இருபது20 உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியதற்காக இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி இந்திய ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். தோல்விக்கு பின்னர் தோனி கூறியதாவது,
நாங்கள் சரியாக விளையாடவில்லை. இதனால் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டு விட்டோம். இதனால் ரசிகர்கள் மிகுந்த கோபத்தில் இருப்பார்கள் என்பது எனக்கு தெரியும். இதற்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இந்திய ரசிகர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள். இது அவர்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக இருக்கும். மேற்கிந்திய தீவுகளில் நடைபெறும் அடுத்த உலகக் கிண்ணத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்போம் என்று உறுதியளிக்கிறேன். 2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் (50 ஓவர்) நாங்கள் தோற்றது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் சோகமயமானது ஏமாற்றத்தை தந்தது. அதே போன்று தற்போது ஏமாற்றம் அடைகிறேன். பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியை மிகவும் சிறப்பாக செய்தனர். துடுப்பாட்ட வீரர்கள்தான் எடுபடவில்லை. 154 ஓட்ட இலக்கு என்பது எளிதானதுதான். துடுப்பாட்ட வீரர்கள் சரியாக ஆடவில்லை. இதுவே தோல்விக்கு காரணம்.