செய்திகள்

செய்திகள்

செய்திகள்

தமிழர்களுக்காக மற்றுமொருவர் தீக்குளித்ததாக பரபரப்பு : ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார் – போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் – பள்ளப்பட்டியைச் சேர்ந்த ஒருவர் இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி (46). இவர் நேற்று இரவு பலத்த தீக்காயத்துடன் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்குக் கொண்டு வந்து அனுமதிக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை ரவியின் மகன் பிரபாகரனுடன் வக்கீல்கள் உள்ளிட்டோர் அரசு மருத்துவமனை முன்பு போராட்டத்தில் குதித்தனர். ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்துத்தான் ரவி தீக்குளித்தார். ஆனால் இதை போலீஸார் மறைக்க முயலுகிறார்கள் என்று கூறி போராட்டம் நடத்தினர். பிரபாகரனும், தனது தந்தை ரவி ஈழத் தமிழர் படுகொலையைக் கண்டித்து தீக்குளித்தார் என்று தெரிவித்தார்.

ஆனால் போலீஸார் இதை மறுத்துள்ளனர். ரவி மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. அவர் வீட்டில் ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்தார். இலங்கைத் தமிழர்களுக்காக அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கூறினர்.

முத்துக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர்

muthukumar-111.jpg
தீக்குளித்து உயிரிழந்த இளைஞர் முத்துக்குமாரின் உடலுக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மாணவர்கள் பிடிவாதமாக மறுப்பு தெரிவித்ததால் நேற்று நடைபெற முடியாமல் போன முத்துக்குமாரின் இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெற்றது. முத்துக்குமாரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் இன்று மாலை தொடங்கின. மாலை 3 மணிக்கு மேல் இறுதி ஊர்வலம் தொடங்கியது.

இறுதி ஊர்வலம் கொளத்தூரில் தொடங்கி செம்பியம் பேப்பர் மில் சாலை வழியாக பெரம்பூர் ஜமாலியா, ஓட்டேரி பாலம், புரசை வாக்கம் நெடுஞ்சாலை வழியாக சூளை கண்ணப்பர் திடல் யானைகவுனி பாலம் வழியாக வால்டாக்ஸ் சாலை சென்று மூலக் கொத்தளத்தில் மொழிப் போர் தியாகிகள் நினைவிடத்தை சென்றடைகிறது. தமிழகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கானோர் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

இதனால் ஊர்வலப் பாதை நெடுகிலும் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. பெருமளவில மக்கள் அணிவகுத்து வந்ததால் மிக மிக மெதுவாக இறுதி ஊர்வலம் நகர்ந்தது.மூலக்கொத்தளத்தில் இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இறுதி ஊர்வலத்தையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு பெருமளவில் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

யாழ். உண்ணாவிரதப் போராட்டத்தை மேலும் விஸ்தரிப்பதற்குத் தீர்மானம்

வன்னியில் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் தொடர்ந்துகொண்டிருக்கின்ற நிலையில் அவற்றை நிறுத்துமாறு கோரி யாழ்ப்பாணத்தில் நடத்தப்படுகின்ற போராட்டங்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றுவருகின்ற உண்ணாவிரதம் நேற்று மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது. வழமைபோல் நேற்றுக் காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் ஆரம்பமானது.

உண்ணாவிரதம் மேற்கொள்ளப்படுகின்ற இடத்திற்கு நேற்றுக் காலை வருகைதந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில் உரையாற்றினார். யாழ். ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம், மதகுருமார்கள், அருட்சகோதரிகள் உட்பட பல நூற்றுக்கணக்கான பொதுமக்களும் நேற்று உண்ணாவிரதத்தில் பங்குபற்றினர்.

உண்ணாவிரதப் போராட்டம் இன்றிலிருந்து விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி இன்று சனிக்கிழமை யாழ்.குருநகர் புதுமை மாதா ஆலயத்திலும் நாளை ஞாயிற்றுக்கிழமை கொய்யாத்தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்திலும் இவ் உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது. இதேவேளை, யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வகுப்புப் புறக்கணிப்பும் ஊழியர்களின் பகிஷ்கரிப்புப் போராட்டமும் நேற்று ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்தது. இதனால், மாணவர்கள், பீடாதிபதிகள் மற்றும் விரிவுரையாளர்களின் வரவின்றி பல்கலைக்கழக வளாகம் வெறிச்சோடியிருந்தது.

பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் விரிவுரைகள் மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களின் பரீட்சைகள் என்பன நடைபெறாததோடு நிர்வாக வேலைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது

இளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல – கருணாநிதி அறிக்கை

karunanithi.jpgஇளைஞர் முத்துக்குமாரின் மரணத்தை அரசியலாக்குவது சரியல்ல என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இளைஞர் முத்துக்குமாருக்கு நேற்று திமுக எம்.எல்.ஏ பாபு அஞ்சலி செலுத்த சென்றபோது அவர் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நிலையில், முதல்வர் கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், இளைஞர் முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிர் நீத்தார் என்ற செய்தியைக் கேட்டதும் நான் மிகவும் வேதனை அடைந்தேன்.

இதையடுத்து கழகப் பொருளாளரும், உள்ளாட்சித் துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் உரையாற்றும் போது தீக்குளித்து மாண்ட இளைஞரின் பிரிவுக்காக வருந்தி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து அவருடைய குடும்பத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். ஆனால் இன்று வந்துள்ள செய்திகளைப் பற்றிச் சிந்திக்கும் போது மறைந்த முத்துக்குமாருடைய குடும்பத்தார் அந்த நிவாரண நிதியை வாங்க மறுத்து விட்டதாக ஒரு செய்தி வந்திருக்கிறது.

அது மாத்திரமல்லாமல் மறைந்த அந்த இளைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்த மலர் வளையத்தோடு அந்த இடத்திற்குச் சென்ற வட சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளர், சட்ட மன்ற உறுப்பினர் பாபு மீதும் கற்கள் வீசி தாக்கப்பட்டிருக்கிறார். இலங்கைத் தமிழர்களுக்காக தீக்குளித்த ஒரு இளைஞரின் தியாகச் செயலை இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது என்பதையும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை மிக மலிவான விளம்பரத்திற்கு உள்ளாக்கி விடக்கூடும் என்பதையும் ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி ஹோட்டல் தாக்கப்பட்டது.

புதுச்சேரியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் தாக்கி சூறையாடப்பட்டது. சென்னையில் இலங்கை வங்கியும், இலங்கை துணைத் தூதரகமும் சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டன. இந்த நிலையில் புதுவையிலும் இலங்கையர்களுக்கு எதிரான தாக்குதல் பரவியுள்ளது. புதுச்சேரி காந்தி வீதி – படேல் சாலை சந்திப்பில் இலங்கையை சேர்ந்தவர்கள் நடத்தும் அதிதி என்ற ஹோட்டல் உள்ளது. நேற்று நள்ளிரவு 8 வாலிபர்கள் 5 மோட்டார் சைக்கிளில் வந்தனர். ஹோட்டல் மீது அவர்கள் திடீரென்று சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள்.

அந்த சமயத்தில் அப்பகுதியில் ரோந்து போய்க் கொண்டிருந்த போலீஸ்காரர் செந்தில் குமார், ஊர்காவல் படை வீரர் நாராயணசாமி ஆகியோர் அவர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். இதில் போலீஸ்காரரும், ஊர் காவல் படைவீரரும் காயம் அடைந்தனர். இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அவர்கள் விரட்டிச்சென்று ஒருவரை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட நபர் பூமியான் பேட்டையை சேர்ந்த செல்வம் (32) என்றும், அவர் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர் என்றும் தெரிய வந்தது.

நாகேஷ் இன்று மரணம் அடைந்தார்!

nagesh.jpgநகைச் சுவையிலும் குணச்சித்திர நடிப்பிலும் பலப்பல சாதனைகள் படைத்த நடிகர் நாகேஷ் இன்று மரணம் அடைந்தார். 1000 திரைப்படங்களுக்கும் மேல் நடித்த பெருமைக்குரிய மகா கலைஞன் நாகேஷ்.

சில நாட்களாகவே அவருக்கு உடல் நலக் கோளாறு இருந்து வந்தது. இருமாதங்களுக்கு முன் அவருக்கு கடும் நெஞ்சுவலி ஏற்பட்டது. பின்னர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இன்று காலை உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

நாகேஷின் இயற்பெயர் குண்டுராவ். கன்னட பிராமண குடும்பத்தில் 1933-செப்டம்பர் 27-ம் தேதி பிறந்தவர். நடித்த முதல் திரைப்படம் எதிர்நீச்சல். அதன்பிறகு அவர் நடித்த பல படங்கள் சிகரம் தொட்டன.

காயமடைந்தவர்களுக்கு உதவ வவுனியா ஆஸ்பத்திரிக்கு வந்தவர்கள் நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்

redcrose2801.jpgவன்னிப் பகுதியில் இடம்பெற்ற அகோர ஷெல் தாக்குதல்களால் படுகாயமடைந்த நிலையில் வவுனியா ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அவர்களுடன் வந்த உறவினர்கள் ஆஸ்பத்திரியில் நிற்க அனுமதிக்கப்படாது நெளுக்குளம் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை இரவு ஆறு அம்புலன்ஸ்களில் படுகாயமடைந்தவர்களும் ஐந்து பஸ்களில் சிறுசிறு காயமடைந்தவர்களும் அவர்களைப் பராமரிப்பவர்களுமென 226 பேர் வவுனியாவுக்கு கொண்டுவரப்பட்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இருந்து 50 சிறுவர்கள் உட்பட 226 பேர் வவுனியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கு ஆஸ்பத்திரியில் உதவிசெய்து பராமரிப்பதற்காக சேர்ந்து வந்த 139 பேரும், ஆஸ்பத்திரிக்குள் காயமடைந்தவர்களுடன் கூடச்செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்கள் நேரடியாக நெளுக்குளம் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.

படுகாயமடைந்தவர்களில் அதிகமானவர்கள் கைகால்கள் முறிந்த நிலையிலும், அவயங்கள் பாதிக்கப்பட்டும் உள்ளதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இராணுவத் தளபதி வன்னிக்கு விஜயம்

fonseka2.jpgஇராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று வன்னிப் பகுதிக்குச் சென்று மோதல் நடைபெறும் பிரதேசங்களை நேரில் பார்வையிட்டு,அங்கு இராணுவம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார். அவருடன் இராணுவ உயர் அதிகாரிகளும் சென்றிருந்தனர் என இணையத்தளத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதில் மேலும்  தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயரும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யவும், இராணுவ நடவடிக்கைகள் மேற்பார்வையிடவும் பென்சேகா  வன்னிக்கு வந்ததார் என இராணுவத் தரப்பு தெரிவித்தது. சரத் பொன்சேகா இப்பயணத்தின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் 57, 58, 59 ஆவது படை அணிகளின் தளபதிகள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகளைச் சந்தித்து போர் உத்திகள் குறித்து ஆலோசனை நடத்தினார் என்றும் ஜனாதிபதியின் 48 மணிநேர போர் நிறுத்த அறிவிப்பு முடிவுக்கு வந்த பின்னர் முழுவீச்சில் தாக்குதலை நடத்த இராணுவம்திட்டமிட்டுள்ளது என்றும் அதுகுறித்த ஆலோசனைகளை வழங்கவே பொன்சேகா போர்முனைக்குச் சென்றனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்கள் விரும்பினால் வெளியேற புலிகள் அனுமதிக்க வேண்டும்: தமிழ் தேசிய கூட்டமைப்பு

tna.jpgஇலங்கையின் ஜனாதிபதி வடக்கே போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை விடுதலைப் புலிகள் விடுவிக்க வேண்டும் என்று கோரியுள்ள நிலையில், அவ்வாறு மக்கள் வெளியேற விரும்பினால், அதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுவின் தலைவரான இரா சம்பந்தர் தெரிவித்தார்.

எனினும், அப்பகுதியிலிருந்து வெளியேறுவது குறித்த முடிவை அங்கிருக்கும் மக்கள்தான் எடுக்க வேண்டும் என்றும் அங்கிருந்து மக்கள் வெளியேற முடியாததற்கு விடுதலைப் புலிகள் மட்டுமே காரணம் என்று கூறப்படுவது ஏற்க முடியாதது என்றும் சம்பந்தர் கூறுகிறார்.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸும் இலங்கையில் உடனடி யுத்தநிறுத்தத்தை கோருகிறது

SL_Army_in_Killinochieசுய நிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளதாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  இதுதொடர்பாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கைத் தீவில் தீவிரமடைந்து வரும் மனிதாபிமான அவலத்தையிட்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தனது தீவிர கவனத்தை கொள்கின்றது. வடக்கு வன்னிப்பிரதேசத்தில் நிகழ்ந்துவரும் இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான யுத்தத்தில் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் அகப்பட்டுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமைக்காக போராடும் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் 27 வருடங்களாக நடந்து வரும் கடும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், மாபெரும் அழிவுகளும் ஏற்பட்டுள்ளன.

இந்தப் போரைக் கண்காணித்து வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், இந்தப் போரானது ஒரு இனப் படுகொலைக்குரிய நிலையை அடைந்திருப்பதாகக் கூறியுள்ளது. பெரும் உதவிகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்காக போரில் ஈடுபட்டுள்ள இரு பகுதியினரும் உடனடியாக யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி மக்களுக்குரிய மனிதாபிமான உதவிகள் சென்றடைய வழி செய்ய வேண்டும்.

அதேநேரம், இரு பகுதியினரையும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி ஒரு நிலையான சமாதானத்திற்கு வழிவகுக்குமாறும் ஆபரிக்க தேசிய காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.