கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

இந்தியாவில் ஏப்ரல் 16 முதல் மே 13 வரை 5 கட்டமாக மக்களவைத் தேர்தல்

election_ballot_.jpg இந்தியாவில் ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி வரை மக்களவைத் தேர்தல் 5 கட்டமாக நடக்கவுள்ளது. மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.

முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 16ம் தேதியும், 2ம் கட்ட வாக்குப்பதிவு 23ம் தேதியும், மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 30ம் தேதியும், 4வது கட்ட வாக்குப்பதிவு மே 7ம் தேதியும், 5ம் கட்ட வாக்குப்பதிவு மே 13ம் தேதியும் நடக்கவுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் 5 கட்டமாகவும், பிகாரில் 4 கட்டமாகவும், மகாராஷ்டிரா, மேற்கு வங்கத்தில் 3 கட்டமாகவும், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஒரிஸ்ஸா, அஸ்ஸாம், மத்தியப் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 2 கட்டமாகவும் தேர்தல் நடக்கவுள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற 15 மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்.

இந்த அறிவிப்புகளை தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி டெல்லியி்ல் வெளியிட்டார்.

ஏப்ரல் 16ம் தேதி நடக்கும் முதல் கட்ட வாக்குப் பதிவில் 124 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 23ம் தேதி 141 தொகுதிகளுக்கும், ஏபரல் 30ம் தேதி 107 தொகுதிகளுக்கும், மே 7ம் தேதி 85 தொகுதிகளுக்கும், மே 13ம் தேதி 86 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

மே 16ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக கோபால்சாமி அறிவித்தார். இந்தத் தேர்தலில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 71.40 கோடியாகும். இது கடந்த தேர்தலைவிட 4.3 கோடி அதிகமாகும்.

மொத்தம் 40 லட்சம் அரசு ஊழியர்கள், 21 லட்சம் போலீசார், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் இந்தத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

நாடு முழுவதும் மொத்தம் 8,28,804 வாக்குப் பதிவு மையங்கள் அமைக்கப்படும். தற்போதைய நாடாளுமன்றத்தின் காலம் ஜூன் 1ம் தேதியுடன் முடிவடைகிறது. அடுத்த மக்களவை ஜூன் 2ம் தேதிக்குள் அமைய வேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டோருக்கான ரிசர்வ் தொகுதிகள் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலைவிட 5 இடங்கள் அதிகமாகும். அதேபோல பழங்குடியினருக்கான தொகுதிகள் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த தேர்தலை விட 6 தொகுதிகள் அதிகமாகும். இப்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமியின் பதவி்க் காலம் ஏப்ரல் 20ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா தலைமைத் தேர்தல் ஆணையராவார்.

இதனால் முதல் கட்ட தேர்தலையடுத்து கோபால்சாமி விலகிவிடுவார். அடுத்த 4 கட்டத் தேர்தல்கள் சாவ்லாயின் தலைமையில்தான் நடைபெறும்.

உலகில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழப்பு

2009 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில் உலகம் முழுவதிலும் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் நான்கு லட்சமாகும். அதாவது, ஒவ்வொரு நிமிடத்துக்கும் சராசரியாக 5 பேர் வேலை இழந்துள்ளனர்.

சில நிறுவனங்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பணியாளர்களை வேலையைவிட்டு நிறுத்துவது மற்றும் பணிநீக்கம் செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுத்துள்ளன. சில நிறுவனங்கள் தானாக முன்வந்து ஓய்வுபெற்றால் சலுகை அளிப்பது போன்ற சிறப்புத் திட்டங்கள் மூலம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன.

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த நிறுவனங்கள் தங்களது செலவைக்குறைக்க பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன. இதன் தொடர்ச்சியாக 2008 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பணியிடங்களை சர்வதேச நிறுவனங்கள் குறைத்துள்ளன.

ஒவ்வொரு ரூபாவைவும் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், தற்போதைய நெருக்கடிக்கு உடனடி நிவாரணம் ஏதும் இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 ஆம் ஆண்டின் ஜனவரி 26 ஆம் திகதி ஒருநாள் மட்டும் 80,000 பணியிடங்கள் குறைக்கப்பட்டன. பெப்ரவரியில் அதைவிடக் குறைவான அளவிலேயே வேலை இழப்பு ஏற்பட்டது.

பெப்ரவரியில் சுரங்கத்துறையில் பெரும் நிறுவனமான ஆங்லோ அமெரிக்கன் 19,000 பணியாளர்களைக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தது. ஜப்பானின் பனாசோனிக் நிறுவனம் 15,000 பணியிடங்களைக் குறைத்தது. இதுதவிர ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் 10,000 பணியாளர்களையும் நோர்ட்டல் நிறுவனம் 3,200 பணியாளர்களையும் வேலையை விட்டு நிறுத்தியது.

இதேபோன்று குட் இயர் நிறுவனம் 5,000 பணியாளர்களையும் மைக்ரான் 2,000 பணியாளர்களையும் யு.பி.எஸ். 1,600 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது. சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த பணிநீக்கம் தொடரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாலையின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற புலிகளின் 10 படகுகள் படையினரால் நிர்மூலம்

முல்லைத்தீவு, சாலையின் தென்பகுதிக்குள் ஊடுருவ முயன்ற புலிகளின் படகுகளை இலக்கு வைத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் பத்து படகுகள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. படையினரால் நிர்மூலமாக்கப்பட்ட படகுகளில் தற்கொலை படகுகள் நான்கும் அடங்குவதாக இராணுவத்தின் 55வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவு 8.00 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 3.30 மணி வரை இரு தரப்பினருக்குமிடையில் கடும் மோதல் இடம்பெற்றதாக தெரிவித்த அவர் இந்த நடவடிக்கைகளுக்கு கடற்புலிகளின் தலைவர் சூசை தலைமை வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதுமாத்தளன் வடக்கு பிரதேசத்தை இராணுவத்தின் 55வது படைப்பிரிவினர் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கைப்பற்றினர்.  அந்தப் பிரதேசத்திற்குள் ஊடுருவும் பொருட்டு கடற்புலிகளின் சுமார் 40 படகுகள் நேற்று முன்தினம் இரவு 8.00 மணியளவில் வருவதை அவதானித்துள்ளனர். இதனை அடுத்து புலிகளின் படகுகளை இலக்கு வைத்து இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் சாலை தென்பகுதியில் கரையோரத்தை நோக்கி புலிகளின் பத்துக்கும் மேற்பட்ட படகுகள் வேகமாக வந்துள்ளன. படையினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  படையினரின் இந்த தாக்குதலில் 10 படகுகள் நிர்மூலமாக்கப் பட்டுள்ளன. ஏனைய படகுகள் தப்பிச் சென்றுள்ளன.

இவற்றில் நான்கு தற்கொலை படகுகள் பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளன என்றும் பிரிகேடியர் பிரசன்ன சில்வா தெரிவித்தார்.

இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். – தமிழ் பெளத்தர்கள் ஒரு பார்வை. : நோர்வே நக்கீரா

Thuparamaya_Dagobaமுப்பது வருடங்களுக்கு மேலாக விழும் பிணங்ளை பிழை பிழையாக எண்ணியே கணக்குப் படிகிறார்கள் எங்கள் பிள்ளைகள். ஆமியில் ஒரு பிணம் இரண்டாகவும், தமிழ் பிணம் அரையாகவுமே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கு என்னவழுத்தமோ யாரறிவார். அரசும் அதிகாரங்களும் ஆமிப் பிணங்களைக் காற்பங்காகவும் தமிழர் பிணங்களை தலைக்கு நான்கு மேலாகவும் கணக்கெடுத்து வரவு வைக்கிறது. புதிய கணித மேதைகள் எங்கள் நாட்டில் இப்படி உருவாகிறார்கள். வாழ்க கணிதம்.

இலங்கையில் போரானது அடிப்படையில் அர்த்தமற்ற கணக்கு என்பதை எத்தனைபேர் அறிவார்கள். இதை முதலில் சிங்கள அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அரசு அழிக்க நினைப்பதும் அழிப்பதுவும் தமதுடன் பிறப்புக்களான தமிழர்களையே.

காலங்காலமாக சிங்கள அரசியல் நலனுக்காகவும், சிங்கள நலனுக்காகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதே மகாவம்சம். திறந்த மனங்கொண்டவர்களால் இதைத் திருத்தியமைக்கக்கூட முடியவில்லை. தேசியம் தேசியம் என தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கட்டியெழுப்பியது துவேசத்தையும் பிரிவினையையும் இனவிரோதங்களையுமே.

இலங்கை பல இராசதானிகளை காலங்காலமாகக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவை யாழ்பாண, கோட்டை, கண்டி இராச்சியங்களாகும். சில காலகட்டங்களில் தென்னிந்திய தமிழ் அரசுகள் முக்கியமாக சோழ பாண்டிய அரசுகள் இலங்கையில் கோலோச்சியுள்ளன. சிங்களவர் தம்மை ஆரியரென்றும் உயர்ந்தவர்கள் என்றும் மகாவம்சம் கூறிக்கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. விஜயன் வடஇந்தியாவில் இருந்து வந்தான் என்றும் அவன் இங்குள்ள கறுப்பும், கட்டையுமான வேடுவப் பெண்ணை மணந்தான் என்றும் கட்டுக்கதைகளை விட்டு இலங்கையில் ஒர் அர்த்தமற்ற இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

விஜயனும், நண்பர்களும் துஸ்டர்கள் என்று ஒரிசார், பீகார் போன்ற இந்திய மேற்குப் பகுதியில் இருந்து அரசனான விஜயன் தந்தையால் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் இலங்கையில் கரையொதுங்கி வேடுவகுலத்தை திருமணம் செய்ததால் சிங்களவினம் உருவானது என்பது ஒருகதை. நல்ல உயரமும், அழகும், பராக்கிரமமும் கொண்ட இந்திய விஜயனும் நண்பர்களும் இப்படிப்பட்டு கறுப்பும் குள்ளமான குவேனியையும் வேடுவிச்சிகளையும் கல்யாணம் கட்டினார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிறதா? தவித்தவாய்க்குத் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மை….?

மதமாற்றங்கள் :
தேவநம்பியதீசன் எனும் இந்து மன்னன் வேட்டையாடிக் கொண்டு இருக்கும் போது ஒருகுரல் கேட்டுத் திரும்பினான். அந்தக் குரல் கூறியது ”மானைத் தொடரும் மன்னரே மதியத் தொடர்வீராக” இது ஒரு பிச்சுவின் குரல். இதனை அடுத்து பல மூளைச்சலவையின் பின் தீசன் புத்தனானான் அவனைத் தொடர்ந்து அவன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களும் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

புத்தமதமானது சாம்பிராட் அசோகனின் காலத்தில் அல்லது அதற்குப்பின்தான் இலங்கைக்கு வந்திருக்க முடியும். அப்போது இலங்கையில் வேறு ஒருமதம் பிளக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத்தவர்கள் என்று வாதிடுவார்களானால் இவர்கள் அசோகன் காலத்துக்குப் பிந்தியவர்கள் என்பது உறுதி. இதன் பிரகாரம் சிங்கள இனம் மட்டுமல்ல மதமும் வந்தேறியதே.

சுமார் 13ம் நூற்றாண்டுகளில் வடபகுதியான யாழ்பாணத்தில் தொற்றுநோய் காரணமாக பெருந்தொகையான மக்கள் அழிந்தார்கள். இதனால் யாழ் மன்னன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து குடியும் குடித்தனமுமாக தமிழர்களை யாழ்பாணத்தில் குடியேற்றினான். இதனால்தான் யாழ்பாணப்பகுதியில் வாழ்பவர்கள் பேசுவது சிலவேளை மலையாளிகள் பேசுவதுபோல் இருக்கிறது என்று இந்தியத் தமிழர்கள் சொல்வார்கள். சிங்கள மக்களும் அரசும் தமிழர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் முன்பே வந்து நாடு பிடித்தவர்கள் உரிமையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். இதுவே சிங்களவரின் வெறுவாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகிற்று.

இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் புத்தகாப்பியங்கள் என்பதினூடாகவும் புத்தமதம் தமிழுக்கு அன்நியமில்லை என்பதும் நிரூபணமாகிறது. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பலபகுதிகளில் புத்தமதத்தைச் சார்ந்து இருந்துள்ளனர். ஒரே மொழியில் பலமதம் என்பது இயற்கையான ஒன்றென்பது கண்ணூடு. இதே போன்று தமிழ்மொழியைக் கொண்ட பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே காலத்திலேயே யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

யாழ்பாணத்தில் மாதகலுக்கருகில் சம்பில்துறை எனும் சிறிய கடற்கரைக் கிராமம் உள்ளது. அது ஒரு துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். சம்பில்துறை எனும் பெயரிலேயே அது துறைமுகம் என்பது துலங்குகிறது. அங்கேதான் சங்கமித் திரை எனும் பிச்சுணி வந்து இறங்கினாள் என்று சரித்திரம் கூறுகிறது. 80 களில் இக்கிராமத்துக் கடற்கரையில் அன்று நாம் சென்று குளிப்பது வளக்கம். அங்கே ஒரு கற்தூண்வளைவு வீழ்ந்து கிடந்தது. அதுதான் சங்கமித்திரை வளைவுவாகும். அவள் கொண்டுவந்த வெள்ளரசுதான் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் அன்று நின்றது இன்று நிற்கிறதோ தெரியவில்லை. கல்வளைவு வைக்கும் அழவிற்கு யாழ்பாணத்தில் தமிழர்களும் அரசும் புத்தமத்தைச் சார்ந்திருந்தார்கள் அல்லது வரவேற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

புத்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமெங்கும் சிங்களவர்தான் இருந்தார்கள் என்று எண்ணுவதும், விவாதிப்பதும் குருட்டுத்தனமானது. புத்தமதம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது குருட்டு விவாதமே. புத்தம்சார்ந்த மணிமேகலையின் கதையைக் காவிமாக எழுதிய இளங்கோவடிகள் மலையாளப் பகுதியில் இருந்தே அதை எழுதினார் அதை ஏன் தமிழில் எழுதினார்? மலையாளத்தில் எழுதவில்லை? இன்று மணிமேகலை தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளமெனும் மொழி இல்லாது இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சி மொழியில்லாது இருந்திருக்கலாம். பௌத்தம் தமிழுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அன்று இருந்திருக்கிறது என்பது சான்று.

உங்கள் மனங்களில் தமிழர்களும் இந்துமதம் எப்படி என்று கேள்வி எழலாம். தமிழர்கள் ஒரு காலத்தில் சிவனை, முருகன், வைரவர், காளி, வீரபத்திரர்களை வணங்கும் சைவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சிவனை வணங்கும் சைவமானது சமணம், வைஸ்ணவம் புத்தம் போன்ற மதங்களால் அழிக்கப்பட்டு வந்தது. முக்கியமாக புத்தமத வருகையால் சைவம் முற்றாக அழியும் நிலைக்கத் தள்ளப்பட்டது. அரசர்கள் மதம் மாறும் வேளை மக்கள் விரும்பியும், விரும்பாமலும் மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள். சமயகுரவர்கள் தான் மீண்டும் சைவசமயத்தை தென்னிந்தியாவில் கட்டி எழுப்பினார்கள் என்பது தான் வரலாறு.

இலங்கையில் தென்னிந்தியாவின் பாதிப்பு என்றும், ஏன் இன்றும் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. சைவ மதவழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மேற்கு இந்தியாவிலும் இன்றைய பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதிலும் இருந்த இந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ கரப்பா எனுமிடங்களில் நாகரீகமடைந்த ஒரு இனமாக வாழ்ந்தார்கள். ஆரிய வருகை, படையெடுப்புக்களால் வேடுவத்தன்மை குன்றிய திராவிடர்களான தமிழர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் கீழ்பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்பது சரித்திரம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் தமிழர்கள் இயற்கையையும் சிலர் சிவலிங்கத்தையும் வணங்கினார்கள் என்று அறியப்படுகிறது. இது பற்றிய ஆய்வு இக்கட்டுரைக்கு முக்கியமற்றது.

மதவருகைகளாலும் அரசர்களின் மதமாற்றங்களாலும் மொழியில் பல மாற்றம்களும் புதிய மொழிகளும் உருவாயின. உதாரணம் திராவிடமொழிகளான கர்னடம், மலையாளம், தெலுங்கு, துலு. தமிழ்தாய் வணக்கப்பாடலில் இதைக் கேட்கலாம் இந்தத் துலுவே உலகஅழகி ஐஸ்வரியாவின் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திராவிட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்தே உருவாயின. இந்து, பௌத்த மதங்களின் வருகைகளே மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு மொழிதானே இனத்தை வரையறுக்கிறது. இதனால் புதிய இனங்கள் உருவாயின. தமிழும் 70 விகித வடமொழியும் சேர்ந்தே தெலுங்கும், 40விகித வடமொழியால் மலையாளமும் உருவாகியது. இதே போன்றே இலங்கையில் சிங்களமும் உருவாகியது என்பதை அறிக. பௌத்தமதத்தின் மந்திரங்களான பிரித்துகள்கள் முக்கியமாக வடமொழியிலும் பாழியிலும் தான் இருந்தது. பாழிமொழி இருந்த இடம் தெரியாது வடமொழிக்கு முன்னரே செத்துவிட்டது. இப்படியான மொழிக் கலப்புக்களால்தான் புதிய இனங்கள் உருவாயின.

இந்தியா பல்லின மக்களையும் மதங்களையும் கொண்ட ஒருநாடு. மதங்கள்தானே உலகில் போர்களின் வித்தாக இருக்கிறது. சரி சிங்களவர் சொல்வது போல் அவர்கள் வடநாட்டில் இருந்து வந்திருந்தால் சிங்கள மொழியில் எப்படித் தமிழின் ஆளுமை ஆழமாக அமைந்திருக்கும். ஆக உண்மை என்னவெனில் மதம் மட்டுமே வடமொழி மந்திரங்களுடன் (பிரித்துகள்களுடன்) வந்ததே தவிர மக்களான திராவிடத் தமிழ் இயக்கர் நாகர் அங்கேயே இருந்தார்கள் என்பதே உண்மை. சிங்களவர்கள் வடவிந்தியாவில் இருந்துதான் வந்தார்கள் எனின் இவர்கள் இலங்கையின் ஆதிகுடியல்லர். இங்கே திராவிடர் ஆரியர் என்ற கதைக்கே இங்கு இடமில்லாது போகிறது. ஆரியம் என்பது ஒருநிலையற்ற சமன்பாடாகும். கிட்லரும் ஒரு சாதிப்பட்டியல் வைத்திருந்தான். அதில் யூதரும் கீழத்தேயத்தவர்களும் நாய்களுக்குக் கீழான சாதியென்றே குறிப்பிட்டிருக்கிறான்.

கடைசி மன்னன்:
இலங்கையின் கண்டி மன்னனும் கடைசி மன்னன் தமிழனான விக்கிரமராஜசிங்கன் என்பது யாவரும் அறிந்ததே. இவனுடைய இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவனை சிறீவிக்கிரமராஜாசிங்கன் என்று அழைப்பது வழக்கம். சிங்களவர் வாழும் பகுதி கண்டி, அங்கே சிங்களவர் தான் வாழ்ந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். முழுக்க முழுக்க சிங்களவர் வாழும் பகுதியில் எப்படி ஒரு தமிழரசன் உருவாகியிருக்க முடியும். இவன் எங்கிருந்து தன்படையுடன் குதித்தான் என்று கூற முடியுமா? கப்பம் கட்டாத சிங்களச் சிற்றரசர்களை சிறைப்பிடித்து அவர்கள் தலையை வெட்டி உரலில் இட்டு அவர்கள் மனைவியரைக் கொண்டு இடிப்பித்தானென்று கூறப்படுகிறது.

இயக்கர் – நாகர்:
மனிதன் குரங்கிலிருந்து வந்தாலும் சரி, மனிதனில் இருந்து வந்தாலும் சரி ஒரு சங்கிலித் தொடராய் மரபணுச்சங்கிலி என்றும் இருக்கும். இயக்கர் நாகர் என்று இரண்டு இனங்கள் இலங்கையில் இருந்ததென்றால் அவை ஒன்றுக்கொன்று இரத்த உறவுடன்தான் இருந்திருக்க முடியும். வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இங்கும் சிங்களவரும் தமிழரும் இரத்த தொடர்புடையவர்கள் என்பது தெளிவாகியது. தந்தை வேறானாலும் தாய் ஒன்றாக இருந்திருக்கலாம். இயக்கருடன் இந்தியாவின் வடபகுதியில் இருந்து தந்தையால் துஸ்டர்கள் எனத்துரத்திவிடப்பட்ட விஜயனும் நண்பர்களும் கலந்து வந்த வம்சம்தான் சிங்களவர் என்று மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறாயின் இவர்கள் வந்தேறு குடிகள் என்பது உறுதியாகிறது. பீகார் அசம் போன்ற பகுதிகளின் சிங்கக்கொடி முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.

இதேபோன்றே தமிழர்கள் நாகரின் வம்சாவளி என்பதற்கும் சிலசான்றுகளை நாம் முன்வைக்கலாம். இந்தியாவின் தென்பகுதியில் நாகர்பட்டினம், நாகர்கோவில் என்றுண்டு. இதேபோல் இலங்கையின் வடபகுதியில் நாகர்கோவில் உண்டு. இந்தியாவில் திருநெல்வேலி போல் யாழ்பாணத்தில் திருநெல்வேலி என்றொருகிராமம் உண்டு. உணவுமுறை கலாச்சரப் பின்ணணிகளில் நாம் தென்னிந்தியரை ஒத்திருப்பது முக்கிய சான்றாகிறது
 
பூகோளமாற்றம்:
இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நடந்தே போகக்கூடிய தரைவழிப்பாதை இருந்தது. இப்போ இராமாயணம், பதினேழாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இராமபாலம் என்பது பற்றி நீங்கள் வினாவலாம். ஆம் அது வெறும் கட்டுக்கதையே. தரைவழிப்பாதை இருக்கும் போது எதற்குப் பாலம்? ஆபிரிக்காவில் இருந்து அஸ்திரேலியா வரையிலான நாடுகள் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது என்பது ஆய்வு. இதைக் குமரிக்கண்டம் என்றும் லெமூரியாக்கண்டம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில் சுனாமி, நிலக்கீழ் அசைவுகளால் கண்டம் கடலுடன் இழுபட்டுப் பிரிந்தது. அப்போ இலங்கைத்தீவு மட்டும் இந்தியாவின் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது, இருக்கிறது.

பூகோளரீதியாக இலங்கை இந்தியா ஒரே நாடாகவே இருந்தது சான்று. பல சுனாமிகளாலும், நிலவசைவுகளாலும், கடலரிப்புக்களாலும் இலங்கை மீண்டும் காலப் போக்கில் பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. பூகோளரீதியாக இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கை முழுவதும் திராவிடரே இருந்தார்கள். இயக்கர்களும் திராவிடரே. திராவிடரைத் தவிர இன்னொரு இனம் அங்கு வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு புதிய இனம் உருவாகியிருக்குமானால், அது இலங்கையில் தென்பகுதிகளில் வாழ்ந்த திராவிட இயக்கருடன் கலந்ததாகவே இருக்க முடியும்.

அரசியல் பிழைப்புக்காக வோட்டு வங்கிகளை நிரப்ப இனத்தை சாதியையொரு கருவியாகப் பாவித்ததின் பலனே இன்றைய இலங்கை அழிவாகும். அன்று அரசியலில் தலைமை தாங்கிய எல்லா சிங்கள அரசியல்வாதிகளின் பேரன் பூட்டன் எல்லாம் தமிழர்களாகவே உள்ளார்கள். உ.ம்: டட்லிசெனநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா..!! இல்லையென்று கூறமுடியுமா?

இயக்கர் நாகர் என்ற இருவேறுபட்ட குழுக்கள் சாதிவழிகள் இருந்தனவென்றால் சிங்களவர் தமிழர்களை வைத்து மரபணுப்பரிசோதனை எடுத்தால் உண்மை புலனாகும். ஒரே நாடு என்று தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு இதைச் செய்யுமா? இந்தச் சோதனையில் அடிப்படை நேர்மை மிக முக்கியமானது. இந்தப் பரிசோதனையை உலக நாடுகள் நடுநிலையுடன் செய்து எடுத்து வைத்த விஞ்ஞான முடிவை வைத்துக்கொண்டு போரைத் தொடர்வதா விடுவதா? என்பதை அரசும் புலிகளும் தீர்மானிக்கட்டும். இதற்குப் பின்பாவது நாங்கள் இது வரை கொன்றது எமது சகோதரங்களா- இரத்த உறவா? இல்லையா? என்பது புரியும். செய்யுமா அரசு? உதவுமா உலக நாடுகள்? ஓரு கூட்டு முடிவையும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மட்டுமல்ல இனிவரும் காலங்களில் வரவிருக்கும் இன்கலவரங்களைத் தடுப்பதற்குமாக இதைச் செய்வீர்களா? போலித்தனமான, பொய்மையும் இதயசுத்தியுமில்லாத சமாதான உடன்படிக்கைகள், வட்ட மேசை மகாநாடுகள் எமக்கு வேண்டாம். தேசியம் எமது நாட்டில் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்குமானால் இன்று எமக்கும் இலங்கைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

காலங்காலமாக பேச்சுவார்த்தை, வட்டமேசை மகாநாடுகள் எந்தப் பலனையும் அழிக்கவில்லை, அழிக்கப் போவதும் இல்லை. குத்து வெட்டுக்குரோதங்களை மனங்களில் வளர்த்துவிட்டு ஒரேநாடு, ஜனநாயமென்று கதைப்பதும், கொல்வதும் அழிவையே தொடர்ந்து ஏற்படுத்தும். இன்று அரசு புலிகளை அழிக்கலாம். நாளை தோன்றும் புரட்சியையும் இனக்கலவரங்களையும் தடுக்க முடியாது. ஒரேநாடு என்றால் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரசு முன்வைப்பது முக்கியம். ஒற்றுமைக்கான அடித்தளங்களை இருபகுதிகளில் கட்டி எழுப்புவதுடன் மக்களிடையே நாம் இலங்கையர் என்ற தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தாது ஒர் ஐக்கிய இலங்கையை நினைத்தும் பார்க்க இயலாது.

மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என்று முழக்கமிடும் இராஜபக்ச ஐக்கிய இலங்கை பற்றி எப்படிக் கதைக்க முடியும். துவேசப் பிக்குகளின் கட்டுக்கதைப்படி மகாவம்சம் கூறுகிறது தமிழன் ஈனச்சாதி கொல்வது பாவம் இல்லை என்கிறது. புத்தமத்தில் முதலும் மூலமுமே கொல்லாமையாகும். கொல்லு எனக்கூறும் மகாவம்சம் எப்படி ஒரு புத்தநூலாக இருக்க முடியும்?  புத்தனின் பல்லைப் பிடுங்கிவந்தவர்களா தமிழர்களை விடப்போகிறார்கள். இப்படிப்பட்ட துவேசத்தை வளர்க்கும் மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என முழக்கமிடும் இராஜபக்சவால் நாட்டில் எப்படி ஒரு அமைதியான ஐக்கிய இலங்கையை நிறுவமுடியும். இது எமக்குக் காட்டும் சமிக்ஞையானது தமிழ்பேசம் தமிழர்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்படுவார்கள் என்பதாகும்.

இன்று யாழ்ப்பாணத்தை துப்பாக்கி முனையில் வாய்மூடி மௌனியாய் வைத்திருப்பது போன்று தொடர்ந்தும் வைத்திருக்க இயலாது. இன்று புலிகளை அழிக்கலாம், ஆனால் வெகுசனம் வெகுண்டெழுந்தால் எல்லாம் தவிடுபொடியாகும். இன்றைய இலங்கையின் அரசதலைவர் தன்னரசியல் வாழ்வைத் தக்கவைக்க புலிகளை அழிப்பது என்று தமிழர்களையும் ஏழை எளிய சிங்களச் சிப்பாய்களையும் களபலியெடுத்தும், கொடுத்தும் கொண்டு இருக்கிறார். சிங்கள மக்களிடையே புரையொடிக்கிடக்கும் பொருளாதார, வேலையின்மைப் பிரச்சனைகளை மறைப்பதற்கும், ஏமாற்றுவதற்கும் தமிழர், புலியழிப்பு போர் நடக்கிறது. இலங்கையானது அயல் நாடுகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஏலம்போட்டு விற்று, ஆயுதங்கள் பெற்று வங்கி பெட்டிகள் எல்லாம் நிரப்பி முடிந்துவிட்டது. அடுத்த தேர்தலில் வெல்லுவதும் உறுதியாயிற்று.

புலிகளை ஓரங்கட்டியபின் சிங்கள மக்களிடையே எழவிருக்கும் வெகுஜனப்போராட்டத்துக்கு முகம்கொடுக்க அரசு தயாரா? ஒரே நாடு என்பவர்கள் ஒரேமக்கள், பொதுவேலைத்திட்டம் துவேச அழிப்பு, அது பற்றிய விளக்கங்கள், சட்டதிருத்தங்கள் என்ற குணங்குறிகளைக் காட்டுங்கள். அன்றேல் சிங்கள, தமிழ் பகுதிகளில் எழவிருக்கும் புதிய ஆயுதப் புரட்சிகளுக்கு இனிவரும் அரசுகள் முகம் கொடுக்க முடியாத நிலைவரும். இது ஒரு இலங்கைக்கான எதிர்வு கூறலாகும்.
 
தமிழ்மக்கள் புரட்சிக்கும் போருக்கும் பழக்கப்பட்டவர்கள் பயிற்றப்பட்டவர்கள். எழுச்சி என்று வரும்போது புரட்சியடைய நேரம் காலம் எடுக்காது. புலிகளை முற்றாக அழிப்பது மிகக்கடினம். அப்படி அரசால் முடிந்தால் அடுத்து இலங்கை அரசு எதிர்கொள்வது ஒரு தேசிய பொதுவுடமைக்கான ஆயுதப்புரட்சி என்பதை யாரும் மறுக்கக்கூடாது. இதை சிங்கள தமிழ்மக்கள் இணைந்தே செய்வார்கள் என்பது திண்ணம்.

சரித்திரரீதியாகவும், விஞ்ஞான ஆய்வுரீதியாகவும், தர்க்கரீதியாகவும் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பது உண்மை. புத்த சின்னங்கள் இருக்கும் இடமோ அன்றி அகழ்வுகளில் எடுக்கப்படும் இடமோ சிங்களவர்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இக்கட்டுரையில் தமிழ்பேசும் முஸ்லீங்களைத் தனியாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. இவர்களும் தமிழர்கள்தான் இஸ்லாத்தை மதமாகக் கொண்டுள்ளனர்.

இன்று அரசு நடத்துவது ஒரு குருட்டுத்தனமான அரசியலும், தூரநோக்கற்ற சுயலாப வியாபாரமுமே. சிங்கள மக்களை ஏமாற்றும் உத்தி. மகாவம்சத்தை நிறைவேற்றுவதன் ஊடாக புலியழிப்பு போர் எனும் போர்வையில் தமிழின அழிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு இனச்சுத்திகரிப்பாகும்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது : சம்பிக்க ரணவக்க

champika.jpgவிடு தலைப் புலிகளையும் பிரபாகரனையும் பாதுகாக்க இந்தியா பலாத்காரத்தைப் பிரயோகிக்குமானால் 1987 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலை உருவாகும். தேசப்பற்றாளர்கள் இந்தியாவுக்கு எதிராக வீதியில் இறங்குவார்கள். சீனா, ரஷ்யா, வியட்நாம் ஆகிய நாடுகளின் ஆதரவு எமக்கிருக்கின்றது. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் எந்தப் பிரேரணை கொண்டு வந்தாலும் இலங்கையை அசைக்க முடியாது என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அறிவித்துள்ள யுத்த நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஏற்க வேண்டுமென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளமை குறித்தும் ஐ.நா. சபையில் ஹோம்ஸ் வெளியிட்ட தகவல்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் நிலைப்பாட்டைத் தெரிவிக்கையிலேயே சுற்றுச் சூழல் மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைத் தெரிவித்தார்

தமிழக அரசியல்வாதிகளுக்கும் புலிகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகள் அம்பலம் – பாதுகாப்பு அமைச்சு

tamil_ltte_media-01.pngபுதுக்குடியிருப்பு பிரதேசத்தில் படையினர் கைப்பற்றிய புலிகளின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப நிலையத்தில் தேடுதல் நடத்திய படையினர் புலிகளுக்கும் தமிழக அரசியல் தலைவர்களுக்கும் இடையில் உள்ள நெருங்கிய உறவுகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் கண்டுபிடித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வன்னி பயங்கரவாத நடவடிக்கைகளில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு உள்ள நேரடித் தொடர்புகளை இந்தப் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.  திராவிட மறுமலாச்சிக் கழகத் தலைவர் வைகோ புலிகளின் சீருடையில் பிரபாகரனுடன் கைத்துப்பாக்கி  சுடும் நிலையில் படங்களில் காணப்படுகிறார்.

பழ. நெடுமாறன் உட்பட மற்றும் தமிழக அரசியல் முக்கியஸ்தர்களின் படங்களையும் படையினர் இங்கு கண்டெடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவத்தினால் புலிகள் தோற்கடிப்பதைதத் தடுக்க வைக்கோ பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டுவருவது தமிழ் மக்களைப் பாதுகாக்கவல்ல, வேறு காரணங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தமிழ் ஈழத்துக்கான தேசிய தொலைக் காட்சி சேவையொன்றை நடத்துவதற்கான  வீடியோ பதிவுகளையும் படையினர் கைப்பற்றியுள்ளதாகவும் புலிகள் தமது ஒளிபரப்பை மூன்று மொழிகளிலும் செய்மதியூடாக மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

tamil_ltte_media2.png

tamil_ltte_media4.png

முல்லைத்தீவிலிருந்து திருமலைக்கு இதுவரை அழைத்துவரப்பட்டோர் தொகை 2,396

trico.gifமுல்லைத் தீவிலிருந்து இதுவரை திருகோணமலைக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் கப்பல் மூலம் 2,396 பேர் கூட்டி வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் இடம்பெறும் தாக்குதல்களில் படுகாயமடைந்தோரும் அவசர நோயாளிகளும் இவர்களுக்கான உதவியாளர்களுமே இவ்வாறு கப்பல் மூலம் திருகோணமலைக்கு கூட்டிவரப்பட்டுள்ளனர்.

திருமலைக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 12 தாய்மாருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் முல்லைத்தீவுக்குச் சென்ற சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் “கிறீன் ஓசன்’ கப்பலில் 282 பேர் புதுமாத்தளன் பகுதியிலிருந்து ஆறாவது தொகுதியாக திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக திருமலை சுகாதாரப் பணிப்பாளர் தெரிவித்தார்.

கடந்த 11 ஆம் திகதியிலிருந்து ஐந்து தடவைகளாக இதுவரை நோயாளர்கள், காயங்களுக்கு இலக்கானோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த உதவியாளர்கள் உட்பட மொத்தமாக 2000 இற்கும் மேற்பட்டோர் திருகோணமலைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்களில் 16 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 12 தாய்மாருக்கு குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அழைத்து வரப்படும் நோயாளர்களும், காயமடைந்தவர்களும் திருமலை, வைத்தியசாலை தவிர மேலதிகமாக கந்தளாய், பொலநறுவை, மன்னார், வவுனியா வைத்தியசாலைகளிலும் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

வன்னி வைத்தியசாலைகளுக்கு போதுமானளவு மருந்துகள்

medicine.jpgவவுனியா, திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள அரசாங்க ஆஸ்பத்திரிகளுக்கென போதியளவு மருந்துப் பொருட்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சு வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அதேநேரம் புலிகளின்பிடியில் சிக்குண்டுள்ள மக்களுக்கென புதுமாத்தளன் ஆஸ்பத்திரி உட்பட அப்பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான மருந்துப் பொருட்கள் ஏற்கனவே இரண்டு தடவைகள் கப்பல் மூலம் திருகோணமலையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அஜித் மெண்டிஸ் நேற்றுத் தெரிவித்தார்.

இந்த ஆஸ்பத்திரிகளுக்கு அடுத்துவரும் ஓரிரு தினங்களிலும் கப்பல் மூலம் மருந்துப் பொருட்கள் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேற்று (01) அழைத்துச் செல்லப்பட்டுள்ள ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்துத் தெரிவித்த இராணுவ உயரதிகாரி, படகுகள் மற்றும் வேறு மார்க்கங்களினூடாக இதுவரை 2233 பேர் யாழ். குடாநாட்டுக்கு வந்துள்ளதாக கூறினார்.

அவர்கள் கோப்பாய், மிருசுவில், குருநகர் மற்றும் கொடிகாமம் பகுதிகளில் உள்ள 4 நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லைத்தீவில் இருந்து வரும் மக்களின் தொகை அதிகரிக்கும் பட்சத்தில் மேலும் இரண்டு நலன்புரி முகாம்கள் கொடிகாமத்தின் மற்றொரு பகுதியிலும் கைதடியிலும் அமைக்கப்பட உள்ளன. யாழ்ப்பாணத்துக்கு வந்துள்ள மக்களுக்கு தங்குமிட வசதி, மருத்துவ வசதி, உலர் உணவு அடங்கலான சகல வசதிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அவர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஈழப்பிரச்சினைக்கான போராட்டமா? திமுக ஆட்சிக்கெதிரான போராட்டமா-கருணாநிதி

karunanithi.jpgஉச்ச நீதிமன்றம் விசாரணைக் கமிட்டியை அமைத்துள்ள சூழ்நிலையில் வழக்கறிஞர்கள் பொறுமை காக்கக் கூடாதா என முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து வெளியிட்ட அறிக்கை : சென்னை உயர் நீதிமன்றத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு அறப்போர் என்று வழக்கறிஞர்கள் தொடங்கினர். பிறகு நீதிமன்றத்துக்குள் சுப்பிரமணியன் சுவாமி மீது வழக்கறிஞர்கள் முட்டை வீசியதாக வழக்கு அந்த வழக்கின் விஸ்வரூபமாக காவல்துறை-வழக்கறிஞர்கள் மோதல் என வன்முறைகள் நடைபெற்று, இறுதியாக உச்ச நீதிமன்றம் வரை இப்பிரச்னை சென்றுள்ளது.

தி.மு.க. ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் உதறித் தள்ளிவிட்டது. சில காவல்துறை அதிகாரிகளை உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சென்னையிலிருந்து வேறு ஊர்களுக்கு இந்த அரசு மாற்றிவிட்டது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் ஸ்ரீகிருஸ்ணா தலைமையில் விசாரணைக் கமிட்டியையும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. அந்த கமிட்டியின் முடிவை எதிர்பார்த்து அரசு காத்திருக்கிறது. வழக்கறிஞர்கள் மட்டும் பொறுமை காட்டலாகாதா? குறிப்பிடப்படும் இழப்பீடு தருவதற்கும், அதனை இருசாராரும் பெறுவதற்கும் அரசு தொகையும் ஒதுக்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளையெல்லாம் செயல்படுத்த அரசு தயாராக உள்ளது.

அதேபோல் உச்ச நீதிமன்ற கருத்தை ஏற்று வழக்கறிஞர்கள் அனைவரும் மார்ச் 2-ம் தேதி நீதி மன்றங்களுக்கு செல்வதுதானே முறையாகும். இல்லையெனில், இது இலங்கைத் தமிழர் பிரச்னைக்கான போராட்டமல்ல இங்குள்ள தி.மு.க. ஆட்சிக்கு எதிரான போராட்டம் என்றுதான் உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது என கருணாநிதி கூறியுள்ளார்.

தேர்தல் திகதி எக்காரணம் கொண்டும் மாற்றப்படாது – மேலதிக தேர்தல் ஆணையாளர்

sri-lanka-election-01.jpgஏப்ரல் 25ம் திகதியே மேல் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும். எக்காரணம் கொண்டும் தேர்தல் திகதி மாற்றப்படாது என மேலதிக தேர்தல் ஆணையாளர் டபிள்யூ. பி. சுமனசிரி நேற்று தெரிவித்தார்.

தேர்தல் திகதியை மாற்றுமாறு ஐ. தே. க., ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடங்களான பல எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையாளரை கோரியுள்ளன. இது குறித்து வினவிய போதே மேலதிக ஆணையாளர் மேற்கண்வாறு கூறினார்.

சகல விடயங்களையும் ஆராய்ந்த பின்னரே தேர்தல் ஆணையாளர் தேர்தல் தினத்தை முடிவு செய்துள்ளார். தமிழ்- சிங்கள புதுவருடம் மற்றும் விசேட தினங்கள் குறித்து ஆராய்ந்த பின் பொருத்தமான திகதியை தேர்தல் ஆணையாளர் முடிவு செய்ததாகவும் மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.

வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி திகதியில் இருந்து 5 வாரங்களுக்கும் 8 வாரங்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தேர்தல் திகதி அறிவி க்கப்பட வேண்டும். தேர்தல் சட்ட விதிகளின் படியே திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றம் செய்யும் திட்டமெதுவும் கிடையாது எனவும் அவர் கூறினார்.