செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் !

காலநிலை மாற்றம் மற்றும் மனித செயற்பாடுகளின் விளைவாக உலகில் இடம்பெயரும் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பகுதி அழிந்து போகும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின்  இடம்பெயரும் மிருகங்கள் பற்றிய அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும்  100 கோடி  விலங்குகள் பாலைவனங்கள், சமவெளிகள் அல்லது பெருங்கடல்கள் வழியாக இனப்பெருக்கம் மற்றும்  உணவுகளை தேடி  இடம்பெயர்வை மேற்கொள்கின்றன.

இந்நிலையில், இடம்பெயரும் உயிரினங்களின் மீது திணிக்கப்படும் நீடிக்க முடியாத அழுத்தங்கள் அவற்றின் எண்ணிக்கையை குறைவடைய செய்வதோடு, உணவு விநியோகத்தை சீர்குலைத்து வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகிறது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் மேலும் ,

1979 ஆம் ஆண்டு  ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயரும் விலங்குகளை பாதுகப்பதற்கான மாநாட்டில் 1,189 இனங்கள் இருப்பதாக பட்டியலிடப்பட்டது. அதில்  44 சதவீதம் குறைவடைந்துள்ளதோடு, 22  சதவீதம் முற்றிலும் அழிந்துவிடும்.

இந்த தரவினை  1970 முதல் 5,000 க்கும் மேற்பட்ட உயிரினங்களின் எண்ணிக்கையை ஒருங்கிணைக்கும் இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் உலகளாவிய உயிரியல் பன்முகத்தன்மையின் நிலையைக் குறிக்கும் லிவிங் பிளானட் இன்டெக்ஸ் (எல்பிஐ)  வழங்கிய மதிப்பீடுகள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.

வேட்டையாடுதல், மீன்பிடித்தல் மற்றும் பிற வகையான அதீத சுரண்டல் உள்ளிட்ட செயல்பாடுகளால், மனிதர்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளனர், இதனால், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டியலில் உள்ள 70 சதவீதமான  உயிரினங்கள் பாதிப்படைகின்றன.

வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களால் வறட்சி அல்லது காட்டுத் தீ போன்றவை வானிலையில் பாதிப்பை ஏற்படுத்திதுகிறது.இதன் காரணமாக  இடம்பெயர்வு காலத்தை சீர்குலைக்கிறது.

இதேவேளை , வாழ்விடங்கள் அழிந்து வருவதால் 75 சதவீதமான உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இது தனிமைப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் கட்டமைப்புக்கு இடையே அதிக இணைப்பு தேவை என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

அணைகள், குழாய்கள் அல்லது காற்றாலைகள் போன்ற உள்கட்டமைப்பை நிறுவும் போது வாழ்விடங்கள் மற்றும் இடம்பெயர்வு பாதைகளை சீர்குலைப்பதைத் தவிர்க்குமாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிய உலகளாவிய உயிர்ப்பல்வகைமை ஒப்பந்தத்தின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் உலகின் 30 சதவீதமான நிலம் மற்றும் கடல் பிரதேசங்களை இயற்கைக்காக ஒதுக்கி வைப்பதற்கான 2022 ஆம் ஆண்டு உறுதிமொழியை மதிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

“நினைவுகளே எங்கள் கேடயம்!” என் செல்வராஜாவின் கனவு மெய்ப்பட வேண்டும்!

கல்வியின் மகுடுமாகச் சித்தரிக்கப்பட்டு விருகின்ற யாழ்ப்பாணத்தில் 2024இல் நொத்தேர்ன் யுனிவர்சிற்றி என்ற கல்வி நிறுவனத்தின் விளம்பரத்துக்காக நடத்தப்பட்ட சினிமாக் கலைஞர்களின் நட்சத்திரக் கேளிக்கை நிகழ்ச்சி இளைஞர்களின் இச்சைகளைத் தூண்டும் கவர்ச்சி நடனத்திற்குள் கல்வியை கலப்படம் செய்தது. இதனை துரிதமாக பின்னோக்கிச் சுழற்றினால் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1974; ஜனவரியில், பல கோடி செலவில் ஏற்பாடு செய்யப்பட்ட நட்சத்திர கேளிக்கை விழாவுக்கு முற்றிலும் முரணான தமிழ் மக்களின் அடுத்த 50 ஆண்டுகாலத்தை தீர்மானிக்கின்ற நிகழ்வொன்று யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தது. தமிழர்களின் அடுத்த 50 ஆண்டு அரசியலுக்கு வித்திட்ட நிகழ்வுகளில் இந்த நிகழ்வும் மிக மிக முக்கியமானது. அந்நிகழ்வு தான் யாழ்ப்பாணத்தில் 1974 ஜனவரியில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்சி மாநாடு. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு பற்றியும் அது ஏற்படுத்திய தாக்கங்கள் பற்றியும் ஆங்காங்கே சில பதிவுகள் வந்த போதும், ஓரளவுக்காவது அந்நிகழ்வை ஆராய்ந்த ஒரு குறிப்பிடத்தக்க பதிவு இதுவரை வெளிவந்திருக்கவில்லை.

இவ்வாறான வரலாற்று ஆவணங்களை பெரும் ஆய்வுகளுக்கூடாக வெளிக்கொணர வேண்டியது அப்பிரதேசங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் பணி. ஒரு கல்விச் சமூகத்தின் மகுடமாக விளங்கும் பல்கலைக்கழகங்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக முன்னேற்றத்தை நோக்கிச் ஆய்வுகளை மேற்கொண்டு பட்டதாரி மாணவர்களை அம்மாற்றத்திற்கு முன்னோடிகளாக உருவாக்கி அந்த சமூகத்திற்கு வழங்க வேண்டும். இன்று தமிழ் சமூகம் 30 ஆண்டுகள் போராட்டம், யுத்தம் என்பனவற்றிலிருந்து விடுபட்டு யுதமில்லாத சூழ்நிலைக்குள் வாழ ஆரம்பித்து 15 ஆண்டுகள் ஆகின்றது. ஆனால் வடக்கில் உள்ள யாழ் பல்கலைக்கழகம் தன்னுடைய சமூகம் சார்ந்து என்ன செய்துள்ளது? குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் தமிழ் மக்களின் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, மரபுகள் பற்றி எத்தனை ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்? இவை தொடர்பில் எத்தனை நூல்கள் யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவந்துள்ளன? வடக்கில் மதுபானம், போதைவஸ்துக்கு அடிமையாதல் மிக அதிகமாக உள்ளது. வீதி விபத்துக்கள் அதிகமாக உள்ளது. சமூகப் பிறழ்வுகள் அதிகரித்துள்ளது. இளவயதுத் திருமணங்கள் அதிகரித்துள்ளது. கல்வித் தரம் வீழ்ச்சி அடைந்துகொண்டுள்ளது. தமிழ் மக்களுடைய வரலாறுகள் மறைந்துகொண்டிருக்கின்றது. இவைகள் பற்றி என்ன ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது? இவற்றைத் தடுக்கும் விழிமுறைகள் பற்றி எத்தனை ஆய்வுகள் செய்யப்பட்டது? அவை பற்றிய கருத்தரங்குகள் நடைபெற்றதா? இவற்றினைப் பற்றி தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அறிவுறுத்தப்பட்டதா?

இவை தொடர்பில் யாழ் பல்கலைக்கழகத்தின் குறிப்பாக கலைப்பீடத்தின் பீடாதிபதி என்ன செய்கின்றார்? பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் என்ன செய்கின்றனர்? எத்தனை ஆய்வறிக்கைகள், புத்தகங்களை இவர்கள் கடந்த 15 ஆண்டுகளில் வெளியிட்டுள்ளனர்? தங்கள் பேராசிரியர் பதவி உயர்விற்காக இந்திய பல்கலைக்கழகங்களில் பணம்கொடுத்து எழுதி அங்கேயே பணம் கொடுத்து ஆய்வுகளை வெளியிடும் போலிச் சஞ்சிகைகளில் வெளியிட்டதைத் தவிர இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்? இப்பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்களுக்கு, பேராசிரியர்களுக்கு, பீடாதிபதிகளுக்கு இதனைச் செய்வதற்காகவே இலங்கைப் பல்கலைக்கழக மானியத்துறை, கோடிக்கணக்கான நிதியைச் செலவிடுகின்றது. இதற்காகவே விரிவுரையாளர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் பல லட்சம் ஊதியம் வழங்கப்படுகின்றது. ஆனால் யாழ் கல்விச் சமூகத்தின் மகுடமான பல்கலைக்கழகம் இதை எதையுமே செய்யவில்லை. யாழ் பல்கலைக்கழகம் பள்ளிக்கூடம் தான் நடத்துகின்றது.

1981இல் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டது, இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியமான மற்றுமொரு நிகழ்வு. ஆனால் அந்நூலகம் எரிக்கப்பட்டு நாற்பது ஆண்டுகளில் அந்நூலகம் எப்போது எரிக்கப்பட்டது, அதனுடன் சம்பந்தப்பட்ட அரசியல் தலைமகளின் செயற்பாடுகள் பற்றிய பல உண்மைகள் மறைக்கப்பட்டு விட்டது. அதனை மீண்டும் ஆதாரங்களுடன் தேடிப் பதிவிட்டு அந்நூலகம் எரிக்கப்பட்டதற்குப் பின்னாளிருந்த அரசியல் தலைவர்களை ஆதாரமான பதிவுகளோடு நிறுத்தி இரு ஆவணங்கள் வெளியானது. “யாழ்ப்பாணப் பொதுநூலகம்: ஒரு வரலாற்றுத் தொகுப்பு” என்ற நூலிலும் அதனைத் தொடர்ந்து “Raising from the ashes“ என்ற தேசம் வெளியீடாக வந்த நூலிலும் இப்பதிவுகள் இடம்பெற்றது.

இவ்வாறு நூற்றுக்கு மேற்பட்ட தொகுப்புகளையும், நூல்களையும் வெளியிட்டதுடன் ஆயிரக்கணக்கான நூல்களையும் ஆவணங்களையும் தன் சேகரிப்பில் வைத்துள்ளவர் தேசம் சஞ்சிகையால் ‘நூலகவியலாளர்’ என்று கௌரவிக்கப்பட்ட என் செல்வராஜா. ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்த கௌரவத்துக்கு உரியவர் இவர் மட்டுமே. வேறுயாராவது அவ்வாறு அதனைப் பயன்படுத்துவார்களானால் அது அவர்களுடைய அறியாமையே. தன்னுடைய பதின்ம வயது முதல் நூல்களும் நூலகமுமாக வாழ்ந்தவர் என் செல்வராஜா என்றால் அது மிகையல்ல. எமது இதயங்கள் ‘லப்’, ‘டப்’, ‘லப்’, ‘டப்’ என்று அடித்தால் நூலகவியலாளர் செல்வராஜாவின் இதயம் மட்டும் ‘வா’, ‘சி’, ‘வா’, ‘சி’ என்று தான் அடிக்கும். இதனை அவர் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் உள்ள ஆங்கிலேய நூலகங்கள் கூட அறிந்து கௌரவித்துள்ளன. அவருக்கு கிடைத்துள்ள கௌரவங்களை பட்டியல் இடுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஈழத் தமிழ் சமூகத்தின் மனநிலையை சற்றுத் தட்டி எழுப்புவதே இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரை நூலகவியலாளர் என் செல்வராஜாவை தெரியாதவர்களுக்கு அவரை அறிமுகப்படுத்துவதல்ல.

நூலகவியலாளர் என் செலவராஜாவுக்கும் எனக்குமான உறவு எனது எழுத்துக்களுக்கும் எனக்குமான உறவுவரை நீண்டது. தந்தையும் தனயனுமாக, நல்ல நண்பர்களாக, நல்ல எதிரிகளாக நட்பும் பகையும் கொண்டது. நாங்கள் இருவருமே எதிரும் புதிருமான சமூக அரசியல் முகாம்களைச் சேர்;ந்தவர்கள். முரண்படுவோம் என்பதில் உடன்பாடுடையவர்கள். தமிழ் சமூகத்தில் மிகத் தட்டுப்பாடான கிடைத்தற்கரிய ஒரு உறவுமுறை. முரண்படுவதற்காக உடன்பாடு.

நூலகவியலாளர் என் செல்வராஜா ஒரு கடைந்தெடுத்த நல்லதொரு தமிழ் தேசியவாதி. அதனை முழுமையாக நம்பியவர். நம்புகிறவர். அதனையே நம்புபவர். ஆனால் தமிழ் தேசியவாதிகளாக தங்களைக் காட்டிக்கொள்கின்ற அரசியல்வாதிகள், வியாபாரிகள், கோயில் வியாபாரிகள், கல்வியியலாளர்கள் போன்று இவர் தன்னுடைய தேவைகளுக்காக தமிழ் தேசியத்தை போர்த்துக்கொண்டவரல்ல. அதனால் இவருடைய முதுகெலும்பிலும் சற்று கூடுதலான தமிழ் தேசியம் உள்ளது. அதனால் வளைந்துகொடுக்க அது இடம்கொடுப்பதில்லை. இதனால் போலித் தமிழ் தேசியவாதிகளும் இவருக்கு முன் புன்சிரிப்பைத் தவழவிட்டாலும் இவருடன் நீண்டதூரம், நீண்ட காலம் பயணிப்பதில்லை. நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழ் நூல்கள் பற்றியும் நூலகம் பற்றியும் ஒரு காதால் கேட்டு மற்றைய காதால் விட்டுவிடுவார்கள். ஆக மிஞ்சிப் போனால் கூட்டத்திற்குக் கூப்பிட்டு ஐந்து பவுணுக்கு பொன்னாடை போர்த்தி ஒரு படம் எடுத்துவிட்டு அனுப்பி விடுவார்கள்.

1963இல் அமெரிக்க சிவில் உரிமைப் போராளி மார்டின் லூர்தர் கிங்க்கின் ‘எனக்கு ஒரு கனவு உண்டு…’ என்ற உரை ஒடுக்கப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர்களைத் தட்டி எழச் செய்தது. அவ்வாறே நூலகவியலாளர் என் செல்வராஜாவுக்கு ஒரு கனவு இருக்கின்றது. ‘தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம்’ தான் என் செல்வராஜாவுடைய கனவு. இந்தக் கனவுக்காக அவர் சில பத்து ஆண்டுகளாக அயராது உழைக்கின்றார். ஆனால் இதுவரை அவருடைய கனவு மெய்ப்படுவதற்கான எவ்வித சமிக்ஞைகளும் தெரியவில்லை. வர்த்தகர்கள், கோயில்காரர்கள், முதலீட்டாளர்கள், சாதாரணர்கள் எனப் பலரோடும் பேசியும் அவருடைய கனவு ஒரு கையேட்டிற்குள்ளேயே குறுக்கப்பட்டுவிட்டது. இன்னும் கொஞ்சக்காலம் போனால் நூலகவியலாளர் என் செல்வராஜா லைப்ரொபிரினியா (librophrenia) வால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்று சொல்லிவிடுவார்கள்.

யாழில் பெப்பரவரி 9 நடைபெற்ற இசைக் கலைஞர்களின் நிகழ்வுகளுக்கு பல கோடிகள் செவிடப்பட்டது. அமெரிக்க பங்குச் சந்தையைக் கலக்கிய தமிழர் சில செக்கன்களில் பலநூறு கோடிகளை இழந்தது பற்றி விதந்துரைக்கின்றார், தென்னிந்திய சினிமாவின் ஈழத் தயாரிப்பாளர் படங்களுக்கு பல நூறு கோடிகளை கொட்டுகின்றார், ஹொட்டலியர்கள் பல பத்துக் கோடிகளை அள்ளி வீசுகின்றனர், இவர்கள் வரிசையில் இன்னும் பல பல கோடிகளை விசுக்க இன்னும் பலர் வரிசையில் காத்துக்கிடக்கின்றனர். கோயில் கடைக்காரர்கள் பல கோடிகளை வாரி இறைக்கின்றனர். இவர்களெல்லோருமே தங்களின் பரம்பரையே செலவழிப்தற்கு தேவையான சொத்திலும் அதிகமான சொத்துக்கள் தங்களிடம் உள்ளது என்றும் தாயகத்தை வைத்து தாங்கள் உழைக்கத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். உண்மையாகவா?

அப்படியானால் நீங்கள் ஏன் நீண்ட காலப் போக்கில் ‘ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை என்றென்றைக்கும் காக்கும் ஒரு ஆவணக் காப்பகத்தை புலம்பெயர் தேசமொன்றில் உருவாக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது? யாழ் நூலகம் அழிக்கப்பட்டு எமது வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டது போன்ற நிலை எதிர்காலத்திலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே புலம்பெயர் தேசமொன்றில் ‘தமிழ் ஆவணக்காப்பகம்’ ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்கிறார் நூலகவியலாளர் என் செல்வராஜா. அவருடைய நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுத் தொகுப்புக்கு “நினைவுகளே எங்கள் கேடயம்” என்று பெயரிட்டுள்ளார். இந்தத் தலைப்புக்கு பின்னுள்ள ஆழமான கருத்தாக்கத்தை ஈழத்தமிழர்கள் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு மனித ஆளுமையின் உருவாக்கத்தில் அவனுடைய வரலாறு மிக முக்கியமானது. வுரலாற்று ஆவணங்கள் மட்டுமே எங்கள் நினைவுகளை பாதுகாக்கும் கேடயங்கள். அவற்றை இத்தலைமுறையில் பாதுகாக்கத் தவறினால் ஈழத்தமிழர்களின் கடந்த 50 வருடகால போராட்ட வரலாறு தனிமனிதர்களின் இறுதித் தீயோடு அதுவும் சங்கமமாகி விடும்.

நூலகவியலாளர் என் லெ;வராஜாவினை போலித் தேசியவாதிகள் கருத்தில் கொள்ளாததை விட்டுவிடலாம் ஆனால் தேசியத்தை உண்மையில் நம்புகின்ற விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரும் கூட நூலகவியலாளர் என் செல்வராஜாவை திட்டமிட்டு புறக்கணிப்பது தமிழ் தேசியத்தின் மிகமோசமன குழறுபடி. அப்படிப்பட்ட தமிழ் தேசியவாதிகள் யார்? தமிழ் தேசியம் என்றால் என்ன? அந்த தமிழ் தேசியத்தை யார் முன்நிறுத்துகின்றனர் என்ற விவாதம் எப்போதும் இருக்கத்தான் போகின்றது. அதற்குள் இக்கட்டுரையை நான் நுழைய அனுமதிக்கவில்லை.

ஏற்கனவே இக்கட்டுரையில் குறிப்பிட்டது போல கடந்த 50 ஆண்டுகளில் நூல்களுக்கும் நூலகங்களுக்கும் உள்வாழ்ந்தவர் நூலகவியலாளர் என் செல்வராஜா. ஈழத்தமிழ் நூல்கள் அல்லது நூலகம் பற்றி பேசுகின்ற ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் என் செல்வராஜாவை கண்டுகொண்டிருக்காவிட்டால் அது அவர்களுடைய ஆய்வின் எழுத்தின் மிகப்பெரிய பலவீனம். பல்கலைக்கழக துறைசார் ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு அவர்களின் வழிகாட்டிகள் அத்துறைசார் ஆளுமைகளின் நூல்கள், ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கும் என்பதனை பலகலைக்கழகம் சென்ற அல்லது துறைசார் ஆய்வுகளை மேற்கொண்ட எவரும் அறிந்திருப்பர்.

தற்போது மிகப்பெரு முயற்சியில் ஒரு மெய்நிகர் (ஒன்லை லைப்ரரி) உருவாக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய மிக முக்கிய பணி;. ஈழத்தமிழர்களுடைய வரலாற்றில் மிகவும் போற்றப்பட வேண்டிய ஒரு செயற்பாடு. அதிலுள்ள ஒவ்வொருவருடைய பணியும் உழைப்பும் மிகப்பயனுள்ளது. ஒரு அறிவியல் அமைப்பானது நீண்டகாலத்தில் வளர்ச்சியை நோக்கிச் செல்ல வேண்டுமானால் அது தொடர்ந்தும் அறிவியல் சார்ந்தவர்களை இணைத்துக்கொண்டு அவர்களையும் உள்வாங்கி பயணிக்க வேண்டும். யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் போல் திறமையானவர்கள் உள்ளே நுழைவிடாது அந்நிறுவனத்தை குட்டிச் சுவராக்குவது அழகல்ல.

ஆம் ‘நூலகம் பவுண்டேசன்’ என்ற இந்த மெய்நிகர் நூலகம் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் ஐம்பது ஆண்டுகள் விதைத்த கருத்துக்களின் மேல் கட்டப்பட்டிருந்த போதும் அந்நூலகத்தில் அவர் உள்வாங்கப்படாதது, நூலகம் பவுண்டேசனின் மிகப்பெரும் பலவீனம். வடக்கிலும் கிழக்கிலும் மெய்யான இரு நூலகங்களின் உருவாக்கத்தில் அதன் வளர்ச்சியில் ஒரு தூணாக நின்றவரை இந்த மெய்நிகர் நூலகம் உள்வாங்காதது ஏன்? அதன் பின்னணியில் உள்ள அரசியல் என்ன?

இது தான் தமிழ் சமூகத்தின் சாபக்கேடு. தமிழ் மக்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கூக்குரல்கள் எனக்கு நினைவு தெரிந்த காலம் முதல் கேட்டுக்கொண்டே உள்ளது. இந்த வெற்றுக் கூக்குரல்களை நான் ஒரு போதும் பொருட்டிலும் எடுப்பதில்லை. இந்தக் கூக்குரல்கள் அர்த்தமற்றவை. ஏனெனில் ஒரு சமூகம் முன்னோக்கி நகர்வதற்கு முரண்பாடுகள் அவசியம். அவை பகைமுரண்பாடுகள் இல்லாமல் மக்களின் பொதுநன்மை கருதி சமூகத்தை முன்தள்ளிச் செல்லும்வரை அந்த முரண்பாடுகள் ஆரோக்கியமானவையே. ஆனால் நூலகவியலாளர் என் செல்வராஜா ஏன் மெய்நிகர் நூலகம் பவுண்டேசனுக்குள் உள்வாங்ககப்படவில்லை என்பது மிகவும் சின்னத்தனமானது.

மெய்நிகர் நூலகம் பவுண்டேசன் உருவாக்கத்திற்கு தமிழ் தேசியம் ஒரு கணிசமான தொகையினை பத்மநாப ஐயரிடம் வழங்கி இருந்தது. இந்த நூலகத்திட்டத்திற்கு சசீவன், கோபி உட்பட கணணித்துறையில் தீவிர ஈடுபாடுடைய சில இளைஞர்கள் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் இந்த முயற்சியே மெய்நிகர் நூலகத்தின் வளர்ச்சி. இன்று இந்நூலகத்தில் சில பத்துப்பேர் பணியாற்றுகின்றனர். நினைத்தற்கரிய காரியங்களை இவர்கள் சாதித்துள்ளனர். ஆனால் இந்நூலகத்தினை ஆளுமை செய்வதில் இன்றும் பத்மநாப ஐயரின் செல்வாக்கு கணிசமானது. அதற்கு முக்கிய காரணம் அந்நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கான நிதியை அவரே பல வகையிலும் கொண்டுவந்து சேர்க்கின்றார். என் செல்வராஜாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஈவிலிங்ரத்தினம் இன்ஸ்ரிரியூற்றின் நூல்களைக் கணணிப்படுத்துவதற்கான செலவீனத்தை லிற்றில் எய்ட்டே பொறுப்பெடுத்தது. அதற்கான கோரிக்கையை பத்மநாப ஐயரே என்னிடம் கேட்டிருந்தார்.

பத்மநாப ஐயர் பல்வேறு முரண்பாடுகளோடும் நீண்டகாலமாக பகையாகவும் நட்பாகவும் உள்ள கண்ணியமான மனிதர். தனக்காக என்றொரு வாழ்க்கை இல்லாமல் புத்தகங்களோடு வாழ்பவர். அவர் வீட்டில் தடக்கி வீழ்ந்தால், நிச்சயமாக புத்தகத்தில் தான் தடக்கி விழ வேண்டும். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் உள்ள அவரின் பின் அவருடைய புத்தகங்களுக்கு என்ன ஆகும் என்பது அவருக்கும் தெரியுமா தெரியாது. ஆனால் பத்மநாப ஐயர் கேள்விஞானி மட்டுமே. அவர் ஒரு புத்தகத்தையாவது முழுமையாக வாசித்திருப்பாரா என்பது தெரியாது. ஆனால் அவர் எழுத்தாளர்களையும் வாசகனையும் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களுடன் இணைத்துவிடுவதில் மிகச் சிறந்த மனிதர். அவர் என் செல்வராஜா போன்று தன்னை ஈழத்துடன் மட்டும் மட்டுப்படுத்திக் கொள்ளாதவர். அதனால் அவருக்கு தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்கள் பதிப்பாளர்களுடனும் நெருங்கிய தொடர்பு உண்டும். அந்த வகையில் பத்மநாப ஐயர் எழுத்தாளர்களுடன், வாசகர்களுடன் புத்தகங்களை இணைத்து விடுகின்ற ஒரு சிறந்த நூல்முகவர்.

இந்த இரு ஆளுமைகளுமே தமிழ் தேசியவாதிகள் தான். இந்த இரு ஆளுமைகளுமே ஒரே இலக்கை நோக்கியே நீண்ட தூரம் பயணித்துள்ளனர். தற்போது இருவருமே வாழ்க்கையின் கடைப்பக்கதில் பயணிக்கின்றனர். இவர்கள் இருவருடைய உழைப்பும் தமிழ் மக்களின் ஆவணங்களை பாதுகாக்கின்ற பணிக்கு மிக அவசியமானது. இவர்களிடையே சில தனிமனித முரண்பாடுகள் இருந்தாலும், இவ்விரு ஆளுமைகளிடையேயும் பொது உடன்பாடுகளே அதிகம். தனிமனித முரண்பாடுகளைக் களைந்து தமிழ் தேசியத்தின் தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை பேணிப்பாதுகாக்கின்ற மெய்நிகரான நூலகம் பவுண்டேசனில் இணைந்து செயற்பட வேண்டும். துறைசார் திறமையும் ஆளுமையும் உடையவர்கள் தமிழ் மக்களின் படைப்புகளையும் ஆவணங்களையும் பேணிப்பாதுகாக்கின்ற செயற்பாடுகளில் இணைந்து செயற்படுவதன் மூலம் சினெர்ஜியை – மேல்கூட்டுத்திறனை உருவாக்க வேண்டும்.

வரும் ஞாயிறு பெப்ரவரி 18 இல் திரள் அமைப்பு ஏற்பாடு செய்துள்ள என் செல்வராஜாவின் “நினைவுகளே எங்கள் கேடயம்!” என்ற யாழ்ப்பாணத்தில் நான்காவது உலகத் தமிழாரய்ச்சிமன்ற நிகழ்வுகளில் நடைபெற்றது என்ன என்ற ஆவணங்களின் தொகுப்பு நூல் வெளியீடு லண்டனில் நோர்த்ஹோலில் நடைபெற உள்ளது. ஈழத்தமிழர்களுடைய வரலாறு அழிந்து போய்விடாமல் தூசி தட்டி எடுத்து ஆவணமாக்கும் நூலகவியலாளர் என் செல்வராஜாவின் தமிழர்களுக்கு என்றொரு ஆவணக்காப்பகம் வேண்டும் என்ற கனவை நாம் ஒவ்வொருவரும் காணும்போது மட்டுமே ஈழத்தமிழர்களுடைய வரலாறுகள் அதன் உண்மைத்தன்மையின் அடிப்படையில் பாதுகாப்பதற்கான காலம் கனியும்.

யாழில் இந்திரன் பல்கலைக்கழகம் கட்டுகிறாரா? இந்திர(ன்)லோகக் கன்னிகைகள் கழகம் கட்டுகிறாரா?

யாழில் பெப்பரவரி 9 அன்று இந்திய நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது. ரம்பாவின் கணவர் என்றும் இந்திரன் என்றும் அறியப்பட்ட இந்திரகுமார் பத்மநாதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ் தமிழ்த் தேசியவாதிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது. ஆயினும் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள், இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்க்க இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களின் இருக்கை மற்றும் அவர்கள் பார்ப்பதற்கான திரைகள் எதனையும் ஏற்பாடு செய்யாத நிலையில் இளைஞர்கள் தங்கள் கனவுக் கன்னிகைகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்து தடுப்பு வேலிகளை உடைத்தெறிந்து முன்னோக்கி நகர்ந்ததுடன் ஒளி, ஒலி அமைப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மேடைகளிலும் ஏறி நிகழ்வுகளைப் பார்க்க முயன்றனர். ரசிகர்கள், நிகழ்வுக்கு சுற்றிவரப் போட்ட வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவியது. எழுபதுகளில் தமிழாராச்சி மாநாட்டில் நிகழ்ந்தது போன்ற அசம்பாவிதம் அதிஸ்ரவசமாக அன்று நிகழவில்லை. நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வந்திருந்த கலைஞர்களும் ரசிகர்களை அமைதிகாக்கச் சொல்லிக் கெஞ்சிய போதும் நிகழ்ச்சியை முழுமையாக திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை.

இந்நிகழ்வை இந்திரன் ஆரம்பிக்கப்போகின்ற நோர்தேர்ன் யூனி வர்சிற்றிக்கான விளம்பரமாகவே ஏற்பாடு செய்திருந்தார். இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், நடிகர்கள், பாடகர்கள் எனப் பலரும் யாழ் வந்திருந்தனர். நேற்றைய நிகழ்வானது தமிழக சினிமா உலகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது. ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் சில நடிகர்இ நடிகைகளுக்கு எதிராக அவர்களுடைய நிகழ்வுகளைக் குழப்பியிருந்தனர். தற்போதைய இந்நிகழ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது.

“இது இசை நிகழ்ச்சி அல்ல இது ஒரு குத்தாட்ட நிகழ்ச்சி….. இலவசம் எனக் கூறி எமது இளைஞர் பரம்பரையை அவமானப்படுத்திஇ அவர்களைக் கோபம் கொள்ள வைத்த கூத்து… இந்த நிகழ்ச்சிக்கு எம்மவர்கள் குடும்பம், குடும்பமாக சென்றது எமது பிழை….” என்கிறார் ஒடுக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பினைச் சேர்ந்த தம்பி தம்பிராசா.

இது தொடர்பாக தேசம்நெற்க்குத் தெரிவித்த இந்நிகழ்வை ஒளிப்பதிவு செய்யச் சென்ற முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவரான த ஜெயக்குமார், “அமையப் போகின்ற பல்கலைக்கழகம் ஒரு திரைப்படத்துறை சார்ந்த பல்கலைக்கழகம் என்றால் கூட தம்மன்னா கோஸ்டியைக் கொண்டு வந்து இப்படியொரு நிகழ்ச்சியை நடத்துவது பொருத்தமற்றது. ஆனால் நொதேர்ன் யூனிவர்சிற்றி, Sri Lanka Institue of Information Technology – SLIIT உடன் இணைந்து கணணித்துறைசார்ந்த கற்கைநெறிகளையே மேற்கொள்ள உள்ளது. இதற்கு தம்மன்னா கோஸ்டி எதற்கு?” என்றார். இதே கேள்வி கல்வியியலாளர்கள் பலரிடமும் எழுந்துள்ளது.

இந்திரன் என்று அறியப்பட்ட நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் பத்மநாதன் யாழ் சுதுமலையிலிருந்து கனடாவுக்கு குடும்பத்தோடு புலம்பெயர்ந்தவர். அங்கு வெற்றிகரமாக “மஜிக் வூட்ஸ்”மற்றும் பல துணை நிறுவனங்களை நடத்தி வருகின்றார். அக்காலகட்டத்தில் புலிகளும் பல நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வந்தனர். அப்போது தமிழகத்திலும் புலிகள் சில பல முதலீட்டு முயற்சிகளில் ஒன்று இந்த மரங்களை தளபாடங்களை உற்பத்தி செய்வதும் ஏற்றுமதி செய்வதும். அவ்வேளையில் புலிகள் தங்கள் முதலீட்டுக்கு நம்பகரமான ஒரு நபர்களைத் தேடிய போது ‘கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல்’ இந்திரனுக்கு அடித்தது அதிர்ஸ்ட்டம். இத்தகவலை புலிகள் அமைப்புடன் நெருங்கிச் செயற்பட்ட நம்பகமான ஒருவர் தேசம்நெற்ககுத் தெரிவித்தார். இது தொடர்பாக இந்திரனுடைய பள்ளி நண்பரும் தமிழீழ விடுதலைப் புலிகளில் மாத்தையா அணியில் இருந்தவருமான தேவன் குறிப்பிடுகையில், அது இந்திரனின் முதலீடு மட்டுமே எனத் தெரிவித்தார்.

இந்த மஜிக் வூட்ஸின் விளம்பரத்திற்கு வந்தவர் தான் ரம்பா. அப்போது இவர் தயாரித்த ‘திறி ரோசஸ்’ என்ற படம் தோல்வியடைந்த நிலையில் மிகுந்த பண நெருக்கடியில் இருந்த போது இந்திரன் அவரைக் கண்டு காதல் வசப்பட்டார். ரம்பாவின் கடனையும் அடைத்தார். அத்தோடு முதல் மனைவியை விவாகரத்துச் செய்து ரம்பாவைத் திருமணம் செய்ததைத் தொடர்ந்து பிரபல்யமானார்.

நேற்றைய நிகழ்வில் ஏற்பட்ட குழப்பத்திற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் நிகழ்வு முகாமைத்துவம் இன்மையே காரணம் என ஜேர்மனியில் வாழும் சமூகச் செயற்பாட்டாளரும் தொழில் முனைவருமான இரத்தினசாமி ரமேஸ்வரன் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஆயினும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட பல இளைஞர்கள் மதுபோதையிலும் போதைப்பொருட்கள் பாவித்த நிலையிலுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிகழ்சியைத் திட்டமிட்டபடி தொடர்ந்து நடத்த முடியாமல் போனதற்கு இதுவும் முக்கிய காரணம் என்பது மறுக்க முடியாது. ஆனாலும் இவ்வாறானவர்களை நிகழ்வில் பங்கேற்க விடாமல் தடுப்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பும் கூட. ஒரு பொதுவான களியாட்ட நிகழ்வை எப்படி நடத்தக்கூடாது என்ற வரலாற்றுப் படிப்பினையை இந்திரன் ஈழத்தமிழர்களுக்கு கற்றுத் தந்துள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் யாழில் வந்து செய்கின்ற செயற்பாடுகள் ஆரோக்கியமானதாக இல்லை என்று குறிப்பிடும் தம்பி தம்பிராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதியை மோசடி செய்த பலர் தற்போது தாயகம் திரும்பி யாழ் சமூகத்தின் கலாச்சாரத்தை சீரழித்து வருவதாகத் தெரிவிக்கின்றார். இந்தப் பட்டியலில் வரக்கூடிய அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தம்பி தம்பிராசா, குறிப்பிடாத சிலர்:
வலன்ரைன்ஸ் டேய்க்கு பிரான்ஸ், லண்டன் ஸ்ரைலில் பூட்டுப் போடவும், காதல் செய்யவும் தங்கள் ரீட்சா ஹொட்டலுக்கு கூவி அழைக்கும் ஐபிசி பாஸ்கரன்,
யாழ் ஆணாதிக்க வெள்ளாள சைவப் பழம் ஆறுதிருமுருகனிடம் ஆசீர்வாதம் பெற்று யாழில் மதுவும் மாதுவுமாக டிஸ்கோ கிளப் நடாத்தும் திருவள்ளுவருக்கு திருநீற்றுப் பட்டையும் சந்தனப் பொட்டும் வைத்து வள்ளுவரின் வரலாற்றை யாழில் மாற்றியமைத்த புலிகளின் ஆணிவேர் படத் தயாரிப்பாளரும் ரில்கோ ஹொட்டல் உரிமையாளருமான திலகராஜா,

 

பிரான்ஸ் லாக்குர்னே சிவன் ஆலயம் நடத்தும் நல்லூரில் உள்ள காமவிடுதி லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரன்,
(அண்மையில் யாழில் பிறந்தநாள் கொண்டாடிய ஒரே மகனின் மனைவி) மருமகளிடம், அவரின் தாயும் தங்கையும் குடியிருந்த கொழும்பு வீட்டை சீதனமாக எழுதித்தரச்சொல்லி வற்புறுத்திய கொடைவள்ளல் சுவிஸிலிருந்து வந்து எம்ஜிஆர் வேசம் போடும் ‘தியாகி’ அறக்கட்டளையின் வாமதேவன் தியாகேந்திரன் (இவர் லக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் ஜெயந்திரனின் சகோதரர்.)

லண்டனில் உள்ள சில புலி ஆதரவு ஆர்வக்கோளாறுகள் எவ்வாறு இந்திய உளவுத்துறை றோ உடன் சேர்ந்து தமிழீழம் காணப் போகிறோம் என்று கூறுகிறார்களோ அதே போல் மேற்குறிப்பிட்டவர்கள் இலங்கை அரசோடும் புலனாய்வுத்துறையோடும் சேர்ந்து யாழில் தமிழ் தேசியத்தை முன்னெடுக்கின்றனர். யாழ் சட்டத்தரணி செலஸ்ரினின் மொழியில் சொன்னால், “தம்மன்னாவை அழைத்து இளைஞர்களை எழுச்சிபெற வைத்து தமிழ் தேசியத்தை எழுச்சி பெறச் செய்கின்றனர்”.

யாழில் இந்திரன் பல்கலைக் கழகம் கட்டுகிறாரோ இல்லையோ இந்திரலோகக் கன்னிகைகள் கழகம் கட்டுவார் என்பதை மட்டும் உறுதியாகத் தெரியப்படுத்தியுள்ளார். உலகில் கவர்ச்சி நடனம் ஆடி பல்கலைக்கழகம் கட்டிய முதல் தமிழன் என்ற பெருமை இந்திரனையே சேரும். தவறணைக்கும் பாருக்கும் கவர்ச்சி நடனம் போட்டு ஆண்களை வரவழைப்பது மேற்குநாட்டுக் கலாச்சாரம். அது லண்டனில் தவறணை நடத்தும் கொன்ஸ்ரன்ரைனின் வியாபார தந்திரம். அதையே இந்திரன் யாழில் பல்கலைக்கழகத்திற்கும் பயன்படுத்தியுள்ளார். பதிவு செய்பவர்களுக்கு அனுமதி இலவசம் என்று சொல்லிஇ இளைஞர்கள் தங்கள் தொலைபேசி இலக்கங்கள் தகவல்களைச் சேகரித்தனர். காரியமானதும் ரிக்கற்றுகளுக்கு பணம் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த ஹொட்டல்காரர்கள் யாழை அந்தப்புரமாக்க, இந்திரன் அவர்களுக்கெல்லாம் ஒருபடி மேலே சென்று இந்திரலோகக் கன்னிகைகள் கழகத்தை கொண்டுவந்து ஒரு சிக்ஸரே அடித்துள்ளார். யாழின் தமிழ் தேசியம் இதைத்தான் வெளிப்படுத்துகிறது. இவர்களினால் ஈர்க்கப்பட்டு இன்னும் பல வெளிநாட்டு வியாபாரப் புள்ளிகள் யாழில் ஹொட்டல் கட்ட ஓடித்திரிகின்றனர்.

எண்பதுகளில் ஈபிஆர்எல்எப் ஆல் கடத்தப்பட்ட அமெரிக்க அலன் தம்பதிகளுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தும் சுழிபுரத்தில் புளொட்டின் மிருகத்தனமான கோரப் படுகொலையை படமெடுத்தும் பிரபலமான லண்டன் தவறணை பார் உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைன் சட்டத்தரணி தேவராஜனிடம் மண்கவ்வி நீண்டகாலம் தன்னை மௌனமாக்கிக் கொண்டவர். கோமாவில் இருந்து எழுந்து தமிழ் தேசியவாதியாகியுள்ளார். தற்போது தனது தவறணை வியாபாரத்திலிருந்து ஓய்வுபெறப்போவதாக லண்டன் சைவ ஆலயங்களின் ஒன்றியத்தின் வட்ஸ்அப் குறுப்பில் குமுறியிருந்தார், ஓய்வூதியர் கொன்ஸன்ரைன் யாழ் தமிழ்ப் பத்திரிகைகளை வடஸ்அப் குறுப்பில் பகிர்வதை தனது தமிழ் தேசியக் கடமையாக எண்ணிச் தன் ஓய்வுக்காலத்தை மிகப்பெறுமதியாகக் களித்து வருகின்றார். அவர் கொன்ஸ்ரன்ரைன் அசோசியேட் என்ற பெயரில் ஒரு அறக்கட்டளையை உருவாக்கி யாழில் ஹொட்டல் கட்டும் திட்டத்தை தனது முகநூலிலும் பதிவிட்டுள்ளார். இவரொரு கிறிஸ்தவர் என்பதால் கோயில்கட்ட முடியாததால் ஹொட்டல் கட்டும் தமிழ்த் தேசிய நிரோட்டத்தில் ஒரு வழியாக தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழியை ஹொட்டலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற புதமொழியை ஹொட்டலியர்கள் ஏற்படுத்தி வருகின்றனர் என யாழ் சிவனடியாரான சிவநாதன் நளினமாகத் தெரிவித்தார். தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அ அமிர்தலிங்கம் நிச்சாம சாதியத்துக்கு எதிரான கிளர்ச்சி பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது நிச்சாமம் பீக்கிங்காக மாறுகிறது எனச் சினந்துகொண்டார். யாழில் சாதிய ஒடுக்குமுறை சங்கிகளினாலும் தமிழ் தேசியவாதிகளினாலும் கூர்மையடைந்திருக்கும் இந்நிலையில் யாழை தாய்லாந்தின் பட்டாயாவாக்கும் கைங்கரியத்தில் தமிழ் தேசிய ஹொட்டலியர்கள் ஆறுதிருமுருகனின் ஆசீர்வாதத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் இந்திரன் ஏற்பாடு செய்த களியாட்ட நிகழ்ச்சி முற்றிலும் தவறானது என்று தட்டிக்கழித்துவிடவும் முடியாது. அந்த நிகழ்ச்சியை எப்படியாவது பார்த்துவிட வேண்டும் என்றுதான் பல லட்சம் பேர் விரும்பியுள்ளனர். ஆனால் அடிப்படையில் இந்நிகழ்ச்சியை இந்திரன் ஏற்பாடு செய்த நோக்கம், நிகழ்ச்சி ஏற்பாடு, அந்த மண்ணின் மரபுகளை கருத்திலெடுக்காதது, வியாபார உத்திக்காக குறிப்பாக நடிகைகளை போகப்பொருளாக இளைஞர்கள் முன் நிறுத்தியது என்பன மிகமோசமான மன்னிக்க முடியாத செயல். உலகின் முன் யாழ் சமூகத்தை, யாழ் இளைஞர்களை பாலியல் இச்சைக்கு அலைபவர்களாக சித்தரிக்க வைத்துள்ளார். ஒரு சில இளைஞர்கள் தவறான முறையில் நடந்துகொள்வார்கள் எனற கணிப்பில்லாமல் இவ்வாறானதொரு களியாட்ட நிகழ்வை நடத்தியது அவருடைய முட்டாள்தனம். இதில் யாழ் இளைஞர்கள் மீதோ யாழ் மக்களின் மிதோ எவ்வித தவறும் கிடையாது.

மேற்கு நாடுகளின் தவறணைகளில், பார்களில் சில பத்துப்பேர் கலந்துகொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கே வாயில் காப்பாளர்கள் இருப்பதும் பொலிஸார் வரவழைக்கப்படுவதும் நாளாந்த நிகழ்வு. இந்திரன் இந்நிகழ்வை நடத்துவதற்கு முன், லண்டன் தவறணை உரிமையாளர் கொன்ஸ்ரன்ரைனிடம் ஆலோசணை பெறாதது, மிகப்பெரும் வரலாற்றுத் தவறு.

இதே போல் ரோ தமிழீழம் பெற்றுத்தரும் என்று ஆர்ப்பரிக்கும் வட்ஸ்அப் போராளி நிலா பிரபாகரன் தன்னை மதியுரைஞராக வைக்காமல், கிறிஸ்தவரான சிஐஏ ஏஜென்டான அன்ரன் பாலசிங்கத்தை மதியுரைஞராக வைத்ததால் தான் தமிழீழ விடுதலைப் புலிகள் மே 18, 2009இல் தோல்வியடைந்ததாக உறுதியாக நம்புகிறார். முன்னையது இந்திரன் விட்ட வரலாற்றுத் தவறு. பின்னையது வே பிரபாகரன் விட்ட வரலாற்றுத் தவறு. இதுதான் காலக்கொடுமை என்பது.

யாழ் மக்களும் இளைஞர்களும் ‘மானாட மயிலாட’ பார்க்கத்தான் வேண்டும். ஆனால் அதனை நேர்மையுடன் பார்வையாளர்களை ரசிகர்களை மதித்து, வரக்கூடிய விளைவுகளை அறிந்து முற்கூட்டியே திட்டமிட்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சரிவரச் செய்து நடத்த வேண்டும். லண்டனில் வோல்தம்ஸ்ரோவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமாருடனான ஒரு உரையாடல் ஒன்று 2009இல் இறுதி யுத்தம் முடிவுக்கு வந்ததின் பின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனை லண்டன் திருக்கோயில்கள் ஒன்றியக் கோயில்களில் ஒன்றின் தர்மகர்த்தாவும் பாஉ சிறிதரனின் நிதியாளருமானவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட போதையூட்டப்பட்ட தமிழ் தேசிய புலி ஆதரவாளர்களைக் கொண்டு கூட்டத்தைக் குழப்ப மூன்று மணிநேரம் போராடினார். ஆனால் கொன்ஸ்ரன்ரைன் மிகச்சாதுரியமாக இரு பட்டாலியன் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரை இறக்கி கூட்டத்தை மிகவெற்றிகரமாக நடத்தினார். இந்திரன் கொன்ஸ்ரன்ரைனோடு ஒரு கொன்ஸ்பிரன்ஸ் ஹோல் போட்டிருந்தால் இன்றைய தலைப்புச் செய்திகளே வேறுமாதிரி அமைந்திருக்கும். உங்களுக்கு என்ன தெரியும் என்பதிலும் உங்களுக்கு யாரைத் தெரியும் என்பது மிக முக்கிய பாடம். இதுதான் இந்திரன் மூலம் ஈழத் தமிழர்கள் 2024 பெப்ரவரி 9இல் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்.

தமிழ் தேசியத்தை போர்துக்கொண்டு ஹொட்டலியர்களோடும் கள்ளச்சாமிகளோடும் ஆறுதிருமுருகன் போன்றவர்கள் போடும் கூத்திலும் பார்க்க யாழ் இளைஞர்கள் தம்மன்னாவின் நடனத்தை பார்த்து ரசிக்கச் சென்றதில் எந்தத்தவறும் கிடையாது. புலம்பெயர்ந்த தமிழர்கள் தாயகத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளைச் செய்கிறோம் என்ற பெயரில் தாயகத்தை உங்கள் அந்தப்புரமாக்காமல், பாலியல் சுரண்டலில் ஈடுபடாமல் அங்குள்ள மக்களின் கல்வி மற்றும் பொருளாதாரச் செயற்பாடுகளை முன்னேற்றும் வைகயில் செயற்பட வேண்டும். அதுவொன்றே அனைத்துவிதமான ஒடுக்குமுறைகளையும் மீறி தங்களை வளர்த்துக்கொள்ள உதவும்.

மேலும் புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள ஆலயங்கள் இலங்கை மற்றும் நாடுகளினது உளவு அமைப்புகளின் முகவர்களோடும் இலங்கையில் உள்ள தவறணை ஒப்பந்தங்களை விநியோகிக்கும் தமிழ் தேசிய அரசியல்வாதிகளான தற்போதைய தேசியத் தலைவர் சிறிதரன் போன்றவர்களுக்கு வாரி இறைத்து அங்குள்ள இளைஞர்களை போதையில் மிதக்க விடாமல் அந்த இளைஞர்களின் கல்வி, பொருளாதார மற்றும் தனிமனித ஆளுமைகளை வளர்த்தெடுக்க வேண்டும்.

இலங்கையில் அனைவருக்கும் இலவசக் கல்வி என்பதைக் கொண்டுவந்தவர் கல்வி அமைச்சராக இருந்த கன்னங்கரா. இந்த இலவசக் கல்வித்திட்டத்தின் பின் இடதுசாரிகளினது உழைப்பும் கணிசமானது. செல்வந்த நாடுகளான மேற்குலகில் கூட பல்கலைக்கழகம் வரை இலவசக்கல்வி என்ற நிலையில்லை. ஆனால் வறிய நாடான இலங்கையில் பல்கலைக்கழகப் படிப்பு முடியும்வரை இலவசக் கல்வியுள்ளது. ஆனால் அண்மைய காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தின் உலகவங்கியின் அழுத்தம் காரணமாக அரசு தனது பொறுப்புக்களைக் குறைக்க ஆரம்பித்துள்ளது. காலப்போக்கில் கல்வியைத் தனியார் மயப்படுத்தும் திட்டம் நாசுக்காக நடந்தேறி வருகின்றது.

இலங்கையில் தனியார் கல்வி ஸ்தாபனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆங்காங்கே முளைக்க ஆரம்பித்துள்ளன. கல்விக்கடன் பெற்று படிக்கச் செல்லும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. தனியார் மருத்துவமனைகள் வந்து, பொதுமருத்துவமனைகள் வினைத்திறனற்றவையாகிக் கொண்டுள்ளன. அதனால் பணம் உள்ளவரே சிகிச்சை பெறமுடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை பணமுள்ள மாணவர்களுக்கே கல்வி என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது.

“இந்திரனால் ஒருநாள் களியாட்ட நிகழ்வையே திட்டமிட்டு குழப்பமின்றி நடத்த முடியவில்லை. இவர் எப்படி பல்கலைக்கழகம் நடத்துவார்?” என்ற கேள்விகளும் தற்போது எழுந்துள்ளது.

மேலும் லாப நோக்கத்திற்காக மட்டும் நடத்தப்படும் இந்த தனியார் பல்கலைகழகங்கள் இப்போது இருக்கின்ற கல்விக்கட்டமைப்புகளை வலுவிழக்கச் செய்து, சமூகத்தில் உள்ளவனுக்கும் இல்லாதவனுக்குமான இடைவெளியை அதிகரிப்பதோடு சமூக முரண்பாடுகளை தீவிரப்படுத்தும். இது விழிம்புநிலை மக்கள் மீது நடத்தப்படும் அப்பட்டமான சுரண்டல். அம்மக்களை தொடர்ந்தும் ஏழ்மையில் தங்களுக்கு சேவகம் செய்யும் கூலிகளாக தம்மன்னாவைக் கண்டவுடன் ஓடிச் சென்று விசிலடிச்சான் குஞ்சுகளாக வைத்திருக்கும் நிகழ்ச்சிநிரல்.

மேலும் பெண்களை போகப்பொருட்களாக முன்னிறுத்துவதும் அவர்களை இந்த ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் வட்ஸ்அப் குறுபிப்பில் போட்டு பந்தாடுவதும் மிகக்கீழ்த்தரமான செயல். அவர்கள் நடிகைகளாக இருந்தாலும் அது அவர்களுடைய உத்தியோகம். அவர்களை விபச்சாரிகளாகச் சித்தரித்து பாலியல் இச்சைகளுடன் எழுதி சிற்றின்பம் காண்கின்ற கீழ்த்தரமான செயல்களை தமிழ் தேசியம் முற்றாகக் கைவிடவேண்டும்.

ஆறுதிருமுருகன் தன்னைப் பெற்றெடுத்த தன்னால் பாதிக்கப்பட்ட பெண்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று எழுதுவதைக்காட்டிலும் தன்னைப் போன்ற தன்னோடு கூடி உறவாடும் ஹொட்டலியர்களும் கோயில்காரர்களும் எப்படி நடந்துகொள்வது என்று எழுதினால் யாழ் சமூகத்திற்கு பயனுடையதாக இருக்கும். ஆனால் அதற்கு ஆறுதிருமுருகனுக்கு ஆறாவது அறிவு கொஞ்சமாவது இருக்கவேண்டும். அத்தோடு சற்று சமூக அக்கறையும் இருக்க வேண்டும்.

ஆற்றில் தொலைத்ததை குளத்தில் தேடக்கூடாது என்பது பழமொழி. ஒரு காலத்தில் ஒரேற்றர் சுப்பிரமணியத்தின் கீழ் இலங்கை முழவதற்குமே எடுத்துக்காட்டாக விளங்கிய ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் அதிபராக அதற்கான திறமையின்றி நியமிக்கப்பட்டு பதவி விலகிய ஆறுதிருமுருகன், யாழில் வழிதவறிய ஆண்கள் தொலைத்த, தொலைத்துக் கொண்டிருக்கும், தொலைக்கப் போகும் ஒழுக்கத்தை ஏன் பெண்களிடம்; தேடுகின்றார்? யாழ் பல்கலைக்கழகத்தின் பேரவையில் படுத்துக் கிடந்து என்னதான் செய்தார் ஆறுதிருமுருகன்?

புலம்பெயர்ந்த ஹொட்டலியர்கள், கோயில் கடைக்காரர்கள்;, வியாபாரிகள் மற்றும் முதலீட்டாளர்கள் மண்ணின் பண்புகளை மதித்து தாயகமக்களின் இயலாமையை பலவீனங்களை தமிழ் தேசியம் என்ற போர்வையில் முதலீடாக்காமல் அவர்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை அவர்களை சுயமரியாதையோடும் கௌரவத்தோடும் வாழவிடுங்கள். காலம் காலமாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை அழிப்பதில் தமிழ் தேசியவாதிகளும் புலம்பெயர் தமிழர்களுமே முன்னிற்கின்றனர். இவ்வாறான அனைத்து பிற்போக்குத் தனங்களையும் களையெடுத்து ஏனைய சமூகங்களோடு, மதப்பிரிவினரோடு, சக இனத்தவரோடு கைகோர்த்து அனைத்து மக்களிற்குமாக குரல்கொடுக்கின்ற முற்போக்குத் தேசியம் கட்டியமைக்கப்பட வேண்டும். அதுவொன்றே இலங்கையர் அனைவருக்குமான விடுதலைக்கு வித்திடும்.

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல் – 100க்கும் அதிகமானவர்கள் பலி !

ரஃபாவில் இஸ்ரேல் மேற்கொண்ட வான்வெளி தாக்குதல் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஃபாவை இலக்குவைத்து இஸ்ரேல் மேற்கொண்ட தீவிரமான விமானதாக்குதல்கள் எறிகணை தாக்குதல்கள் காரணமாக குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.

நகரின் பல பகுதிகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் காரணமாக 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

எல்லை பகுதிகளில் ஹெலிக்கொப்டர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் கொல்லப்பட்டவர்கள் இடிபாடுகளிற்குள் உள்ளதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என செம்பிறை சமூகம் அச்சம் வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் குண்டுவீச்சினால்  அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர் அவர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்கான வளங்கள் இல்லை என அபுயூசெவ் அல் நிஜார் மருத்துவமனையின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

ரவா மருத்துவமனைக்குள் குழப்பமான நிலை காணப்படுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது.

குழந்தையொன்றை காப்பாற்றுவதற்கு மருத்துவர்கள் போராடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

யப்னா முகாமில் இரண்டு மசூதிகள்  தாக்கப்பட்டதில் அங்கு தஞ்சமடைந்திருந்த பெருமளவானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

குவைத் மருத்துவமனையை சூழவுள்ள பகுதிகளிலும் எறிகணை வீச்சுக்கள் இடம்பெற்றுள்ளன.

தம்மன்னாவும் யாழ் தமிழ் தேசியமும் படும்பாடு ! யாழில் இந்திரன் பல்கலைக்கழகம் கட்டுகிறாரா இந்திர ( ன் ) லோகக் கன்னிகைகள் கழகம் கட்டுகிறாரா ?

யாழில் பெப்ரவரி 9 அன்று இந்திய நடிகர்கள் மற்றும் பாடகர்கள் கலந்துகொண்ட நிகழ்வில் மிகுந்த சர்ச்சை ஏற்பட்டது . ரம்பாவின் கணவர் என்றும் இந்திரன் என்றும் அறியப்பட்ட இந்திரகுமார் பத்மநாதனால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு யாழ் தமிழ்த்தேசியவாதிகளால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டிருந்தது . ஆயினும் தமிழ் தேசியத்தை உயர்த்திப் பிடித்தவர்களையும் தாண்டி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர் .

 

நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் பார்வையாளர்களின் இருக்கை மற்றும் அவர்கள் பார்ப்பதற்கான திரைகள் எதனையும் ஏற்பாடு செய்யாத நிலையில் பார்வையாளர்கள் முண்டியடித்து முன்னோக்கி நகர்ந்ததுடன் ஒளி , ஒலி அமைப்புக்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த மேடைகளிலும் ஏறி நிகழ்வுகளைப் பார்க்க முயன்றனர் . ரசிகர்கள் நிகழ்வுக்கு சுற்றிவரப் போட்ட வேலிகளைத் தாண்டி உள்ளே நுழைந்ததால் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்படலாம் என்ற அச்சமும் அங்கு நிலவியது நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வந்திருந்த கலைஞர்களும் ரசிகர்களை அமைதிகாக்கச் சொல்லிக் கெஞ்சிய போதும் நிகழ்ச்சியை முழுமையாக நடத்த முடியவில்லை .

 

இரு தடவைகள் நிகழ்ச்சியை இடைநிறுத்தி மீள ஆரம்பித்த போதும் திட்டமிட்டபடி நிழச்சியை நடத்த முடியாமல் போய்விட்டது. இந்நிகழ்வை இந்திரன் தான் கட்டப்போகின்ற நோர்தேர்ன் யூனிவர்சிற்றியின் ஏற்பாட்டிலேயே செய்திருந்தார் . இந்நிகழ்வில் தமிழகத்தின் முக்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் , நடிகர்கள் , பாடகர்கள் யாழ் வந்திருந்தனர் . நேற்றைய நிகழ்வானது தமிழக சினிமா உலகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்குமிடையேயான முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியுள்ளது . ஏற்கனவே புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தமிழகத்தின் சில நடிகர் , நடிகைகளுக்கு எதிராக அவர்களுடைய நிகழ்வுகளைக் குழப்பியிருந்தனர் . தற்போதைய இந்நிகழ்வுக்கு எதிராகவும் கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டிருந்தது .

இது தொடர்பான தேசம் திரை காணொளியை காண…

மாநில அந்தஸ்து ஆகியவற்றைக் வலியுறுத்தி லடாக் மக்கள் போராட்டம் !

இந்தியாவின்  லடாக் மக்கள் போராட்டம் மேற்கொண்டனர். சனிக்கிழமை அன்று அங்கு முழு அடைப்பு காரணமாக கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாகவும் சென்றனர்.

அரசியலமைப்பு பாதுகாப்பு கலாச்சார சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் மீண்டும் மாநில அந்தஸ்து ஆகியவற்றைக் வலியுறுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் லே நகரில் கூடி போராட்டம் மேற்கொண்டனர். லே அமைப்பு மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்தது.

சீனாவை ஒட்டிய பகுதியில் வசித்து வரும் லடாக் பகுதியை சேர்ந்த மக்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். லடாக் மக்களின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது. உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் தலைமையிலான இந்தக் குழுஇ தனது முதல் கூட்டத்தை கடந்த ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி நடத்தியது. அடுத்த கூட்டம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அங்கு மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவ்வப்போது போராட்டம் மேற்கொள்வது வருவது வழக்கமாக உள்ளது.

கடந்த 2019இ ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்துப் பிரிவான 370-ம் பிரிவை மத்திய அரசு நீக்கி ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவற்றை யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. அதே ஆண்டு அக்டோபர் 30-ம் தேதி நள்ளிரவில் அதிகாரபூர்வமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களாக மாறியது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்ரேலிய எழுத்தாளருக்கு மரணதண்டனை !

சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட அவுஸ்ரேலிய எழுத்தாளர் யாங் ஹெங்ஜூனிற்கு சீனா ஒத்திவைக்கப்பட்ட மரணதண்டனையை விதித்துள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை இரண்டு வருடங்களிற்கு பின்னர் ஆயுள்தண்டனையாக மாற்றப்படலாம் என அவுஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை சீனா விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வந்த எழுத்தாளர் யாங் உளவு பார்த்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளார்.

இந்நிலையில் சீனாவின் தீர்ப்பினால் அதிர்ச்சியடைந்துள்ளதாக அவுஸ்ரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அனைத்து அவுஸ்ரேலியர்களும் யாங் தனது குடும்பத்துடன் இணைவதை விரும்புகின்றனர்.

எனவே அவர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற பரப்புரையை நாங்கள் நிறுத்தப்போவதில்லை என அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

முன்னர் சீனாவின் மாநில பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய யாங் ஜனநாயக கடத்தல்காரர் என அழைக்கப்பட்டதனால் அவரது எழுத்துக்கள் அரசாங்கத்தை நேரடியாக விமர்சிப்பதை தவிர்த்துள்ளன.

2019ஆம் ஆண்டு குவாங்சோ விமான நிலையத்தில் சீனாவில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைதுசெய்து இவர் தடுத்துநிறுத்தப்பட்டார்.

அதன் பின்னர் இவர் குறித்த விசாரணைகள் மூடிய கதவுகளின் பின்னால் இடம்பெற்றுள்ளதாகவும் 2021இல் இரகசிய விசாரணையும் இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

சாந்தனை இலங்கைக்கு அழைத்து வரும் விவகாரம் – நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் டக்ளஸ் !

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களுள் ஒருவரான சாந்தனை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு சம்மதம் தெரிவித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (05) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரஸ்தாபித்த நிலையிலேயே ஜனாதிபதியினால் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹௌதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதலை வரவேற்கும் அவுஸ்திரேலியா!

யேமனின் ஹெளத்திகிளர்ச்சியாளர்களிற்கு எதிராக அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து முன்னெடுத்துவரும் தாக்குதல்களிற்கு அவுஸ்திரேலியா தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

நேற்றும் அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவுஸ்திரேலியா இந்த தாக்குதலிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பான கூட்டறிக்கையொன்றை அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சட் மார்லெஸ் வெளியிட்டுள்ளார்.

செங்கடல் வழியாக பயணம் மேற்கொள்ளும் அப்பாவி மாலுமிகளின் உயிர்களிற்கும் சர்வதேசவர்த்தகத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தும் ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் திறனை குறைப்பதை நோக்கமாக கொண்ட நோக்கிலேயே இந்த துல்லியமான தாக்குதல்கள் இடம்பெறுகின்றன என ரிச்சட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

செங்கடல் பகுதியில் பதற்றத்தை குறைப்பதும் அந்தபகுதியில் ஸ்திரதன்மையை ஏற்படுத்துவதுமே இந்த தாக்குதலின் நோக்கம் என தெரிவித்துள்ள அவர் நாங்கள் ஹெளத்திகிளர்ச்சி குழுக்களின் தலைமைக்கு எங்களின் எச்சரிக்கையை மீண்டும் தெரிவிப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

உலகின் மிகமுக்கியமான கடல்பாதையில் சுதந்திரமான வர்த்தகம் மற்றும் உயிர்களை நாங்கள் பாதுகாப்போம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் பரவலடையும் கத்தி குத்து கலாச்சாரம் – பாரிஸில் அதிகாலையில் நடந்த துயரம் !

பிரான்ஸின் பாரிஸில் உள்ள ஒரு முக்கிய தொடருந்து நிலையத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சனிக்கிழமை காலை நடந்த இந்த கத்திக்குத்து சம்பவத்தின் போது ஒருவர் வயிற்றில் பலத்த காயம் அடைந்துள்ளார்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் இத்தாலிய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருந்ததாகவும் மாலி நாட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலமாக பாரிஸில் பல இடங்களில் கத்திக்குத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. டிசம்பரில், ஈபிள் டவர் அருகே சுற்றுலாப் பயணி ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தலைநகர் கரே டு நோர்டில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர்.

இதேவேளை இங்கிலாந்தின் லண்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்த கத்தி குத்து கலாச்சாரம் மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடிவதுடன் இந்த வருடம் 2024 ஜனவரி 8ஆம் திகதி ஞானேஸ்வரன் அனோஜன் என்ற தமிழ் இளைஞன் லண்டனில் ஸாரோபரி கில் புகையிரத நிலையத்தில் வைத்து கத்தி குத்துக்கு இலக்காகி உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.