கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா: நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு) – ஏகாந்தி

obama.jpgவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று (20.01.2009) பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர். இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர். கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா. பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. இலங்கை நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார். துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.

நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார். ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

ஒபாமாவின் பேச்சிலிருந்து …

நாம் அனைவரும் மிகப் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் உள்ளோம். இதை அனைவரும் அறிவோம். அமெரிக்கா இத்துடன் முடியப் போகிறது, இதை தவிர்க்க முடியாது என்ற அச்சம் உள்ளது.

பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது. கடந்த காலத்தில் பொறுப்பற்றதனமாகவும், வீம்பாகவும் நடந்து கொண்டதால் ஏற்பட்ட நிலை இது. அதேசமயம், அடுத்த தலைமுறைக்கு நமது நாட்டை கொண்டு செல்லத் தவறியதும், மாற்று வாய்ப்புகள் குறித்து யோசிக்காததுமே இந்த நிலைக்கு இன்னொரு முக்கிய காரணம்.

பொருளாதார நெருக்கடியால் பலர் வீடுகளை இழந்துள்ளனர். வேலைகள் போயுள்ளன. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. நமது சுகாதார செலவுகள் அதிகரித்து விட்டன. பள்ளிகள் கூட சரிவர செயல்படாத அவல நிலை. எரிபொருள் நிலையும் கவலை அளிக்கிறது.

நமது நாடு போரில் ஈடுபட்டுள்ளது. வன்முறை, துவேஷம், தீவிரவாதத்திற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இப்போது நமக்கு என்ன தேவை என்றால், பொறுப்புணர்ச்சியுடன் கூடிய செயல்பாடுகள்தான். ஒவ்வொரு அமெரிக்கருக்கும் ஒரு அங்கீகாரம் தேவை. அவரவர் கடமையை சிறப்பாக செய்ய வேண்டும். நமது நாட்டுக்கு, நமது உலகுக்கு நாம் செய்ய வேண்டிய கடைமையை நாம் செய்வோம்.

பொருளாதாரத்தை சீரமைக்க வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உண்டு. பொருளாதாரத்தை சரி செய்ய உறுதியான, விரைவான நடவடிக்கை தேவைப்படுகிறது.

புதிய வேலைகளை உருவாக்குவதோடு, புதிய வளர்ச்சிக்கான அடிக்கல்லையும் நாம் நாட்டியாக வேண்டும்.

நிறைய சாலைகளையும், பாலங்களையும், மின் கட்டமைப்புகளையும் நாம் கட்டுவோம். நமது வர்த்தகத்தை தூக்கி நிறுத்துவோம். அறிவியலை மதிப்புமிக்க இடத்திற்கு உயர்த்துவோம். தொழில்நுட்பத்தை சரியாக பயன்படுத்தி மருத்துவத்திற்கு ஆகும் செலவுகளைக் குறைப்போம்.

நமது வாகனங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தேவையான எரிபொருளை சூரியன், காற்று, மண்ணிலிருந்து எடுப்போம்.

நமது பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை புதிய தலைமுறைக்கு ஏற்றபடி மாற்றுவோம். இவை அனைத்தையும் நம்மால் செய்ய முடியும். நாம் நிச்சயம் செய்வோம்.

கிறிஸ்தவர், முஸ்லிம்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாதவர்களை உள்ளடக்கிய நாடே அமெரிக்கா. இதில், எந்த மதமும் ஏற்றத்தாழ்வு உடையதல்ல.

நாம் பல்வேறு மொழி, கலாசாரத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். நாம் மனிதநேயத்துடனும், அமைதியுடனும் நமது வெற்றிகளை படைப்போம்.

அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் நண்பன். அந்த வகையிலேயே நாம் நடந்து கொள்வோம்.

நாம் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் சவால்கள் உண்மையானவை. மிகக் கடுமையானவை. பல சவால்கள் உள்ளன. ஆனால் அவற்றை எளிதில் சமாளிக்க முடியாது. குறுகிய காலத்தில் அவற்றை சமாளிப்பது இயலாத காரியம். ஆனால் அமெரிக்கா இவற்றை சந்திக்கும், சமாளிக்கும் என்றார் ஒபாமா.

பிபிசி உலக சேவையின் அனுசரணையில் நடத்தப்பட்ட புதிய கருத்துக்கணிப்பு ஒன்றில் கலந்துகொண்டவர்களில் 67 வீதமானவர்கள், பராக் ஒபாமா அவர்கள் அதிபராக தெரிவு செய்யப்பட்டமையால், அமெரிக்காவுக்கும், உலகின் ஏனைய நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்று கூறியிருக்கிறார்ர்கள். கடந்த கோடைகாலத்தில் நடத்தப்பட்ட இதுபோன்ற முன்னைய கருத்துக்கணிப்பு ஒன்றில், இந்த விடயத்தில் எந்தவிதமான நம்பிக்கையும் காண்பிக்காத ரஷ்யா, துருக்கி, எகிப்து மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கூட தற்போதைய கருத்துக்கணிப்பில் அதிபர் பராக் ஒபாமாவின் தெரிவின் காரணமாக மிகுந்த எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அவர் தொடர்பில் அதீத நம்பிக்கையுடனான கருத்து வெளியிட்டவர்கள் ஐரோப்பியர்கள்தான். உதாரணமாக, ஜேர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களில் 80 வீதமானவர்கள் ஏனைய நாடுகளுடனான உறவுகள் மேம்படும் என்பதில் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

ஒபாமா போன்ற ஒரு அதிபர், உலக பொருளாதார நெருக்கடிக்கே தனது நிகழ்ச்சித்திட்டத்தில் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றே பெரும்பான்மையினர் விரும்புவதாகவும் இந்த கருத்துக்கணிப்பு தெளிவாகக் கூறுகிறது. ஆனால், அவர் எதிர்கொள்கின்ற சவால்களின் ஒரு சமிக்ஞையாக, உலகெங்கும் பெருந்தொகையானவர்கள், உலக காலநிலைமாற்றம், மத்திய கிழக்கு அமைதி மற்றும் இராக் விவகாரம் ஆகிய பிரச்சினைகளையும் அவர் முன்னுரிமை கொடுத்து தீர்த்து வைக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதில் வித்தியாசமான விசயம் என்னவென்றால், ஒபாமா எந்த விடயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில், அமெரிக்க மக்களுக்கும், உலகின் ஏனைய நாடுகளின் மக்களுக்கும் இடையில் கருத்தில் வேறுபாடு இருக்கிறது.
உலக பொருளாதார நெருக்கடிக்கே ஒபாமா முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அமெரிக்க மக்களும் ஒப்புக்கொள்வதாக இந்தக் கருத்துக்கணிப்பு கூறுகின்ற போதிலும், உலகின் ஏனைய மக்களைப் போலல்லாது, அமெரிக்கர்கள் ஆப்கானிஸ்தான் பிரச்சினைக்கே அடுத்த இடத்தை தருகிறார்கள். வெறுக்கப்பட்ட கடந்த 8 வருட புஷ்ஷின் ஆட்சியின் மூலமான பலனை ஒபாமா பூரணமாக அடைந்திருக்கிறார் என்று இந்த கருத்துக்கணிப்பை ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தற்போதுள்ள உற்சாகத்துடனான இந்த எதிர்ப்பார்ப்புக்களை அவர் தக்க வைத்துக்கொள்வது என்பது அவருக்கு பெரும் சவாலாகத்தான் இருக்கும்.

இதேநேரம், பராக் ஒபாமாவின் பதவியேற்பு நிகழ்வைக் காணவென அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கே 20 பாகையை விட சற்று அதிகம் என்ற குளிரான காலநிலையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாஷிங்டனில் நஷனல்மால் வீதியில் கூடி விட்டனர். இங்கு கூடிய மக்கள் கூட்டமானது தசாப்தங்களிலேயே மிகப் பெரிய கூட்டமென்று சில சமயங்களில் இதுவே எப்போதுமே மிக பெரிய மக்கள் திரள்வாக இருக்கக் கூடுமென்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

ஒபாமா வாழ்க்கை குறிப்பு:

முழுப் பெயர் – பாரக் ஹுசேன் ஒபாமா.
வயது – 47
பிறந்த நாள் – 1961, ஆகஸ்ட், 4.
பிறந்த இடம் – ஹோனலுலு, ஹவாய்.
படிப்பு – கொலம்பியா பல்கலைக்கழகம், ஹார்வர்ட் சட்ட பள்ளி.
மனைவி – மிச்சல் ராபின்சன் ஒபாமா.
குழந்தைகள் – மலியா (10), சாஷா (7).
மதம் – ஐக்கிய கிறிஸ்தவ சர்ச்.
கட்சி – ஜனநாயகக் கட்சி.

குடும்பம் – கென்ய தந்தைக்கும், வெள்ளையர் இன அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை பாரக் ஒபாமா சீனியர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது ஒபாமாவின் தாயான ஆன் துங்காமை மணந்தார்.

ஒபாமா பிறந்த 2 வருடத்திலேயே இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் ஒபாமாவின் தந்தை கென்யாவுக்குத் திரும்பி விட்டார். அங்கு தலை சிறந்த பொருளாதார நிபுணராக அவர் விளங்கினார். 1982ம் ஆண்டு கார் விபத்தில் அவர் மரணமடைந்தார்.

ஒபாமாவின் தாயார் ஆன், இந்தோனேசியாவைச் சேர்ந்த லோலோ சொயட்டரோ என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டு இந்தோனேசியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்குதான் ஒபாமா தனது 10 வயது வரை வாழ்ந்தார்.

பின்னர் ஹவாய் திரும்பிய அவர் தனது தாத்தா, பாட்டியுடன் வசித்தார்.

ஒபாமாவுக்கு அவரது தந்தையின் பிற திருமணங்கள் மூலம் 7 சகோதர, சகோதரிகள் கென்யாவில் உள்ளனர். அதேபோல அவரது தாயாரின் 2வது திருமணத்தின் மூலம், மாயா சொயோட்டரோ என்ற சகோதரி உள்ளார்.

us_obama.jpg

us_obama002-2001.jpg

obama-20-01.jpg

us_obama-003.jpg

us_obama-04.jpg

படகுகள் மீது தாக்குதல்

_bort.jpg முல்லைத்தீவு கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடற்புலிகளின் தற்கொலைப் படகு உள்ளிட்ட நான்கு படகுகளை இலங்கை கடற்படையினர் தாக்கி அழித்திருப்பதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் டி. கே.பி. தஸநாயக்க கூறினார்.

இச்சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றது. தாக்குதலையடுத்து இரண்டு கடற்புலிகளின் சடலங்களை கடற்படையினர் மீட்டிருப்பதாகவும் கமாண்டர் தெரிவித்தார். முல்லைத்தீவு கடற்கரையோரமாக கடற்புலிகளின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததை அவதானித்த இலங்கை கடற்படையினர் அப்படகுகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எட்டு படகுகளில் நான்கு படகுகள் முற்றாக எரிந்துள்ளன. இதில் ஒன்று தற்கொலைப் படகென கடற்படை பேச்சாளர் கூறினார். ஏனைய நான்கு படகுகளும் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளன. கடற் படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே சில நிமிடங்கள் இடம் பெற்ற மோதல்களால் கடற்படையின் படகொன்று சிறு சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதே நேரம் முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளது:
 
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 கோடி தெற்காசியருக்கு இதய நோய் பரம்பரை வியாதி

surgery.jpgமரபணு உருப்பெருக்கம் என்ற ஒரேயொரு காரணத்தால் 6 கோடி தெற்காசியர்கள் (உலக சனத்தொகையில் 1 சதவீதம்) இதயநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக  ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட விஞ்ஞான ஆய்வறிக்கையொன்று தெரிவிக்கிறது. பரம்பரைப் பாதிப்பு இந்திய உபகண்டத்தில் 150 கோடி பேருக்கு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள், மருத்துவர்களை உள்ளடக்கிய குழுவொன்று “நேற்சர் ஜெனற்றிக்ஸ் அக்கடமிக் ஜேர்னல்’ சஞ்சிகையில் எழுதியுள்ளனர்.

தெற்காசியர்களில் 4 சதவீதமானோரை பரம்பரை ரீதியான இதயநோய் தாக்குவதாக பிரிட்டன், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். “இப்போது இந்தப் பாதிப்பு அடையாளம் காணப்பட்டுள்ளது. கருவுற்றிருக்கும் போது ஆரம்ப கட்டத்திலேயே இப்போது இதனைக் கண்டுபிடிக்க முடியும்’ என்று அவர்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மரபணு ரீதியான சோதனையின் மூலம் இந்தப் பாதிப்புக்களை இளம் பராயத்திலேயே தற்போது இனங் கண்டுகொள்ள முடியும். காலப்போக்கில் இதற்கான மருந்தையும் கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் உலகில் 1 கோடி 75 இலட்சம் பேர் இதயநோயால் மரணிக்கின்றனர். இதேவேளை, உலகில் இதய நோயால் பீடிக்கப்படுவோரில் 60 சதவீதமானோர் இந்தியர்கள் என்று அண்மையில் வெளியிடப்பட்ட மற்றொரு ஆய்வு குறிப்பிட்டுள்ளது. 26 நாடுகளைச் சேர்ந்த 2,085 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோனேசியா, மலேசியாவிலுள்ள தெற்காசிய வம்சாவளியினருக்கே இந்த பரம்பரை அலகால் இதயநோயின் தாக்கம் உள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீவிரவாதிகளின் தாக்குதல் தொடரலாம் அந்த நாட்டின் பலவீனமே மும்பைத் தாக்குதல் – அமெரிக்க நிபுணர்கள்

world_news.jpgஇந்தி யாவில் மும்பைத் தாக்குதல் போன்ற மேலும் பல தாக்குதல்கள் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. மும்பைத் தாக்குதல் தொடர்பாக, இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் பிளெக்வில் உள்ளிட்ட நிபுணர்கள் நடத்திய ஆய்வொன்றைத் தொடர்ந்தே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிபுணர் குழுவால் வெளிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்தியாவின் வர்த்தக மற்றும் உல்லாச மையமாக மும்பை திகழ்கிறது. அங்குள்ள முக்கிய கட்டிடங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் உளவியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மும்பை தாக்குதல் அம்சங்களை வைத்து பார்க்கும்போது இரக்கமற்ற கொலைகள் மட்டுமன்றி அதற்கான திட்டமிடலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது.

அதிகமான மக்களை கொல்வது மட்டுமன்றி சில குறிப்பிட்ட நாட்டினரை குறிவைத்து தாக்குவதும் தீவிரவாதிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதன்மூலம் அவர்களின் வியூகம் புலப்படுகிறது.தீவிரவாதத்தை தடுப்பதில் இந்தியாவின் பலவீனத்தையே இத்தாக்குதல் வெளிப்படுத்துகிறது.

மும்பை தாக்குதலை முன்மாதிரியாக கொண்டு பாகிஸ்தானில் உள்ள வேறு சில தீவிரவாத அமைப்புகள் அதேபாணியில் இந்தியா மீது நிறைய தாக்குதல்களை நடத்தும் அபாயம் உள்ளது. நிறைய உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் இத்தாக்குதல்கள் நடக்கும். இந்த அபாயத்தை இந்தியாவோ அமெரிக்கவோ குறைக்க முடியாது.

இந்தியாவும்,பாகிஸ்தானும் அணுஆயுத நாடுகள். எனவே ஏதாவது இராணுவ நடவடிக்கை எடுத்தால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். அதே சமயத்தில் இந்தியா நடவடிக்கை எடுக்கத்தவறினால் அது இந்தியாவின் உறுதி இன்மையை காட்டுவதாக அமைந்து விடுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்னியில் இருந்து இடம்பெயரும் மக்கள் தனித்தனி வீடுகளில் குடியமர்த்தப்படுவார்கள் – அமைச்சர் ரிசாட் பதியுதீன்

risard.jpgவன்னியில் தொடரும் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வருகின்ற மக்களுக்கு ஐந்து நலன்புரி நிலையங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கும் மீள் குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சர் ரிசாட் பதியுதீனுக்கு , இடம்பெயர்ந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு வருகின்ற மக்களின் விடயத்தில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இடம்பெயர்ந்து வருபவர்களில் வவுனியா வடக்குப் பிரதேச மக்களுக்கு ஓமந்தையிலும், மன்னார் பிரதேச மக்களுக்கு கட்டைஅடம்பனிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மக்களுக்கு செட்டிக்குளம் மெனிக்பாம் பண்ணையிலுமாக ஐந்து நலன்புரி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

இடம்பெயர்ந்து வருகின்றவர்களுக்கு தனித்தனியாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டு அவற்றில் அவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். சகல அமைச்சுகளும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மீள்குடியேற்ற அநர்த்த நிவாரண அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை மேற்பார்வை செய்யும். கொழும்பில் நடைபெற்ற உயர் மட்ட மநாட்டில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன எனவும் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதேவேளை, வன்னியில் இருந்து ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3,900 பேர் வவுனியாவுக்கு வந்துள்ளனர் எனவும் இவர்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எம். எஸ். சாள்ஸ் தெரிவித்தார். நாளுக்குநாள் வன்னியிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து வருவதால் உரிய வசதிகளைச் செய்யுமாறு ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

புலிகளின் 3 இலக்குகள் மீது விமானத் தாக்குதல்

mi24-1301.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் இனங்காணப்பட்ட புலிகளின் வெவ்வேறு மூன்று இலக்குகள் மீது இலங்கை விமானப் படையினர் நேற்று கடும் தாக்குதல்களை நடத்தியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.  விமானப்படைக்குச் சொந்தமான ஜெட் மற்றும் எம். ஐ. 24 ரக விமானங்களே கடும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இத்தாக்குதல்கள் நேற்றுக் காலை 9 மணி தொடக்கம் 11.30 மணிக்குட்பட்ட காலப் பகுதியில் இடம்பெற்றன.

முல்லைத்தீவுக்குத் தெற்கே நேற்றுக் காலை 9 மணிக்கு முதலாவது தாக்குதல் நடத்தப்பட்டது முன்னேறிவரும் இராணுவத்தின் 59ஆம் படைப்பிரிவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அதற்கு எதிர்த்திசையில் தாக்குதல் நடத்தியதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

இதனையடுத்து நேற்றுக் காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவுக்கு தெற்கே புலிகளின் முக்கியஸ்தர்கள் கூடும் இன்னுமொரு இடத்தில் விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பிரமண்டான்குளத்திற்கு வட மேற்கே இரண்டு கிலோமீற்றர் தொலைவில் மணல்மேடு அமைப்பதில் ஈடுபட்டிருந்த புலிகள் மீதும் விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்விமானத் தாக்குதல்கள் அனைத்தும் வெற்றியளித்திருப்பதனை விமான ஓட்டிகள் உறுதி செய்திருப்பதாகவும் மத்திய நிலையம் கூறியது.

38 புலிகளின் உடல்கள் வவுனியாவில் அடக்கம்

வவுனியா ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 38 உடல்களும் இன்று செவ்வாய்க்கிழமை வவுனியாவில் அடக்கம் செய்யப்படவுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போரில் உயிரிழந்த பின்னர் படையினரால் கைப்பற்றப்பட்ட இந்த உடல்கள் வவுனியா ஆஸ்பத்திரியில் ஒப்படைக்கப்பட்டன.

இந்த உடல்களைப் பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச்சங்கத்திடம் பொலிஸார் தெரிவித்தபோதிலும், புதுக்குடியிருப்பிலிருந்து தகுந்த பதில் வராததால் உடல்களை பொறுப்பேற்பதில் தாமதம் ஏற்படுவதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் கூறியது. மிகவும் பழுதடைந்துள்ள இவை துர்நாற்றம் வீசுவதினால் மாவட்ட நீதிமன்றின் அனுமதியுடன் வவுனியாவிலேயே அடக்கம் செய்ய பொலிஸாரும் வைத்தியசாலை நிர்வாகத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பாக்கிஸ்தானுக்கு இந்தியா கிரிக்கட் அணி செல்லவில்லை. ஆனால், இலங்கை அணி பாகிஸ்தானிலும், இந்தியா அணி இலங்கையிலும் விளையாடுகின்றன. – ஏகாந்தி

pakistan-c-teem.jpgசர்வதேச கிறிக்கட் கட்டுப்பாட்டுசபையின் (ICC) நேர அட்டவணைப்படி இந்தக்காலகட்டங்களில் இந்திய கிறிக்கட் அணியினர் பாக்கிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஆனால், மும்பாய் தாக்குதலையடுத்து இச்சுற்றுப் பயணம் தடையானது.

இந்நிலையில் 3 ஒரு நாள் போட்டிகளிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் பாக்கிஸ்தானுடன் விளையாட இலங்கை அணி விருப்பம் தெரிவித்தது. அதேநேரம், இலங்கைக்கான 5 ஒரு நாள் போட்டிகளிலும் 20க்கு 20 போட்டியொன்றிலும் கலந்துகொள்ள இந்தியா அணி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளது.

மஹெல ஜயவர்தன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்காக தற்போது பாகிஸ்தான் சென்றுள்ளது.

இலங்கை வீரர்களுக்கு வரலாறு காணாத வகையில் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு பிரச்சினை காரணமாகவே சமீபகாலமாக பாகிஸ்தானில் விளையாட எந்த அணியும் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்தாண்டில் பாக்கிஸ்தானில் பாதுகாப்பு நிலைமையைக் காரணம் காட்டி அவுஸ்திரேலியா அணி முதலில் பயணத்தை ரத்து செய்தது. அதன் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் பாக்கிஸ்தானில் நடைபெற இருந்த சம்பியன் கிண்ணப் போட்டி தள்ளி வைக்கப்பட்டது. 

பாக்கிஸ்தானுக்கு இந்தியா அணி செல்வதற்கான சகல ஏற்பாடுகளும் நடைபெற்றிருந்த நேரத்திலே மும்பாய் தாக்குதல் இடம்பெற்றது. மும்பாய் தாக்குதலையடுத்து இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இந்திய அணி பாகிஸ்தான் பயணத்தை ரத்து செய்தது.

இந்நிலையில் தற்போது இலங்கை அணி அங்கு சென்று உள்ளது.

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி கராச்சியில் இன்று (20) செவ்வாய்க்கிழமை நடக்கிறது. 2 வது போட்டி நாளை (21) (புதன்கிழமை)யும் 3 வது மற்றும் கடைசி போட்டி 24 ஆம் திகதியும் (சனிக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த 3 ஒரு நாள் போட்டிகளும் பகல் – இரவாக ஆட்டங்களாக நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

3 ஒரு நாள் போட்டிகளும் முடிவடைந்த பின்பு இலங்கை அணி தாயகம் திரும்பவுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்திய அணியுடன் இலங்கையில் 5 ஒரு நாள் போட்டிகளில் இலங்கை அணி ஆடவுள்ளது. அத்துடன்,  20க்கு 20 போட்டியொன்றும் இந்திய அணிக்கெதிராக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணியுடனான போட்டிகள் இம்மாதம் 28ஆந் திகதி தொடக்கம் பெப்ரவரி மாதம் 10ஆந் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்திய அணி இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பாக தமிழ் நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பினைக் காட்டி வருகின்றது. இலங்கையில் நடைபெறும் யுத்த நிலைமை காரணமாக இந்திய அணி இலங்கைக்குச் செல்லக் கூடாது என ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

இறுதியாக கடந்த 19ம் திகதி இலங்கைக்கு இந்திய கிரிக்கெட் அணியை அணியை அனுப்பக்கூடாது என்று பாமகவின் வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவை சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டமொன்றினை நடத்தினர். பா.ம.க.வின் அங்கமான வழக்கறிஞர்கள் சமூகநீதி பேரவை சார்பில் இந்த  ஆர்ப்பாட்டம் சென்னை ஐகோர்ட்டு முன்பு  நடத்தப்பட்டது. சமூகநீதி பேரவை தலைவர் கே.பாலு வக்கீல்கள் சங்க தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் வக்கீல் எம்.பழனிமுத்து உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட வக்கீல்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இலங்கைக்கு,  இந்திய கிரிக்கெட் அணியை அனுப்பக்கூடாது என்றும்,   இலங்கையில் நடைபெறும் போரை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்,  தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கையில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா என்றும்,   இந்திய கிரிக்கெட் வாரியம் பணம் கொழிக்க தமிழன் செத்து மடியும் இலங்கைதான் கிடைத்ததா? என்றும்,  அப்பாவி தமிழன் செத்து மடிகிறான், அங்கே கிரிக்கெட் விளையாட்டு ஒரு கேடா’ என்றும் பல கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆனால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எதையும் இந்திய கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.  இந் நிலையில் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறும் வீரர்களின் பெயர் விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதல் ஒருநாள் போட்டி 28 ஆம் திகதி தம்புள்ளையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடந்தது. தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தலைமையிலான குழுவினர் வீரர்களை தேர்வு செய்தனர். அணி விபரம் வருமாறு; வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர், தோனி (கப்டன்)இ யுவராஜ் சிங், ரோஹித் சர்மா, யூசப்பதான்,  சகீர்கான்,  இஷாந்த் சர்மா,  ஓஜா, முனாப் பட்டேல்,  இர்பான் பதான்,  சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா,  பிரவீன் குமார். காயம் காரணமாக ஹர்பஜன் சிங் இடம்பெறவில்லை.

25 ஆம் திகதி இலங்கை வரவுள்ள இந்திய கிரிக்கெட் அணி இலங்கை அணியுடன் 5 ஒரு நாள் போட்டிகள்,  ஒரு 20 ஓவர் போட்டி என மொத்தம் 6 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்தியாவுடனான ஒரு நாள் தொடர் முடிந்த பிறகு இலங்கை அணி மீண்டும் பாகிஸ்தான் செல்லவுள்ளது. மீண்டும் பாக்கிஸ்தான் செல்லும் இலங்கை அணி பாக்கிஸ்தான் அணிக்கெதிராக  2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இந்த கிரிக்கட் போட்டிகளில் இலங்கை பாக்கிஸ்தானில் சுற்றுலா மேற்கொள்வது குறித்து ஆரம்பத்தில் இந்திய தமிழ்நாட்டில் சில அரசியல் கட்சிகள் பலத்த கண்டனம் தெரிவித்தமை ஞாபகமிருக்கலாம்.

இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியாவால் மறுக்கப்பட்ட ஒரு போட்டி தொடரில் இலங்கை அணி கலந்துகொள்வதினூடாக இலங்கை அரசாங்கத்துக்கும்,  பாக்கிஸ்தான் அரசாங்கத்துக்கும் இடையில் யுத்த உறவுகள் இருப்பதாக கூறியே இந்த கண்டனங்கள் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. இந்த கண்டனங்கள் எதையும் இந்தியாவின் மத்திய அரசோ,  இந்திய கிரிக்கட் வாரியமோ கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய கிரிக்கட் அணி இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தர்மபுரத்தில் நிலத்தின் கீழ் புலிகளின் டீசல் களஞ்சியத் தொகுதி

_army.jpg முல்லைத்தீவு தர்மபுரம் பிரதேசத்தில் நிலக்கீழ் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாரிய டீசல் களஞ்சிய தொகுதியை பாதுகாப்புப் படையினர் நேற்று கண்டுபிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். ஒவ்வொன்றும் 225 லீற்றர்களைக் கொண்ட 300 பிளாஸ்டிக் பீப்பாக்களுக்குள் இந்த டீசல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்த இராணுவப் பேச்சாளர், அவை சுமார் இரண்டு வருடங்களுக்கு போதுமானவையெனவும் குறிப்பிட்டார். கடந்த 15ம் திகதி வியாழக்கிழமை தர்மபுரம் நகருக்குள் பிரவேசித்த இராணுவத்தின் 58வது படைப் பிரிவினர் கடந்த நான்கு நாட்களாக இந்தப் பிரதேசத்தில் பாரிய தேடுதல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தமது நிலைகளை பலப்படுத்தி வருகின்றனர்.

இங்கிருந்து தொடர்ந்தும் முல்லைத்தீவை நோக்கி நாளுக்கு நாள் முன்னேறிச் செல்லும் இராணுவத்தின் 58வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவிந்திர டி சில்வா தலைமையிலான படைப்பிரிவினரே டீசல் களஞ்சியசாலைத் தொகுதியையும் கண்டு பிடித்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். விடுவிக்கப்பட்ட இந்த தர்மபுரம் பிரதேசத்திலிருந்தே புலிகளின் குண்டு தயாரிக்கும் பிரதேசம் ஒன்றையும், மூன்று மாடிகளைக் கொண்ட பாரிய நிலக்கீழ் முகாம் ஒன்றையும் படையினர் கைப்பற்றியிருந்தனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். படையினரால் கைப்பற்றப்பட்ட பாரிய டீசல் களஞ்சியசாலைத் தொகுதி தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :-

சுமார் ஒரு ஏக்கர் பரப்புள்ள பாரிய தென்னந் தோப்பின் கீழ் நிலத்திலிருந்து சுமார் ஒன்றரை அடிக்கு கீழாகவே இந்த களஞ்சியத் தொகுதி அமைக்கப்பட்டுள்ளது. இலை, குலைகளால் மிகவும் தந்திரமான முறையில் இந்த டீசல் பீப்பாக்கள் நிலக் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.  இந்த டீசல் களஞ்சியத்திற்கு அடையாளமாக அந்த தென்னந் தோப்பிலுள்ள மரங்களில் சில குறியீடுகளும், அது களஞ்சியப்படுத்தப்பட்ட திகதி மற்றும் அதன் தொகை என்பன எழுதப்பட்டிருந்ததாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் தமது போக்குவரத்து நடவடிக்கைகளுக்காகவும், படையினரின் கடுமையான தாக்குதல்களை தவிர்க்கும் வகையில் புலிகளால் அமைக்கப்படும் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், மண் அரண்கள் அமைப்பதற்குத் தேவையான உபகரணங்களை பாவிப்பதற்கும் இங்கிருந்தே டீசல் எடுத்துச் சென்றிருக்கலாம் எனவும் பாதுகாப்புப் படையினர் சந்தேகிப்பதாக இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

படையினரால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் போது ஷெல் குண்டுகள் விழுந்து எரி பொருட்கள் தீப்பற்றிக் கொள்ளாத வகையில் நிலத்தின் கீழ் வெட்டப்பட்ட நீரோடையொன்றிலேயே டீசல் பீப்பாக்கள் வைக்கப்பட்டு மேலே மணல் மற்றும் காய்ந்த தென்னம் ஓலைகளால் அவை மூடப்பட்டிருந்ததாகவும் படையினர் தெரிவித்தனர்.

துரித கதியில் முன்னேறி வரும் படையினரின் தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாத புலிகள் இவற்றை மீட்கக்கூட நேரமில்லாது அவற்றை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றிருப்பதாகவும் படையினர் சுட்டிக்காட்டினர். வன்னியிலுள்ள மக்கள் எரிபொருள் தட்டுப்பாட்டினால் பல்வேறு சிரமங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக பல தரப்பட்ட கருத்துக்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து டீசலும் அரசாங்கத்தினால் வன்னி மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டதெனவும் படையினர் கூறினர்.

கிளிநொச்சியை இழந்த புலிகள் கிளிநொச்சியில் முன்னெடுத்த சகல நிர்வாக நடவடிக்கைகளையும் ஏனைய செயற்பாடுகளையும் தர்மபுரம் பிரதேசத்திலேயே முன்னெடுத்துள்ளமை இங்குள்ள தடயங்கள் மூலம் தெரிய வருவதாகவும் பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்பு

obama-2001.jpg
அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். தலைநகர் வாஷிங்டனில் இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா என்பதால் என்றுமில்லாதளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் ஏராளமான கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்படவுள்ளன.

கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளையொட்டி வைபவத்தில் கலந்துகொள்வோர் அனைவரையும் இரண்டரை மணி நேரத்திற்கு முன்னரே வந்து சேருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அனைவரதும் ஆடைகள், உடல்கள் சோதனை செய்யப்படவுள்ளன. வெளிநாட்டு தூதுவர்கள், அரச, மதப் பிரமுகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தூதுவர்களுக்கான அழைப்பை பதவி விலகிச் செல்லும் வெளிநாட்டமைச்சர் கொண்டலிசா ரைஸ் எழுத்து மூலம் அனுப்பி வைத்திருந்தார். எனினும் ஈரான், வெனிசூலா, வடகொரியா, பொலிவியா போன்ற நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் தான் பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்குப் பிரச்சினைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் பகைமை நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் அக்கறை செலுத்தப்போவதாக முன்னர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு வைபவங்களில் பங்கேற்கும் பொருட்டு விசேட ஆடைகள் ஒபாமாவுக்கு தயார் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் இவ்வைபவத்தைப் பார்வையிட பெருந்தொகையானோர் நேரில் வருவர். மற்றும் தொலைக் காட்சிகளில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படவுள்ளன. உலகெங்கிலுமிருந்து ஏராளமான ஊடகவியலாளர்கள் வாஷிங்டனுக்கு வந்துள்ளனர். வெள்ளை மாளிகையில் குடியேறும் பொருட்டு பராக் ஒபாமா கடந்த வாரம் வாஷிங்டன் வந்தார்.  இவரது புதல்விகள் இருவரது கற்றல் நடவடிக்கைகள் வாஷிங்டனில் தொடரவுள்ளன.

அமெரிக்கவின் முதலாவது கறுப்பின ஜனாதிபதி பராக் ஒபாமா பதவியேற்ற பின்னர் உலக அரசியல் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுமென பெருமளவிலானோர் எதிர் பார்க்கின்றனர்.  இவ் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பராக் ஒபாமா இன்று பதவியேற்கின்றார். ஜனாதிபதி புஷ் பதவி விலகிச் செல்கின்றார்.