செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வடக்கில் அபிவிருத்தி பணிகளை துரிதமாக்க விசேட செயலணி – 7ம் திகதி முதல் நடைமுறை

canderasri1.jpgவட மாகாணத்தின் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்திப் பணிகளைத் துரிதமாக்கும் வகையில் நான்கு பேர் கொண்ட விசேட செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

தன்னால் நியமிக்கப்பட்டுள்ள இந்த செயலணி, எதிர்வரும் 7ம் திகதி தொடக்கம் தமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

வட மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (மாகாண பொது நிர்வாக) இராசநாயகம் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த செயலணியில் மாகாண கைத்தொழில் பணிப்பாளர், கிராமிய அபிவிருத்தி பணிப்பாளர், கூட்டுறவு பணிப்பாளர் ஆகியோர் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் கைத்தொழில் கூட்டுறவுத் துறை மற்றும் கிராமிய அபிவிருத்தி பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் அடிப்படையில் இந்த செயலணி தமது திட்ட அறிக்கையை எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் தன்னிடம் சமர்ப்பிக்கவுள்ளதென்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

இந்த செயலணி இம்மாதம் 7ம் திகதி தொடக்கம் மாவட்ட ரீதியில் கூட்டுறவு கிராமிய அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானித்துள்ளது என்றார்.

இந்த செயலணி தமது அடுத்த கட்ட நடவடிக்கையாக யாழ். மாவட்டத்திலுள்ள கைத்தொழில், கிராமிய மற்றும் கூட்டுறவு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்களுக்கென விசேட செயலமர்வு ஒன்றை எதிர்வரும் 16ம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடத்தவுள்ளது.

இந்தச் செயலமர்வின் போது மூன்று துறைகளைச் சார்ந்தவர்களுக்குத் தெளிவு படுத்தப்படவுள்ளதுடன் அவர்களது குறைநிறைகளும் கேட்டறியப்படும். மேற்படி மூன்று துறைகளையும் துரிதமாக மேம்படுத்துவதற்கான சில ஆலோசனை களையும் இந்த செயலணி வழங்கவுள்ளது. இந்த செயலணி, வழங்கும் ஆலோசனைக்கு அமையவும், வேண்டுகோளுக்கமையவும் வட மாகாண சபையின் ஊடாக மேற்படி மூன்று துறைகளின் மேம்பாட்டுக்காக நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆளுநர் தெரிவித்தார்.

ஒட்டுசுட்டானில் ஓட்டுத் தொழிற்சாலை உட்பட பல்வேறு தொழிற்சாலைகள் சில தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மீன்பிடித் துறை மேம்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த செயலணியின் மூலம் செயற்பாடுகள் மேலும் துரிதப்படுத்தப்படவுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.

வடக்கில் மீளக்குடியமர்வோருக்கு புலம்பெயர்ந்தோர் உதவ முன்வர வேண்டும் – பிரதியமைச்சர் முரளிதரன்

karuna.jpgவடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கு நிரந்தர வீடுகளை அமைக்கவும் வாழ்வாதார உதவிகள், விவசாய ஊக்குவிப்புகளைப் பெற்றுக் கொடுக்கவும் புலம்பெயர்ந்துள்ள மக்கள் முன்வர வேண்டும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் வேண்டுகோள் விடுத்தார்.

2003 ஆம் ஆண்டு சமாதானப் பேச்சுக்கள் முறிவடைந்த காலகட்டத்தில் இறுதியாக பிரபாகரனுக்குத் தெரியாமல் கிளிநொச்சியை விட்டுவந்த பின்னர் முதல் முறையாக கடந்த சனிக்கிழமை கிளிநொச்சி நகருக்கு பிரதியமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) சென்றிருந்தார்.

குறிப்பாக மீளக்குடியமர்த்தப்படும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக பார்வையிடுவதற் காகவே அவர் இந்த விஜயத்தை மேற் கொண்டார். மீளக்குடியமர்த்தப்பட்ட 10 குடும்பங்களுள் ஏழு குடும்பத்தில் குடும்பத்தலைவன் இல்லாத அவல நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கணவனை இழந்து பிள்ளைகளுடன் நிற்கும் இவ்வாறான குடும்பங்களுக்கு நிரந்தர வருவாயை ஈட்டித்தரும் விதத்தில் வாழ்வாதாரத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

விவசாயம் செய்பவர்களாயின் அதற்கான உதவிகளைப் பெற்றுக்கொடுக்கவும் பிள் ளைகளின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உதவிகள் பெற்றுக்கொடுக் கப்படல் வேண்டும். முதலில் இவர்களுக்கு நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுக்க வேண்டும். இதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொள்வதே எனது அடுத்தகட்ட நடவடிக்கை என்றும் தெரிவித்தார்.

கிளிநொச்சியை விட்டு தான் இறுதியாக வரும் போது கண்ட வளமுள்ள நவீன கட்டடங்கள் நிறைந்த நகராக மீண்டும் மாற்றப்பட வேண்டும். இப்போது சோபை இழந்து போன கட்டடங்களைக் காணும் போது வேதனையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். புலம்பெயர்ந்துள்ள மக்கள் இனியாவது உண்மை நிலையை உணர்ந்து அந்த மக்களின் துயர்துடைக்க முன்வர வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் சளைக்காது நாட்டை கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி

president.jpgஎத்தகைய அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்கு சளைக்காது ஈடுகொடுத்து நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்லுவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார். இந்த நாட்டை கட்டியெழுப்பவும், அபிவிருத்தி செய்யவுமென எதிர்க்கட்சிகள் பேதங்களை மறந்து அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தினக் கூட்டம் ‘வேலைத் தளத்திற்குச் சக்தி, தொழிற்சாலைக்குப் பலம், தாய் மண்ணுக்கு சமாதானம்’ என்ற தொனிப் பொருளில் கொழும்பு மாநகர சபை மைதானத்தில் நேற்று பின்னேரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று தொழிலாளர் தினத்தை நாம் பெருமையுடனும், கெளரவமாகவும் கொண்டாடுகின்றோம். முப்பது வருட காலப் பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் பலனே இது. யுத்தம் நிலவிய காலத்தில் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். இதனை நாமறிவோம்.

பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து இந்தப் பாரிய வெற்றியைப் பெற அடித்தளமிட்டவர்கள் தொழிலாளர்கள் தான். மனிதாபிமான இராணுவ நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட சமயத்தில் வேலைத் தளத்தில் என்ன தான் பிரச்சினைகள் இருந்த போதிலும் அவற்றைப் பேசித் தீர்த்துக்கொள்வதற்குத் தொழிலாளர்கள் பெரிதும் ஒத்துழைப்பு நல்கினார்கள். அரசாங்கம் அவர்களுக்கு உரிய சந்தர்ப்பங்களில் சம்பள உயர்வுகளையும் வழங்கியது.

கடந்த கால ஆட்சியாளர்கள் அரசாங்க நிறுவனங்களில் தொழிலாளர்களை குறைப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திற்கு உடன்படிக்கை மூலம் இணங்கி இருந்தார்கள். அப்படி இருந்தும் நாம் பதவிக்கு வந்ததும் அதனைச் செய்யவில்லை. அரசாங்கத் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்து அரச துறையை வலுப்படுத்தினோம். அரச சொத்துக்கள் எதனையும் நாம் தனியார் மயப்படுத்தவில்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் லட்சக் கணக்கானோர் தொழில்களை இழந்தனர். வங்கிகள் வீழ்ச்சி அடைந்தன. இருந்தும், எமது எந்தவொரு வங்கியும் வீழ்ச்சி அடையவோ, எவரும் தொழில் இழக்கவோ இடமளிக்கவில்லை. நிதி நெருக்கடிகளிலிருந்தும், பொருளாதார வீழ்ச்சியிலிருந்தும் நிறுவனங்களையும் வங்கிகளையும் நாம் பாதுகாத்தோம். நாம் நீண்ட காலம் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட்டு வந்ததன் பயனாகவே இதனைச் செய்துகொள்ள முடிந்தது.

பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஐக்கியப்படுத்துவதற்கு பங்களிப்பு செய்தது போல் பிரிந்துள்ள உள்ளங்களை மீண்டும் ஐக்கியப்படுத்தவும் தொழிலாளர்கள் பங்களிப்பு செய்ய வேண்டும். நாட்டைப் பொருளாதார ரீதியாக அபிவிருத்தி செய்வதற்கு தொழிலாளர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. அதனை நான் எதிர்பார்க்கின்றேன். பொருளாதார அபிவிருத்திப் போராட்டத்தின் வீரர்கள் தொழிலாளர்கள் தான். இதற்கு நீங்கள் முழுமையாக ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

தொழிலாளர்கள் பலம் மிக்க சக்தி கொண்டவர்கள். அவர்களால் எந்தச் சக்தியையும் இறங்கி வரச் செய்ய முடியும். அதனால் தொழிலாளர்கள் தங்கள் பலத்தை பிழையான வழியில் பயன்படுத்தி அதனை வீணடித்து விடாது பாதுகாக்க வேண்டியது தொழிற்சங்க தலைவர்களின் பொறுப்பாகும்.

நாம் ஒரே நேரத்தில் ஐந்து துறைமுகங்களை அபிவிருத்தி செய்கின்றோம். இதேபோல், உட்கட்டமைப்பு துறைகளையும் மேம்படுத்தி வருகின்றோம். இந்நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பின்புலத்தை ஏற்படுத்த நாம் ஒருபோதும் பின்நிற்க மாட்டோம். இந்நாட்டில் அச்சம், பீதியின்றி வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துவது எமது பொறுப்பு. அமைச்சர்கள் தம்மை விடவும் நாட்டையும், நாட்டு மக்களையும் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என்பதை எதிரணியினருக்கு சொல்லி வைக்க விரும்புகின்றேன். நாட்டைக் கேலி செய்யாதீர்கள் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்ளுகின்றேன். இந்நாட்டின் அபிவிருத்திக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறுகிறேன். நாட்டு மக்கள் எமக்கு தெளிவான ஆணையை வழங்கியுள்ளார்கள். இதனை எதிரணியினர் புரிந்துகொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக எம்முடன் கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்.

இம்மேதினக் கூட்டத்தில் ஐந்து யோசனைகளும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் பிரதமர் டி. எம். ஜயரட்ன, அமைச்சர்கள் மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, சுசில் பிரேம ஜயந்த, டளஸ் அழகப்பெரும, பசில் ராஜபக்ஷ, தினேஷ் குணவர்த்தன, மேல் மாகாண ஆளுநர் எஸ். அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இ.தொ.கா. மேதின கூட்டத்தில் இரு முக்கிய பிரகடனங்கள் – மலையக பிரதிநிதித்துவம் பாதிக்காத தேர்தல் முறை

arumugam.jpgஇலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்று தலவாக்கலையில் நடத்திய மேதினக் கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்களைப் பிரகடனமாக வெளியிட்டுள்ளது.

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்கிற போது தேர்தல் முறையை மாற்றியமைப்பதாக இருந்தால், மலையகப் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத வகையில் தொகுதிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளது. இதற்கமைவாக நுவரெலியாவில் நான்கு தொகுதிகளும் பதுளை, கண்டி, கொழும்பு மாவட்டங்களில் தலா 2 ஆசனங்களும், இரத்தினபுரியில் ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட வேண்டுமெனக் கோரப்பட்டுள்ளதாகக் காங்கிரஸின் தலைவர் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

இதேவேளை, இரண்டாவது முக்கிய தீர்மானமாக, பெருந்தோட்டங்களை சீரற்ற நிர்வாகப் போக்கிலிருந்து பாதுகாத் துப் பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பைத் தமக்கு வழங்க வேண்டு மெனவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

காங்கிரஸின் மேதினக் கூட்டம் அதன் செயலாளர் நாயகம் ஆறுமுகன் தொண்டமான் எம். பீ. தலைமையில் தலவாக்கலையில் நேற்று நடைபெற்றது. காங்கிரஸின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் எனப் பெருந்திரளானோர் இதில் கலந்துகொண்டனர்.

இடி, மின்னல் தாக்கம்; 12 பேர் உயிரிழப்பு

lightning-01.jpgஇடி,  மின்னல் தாக்கம் காரணமாக ஒரு மாத காலத்தில் பன்னி ரெண்டு (12) பேர் உயிரிழந்திருப்பதாக வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்திஹெட்டிஹேவகே நேற்றுத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் 14ம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்குட்பட்ட காலப் பகுதியில் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இம் மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. நேற்று முன்தினம் நொச்சியாகமவிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களி லிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ் வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை மாற்ற உழைக்கும் மக்களின் பங்களிப்பு அவசியம் – மே தினச் செய்தியில் ஜனாதிபதி

president.jpgசர்வதேச தொழிலாளர் தினமான இன்று உலகெங்கும் உள்ள உழைக்கும் மக்களோடு பெருமையோடு இணைந்து கொள்ளும் எமது நாட்டு உழைக்கும் மக்களுக்கு நான் இவ்வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது நாட்டுக்கும் அதன் உழைக்கும் மக்களுக்கும் மிகப் பெரும் சவாலாக இருந்து வந்த பயங்கரவாதத்தை நாம் தற்போது வெற்றி கொண்டுள்ளோம். இச்சவாலை வெற்றிகொள்வதில் எமது நாட்டின் உழைக்கும் மக்கள் பாரியதொரு பக்கபலமாக இருந்தார்கள் என்பதை பெருமையோடு குறிப்பிட வேண்டும்.

ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது : பயங்கர வாதத்தினால் தடை செய்யப்பட்டிருந்த சகல அபிவிருத்தி மார்க்கங்களும் இன்று எமது நாட்டு மக்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உழைக்கும் மக்கள் இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினத்தை நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான சூழ்நிலை குறித்த மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.

உழைக்கும் மக்களின் தாராளமான உதவியோடு தலைமைத்துவத்தை அடைந்துகொண்ட ஒரு தலைவன் என்ற வகையில் உழைக்கும் மக்களின் அபிலாஷைகளைப் பாதுகாப்பதற்கு முடிந்தமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது.

அதேபோன்று உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக எப்போதும் அவர்களோடு மிக நெருக்கமாக இருந்து அவர்களது கஷ்ட நஷ்டங்களை அறிந்துகொள்ள முடிந்தமை எமது வெற்றியின் இரகசியம் என நான் கருதுகின்றேன்.

நாட்டின் தேசிய வளங்களைப் பாதுகாப்பதற்காக இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் எம்மீது வைத்திருக்கும் நம்பிக்கை எம்மை மென்மேலும் பலப்படுத்தியுள்ளது.

அரசாங்கம் பொருளாதார அபிவிருத்தியில் உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையை உறுதிசெய்யும் வகையில் எதிர்வரும் காலங்களில் அவர்களுக்கு மென்மேலும் நிவாரணங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது முன்னேற்றப் பாதையில் தடையாகவிருக்கும் எல்லா சவால்களையும் வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களின் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்குக் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.

உழைக்கும் மக்களின் பங்குபற்றுகையுடன் அடையப்பெறும் தேசிய அபிவிருத்தியின் மூலம் இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றியமைக்க முடியும் என இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில் நாம் உறுதிகொள்கின்றோம்.

உழைக்கும் மக்களுக்கு வெற்றி கிட்டுமாகுக.

எதிர்கால சவாலை வெற்றிக்கொள்ள இத்தினத்தில் திடசங்கற்பம் பூணுவோம் – பிரதமர் மேதினச் செய்தி

deemu.jpgமூன்று தசாப்த காலமாக நிலவிய யுத்தத்திலிருந்து நாடு மீட்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சுதந்திரமானதும் அடிமையற்றதுமான நாட்டில் கொண்டாடப்படும் இந்த உலகத் தொழிலாளர் தினத்தை, எதிர்கால சவால்களை வெற்றிகொள்வதற்கான திடசங்கற்பத்தை உழைக்கும் மக்களின் மனங்களில் பதியச் செய்யும் தினமாகக் கருதுவதாகப் பிரதமர் டி. எம். ஜயரத்ன விடுத்துள்ள மேதினச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சாலையிலும் விவசாய மண்ணிலும் மற்றம் கடலிலும் உழைத்து வியர்வை சிந்தும் சகல ஊழியர்களினதும் உரிமைகளைப் பாதுகாத்து இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக்கும் சவாலே இன்று எம்முன் உள்ளது.

இந்தச் சவாலை வெற்றிகொள்வதற்கு உழைக்கும் மக்களுடன் பங்களிப்புச் செய்வது எனது எதிர்பார்ப்பாகும். நமது நாடு நெருக்கடியைச் சந்தித்த சகல சந்தர்ப்பங்களிலும் அர்ப்பணிப்புடன் பணியாற்றியும், சகல இடையூறுகளையும் சகித்துக்கொண்டு நீங்கள் அனைவரும் உலகுக்கு வெளிப்படுத்திய முன்மாதிரிக்காக இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்”, என்று குறிப்பிட்டுள்ள பிரதமர், உழைக்கும் மக்களின் ஆதரவு முன்னரைவிட தற்போது கூடுதலாக அவசியமாகுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இளைஞர் விவகார அமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேதினக் குழுத் தலைவருமான டலஸ் அழகப்பெரும விடுத்துள்ள அறிக்கையில், மேதினத்தில் உள்ள வரலாற்றைப் போன்று சமூக, அரசியல் முக்கியத்துவமான மே முத லாந்திகதியொன்று இலங்கை மக்களுக்குக் கிட்டியுள்ளதென்றும் 30 வருடங்களின் பின்னர் முழு இலங்கையிலும் உழைக்கும் வர்க்கம் இந்தத் தடவையே உண்மையான கெளரவத்துடன் அனுஷ்டிக்கிறார்களென்றும் குறிப்பிட்டுள்ளார்.

தனியார்துறை ஊழியர் சம்பளம்; 20-45% அதிகரிக்க நடவடிக்கை தொழில் உரிமையை பாதுகாக்கவும் ஏற்பாடு – அமைச்சர் லொக்குகே

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்கும் தனியார்துறை ஊழியர்களின் சம்பளத்தை 20 முதல் 45 வீதம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதாக தொழிலுறவுகள் திறன் அபிவிருத்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

சம்பள நிர்ணய சபையில் அங்கம் வகிக்காத ஏனைய ஊழியர்களின் தொழில் உரிமையைப் பாதுகாப்பதற்காக துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், தனியார் துறை ஊழியர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தப்போவதாகவும் தெரிவித்தார்.

தேசிய தொழில் அதிகாரிகள் சங்கத்தின் 59வது வருடாந்த மாநாடு நேற்று கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள மேற்படி சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.  தொழிலமைச்சின் செயலாளர் மஹிந்த மடிஹ ஹேவா, தொழில் ஆணையாளர் உபாலி விஜேவீர மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள தொழில் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,

தனியார்த்துறை தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் பெரும் பங்கு வகிப்பவர்கள்.  அவர்களின் தொழில் உரிமை, தொழில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். அவர்கள் தொழில் புரியும் காலத்தில் அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது போன்று ஓய்வுபெற்ற பின்னரும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

தொழில் திணைக்களமானது தேசிய ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். தொழிலாளர்களின் ஊழியர் சேமலாபநிதியம் 725 பில்லியன் நிதியினைக் கொண்டுள்ளதுடன் ஊழியர் நம்பிக்கை நிதியமும் நூறு மில்லியனுக்கு மேலான நிதியினைக் கொண்டுள்ளது. இந்நிதியின் மூலமான பிரதிபலனைத் தொழிலாளர்கள் அனுபவிக்கக் கூடியதாக எதிர்காலத்தில் வழிவகை செய்யப்படும்.

தொழில் அதிகாரிகள் 610 பேர் நாடளாவிய ரீதியில் கடமையாற்றுகின்றனர். கடந்த காலங்களில் அரச சேவை சம்பள உயர்வின்போது தர நிர்ணயங்களின்படி இவர்களின் சம்பள முரண்பாடுகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது. இச்சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மஹிந்த சிந்தனைக் கொள்கைத் திட்டத்தின் கீழ் ஆசியாவின் உன்னத நாடாக இலங்கையைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்குத் தொழிலமைச்சின் மூலம் உச்சளவிலான பங்களிப்பை வழங்க முடியுமெனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நாடு முழுவதும் இன்று மே தினம்; பொலிஸ், அதிரடிப்படை பாதுகாப்பு கொழும்பில் 11 கூட்டங்கள்; 6 ஊர்வலங்கள்;

2010-may-day.jpgஉழைக்கும் வர்க்கத்தினரைக் கெளரவிக்கும் மே தினம் இன்றாகும். இதனையிட்டு நாடு முழுவதும் ஊர்வலங்களும், கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 30 ஆண்டுகளின் பின்பு நாட்டில் மிகவும் அமைதியான சூழலில் நடைபெறும் இந்த மே தினக் கொண்டாட்டங்களையிட்டு நாடு முழுவதும் பாதுகாப்புப் பலப்படுத் தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.

கொழும்பு மாநகரில் 11 கூட்டங்களும், ஆறு மே தின ஊர்வலங்களும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆளும் ஐ. ம. சு. மு.வின் கூட்டம் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு மாநகர சபை திடலில் நடைபெறுகிறது.  ”வேலைத் தளத்துக்கு பலம், தொழில்சாலைக்கு சுறுசுறுப்பு, தாய்நாட்டுக்கு சமாதானம்” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இவ்வருட மே தினம் அமைகிறது என இளைஞர் விவகார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பல மே தின கூட்டங்கள் நடைபெறுகின்றன. பல தொழில் சங்கங்கள் பங்குபற்றும் இந்த கூட்டங்களில் பெருமளவு மக்கள் கூட்டம் திரளுமென எதிர்பார்க்கப்படுகிறது. இடதுசாரி அரசியல் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி மற்றும் இடதுசாரி முன்னணி சங்கங்கள் நாரஹேன்பிட்டி சாலிகா மைதானத்தில் இருந்து ஊர்வலமாக கிருலப்பன பொது விளையாட்டு மைதானத்துக்கு வந்து அங்கு கூட்டம் நடத்துகின்றன.

ஐக்கிய தேசிய கட்சி இம்முறையும் மேதின கூட்டம் எதனையும் நடத்தப் போவதில்லை. அதற்கு பதிலாக கடந்த வருடங்களைப் போன்று சமய நிழ்ச்சிகளை நடத்தவுள்ளதாக கட்சியின் பேச்சாளர் கயன்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற் சங்க அமைப்பான ஜாதிக சேவக சங்கமய சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளதாக சங்கத்தின் தலைமையகம் அறிவித்தது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் மேதினக் கூட்டத்தை இம்முறை தலவாக்கலையில் நடத்துகிறது. இக்கூட்டத்துக்கு இ. தொ. கா. தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தலைமை வகிப்பார். கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்குபற்றுவர்.

மக்கள் விடுதலை முன்னணியின் மே தினக் கூட்டம் இம்முறை பொரள்ள கெம்பல் பூங்காவில் நடைபெறுகிறது. இலங்கை தொழில் சங்கம், கெசல்வத்தையில் உள்ள ஏ. ஈ. குணசிங்கவின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஐக்கிய சோஷலிச கட்சி கொடவத்தையில் அதன் ஊர்வலத்தை ஆரம்பிக்கிறது. ஜுலை 1980 வேலை நிறுத்தக்காரர்கள் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் மே தின கூட்டத்தை நடத்துகிறது.
 

பதுளையில் கடும் மழை

lightning-01.jpgபதுளை மாவட்டத்தின் பல இடங்களிலும் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை ரணுகொல்ல ஆறு பெருக்கெடுத்ததால் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதில் சிக்கிய மேலும் ஆறுபேர் காப்பாற்றப்பட்டனர். பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்துள்ளனர்