிரச்சினையாக கருதி செயல்படவில்லை. தமிழ்நாட்டில் இந்தப் பிரச்சனை எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

உலகின் பல்வேறு நாடுகளில் சீன, இந்திய மக்கள் வாழ்கிறார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் வெளிநாடுகளில் குடியேறி விட்டனர்.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் தாக்கப்படுவதை ஏற்க முடியாது. அங்கு மருத்துமனைகள் மீதும் குண்டு வீசப்படுகிறது. இது எங்கும் கேள்விப்படாத விஷயம். இது தமிழர்கள் பிரச்சனையோ, தமிழ்நாட்டு பிரச்சனையோ அல்ல இந்தியாவின் பிரச்சனை .

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு காணப்பட வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழர்களுக்கும் பாஜக என்றும் ஆதரவாக இருக்கும் என்றார் அத்வானி.

பின்னர் வைகோ பேசுகையில்,

பாஜக தலைவரும் பிரதமர் வேட்பாளருமான நீங்கள் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஈரோட்டில் மதிமுக நடத்திய மாநாட்டிலும் நீங்கள் கலந்து கொண்டீர்கள்.

1998ல் வாஜ்பாய் ஆட்சி நடந்த போது இலங்கை தமிழர்களுக்கு செய்த உதவிகளை மறக்க முடியாது. இலங்கை தமிழர்கள் மீது பாஜக ஆட்சி அக்கறை காட்டியது. ஆனால் இன்றைய மத்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுகிறது என்றார்.

வைகோ – ராஜ்நாத் சிங் சந்திப்பு

முன்னதாக வைகோவை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள வைகோவின் இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

மதிமுக சார்பில் 2,000 தொண்டர்களுடன் டெல்லியில் (13.02.2009 )உண்ணாவிரதம் இருக்க போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கை அரசின் கொடூர ராணுவத் தாக்குதலுக்கு ஆளாகும் தமிழர்களை நினைத்து ஒட்டு மொத்தத் தமிழ்ச் சமுதாயத்தின் நெஞ்சில் வேதனைத் தீ பற்றி எரிகிறது. ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன், ராணுவத்தாக்குதலில், அப்பாவித் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்படுகிறார்கள் என்றும், சர்வதேச மனிதாபிமான சட்ட விதிகளை, இலங்கை அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இலங்கை அதிபர் ராஜபக்சேயிடம் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.

இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட, இந்திய அரசு தலையிட வேண்டும் என கனடாவின் வெளி விவகார அமைச்சர், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் வற்புறுத்தியுள்ளார். போர் நிறுத்தம் செய்யுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனும், இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலிபேண்டும் கூட்டு அறிக்கை விடுத்த பின்னரும் தாக்குதல்கள் தொடர்கின்றன.

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மீது, சிங்கள ராணுவமும், விமானப்படையும் ஏவுகணைத் தாக்குதலும், குண்டு வீச்சும் நடத்தியதில், மருத்துவமனையில் இருந்த 116 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 260 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.  உலக நாடுகளின் கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகி வரும் இலங்கை அரசு அதிலிருந்து தப்பிக்க விடுதலைப்புலிகள் தான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றார்கள் என்று கோயபெல்ஸ் பாணி பொய்ப் பிரசாரத்தை இரண்டு நாட்களாக செய்து வருகிறது.

இலங்கை அரசின் அராஜகத்தை, வெளி உலகத்துக்குத் தெரிவித்ததற்காக, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அலுவலர்கள், பணியாளர்கள் 300 பேர்களை, முல்லைத் தீவில் இருந்தே வெளியேற்றப்பட்டனர். மொத்தமாகத் தமிழ் இனத்தைக் கொன்று தமிழ் ஈழத்தையே சுடுகாடக மாற்ற ராஜபக்சே திட்டம் போட்டுவிட்டார். போர் நிறுத்தம் தான் ஒரே வழி என்பதை நன்றாக அறிந்திருந்தும், இந்திய அரசு அதை சொல்லத் தயாராக இல்லை.

ஏனெனில், விடுதலைப்புலிகளை அழிப்பது தான் இந்திய அரசின் நோக்கம். நான் தொடர்ந்து நான்கு ஆண்டுகளாகக் குற்றம் சாட்டுகின்றபடி, இலங்கையில் கொல்லப்படுகின்ற ஒவ்வொரு தமிழனின் சாவுக்கும், அவன் சிந்துகின்ற ஒவ்வொரு சொட்டு ரத்தத்துக்கும், இந்திய அரசு, குறிப்பாக தலைமை தாங்குகிற காங்கிரஸ் கட்சி தான் பொறுப்பாளி ஆகும். எனவே, இந்திய அரசின் துரோகத்துக்குக் கண்டனம் தெரிவிக்கவும், வதைபடும் ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க, அகில இந்திய அளவில், ஆதரவு திரட்டவும், உண்மை நிலைமையை இருட்டடிப்புச் செய்யும் டெல்லி ஊடகங்களின் பொய்ப் பிரச்சாரத்தைக் கடந்து, இந்திய மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்கவும், தலைநகர் டெல்லியில் இந்திய நாடாளுமன்றத்துக்கு அருகில் ஜந்தர் மந்தரில் பிப்ரவரி 13-ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று, மதிமுக சார்பில், என்னுடைய தலைமையில், மிகப் பெரிய உண்ணாநிலை அறப்போர், காலை எட்டு மணி முதல் நடைபெறுகிறது.

இந்த அறப்போரில் பங்கு ஏற்பதற்காக, ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து 2000க்கும் மேற்பட்டோர் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றுவிட்டார்கள். பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த உண்ணா நிலை அறப்போருக்கு ஆதரவு தெரிவித்து, ஈழத்தமிழர்களைக் காக்க உரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் வைகோ.

புலிகளின் பிடியிலுள்ள மக்களை விடுவிப்பதே இன்றைய முதற்பணி – ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி அறிக்கை

sangari.jpgsitharthan.jpgsritharan.jpgவன்னியில் சிக்கியிருக்கும் மக்களை தாம் விரும்பிய பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்கு புலிகள் எதுவித நிபந்தனைகளுமின்றி அனுமதிக்க வேண்டுமென ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணி வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேநேரம் அந்த மக்களை பேரவலத்திலிருந்து மீட்பதே இன்றைய முதன்மையான பணியென்றும் மேற்படி கூட்டணி சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் வீ. ஆனந்தசங்கரி, தி. ஸ்ரீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கையெழுத்திட்டு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வன்னியில் பேரவலத்தினுள் சிக்குண்டுள்ள மக்கள் பற்றிய கவலை மனிதநேயமுள்ளவர்களின் மனச்சாட்சியை உலுக்கி நிற்கிறது.

வன்னியில் பரந்து வாழ்ந்த இம்மக்கள், மாதக்கணக்கில் பணயமாக கொண்டு செல்லப்பட்டு இன்று 200 சதுர கி.மீ.க்கு குறைவான நிலப்பரப்பில் ஒடுங்க, ஒதுங்க வைக்கப்பட்டுள்ளார்கள். அன்றாடம் காயமும் மரணமுமென்று அவர்கள் சாவுக்கும் வாழ்வுக்குமிடையே அகப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

அதேவேளை அரசாங்கம் அந்த மக்கள் பாதுகாப்பாக வந்து சேர்வதற்கு அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் பாதுகாப்பு இருக்கின்றது என்பதை உணரும்படியாகவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அதாவது, நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.

இந்த மக்கள் கடந்த 15 வருடங்களாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தார்கள். ஏதோவொரு வகையில் புலிகளுடன் சம்பந்தப்பட்டு வாழ வேண்டிய துரதிர்ஷ்ட நிலையே இந்தக் காலப்பகுதியில் அவர்களுக்கு வாய்த்திருந்தது. இதனால் அவர்கள் மத்தியில் அச்சநிலை காணப்படுகிறது.

அரச கட்டுப்பாட்டுப் பகுதி பற்றிய புலிகளின் பொய்யான பிரசாரங்களும் அந்த மக்களை பீதிக்கும், அச்சத்திற்கும் உள்ளாக்கியுள்ளது. மேலும், அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் கடந்த காலங்களில் நிகழ்ந்த ஒருசில சம்பவங்களும் அவர்களிடம் இந்த தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வரும் மக்கள் ஐ.நா. நிறுவனங்களின் கண்காணிப்புடன் அல்லது ஒத்துழைப்புடன் பராமரிக்கப்படல் வேண்டும்.

ஜனநாயக அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், உறவினர்கள், நண்பர்களுடன் இம்மக்கள் தொடர்புகொள்வதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படல் வேண்டும்.

வயோதிபர்கள் தமது உறவினர்கள் நண்பர்களுடன் சென்று வாழ்வதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் காயமடைந்தவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு உறவினர் யாராவது அருகிலிருந்து உதவுவதற்கு அனுமதிக்கப்படல் வேண்டும்.

மரணப் பொறியில் அகப்பட்டிருக்கும் இந்த இலட்சக்கணக்கான மக்களை மீட்பதில் உரிய அழுத்தங்கள் சர்வதேச சமூகத்தாலும், குறிப்பாக இந்தியாவாலும் பிரயோகிக்கப்படல் வேண்டும். காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்கள், தற்போது முகாம்களில் இருப்பவர்கள், இனிமேல் வரவிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் உரிய கட்டமைப்பு வசதிகள், ஏற்பாடுகள் விரிவாக திருப்திகரமாக செய்யப்படல் வேண்டும்.

இந்தக் காரியங்களை செய்வதன் மூலமே மக்களின் மனக்காயங்களை ஆற்ற முடியும். பேரவலங்களில் இருந்து அவர்களை மீட்க முடியும்.

அவர்களுக்கு வாழ்வின் மீதான நம்பிக்கையை கட்டியெழுப்ப முடியும்.

இலங்கை பிரச்சனை-நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் – விஜயகாந்த் : புறக்கணிக்க மாட்டோம் – தா.பாண்டியன்

vijayakanth.jpgஇலங்கையில் நடைபெறும் தமிழின படுகொலையை மத்திய அரசு தடுக்க தவறினால் தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சியினரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று முடிவு எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். இது குறித்து தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினை எதிர்பாராத வகையில் ஒரு பெரிய நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளது. சிங்கள அரசின் முப்படைகளும், தமிழர் பகுதிகளை தாக்கியதன் விளைவாக இன்று முல்லைத்தீவின் ஒரு சிறிய பகுதியில் சுமார் 2   1/2 லட்சம் தமிழர்கள் போரில் சிக்கியுள்ளனர். எந்த நேரத்திலும் அவர்களுக்கு எதுவும் நேரலாம் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. சிங்கள அரசோ பாதுகாப்பு மண்டல பகுதிகள் என்று ஒரு சில பகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளதாகவும், போர் முனையில் சிக்கியுள்ள தமிழர்கள் அந்த பகுதிகளில் வந்து பாதுகாப்பாக தங்கிக்கொள்ளலாமென்றும் அறிவித்துள்ளது.

சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டல பகுதிக்கு தமிழர்கள் சென்றால், வயதானவர்கள், குழந்தைகள் தவிர, மீண்டும் தீவிரவாதிகள் உருவாக கூடாது என்று சொல்லி சிங்கள போர் படையினர் தமிழ் வாலிபர்களை கொன்று விடுகின்றனர். பெண்களையும் மானபங்கப்படுத்தி அழித்து விடுகின்றனர். சிங்கள அரசின் பாதுகாப்பு மண்டலங்கள் என்பது தமிழர்களின் மரணப்படுகுழிகள் தான் என்பதை சிங்கள அரசு வேண்டுமென்றே மறைத்து வருகிறது. சிங்கள அரசின் இத்தகைய போக்கின் காரணமாக அங்குள்ள தமிழர்கள் சிங்களர்கள் கையில் சிக்கி சாவதை விட அவர்களை எதிர்த்து போராடி செத்து மடிவதே மேல் என்ற நிலைக்கு ஆளாகி விட்டனர். இந்த சூழ்நிலையில் சிங்கள அரசு போரை மேலும் நீடித்தால் பல லட்சக்கணக்கான தமிழர்கள் பேரழிவையே சந்திக்க வேண்டியிருக்கும். இதை அனுமதிப்பது நாகரீக உலகிற்கு எவ்விதத்திலும் சரியல்ல.

போன உயிர்களை மீண்டும் தருவது யாராலும் முடியாது. ஆகவே உயிர்கள் போவதை தடுக்க மனிதாபிமானமுள்ள உலகம் அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இத்தகைய மனிதகுலப் பேரழிவு ஏற்படும் அபாயக்கட்டத்தில், உலகில் பல்வேறு நாடுகளில் ஐ.நா.மன்றம் தலையிட்டுள்ளது. அது போல ஐ.நா.மன்றம் இந்த பிரச்சினையிலும் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்யவும், அதை கண்காணிக்கவும், உணவு, மருந்து போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

தமிழினப் பேரழிவை தடுக்க ஐ.நா.மன்றத்தில் எழுப்ப இந்திய அரசால் தான் முடியும். அண்டை நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது என்று சொல்வது சரியல்ல. மனிதாபிமான அடிப்படையிலும், அண்டை நாட்டில் ஏற்படும் பிரச்சினையால் தங்கள் நாட்டின் அமைதிக்கு பங்கம் எற்படுமென்றாலும் நிச்சயமாக ஒரு அரசு தலையிட கடமைப்பட்டுள்ளது. இந்திய அரசு தமிழினப்படுகொலை தடுக்க தவறுமானால், தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகள் தேசிய அரசில் பங்கு பெறுவதில் அர்த்தமில்லை. ஆகவே வரும் பாராளுமன்ற தேர்தலில் அனைத்து கட்சியினரும் போட்டியிட போவதில்லை என்று முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சாதாரணமாக தங்கள் ஊரில் உள்ள குறைகளை செய்து கொடுக்காததற்கே அந்த ஊர் மக்கள் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால், அரசு ஓடோ டி சென்று அந்த மக்களின் குறைகளை தீர்க்க உறுதி கொடுத்து அவர்களை தேர்தலில் ஈடுபட வைக்கிறது. அப்படியிருக்க இலங்கையில் தமிழினமே படுகொலைக்கு ஆளாகும் சூழ்நிலையில், தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்தால் அப்பொழுதாவது இந்திய அரசு தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காதா என்பதே நம்முடைய எதிர்பார்ப்பு.

தேர்தல் புறக்கணிப்பு முடிவு எடுக்கப்படுமானால், தே.மு.தி.க.வை பொறுத்தவரை முதலாவதாக இடம் பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சிங்களராணுவத்தின் அநீதியை தடுத்து நிறுத்த தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், மக்களும் ஒருமித்த கருத்தோடு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்க ஒன்றுப்பட வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

புறக்கணிக்க மாட்டோம்:

இதுபற்றி கருத்து கூறிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன்,

இலங்கைப் பிரச்சனைக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என்றும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனையை முன் வைக்க மாட்டோம் என்றும் கூறினார்.
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் விரைவில் சேர உள்ளன. தேர்தலை சந்திப்பது குறித்து கூட்டணி கட்சிகள் அனைத்தும் விரைவில் கூடி ஆலோசனை நடத்துவோம். அதிமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார்.

எல்ரிரிஈ ஆயுதங்களைக் கைவிட்டு அரசின் பொதுமன்னிப்பை ஏற்க வேண்டும் – ரோக்கியோ இணைத் தலைமைகளின் அறிக்கை

03022009.jpgரோக்கியோ இணைத் தலைமைகள் (நோர்வே ஜப்பான் யுஎஸ் ஈயு) வடக்கு இலங்கையில் நடைபெறும் யுத்தத்தில் சிக்கியுள்ள உள்ளே இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்பாக மிகுந்த கரிசனை கொண்டுள்ளன. இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு உள்ள துப்பாக்கிப் பிரயோகம் தவிர்க்கப்பட்ட பகுதிகளுள் அல்லது மருத்துவமனை (மற்றும் மருத்துவ கட்டமைப்புகள்) உள்ள பகுதிகளுள் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தாக்குதலை நடத்த வேண்டம் என்று இணைத்தலைமைகள் கேட்கின்றது. அங்கு 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர் இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள் அங்கு தஞ்சம் பெறுகின்றனர். உணவு மற்றும் மருத்துவ உதவிகளை யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களை அடையச் செய்வதற்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்களை ஐசிஆர்சி வெளியேற்றுவதற்கு அனுமதிக்கும்படி மருத்துவ பணியாளர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கும்படி இரு தரப்பையும் கேட்டுக்கொள்கிறோம். எல்ரிரிஈ யும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச மனித உரிமை விதிகளை மதிக்க வேண்டும்.

சிவிலியன்களின் சுதந்திரமான நடமாட்டத்தை அனுமதிக்கும்படி எல்ரிரிஈக்கு வழங்கப்பட்ட அழுத்தங்கள் தோல்வி அடைந்துள்ளது. எல்ரிரிஈ தனது கட்டுப்பாட்டில் உள்ள வடக்கின் அனைத்துப் பகுதிகளையும் இழப்பதற்கு அநேகமாக இன்னும் குறுகிய நேரமே உள்ளது. மேலதிக உயிரிழப்புகள் – சிவிலியன்கள் மற்றும் போராளிகள் – எவ்வித பலனையும் அளிக்காது என்பதனை எல்ரிரிஈ யும் இலங்கை அரசாங்கமும் உணர நடந்து கொள்ள வேண்டும்.

மேலதிக சிவிலியன் இழப்புகளை மனித வேதனைகளைத் தவிர்ப்பதற்கு இணைத் தலைமைகள் எல்ரிரிஈ, இலங்கை அரசுடன் கலந்துரையாடி இந்நிலையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்கு ஆயுதங்களைக் கைவிட்டு வன்முறையைக் கைவிட்டு இலங்கை அரசாங்கத்தினுடைய பொது மன்னிப்பை ஏற்று இறுதியான தீர்வைக் காண்பதற்காண செயற்பாடுகளில் அரசியல் கட்சியாகச் செயற்பட வேண்டும்.

இலங்கை அரசாங்கமும் எல்ரிரியும் தற்காலிகமான தாக்குதல் தவிர்ப்பு பிரதேசம் ஒன்றை அறிவித்து காயப்பட்டவர்களையும் நோயாளிகளையும் சிவிலியன்களையும் வெளியெற அனுமதிக்க வேண்டும். இணைத் தலைமைகள் இலங்கை அரசாங்கம் இந்தியா யுஎன் மறறும் அமைப்புகளுடன் இணைந்து அதனை உறுதிப்படுத்த பணியாற்றும்.

வடக்கில் இருந்து உள்ளே இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட வேண்டும். அம்முகாம்களுக்கு யுஎன் ஐசிஆர்சி மனிதாபிமான அமைப்புகள் முழுமையான அனுமதியைக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே இடம்பெயர்ந்த மக்கள் சர்வதேசதரத்தில் நடத்தப்பட வேண்டும். இயலுமான விரைவில் அவர்கள் தங்களுடைய சொந்த வீடுகளில் மீளக் குடியமர ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

உள்வாங்கிக்கொள்ளும் பேச்சுவார்த்தை மூலமே அரசியல் தீர்வை ஏற்படுத்தி நிரந்தரமான சமாதானத்தையும் மீளபுரிந்துணர்வையும் அடைய முடியும்.

Statement by the Tokyo Co-Chairs

Colombo, February 3, 2009: The Tokyo Co-Chairs (Norway, Japan, US and EU) jointly express their great concern about the plight of thousands of internally displaced persons trapped by fighting in northern Sri Lanka. The Co-Chairs call on the LTTE and the Government of Sri Lanka not to fire out of or into the no-fire zone established by the Government or in the vicinity of the PTK hospital (or any other medical structure), where more than 500 patients are receiving care and many hundreds more have sought refuge. They also call on both sides to allow food and medical assistance to reach those trapped by fighting, cooperate with the ICRC to facilitate the evacuation of urgent medical cases, and ensure the safety of aid and medical workers. The LTTE and the Government of Sri Lanka must respect international humanitarian law.

International efforts to persuade the LTTE to allow the civilians freedom of movement have failed. There remains probably only a short period of time before the LTTE loses control of all areas in the North. The LTTE and the Government of Sri Lanka should recognize that further loss of life – of civilians and combatants – will serve no cause.

To avoid further civilian casualties and human suffering, the Co-Chairs:

call on the LTTE to discuss with the Government of Sri Lanka the modalities for ending hostilities, including the laying down of arms, renunciation of violence, acceptance of the Government of Sri Lanka’s offer of amnesty; and participating as a political party in a process to achieve a just and lasting political solution and

call on the Government of Sri Lanka and the LTTE to declare a temporary no-fire period to allow for evacuation of sick and wounded, and provision of aid to civilians.
The Co-Chairs will work with the Government of Sri Lanka, India, the United Nations and others to ensure

the internally displaced people from the north are transferred to temporary camps where UN agencies, the ICRC, and humanitarian organizations will have full access and the IDPs will be treated according to international standards and resettled in their original homes as soon as possible and

an inclusive dialogue to agree on a political settlement so that lasting peace and reconciliation can be achieved.

தாயகத்திற்குத் திரும்புங்கள்! – கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒன்றியம் அழைப்பு!

சிங்கள ராணுவத்தால் அழிக்கப்பட்ட தமிழர் அடையாளங்களைக் கட்டியெழுப்பும் விடுதலைப் புலிகளின் முயற்சிக்கு ஆதரவாக, புலம் பெயர்ந்து வாழும் தமிழர் நாடு திரும்பி விடுதலைப் போரில் பங்கேற்க வேண்டும், என இலங்கையின் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஒன்றியம் இன்று அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கை விவரம்:

புலம் பெயர் வாழ் தேசங்களில் உள்ள எம் இரத்த உறவுகளே. எமது உறவுடன் இணைந்த தாழ்மையான வணக்கம்.

உங்களின் தாய் மண்ணில் உங்கள் உறவுகளாகிய நாங்கள் அனுபவிக்கும் துயரங்களையும் அழிவுகளையும் இழப்புக்களையும் எங்களுக்கு மேலாக உணர்ந்து கொண்ட நீங்கள் முன்னெடுக்கின்ற தாயகத்தின் தேசிய விடுதலைக்கான எழுச்சி செயற்பாடுகள் அனைத்தையும் அவதானித்து எங்களின் இதய குமுறல்களை எப்படி உங்களோடு பகிர்ந்து கொள்வதென்று புரியாத சூழ்நிலையில் வாய்மூடி மௌனிகளாக எங்கள் இதயம் வெடிக்கின்றது.

நீங்கள் வாழும் தேசத்தில் உங்கள் உள்ளக் குமுறல்களை துணிந்து வெளிப்படுத்தக்கூடிய சூழ்நிலையில் இருக்கின்றீர்கள். நாங்களோ இத் தாய் மண்ணில் வாழ்ந்துகொண்டு எங்கள் தழிழ் என்ற இனிய மூச்சை சுவாசிக்க முடியாதவர்களாக தவிக்கின்றோம்.

எமது தேசிய விடுதலை போராட்டத்தின் வரலாற்றையும் தேசிய தலைவரின் வழிகாட்டல்களையும் தமிழர்களாகிய நாம் அனைவரும் உணர்வோம்.

இவ்வாறான கால கட்டத்தில் எமது வடக்கு தாயகமாகிய யாழ்மண் இணைப்பின்றி துண்டாடப்பட்டதுடன், கிழக்கு தாயகம் மட்டுநகர் மண்ணும் தேசத் துரோகிகளின் வழிகாட்டல்களுடன் எமது தாயகத்தின் தனித்துவம் தடம் புரண்டு துண்டாடப்பட்டுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் விடுதலை பாதையின் வன்னிக் களமானது தனிமைப்படுத்தப்பட்டு இரத்த களமாக உருமாறியுள்ளதுடன், அங்கு எமது உறவுகளின் உயிர் அழிவுகளும் அளவிட முடியாத துயரத்தில் அனைவரையும் ஆழ்த்தியுள்ளது.

எமது தேசிய தலைவரும் அவருடன் இணைந்த எமது இரத்த உறவுகள் மீதும் சிறிலங்கா அரசு தங்களால் முடியாத செயற்பாட்டை மேற்கொள்வதற்காக இந்திய அரசுடனும் ஏனைய வல்லரசு நாடுகளுடன் இணைந்து வேறோர் அயல் நாட்டை கைப்பற்றுவதுபோல எமது இனத்தையும், தேசத்தையும் அழித்து விட்டு வெற்றி விழா கொண்டாடுகின்றார்கள்.

திரும்பி வாருங்கள்…

இவ்வாறான சூழ் நிலையில் எமது தேசிய விடுதலைக்கு தளமாகவும், போர் முனையாகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வன்னி போர்க்களத்தில் உள்ளவர்கள் எமது சகோதர இரத்த உறவுகள்தான். அவர்கள் மறு அவதாரங்கள் எடுப்பதற்கு கடவுளோ, மந்திரவாதிகளோ இல்லை.

அங்கு தேவைப்படுவதெல்லாம் ஆட்பலத்துடன், இணைந்த மனிதவலு தான். இவ்வலுப்பலத்தினை எமது தேசிய தலைவரின் இலக்கோடு இணைத்து கொள்வதற்கும், எம் உறவுகளை உயிர் ஊட்டுவதற்கும், புலம் பெயர்வாழ் தமிழ் மக்களாகிய நீங்கள் தேச விடுதலைக்கான அமைப்புக்கள், புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், கல்விமான்கள், இளைஞர், யுவதிகள் ஏனையோர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து சாதூரியமான திட்டங்களை மேற்கொள்வதுடன்,அழிந்து விட்ட எமது தாய் மண்ணின் சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாச்சார, விழுமியங்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும், எமது தேசவிடுதலையை வென்றெடுப்பதற்கும் அனைவரும் விரைந்து வாரீர்! என்று அறைகூவல் விடுக்கின்றோம், என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இதையடுத்து கழகப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றிச் சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

போர் நிறுத்தம்: சிங்கள-இந்திய அரசின் கூட்டு நாடகம் – திருமாவளவன்

thirumavalavan-1601.jpgகூடுதலான ஆயுதங்களையும் படையினரையும் ஒருசேரக் குவித்து கொடூரமான இடைவிடாத தாக்குதல்களை நடத்துவதற்காகவே இலங்கையில் போர் நிறுத்தத்தை சிங்கள-இந்திய அரசுகள் செய்துள்ளன என்றும், இலங்கை போர் நிறுத்தம் சிங்கள-இந்திய அரசின் மோசடி நாடகம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விடுதலைப் புலிகளிடமிருந்து தமிழர்களை வெளியேற்றுவதற்கென 48 மணி நேரம் ஒரு இடைக் காலப்போர் நிறுத்தம் செய்வதாக சிங்கள அரசு அறிவித்தள்ளது. இது ஈழத்தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்னும் மனிதநேய அக்கறையோடு அறிவிக்கப்பட்டதாக ஒரு நாடகத்தை சிங்கள  இந்திய அரசுகள் கூட்டுச் சேர்ந்து நடத்துகின்றன.

இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் கருணையால் இந்தப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இந்திய ஆட்சியாளர்கள் ஏய்க்கப்பார்க்கின்றனர். ஐ.நா. பேரவை உள்ளிட்ட சர்வதேசச் சமூகம் சிங்கள இந்தியப்படையினரின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டிக்கத் தொடங்கிய பிறகு இந்த நாடகத்தைத் தற்போது அரங்கேற்றுகின்றனர்.

48 மணி நேரம் கெடு விதித்த பின்னரும் தமிழர்கள் யாரும் வெளியேறவில்லை என்பதால் அவர்கள் பொதுமக்கள் அல்லர். அனைவருமே புலிகள்தான் என முத்திரை குத்தி பொதுமக்களைக் கொன்று குவிப்பதற்குரிய சாக்குப் போக்குகளைச் சொல்லவே இந்த இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர்.  மேலும் கூடுதலான ஆயுதங்களையும் படையினரையும் ஒருசேரக் குவித்து கொடூரமான இடைவிடாத தாக்குதல்களை நடத்து வதற்காகவே இந்த இடைநிறுத்தத்தை சிங்கள  இந்திய அரசுகள் செய்துள்ளன. சர்வதேச சமூகம் இந்தக் கூட்டுச் சதியை உணர்ந்து ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்.

சிங்களப் படையினரை நம்பி முல்லைத் தீவில் சிக்கியிருக்கும் தமிழர்கள் ராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை. இளம் ஆண்களையும் பெண்களையும் வெள்ளை வேனில் கடத்திச் சென்று கொடூரமான வதைகளைச் செய்து கொன்று புதைத்து வருகின்றனர். சிங்களப் படையினர் என்கிற நிலையில் எவ்வாறு தமிழர்கள் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முடியும். அண்மையில் பாதுகாப்பு வளையம் என சிங்களப் படையினர் அறிவித்த பகுதிக்கு நகர்ந்து வந்த பொதுமக்கள் மீது ஈவிரக்கமின்றி நூற்றுக் கணக்கானவர்களைக் குண்டுவீசிப் படுகெலை செய்தனர்.

இவ்வாறான நிலையில் பொதுமக்கள் சிங்கள இனவெறியர்களின் அறிவிப்பை நம்பி புலிகளின் பாதுகாப்பிலிருந்து வெளி யேற வாய்ப்பே இல்லை. இது சிங்கள இந்திய ஆட்சி யாளர்களுக்கு நன்றா கவே தெரிந்திருந்தும் இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறி வித்திருப்பது தமிழினத் தையும் சர்வதேசத் சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையே ஆகும். எனவே ஒரு நிரந்தரப் போர் நிறுத்தத்தைச் செய்து போர்நிறுத்தத்துக்குரிய ஏற்பாடுகளைச் செய்ய சர்வதேச நாடுகள் முன்வர வேண்டும் என்பதே தமிழ்ச் சமூகத்தின் விருப்பமாகும் என்று கூறியுள்ளார்.

சிவிலியன்களை விடுவிக்க: புலிகளுக்கு ஜனாதிபதி 48 மணிநேர காலக்கெடு

mahi-raja.jpgவடக்கில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்களை சுதந்திரமாகச் செல்வதற்கு அனுமதிக்க வேண்டுமென ஜனாதிபதி புலிகளிடம் வற்புறுத்திக் கேட்டுள்ளார்.

அதேநேரம், வடக்கிலிருந்து இடரற்ற சூழலை நோக்கிப் பாதுகாப்பாகச் செல்லும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்புக்கும், உரிமைகளுக்கும் தான் உத்தரவாதம் வழங்குவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கில் புலிகளின் பிடியில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாக ஜனாதிபதி நேற்றிரவு அறிக்கையொன்றை விடுத்தார். அந்த அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:- என்னுடைய அரசாங்கம் எப்போதும் நாட்டிலுள்ள மக்கள் அனைவரினதும் நலன்புரி நடவடிக்கைகளிலும், அவர்களது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திலும் பெரும் அக்கறையுடனேயே செயற்பட்டு வருகிறது.

விசேடமாக, புலிகளின் ஆதிக்கத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் நலனிலும் எனது அரசாங்கம் பெரும் கரிசணை கொண்டு செயற்படுகிறது. இந்த வகையில், இலங்கையிலுள்ள சகல மக்களும் சமாதானமாக வாழ வேண்டுமென்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.

விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்களுக்கு அவர்களது ஜனநாயக உரிமையை அனுபவிக்கும் வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம், இலங்கையில் நீண்டகாலம் பின்பற்றப்பட்டுவரும் ஜனநாயகப் பாரம்பரியம் மூலம் அவர்களது அபிலாஷைகளுக்கேற்ப தேர்தல் மூலம் அவர்களுடைய தலைவர்களை சுதந்திரமாகத் தெரிவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

என்றாலும், வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பேச்சுவாரத்தை மூலம் தீர்வுகாண எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் புலிகளால் குழப்பியடிக்கப்பட்டன. இலங்கை மக்கள் மீது புலிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன். பயங்கரவாதத்தை அகற்றி மக்களை அதிலிருந்து விடுவிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் முன்னெடுத்தனர்.

இந் நடவடிக்கையின் போது அரசாங்கத்தினரும் படையினரும் சிவிலியன்களின் நலன்புரி நடவடிக்கைகளிலும், உயிர்களைப் பாதுகாப்பதிலும் சொத்துக்களை அழிக்காமல் இருப்பதிலும் மிகவும் அக்கறையுடன் செயற்படுகின்றனர். மேலும், ஜனநாயக ரீதியில் மக்கள் ஆணைபெற்ற அரசாங்கம் என்ற வகையில் இலங்கையின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் உறுதியுடன் செயற்படுகிறது. இலங்கை மக்களை ஐக்கியப்படுத்தும் அதேநேரம் சகல பிரச்சினைகளுக்கும் ஜனநாயக வரையறைக்குள்ளேயே தீர்வு காண வேண்டுமென்பதிலும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

இந்த வகையில் அரசாங்கத்தினதும் மக்களினதும் இலக்கை அடைவதற்கு பாதுகாப்புப் படையினர் வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர். ஜனநாயகத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்கிறது. வடக்கில் வாழும் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகள் மூலம் தங்களது தலைவர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.

சகல பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலமும் கலந்துரையாடல் மூலமுமே தீர்வு காணப்படும். வன்முறைகள் மூலம் தீர்வுகாண அரசாங்கம் ஒருபோதும் முயற்சிக்காது. பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கையால் வடக்கில் குறுகிய நிலப்பரப்பினுள் பொது மக்கள் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

பெரும் தொகையான மக்கள் புலிகளால் பலாத்காரமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் அப்பாவி மக்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

புலிகளால் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை கவனத்தில் கொண்ட நாம், யுத்தப் பிரதேசத்தில் பொது மக்கள் பாதுகாப்பு வலயமொன்றை பிரகடனப்படுத்தினோம். இது முழுக்க முழுக்க சிவிலியன்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே ஏற்படுத்தப்பட்டது.

படையினருக்கும், ஆயுதம் ஏந்திய புலிகளுக்குமிடையில் மோதல்கள் ஏற்படுகின்ற போது பொது மக்களைப் பாதுகாப்பதே இதன் நோக்கமாகும்.துரதிர்ஷ்டவசமாக பாதுகாப்பு வலயத்தினுள் புலிகள் ஆட்லறித் தாக்குதல் நடத்தி வருகின்ற அதேநேரம் அந்தப் பகுதிகளினுள் இருந்து கொண்டு பாதுகாப்புப் படைவீரர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், கண்மூடித்தனமான முறையில் சிவிலியன்களைக் கொல்கின்றனர்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்து வரும் 48 மணி நேரத்தினுள் சிவிலியன்கள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டுமென நான் புலிகளிடம் கேட்டுக் கொள்கிறேன். அந்த சிவிலியன்கள் அனைவரும் ஒரு பாதுகாப்பா இடரற்ற சூழலுக்குள் பாதுகாப்பாக செல்வதை நான் உறுதிப்படுத்துகிறேன்.

வடக்கில் மோதல் நடைபெறும் பகுதிகளில், (புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில்) வாழும் சகல மக்களினதும் சொந்தப் பாதுகாப்பும் இலங்கையில் வாழும் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் உரிமைகளும் அந்த மக்களுக்கும் கிடைக்கும் வகையில் நான் உத்தரவாதம் வழங்குகிறேன். இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
 
 

அப்பாவி தமிழ் மக்களைத் தண்டிக்காதீர்கள்! : தமிழ் சமாதான ஒன்றியம்

TFP Logoஇலங்கையில் தொடர்ந்துவரும் இனப்போரில்; அகப்பட்டுள்ள அப்பாவிப் பொதுமக்கள் பேரழிவுகளுக்கு உள்ளாகும் சம்பவங்கள் பெருமளவில் அதிகரித்துவரும் செய்திகளையிட்டு தமிழ் சமாதான ஒன்றியம் கவலை கொண்டுள்ளது. இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்களின் நலன்களை புறந்தள்ளி அப்பாவிப் பொது மக்களை தொடர்ந்து பணயக் கேடையங்களாக பாவித்து போர் புரிவதை தமிழ் சமாதான ஒன்றியம் வன்மையாகக் கண்டிக்க விரும்புகின்றது. குறிப்பாக, இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து இலங்கை அரச படைகள்மீது போர் புரிவதன்மூலம் பொது மக்களுக்கு ஏற்படும் இழப்புகள் அதிகரிக்கச் செய்வதை தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாகக் கைவிடவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் வற்புறுத்துகிறது.

போரில் சிக்குண்ட பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரும் வரையில் இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் உடனடியாகப் போர்நிறுத்தம் ஒன்றை செய்யவேண்டுமென தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது. அத்துடன் சர்வதேச கண்காணிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் ஏற்படுத்தப்படும் பாதுகாப்பு வலயமொன்றில் பொதுமக்கள் சென்று சேர்வதற்கான ஏற்பாடுகளை இரு பகுதியினரும் உடனடியாக செய்யவேண்டுமெனவும் தமிழ் சமாதான ஒன்றியம் கருதுகிறது.

போரில் சிக்குண்டுள்ள அப்பாவிப் பொதுமக்களின் பாதுகாப்பு தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரும், வணக்கத்திற்குரிய யாழ் அதிமேற்றிராணியார் அவர்களும் மற்றும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் இதுவரையில் தெரிவித்திருந்த கருத்துக்களை கவனத்திலெடுத்து செயற்படுமாறு இலங்கை அரசையும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழ் சமாதான ஒன்றியம் கேட்டுக் கொள்கிறது. இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொதுமக்கள் பாதுகாப்புத் தொடர்பில் பொறுப்பாக நடந்துகொள்ள கடமைப்பட்டவர்கள் என்பதை தமிழ் சமாதான ஒன்றியம் நினைவூட்ட விரும்புகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் குறிப்பிட்ட சிறுபகுதியினுள் முடக்கப்பட்ட நிலையில் அவர்களை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அப்பாவி மக்களைக் கொல்லக்கூடிய போர் நடவடிக்கைகளை தற்காலிகமாக நிறுத்துவது மட்டுமே இலங்கை அரசு தமிழ் மக்கள் மேல் அக்கறை கொண்டுள்ளது என்பதை வெளிபடுத்தும். தற்பாதுபாப்பு அணுகுமுறைகளை மேற்கொண்டு மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்துவதை நிறுத்தவும் அப்பிரதேசங்களிலிருந்து மக்கள் வெளியேறவும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் அரச தரப்பினரை கேட்டுக் கொள்கிறது. அதற்கு ஆவன செய்யுமாறு புலம் பெயர்ந்து வாழும் எமது மக்களையும் இந்திய அரசு உட்பட அனைத்து உலக நாடுகளையும் சர்வதேச அமைப்புக்களையும் சமய நிறுவனங்களையும் கரம் கொடுத்து உதவுமாறு தமிழ் சமாதான ஒன்றியம் கோருகிறது.

30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வட, கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு

tna.jpgவன்னியில் இடம்பெறும் இனப்படுகொலையை நிறுத்தக் கோரி  30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை  வடக்கு, கிழக்குப் பகுதிகள் முழுவதிலும் பூரண ஹர்த்தாலுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில்;

வன்னி நிலப்பரப்பில் இடம்பெயர்ந்துள்ள அப்பாவிப் பொதுமக்கள் மீது குறிப்பாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்தில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது இராணுவம் தொடர்ச்சியாக மேற்கொள்ளும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாய மடைந்தவர்களுக்குக் கூட போதிய மருத்துவ வசதிகள் இல்லை. வைத்தியசாலைகளிலும் ஷெல் மற்றும் விமானத் தாக்குதலினால் கடமைகள் மேற்கொள்ள முடியாதுள்ளது. இறந்தவர்களின் சடலத்தை கூட மரணச் சடங்குகள் செய்ய முடியாமல் தொடர்ச்சியான விமான, ஷெல் தாக்குதல் இடம்பெற்றுவருகின்றது.

உயிரிழந்த பொதுமக்களை நினைவு கூர்ந்தும் தாக்குதலைக் கண்டித்தும் உயிர்காக்கும் மருந்துகளை அனுப்பக் கோரியும் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விமான மற்றும் ஷெல் வீச்சுகளை நிறுத்தக் கோரியும் 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு, கிழக்கு தமிழர் தாயம் முழுவதும் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனைத்து பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றது. இத்தினத்தில் பாடசாலைகள், காரியாலயங்கள், வர்த்தக நிலையங்கள், போக்குவரத்து என அனைத்தையும் நிறுத்தி எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாயகத்தில் உள்ளவர்கள் ஆதரவு வழங்குமாறு வேண்டிக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வன்னி நிலைமை; ஐ.நா. பிரதிநிதிக்கு தமிழ் கூட்டமைப்பினர் விளக்கம்

இலங்கையில் இடம்பெற்று வரும் இனப்படுகொலை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பிரதிநிதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செவ்வாய்க்கிழமை சந்தித்து நேரில் முறையிட்டனர்.  கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன், பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, கூட்டமைப்பின் இணைப்பாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பில் உள்ள வதிவிடப் பிரதிநிதி நீல்புகுணேவை சந்தித்துப் பேசினர்.

வன்னியில் நடைபெறுகின்ற போரின் பொதுமக்கள் கொல்லப்படுவது மற்றும் படுகாயமடைவது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கவலையும் கண்டனமும் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக நீல்புகுணே கூறியுள்ளார்.  போரில் தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற இழப்புகள், அவலங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தகவல்களை பெற்று வருவதாகவும் நீல்புகுணே தெரிவித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலமாக நடைபெற்ற இச்சந்திப்பில் அல்லற்படும் மக்களுக்கு உதவிகள் வழங்குவது தொடர்பாக அமெரிக்க தலைநகர் நியூயோர்க்கில் விரைவில் கூட்டம் ஒன்று நடைபெறும் என்றும் நீல்புகுணே கூறியதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். இடம்பெயர்ந்து செல்கின்ற மக்கள் மீது படையினர் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல் நடத்துவதாகவும் இதன் காரணமாகவே பெருமளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர் என்றும் நீல்புகுணேக்கு எடுத்து விளக்கியதாக மாவை சேனாதிராஜா கூறினார்.

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருந்துகள் இல்லை எனவும் ஷெல் பீரங்கி தாக்குதலில் மருத்துவமனைகள் அனைத்தும் சேதமடைந்துவிட்டது என்றும் நீல்புகுணேக்கு விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார். காயமடைந்த மக்களை வவுனியா மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு படையினர் அனுமதி மறுத்து வருகின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் காயமடைந்தவர்களை ஏற்றிச்சென்ற ஒன்பது வாகனங்கள் படையினரால் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்தும் விளக்கமளித்ததாக மாவை சேனாதிராஜா கூறினார்.