செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளுடன் சீனத்தூதுவர் நேற்று சந்திப்பு

kandy1.jpgஇலங்கைக்கான சீனத் தூதுவர் சியூபிங் யென்ங், அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்தித்துப் பேசினார். கண்டியிலுள்ள அஸ்கிரிய, மல்வத்த விகாரைகளில் இந்தச் சந்திப்பு நேற்று இடம் பெற்றது.

இலங்கை – சீனா இரு நாடுகளினதும், நட்புறவை மேலும் வலுப்படுத்த சீன அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாக இலங்கைக்கான சீன நாட்டு புதிய தூதுவர் சியூ பிங் யென்ங் உறுதியளித்துள்ளார். இலங்கை மற்றும் சீன நாட்டு உறவுகளை பலப்படுத்தும் முகமாக இரு நாடுகளிலுமுள்ள வாலிப பெளத்த மத குருமார்களை இலங்கையிலிருந்து சீன நாட்டுக்கும் சீன நாட்டிலிருந்து இலங்கைக்கும் அனுப்புவதன் மூலம் எமது இரு நாடுகளுக்குரிய உறவுகளும் பலப்படுத்துவதற்கு ஒரு பிரதான காரணமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

தற்போது கண்டி ஸ்ரீதலதா மாளிகையில் புத்தபெருமானின் தந்தம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை கண்டுகளிக்க வந்திருக்கும் மக்கள் கூட்டத்தை என்னால் அவதானிக்கின்ற பொழுது இந்த நாட்டு பெளத்தர்கள் பெளத்த மதம் மீது வைத்திருக்கும் அன்பையும் ஆதரவையும் என்னால் மிக தெளிவாக உணரக் கூடியதாக இருக்கின்றன.

இன்று இலங்கை பெளத்தர்கள் மட்டுமல்ல உலகில் வாழும் அனைத்து பெளத்தர்களும் ஸ்ரீதலதா மாளிகையையும் அதன் போதனைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது போல் நானும் இச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்திருப்பது பெரும் அதிர்ஷ்டத்திற்குரிய ஒருவராக இருக்கின்றமை குறித்து மிகவும் சந்தோஷப்படுகின்றேன்.

சீனாவில் உள்ள பீஜிங் நுவர லீ குவான் விகாரையிலும் புத்த பெருமானின் புனித தந்தமொன்று உள்ளது. அதனை தரிசிக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த 2007 இல் வந்ததை முன்னிட்டு இலங்கை – சீன நட்புறவு மேலும் வலுவடைந்ததையும் நான் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதனால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த பீடாதிபதிகளுக்கு கூட இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதில் உற்சாகம் காட்டி வருவதையும் என்னால் அறிய முடிந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வட இந்தியாவில் “ஹோலி” மோதல்:8-பேர் பலி;250-பேர் காயம்

holi.jpgஉத்தரப் பிரதேசம்,பிகார் மற்றும் தில்லியில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதல்களில் 8-பேர் கொல்லப்பட்டனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உத்தரப் பிரதேச மாநிலம்,வாராணசியில் புதன்கிழமை இரவு ஹோலி கொண்டாட்டத்தின்போது மசூதி சுற்றுச்சுவர் மீது வண்ணப்பொடியை தூவியதால் ஏற்பட்ட மோதல் வகுப்பு கலவரமாக மாறியது. கலவரத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.இதில் இருவர் கொல்லப்பட்டனர்.இதே மாநிலத்தில் பஹ்ரைச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது தீவைப்பு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து ஏற்பட்ட வகுப்பு மோதலில் 6-பேர் காயமடைந்தனர்.

காஸிபூரில் நடந்த வகுப்பு மோதலில் 16-வயது இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டார்.முஸாஃபர்நகர் மாவட்டத்தில் லிசாத் கிராமத்தில்,ஹோலி கொண்டாட்டத்தின்போது இரு பிரிவினர் குடித்துவிட்டு பரஸ்பரம் துப்பாக்கியால் சுட்டனர்.இதில் 6-வயது சிறுவன் கொல்லப்பட்டான்.

பிகாரிலும் “ஹோலி” கலவரங்கள் நடைபெற்றன. மோதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். தில்லியில் தையல் வேலை செய்துவந்த இளைஞர் உறவுப் பெண்ணுடன் சென்றுகொண்டிருந்தபோது சிலர் அவர்கள் மீது வண்ணப்பொடியை வீசினர்.இதற்கு அவர் ஆட்சேபம் தெரிவித்தார்.இதனால் ஏற்பட்ட மோதலில் அந்த இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார்.

ஜெய்ப்பூரில் குடித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் ஹோலி கொண்டாடிய மூன்று இளைஞர்கள் கீழே விழுந்து இறந்தனர். மாநிலம் முழுவதும் ஹோலி மோதல்களில் 200-பேர் காயமடைந்தனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.மகாராஷ்டிர மாநிலம் தாணே அருகே ரயில் மீது தண்ணீர் பலூனை வீசியெறிந்ததில் பயணி ஒருவருக்கு கண் பார்வை பறிபோனது.

பிரிட்டிஷ் தூதுக்குழு மாகாண அமைச்சர் ஹிஸ்புல்லாவுடன் சந்தித்துப் பேச்சு

hisbullah.jpgபிரித்தானிய உயர் ஸ்தானிகராலய தூதுக் குழுவினருடான சந்திப்பொன்றினை, கிழக்கு மாகாண சுகாதார, சுதேச, விளையாட்டுத்துறை மற்றும் தொழில் நுட்பக் கல்வி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் மேற்கொண்டார்.

இச்சந்திப்பு திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் பிரத்தியேக காரியாலயத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் அடிப்படைத் தேவைகள், சூழ்நிலை தொடர்பாக விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இவ்வைபவத்தின்போது கிழக்கு மாகாணத்தில் கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படைத் தேவைகள் தொடர்பான கருத்துகளை மாகாண அமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லாஹ்வினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரித்தானிய தூதுவர் டொக்டர் பீட்டர் கெயில், தென்னாசிய உதவிப் பணிப்பாளர் பிலிப்பாடர்ன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பில் டெங்கு தீவிரம்

batti-01.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தீவிரமாகப் பரவிவருவதாகவும், கட்டுப்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் எஸ். தட்சணா மூர்த்தி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, பாலமுனை மற்றும் வாழைச்சேனைப் பிரதேசங்களில் டெங்கு நோயாளர் இனம் காணப்பட்டுள்ளதாகவும், பலர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு

tco-child-killed-01.jpgகடந்த இரு தினங்களுக்கு முன் திருகோணமலையில் கடத்திச் செல்லப்பட்ட ஆறு வயது சிறுமியைப் பொலிஸார் சடலமாக மீட்டுள்ளனர்.

சிறுமியைக் கடத்திச் சென்றவர்கள் ஒரு மில்லியன் ரூபாவை அவரது குடும்பத்தினரிடம் கப்பமாகக் கேட்டிருந்த நிலையில் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: புகைப்படம் lankadeepa.lk

tco-child-killed-01.jpg

பிரிட்டன் உயர்ஸ்தானிகர் வவுனியாவிற்கு விஜயம்

uk.jpgஇலங்கைக் கான பிரிட்டன் உயர்ஸ்தானிகர் பீட்டர் பேட்டன் தலைமையிலான குழு ஒன்று நேற்றயதினம் (12.03.2009) வவுனியா செட்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள நலன்புரி முகாமிற்கு விஜயம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அங்கு சென்ற இக்குழு நலன்புரி முகாமில் தங்கியுள்ள மக்களின் நலன் தொடர்பில் கவனம் செலுத்தியதுடன் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள வசதிகள் குறித்து அரசாங்கத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.

மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டது யாழ்தேவி வவுனியா வரையிலான சேவை இடைநிறுத்தம்

railways-in-jaffna.jpgகொழும்பு வவுனியா யாழ்தேவி கடுகதி ரயில் சேவை நேற்று வியாழக்கிழமை முதல் மதவாச்சி வரையே நடைபெறுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. வடபகுதி பயணிகள் மறுஅறிவித்தல்வரை மதவாச்சி சென்றே கொழும்புக்கான ரயில் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது.

இந்த ரயில்சேவை நிறுத்தப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்படாததுடன் மீண்டும் வவுனியாவுக்கான சேவை எப்போது நடைபெறுமெனவும் தெரிவிக்கப்படவில்லை. நீண்டகால இடைவெளிக்குப்பின்னர் பல்வேறு முயற்சிகளின் மத்தியில் கடந்த டிசம்பர் 16 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கான பகல்நேர ரயில்சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

எனினும் இடையிடையே இந்த ரயில் சேவை மதவாச்சியுடன் மட்டுப்படுத்தப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மறுஅறிவித்தல் வரை இந்த ரயில்சேவை மதவாச்சியுடன் நிறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானிய நிழல் பாதுகாப்புச் செயலாளர் இன்று ஜனாதிபதியூடன் சந்திப்பு.

president_liam.jpgஇலங் கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின் நிழல் பாதுகாப்புச் செயலாளர் டொக்டர் லியம் பொக்ஸ் இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, அனர்த்த முகாமைத்துவ, மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க,  ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித கொஹன ஆகியோரும் கலந்துகொண்டனர்.நேற்று இலங்கைக்கு வருகை தந்த இவர் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட பல முக்கியஸ்தர்களைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதோடு நாளை நாடு திரும்புவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குடாநாட்டிலிருந்து 48 ஆயிரம் கிலோ சின்ன வெங்காயம் 36 ஆயிரம் கிலோ இறால் வகைகள் கொழும்பு வந்தன!

lorry_food.jpgயாழ். குடாநாட்டின் உற்பத்திப் பொருட்களான சின்ன வெங்காயம் இறால். பீட்றூட் கிழங்கு உட்பட மற்றும் மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு 23  லொறிகள் இன்று அதிகாலை 1.30 மணிக்கு வெலிசற களஞ்சியசாலையை வந்தடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்திற்குக் கடந்த செவ்வாய்கிழமை ஏ 9 வீதியினூடாக லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்கும் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து  யாழ். குடாநாட்டு உற்பத்திப் பொருட்கள் அந்த லொறிகளில் ஏற்றப்பட்டன.
 
இன்று அதிகாலை வெலிசற களஞ்சியசாலைக்கு வந்துசேர்ந்த 23 லொறிகளில் 48 ஆயிரம் கிலோகிறேம் சின்ன வெங்காயம், 36 ஆயிரம் கிலோகிறேம் இறால், நண்டு வகைகள், மற்றும் பீட்றூட்,  கரட் உட்பட பெருந்தொகையான மரக்கறி வகைகளும் கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீர் ஏற்பாடு காரணமாக யாழ்ப்பாணத்தின் பிரதான உற்பத்தியான பழ வகைகள்,  புகையிலை மற்றம் பனை உற்பத்திப் பொருட்களை உடனடியாகச் சேகரிக்க அவகாசம் கிடைக்கவில்லை எனவும் அடுத்த கட்ட நடவடிக்கையின்போது அவற்றையும் தென் இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என இராணுவ உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். 

அக்குரஸ்ஸ தாக்குதல் சம்பவம் 10 தமிழ் இளைஞர்கள் கைது

akkurassa-02.jpgஅக்கு ரஸ்ஸ கொடபிட்டியவில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்ற குற்றப்புலனாய்வு பொலிஸார் (சி.ஐ.டி.) பத்து தமிழ் இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் புதன்கிழமை கைது செய்துள்ளனர். இத்தகவலை தென்பிராந்திய பிரதிப்பொலிஸ் மா அதிபர் டீ. டபிள்யூ. பிரதாப்சிங்க தெரிவித்துள்ளார்.கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள் அக்குரஸ்ஸ பகுதி தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு பொலிஸார் பலரிடம் இருந்து வாக்கு மூலங்களைப்பெற்று வருகின்றனர். இந்த பத்து தமிழ் இளைஞர்களும் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.