எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

தூங்குபவனை எழுப்பலாம்… : சுமதி ரூபன்

Canadian_Protest_13Mar09கனேடியத் தமிழ் காங்கிரஸ், கனேடிய பாராளுமற்ற உறுப்பினர்களுடன் தமக்கு இருக்கும் சார்பு நிலையைப் பயன்படுத்தி, வன்னி மக்களின் பாதுகாப்பிற்காகத் தம்மால் ஆன போராட்டங்களை ஆர்ப்பாட்டங்கள் அற்ற முறையில், கறுப்புக் கொடியுடன் ஆரம்பித்து வைத்தது.

சிங்கள அராஜக அரசு வன்னி மக்கள் மேல் நடாத்தி வரும் மனிதாபதமற்ற தாக்குதல்களைக் கண்டித்து மக்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு சிங்கள அரசின் மேல் அழுத்தங்களைக் கொடுப்பதன் மூலம் உடனடிப் போர் நிறுத்தத்தைக் கொண்டு வருவதுடன், உலக நாடுகளிடமிருந்து இலங்கை அரசு பெற்று வரும் உதவிகளைத் தடை செய்வது போன்றவையே இவர்களது போராட்டத்தின் முக்கிய நோக்கமாக இருந்தன. இப்போராட்டங்கள் மூலம் ஜ.நா விற்கு அழுத்தம் கொடுத்து தமிழ் மக்களுக்கு சார்பாக எதையாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் இவர்களிடம் இருந்தது என்று அறிய முடிந்தது.

கனேடிய பாரளுமன்ற உறுப்பினர்களிடம் சிறிதளவேனும் தமிழ் மக்களுக்கான உதவியைப் பெற வேண்டும் எனில் அவர்களது சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதில் கனேடியத் தமிழ் காங்கிரஸ் மிகவும் விழிப்போடிருந்தது.

ஆரம்ப காலப் போராட்டங்கள் கறுப்புக் கொடிகளுடன் அமைதியான முறையில் நடைபெற்றதால் கனடா வாழ் தமிழ் மக்களைப் பற்றிய ஒரு நல்லெண்ணத்தைக் கனேடிய அரசிற்கு நிச்சயம் அது வழங்கியிருந்தது.

ஆனால் எமது மக்கள் செய்த பாவமோ என்னவோ திடீரென்று அனைத்துப் போராட்டங்களும் திசைமாறி தமிழர்கள் என்றாலே சட்டத்தை மதிக்கத் தெரியாத வன்முறையாளர்கள் என்று உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முத்திரை குத்தும் அளவிற்கு தமிழ் மக்களுக்கான போராட்டம் இப்போது திசைமாறி விட்டது. தாம் என்ன செய்கின்றோம் என்று விளக்கமில்லாது வெறும் உணர்வுகளால் உந்தப்பட்டு, தம் மனச்சாட்சிக்காய், தம் பங்கிற்காய் எதையாவது செய்ய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் பல பாடசாலை, பல்கலைக்கழக மாணவர்களும் இப்போராட்டங்களின் இணைந்திருக்கின்றார்கள் என்பதுதான் மிகவேதனையான விடையம்.

.-.-.-.-.-.

எமது நாட்டில் அடங்காத் துயரில் இருக்கும் மக்கள் தனது அன்றாட தேவைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடம் மிஞ்சியிருப்பது உயிர் ஒன்று மட்டுமே. அவர்களுக்குத் தேவையான உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு உடனடி போர்நிறுத்தம் தேவை எனின் நாம் கையேந்தும் நாடுகளின் சட்டங்களை மதித்தே ஆக வேண்டிய நிலையில்தான் நாம் இன்று இருக்கின்றோம்.

கனேடியத் தமிழ் வானொலி ஒன்றின் கலந்துரையாடலை அண்மையில் கேட்டேன். வன்னி மக்கள் தமது சொந்த நிலத்தில்தான் வாழ வேண்டும் அவர்கள் வெளியேறத் தேவையில்லை என்று கனேடிய அரசியலில் ஈடுபட்டிருக்கும் தமிழர் ஒருவர் கூறினார். பண வசதி இருந்ததால் தனது சொந்த நாட்டை விட்டு, ஊரை விட்டு மூட்டை முடிச்சுடன் ஓடிவந்து கனடாவில் வாழும் இவர்கள் போன்றோர், இங்கு வந்து இறங்கியவுடன் முதலில் செய்தது மிஞ்சியிருக்கும் தமது சொந்தங்ளை இங்கே இறக்கியதுதான். தமது பிள்ளைகளுக்குத் தடிமன் வந்தால் கூடத் துடித்துப் போகும் இவர்கள், தமது உயிரைக் காத்துக் கொள்ள நாட்டை விட்டுக் கடல் கடந்து ஓடி வந்தவர்கள், வன்னி மக்கள் அனைத்தையும் தொலைத்துவிட்டு, மிஞ்சியிருக்கும் உயிர் ஒன்றையே கையில் கொண்டு எங்காவது போய்த் தப்பித்துக் கொள்ளலாமா என்று தவித்திருக்கும் போது அவர்கள் மேல் அக்கறை கொண்டவர்கள் போல் காட்டிக்கொள்ளும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வன்னிவாழ் மக்களை வன்னியை விட்டு அசையக் கூடாது என்பது விந்தையாக உள்ளது. கனடாவில் வாழப் பிடிக்காமல் திரும்பியவர்கள் கூட இந்தியா போன்ற நாடுகளில் குடியேறியிருக்கின்றார்ளே தவிர வன்னியில் குடியேற அவர்களும் தயாராக இல்லை. வன்னிவாழ் மக்கள் பலர் பல ஊர்களிலும் இருந்து அங்கு வந்து குடியேறியவர்கள் என்பதை இவர்கள் அறியாதவர்களுமல்லை. இதன் பின்புலம் என்ன என்பது அனைவரும் அறிந்ததே.

.-.-.-.-.-.

எம்பங்கிற்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற மனப்போராட்டத்தில் பல அமைப்புக்களும் தனி நபர்களும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இப்போது உள்ளார்கள். ஒரு அரசியல் ஆய்வாளரிடம் இதுபற்றிக் கேட்டேன். என்ன செய்ய முடியும் என்று நினைக்கின்றீர்கள்? என்று அவர் என்னிடம் திருப்பிக் கேட்டார். என்னிடம் பதில் இல்லை. நீங்கள் என்ன செய்தீர்கள் என்று யாராவது கேட்டால் சொல்லிக்கொள்ள எதையாவது செய்ய வேண்டுமா?

.-.-.-.-.-.

அனைத்து நாடுகளிலும் புலம்பெயர்ந்தோர் மாபெரும் போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள் என்று பெருமை கொள்ளும் மக்களுக்கு ஏன் இன்னும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களை வந்து சந்தித்து உரையாற்றுகின்றார்கள் இல்லை என்ற கேள்வி எழுந்த வண்ணமே இருக்கின்றது. (குறிப்பாகக் கனடாவில்) இது பற்றி தமிழ் வானொலியில் உரையாடிய ஆய்வாளர் ஒருவர், எமது அடையாளமான கொடியை நாங்கள் கையில் ஏந்தியிருப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இல்லை என்றார். தொடர்ந்து அவர் கூறுகையில் தமிழர்கள் மிகவும் திறமையும் புத்திக் கூர்மையும் கொண்டவர்கள், கனேடியப் பாரளுமன்ற உறுப்பினர்களை கனேடியத் தமிழர்கள் தான் மெல்ல மெல்ல வளர்த்தெடுக்க வேண்டும் என்றார்.
 
வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெற இருக்கும் மாபெரும் உரிமைப் போரின் போது கனேடிய அரசியல் வாதிகளின் போக்கில் கொடிகளை மடித்து வைத்து விடுவோம், அவர்கள் வந்து உரையாடி எம்மக்களுக்காக எதையாவது செய்வதற்கு உடன்படுகின்றார்களா என்று பார்ப்போம் என்று இந்த ஆய்வாளர் தயங்கித் தயங்கி வானொலியில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து வந்து உரையாடிய உறவுகள் (தற்போது நேயர்கள் அல்ல உறவுகள்) தாம் தமிழரின் அடையாளமான கொடியை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்று உணர்ச்சி பொங்கக் கூறினார்கள். இல்லை நாங்களும் சிறிது விட்டுக் கொடுத்தால்தான் கனேடிய அரசும் சிறிது விட்டு இறங்கி வரும் என்று கெஞ்சாத குறையாக இவர் கேட்டுக் கொண்டார். வன்னி மக்கள் மேல் கனடாவாழ் தமிழ் மக்களுக்கு எவ்வளவு அக்கறை இருக்கின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 முன்னைய கட்டுரை:

அந்தோ.. : சுமதி ரூபன்

ஒரு புறம் வேடன், மறுபுறம் நாகம் என்ற நிலையில் இன்று வன்னி மக்கள் படும் வேதனை தமிழ் தொலைக்காட்சிகளிலும், மின்தளங்களிலும் பார்த்து மௌனம் ஒன்றைத் தவிர வேறு வழியில்லா நிலையிலும், ஒருநிலைக்கு மேல் மௌனித்திருக்கவும் முடியா நிலையிலும் புலம்பெயர்ந்த எத்தனையே தமிழ் மக்கள் தங்களுக்குள் புலம்பித்தீர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

யூஎன் இடமோ இல்லையேல் தாம் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் அரசிடமோ வன்னி மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற உதவுங்கள் என்று கையேந்த முடியாத நிலையில் உள்ளார்கள் இவர்கள். காரணம் பயங்கரவாத அமைப்பென்று தடை விதித்த பின்னரும் “அரசே உனது தடை எங்களுக்கு ஒரு வடை” என்று கோஷம் போட்டு தம்மை அகதிகளாக ஏற்றுக்கொண்ட அரசாங்கத்திடமே நாம் புலிக் கொடிகளோடுதான் எமது பேரணியை நடாத்துவோம் என்று திமிருடன் மோதுகின்றார்கள். நீங்கள் புலிக் கொடிகளோடு வந்தால் நாம் பேச்சு வார்த்தைக்கு வரமாட்டோம் என்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற பேரணியின் போது வெளியில் வந்து உரையாட இருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் வராவிட்டால் கிடக்கட்டும் நாங்கள் கொடியோடுதான் போவோம் என்று அறிலித்தனமாக நடந்து கொண்ட இவர்களுக்கு, தாம் இழந்தது எதை என்று புரிந்து கொள்ளும் சிற்றறிவு கூட இல்லாமல் போனதுதான் வேதனை. கனேடிய அரசு இதனால் எதை இழந்தது? இவர்களுடைய வோட்டையா?

விடுதலைப் புலிகள் மேல் விதிக்கப்பட்ட தடையை நீங்கும் முகமாக நாகரீகமான முறையில் கோரிக்கைகளை வைத்துக் கொண்டே, கனேடிய சட்டத்தை மதித்து (அது உங்களுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ – எமது மக்களுக்காக இதையாவது செய்யாவிட்டால் நீங்கள் தமிழர் என்று சொல்வதில் எந்தப் பெருமையும் இல்லை) எமது மக்களின் அழிவைத் தடுக்க கறுப்புக் கொடிகளோடு இந்தப் பேரணிகளை நடாத்தியிருந்தால் தமிழ் மக்கள் மேல் அரசிற்கு சிறிதளவேனும் கரிசனை வந்திருக்கும். அதை விடுத்து எமது தலைவன் பிரபாகரன், என்று தொண்டை கிழியக் கத்திய வண்ணம் புலிக் கொடிகளை சிறுவர் கைகளில் கொடுத்து ஆட்ட வைத்து கனேடிய அரசை வம்புக்கு இழுப்பதால் தமிழ் மக்களை வன்முறையாளர்கள் என்று மேலும் கணிப்பதைத் தூண்டுவதாகவே அமையும். பயங்கரவாதிகள் என்ற தடை விடுதலைப் புலிகள் மேல் இருக்கும் வரை அதனை ஆதரிக்கும் அனைத்தும் சட்ட விரோதமாகப் பார்க்கப்படும். சட்டத்தை மீறு என்று கனேடிய அரசிடம் வேண்டுகின்றார்களா இவர்கள்?

வன்னி மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதை தற்போது புலம்பெயர் தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆரம்பத்தில் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்கள், திடீரென மாறி தற்போது பேரணிகளில் போது எமது தலைவர் பிரபாகரன் எமக்கு வேண்டும் தமிழ் ஈழம் என்றே குரல் கொடுக்கின்றார்கள். மக்களும் இயக்கமும் ஒன்றே பொதுமக்களைப் பிரித்தெடுத்து விட்டால் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு அரசிற்கு சில மணிநேரங்கள் போதும் என்பதால், மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை தமது இயக்கத்தைக் காக்க வேண்டும் என்பதே புலம்பெயர் மக்களின் ஒரே குறிக்கோள். புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் வரை இவர்கள் கோஷம் இதுவாகத்தான் இருக்கும்.

அழிவது வன்னி மக்கள், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தமது மனச்சாட்சியின் உறுத்தலைத் தணிக்கப் பணத்தை இயக்கத்திற்குக் கொடுத்து விட்டுச் சுகபோகமாக வாழப்பழகிக் கொண்டவர்கள். தற்போதைய அரசியல் சூழல் அவர்களின் சுகபோக வாழ்க்கை முறையில் எந்த வித மாற்றத்தையும் கொண்டு வரப்போவதில்லை. அதே வேளை இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி பணம் பண்ணும் வியாபாரிகள்தான் அதிகரித்திருக்கின்றார்கள். வீட்டிற்கு இரண்டு மூன்றென்று புலிக்கொடிகளும், ரீசேட்டும், கார் ஒட்டிகளும் வியாபாரிகளுக்கு பாரிய அளவில் வியாபாரத்தைக் கூட்டியிருக்கின்றன. (இயக்கத்திற்கு அனுப்பப் பணம் சேர்க்கின்றேன் என்று இனிமேலும் காதில் பூ சுத்த முடியாது) அதே வேளை எந்த அடிப்படை சட்ட அறிவும் இல்லாமல், யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடும் அறிவிலித் தனத்துடன் “வணங்காமண்” என்ற கப்பல் உணவுப் பொருட்களோடு லண்டனில் இருந்து ஈழம் நோக்கிச் செல்கின்றதாம் கனடாவில் இருக்கும் நாங்களும் ஏன் கப்பல் விடக் கூடாது என்று ஏங்குகின்றார்கள் சிலர்.

முப்பது வருட போராட்டத்தில் மிகப் பிரமாண்டமாக பேரணிகளைத் தற்போதுதான் உலகெங்கும் தமிழர்கள் நடாத்துகின்றார்கள். விடுதலைப் புலிகள் மேல் தடை விதிக்கப்பட்ட போது கூட சின்னதாக ஒரு சலசலப்போடு நிறுத்திக் கொண்டவர்கள், தொடர்ந்து சிங்கள இராணுவம் தமிழ் மக்கள் மேல் பிரயோகித்து வரும் வன்முறைகளுக்குப் பெரிதாகக் குரல் கொடுக்கவுமில்லை. அப்போதெல்லாம் கனடாவின் களியாட்ட வாழ்க்கையில் இன்புற்றிருந்த இவர்கள் தற்போது விடுதலைப் புலிகள் அழியும் நிலைக்கு வந்த போதுதான் தொண்டை கிழியக் கத்துகின்றார்கள். இத்தனை பெரிய போராட்டங்களை ஏன் இவர்கள் முன்பு நிகழ்த்தாமல் போய் விட்டார்கள்? நிகழ்த்தியிருந்தால் எப்போதே உலக நாடுகளின் உதவியை நாடியிருந்தால் ஏதாவது ஓரு சுமூகமான தீர்வு எமக்குக் கிடைத்திருக்கலாம் அல்லவா? அப்போதெல்லாம் தமது சொந்தங்களைப் பாதுகாப்பாக எப்படி வெளிநாட்டிற்கு எடுக்கலாம் என்பதில்தான் அவர்கள் கவனம் இருந்தது போலும்.

மின்தளங்களில் சிங்கள மக்களின் வாசகங்களைப் பார்க்கும் போதுதான் உறைக்கின்றது. இனிமேல் எமக்கென்று சொல்லிக் கொள்ள ஒரு இடமில்லை. புலம்பெயர்ந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒட்ட முடியவில்லை. தமிழ் என்று குரல் கொடுத்துக் கொண்டு தமிழ் மக்களின் அழிவிலும், மண்ணின் அழிவிலும் வியாபாரம் செய்து தம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் சிறுமைத்தனங்களைக் காணும் போது அடக்க முடியாத சினம் எழுகின்றது. அது மட்டும்தான் எம்மால் முடிகின்றது. இத்தனைக்கு அவர்கள்தான் தமிழ் உணர்வாளர்கள் என்ற பெயரோடு உலவுகின்றார்கள்.

இத்தனை வருட கால போராட்டத்தில், இயக்கத்திடம் பாரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. ஆயுதங்களின் மிரட்டல்கள் தனிநாட்டைச் சுலபமாகப் பெற்றுத் தந்து விடும் என்று நம்பினார்கள். சிங்கள அரசோ மிக நிதானமாக இனச் சுத்திகரிப்பை திட்டம் போட்டு உலக நாடுகளில் துணையோடு அமுல் படுத்தி வருகின்றது. வடக்கில் பல இடங்களில் இராணுவம் பெரிய பண்ணைகளை ஆரம்பித்து தமிழ் மக்களை வேலைக்கமர்த்தி அவர்களுடன் இணைந்து வேலை செய்கின்றது. வவுனியாவிலும், இனிமேல் கைப்பற்றப்பட்ட வன்னிப் பிரதேங்களிலும் இதே செயல்திட்டத்தை அமுலுக்குக் கொண்டு வர உள்ளது. பாடசாலைகள், மருத்துவமனைகளை இப்பிரதேசங்களில் அமைத்துக் தமிழ் மக்களுடன் சுமூகமான ஒரு நிலையை உருவாக்கிய பின்னர் பாடசாலைகளில் மெல்ல மெல்லத் தனிச்சிங்களச் சட்டத்தைக் கொண்டு வந்து காலப் போக்கில் தமிழை அழித்து இலங்கை எனும் நாடு தனிச் சிங்கள நாடாக மாற்றுவதே சிங்கள அரசின் திட்டம் என்றார் ஒரு தமிழ் அரசியல் ஆய்வாளர்.

தான் சாய்ந்தாலோ தடுமாறிப் போனாலோ துணையாய்ப் பக்க பலமாய் தன்னோடு இணைந்து போராட விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னொரு வளத்தைத் தயார்படுத்தி வைக்கவில்லை. இன்று தனிக்கல்லில் கட்டப்பட்ட உயர்ந்த கட்டிடமாய் வளர்ந்து நிற்கும் இயக்கத்தின் அஸ்திவாரம் ஆட்டம் காணும் நிலையில், முற்று முழுதாக உடைந்து சுக்கு நூறாகப் போகும் நிலை தான் மிஞ்சி உள்ளது. விடுதலைப்புலிகளில் வளர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் குளிர்காய்ந்த புலம்பெயர் மக்களே அதிகம். வெளிநாடுகளில் இருந்து புலிக் கொடிகளோடு கத்தி ஒன்றும் நிகழப் போவதில்லை என்பது இவர்களுக்கு உறைக்கவும் போவதில்லை. ஓட்டாவா பத்திரிகை ஒன்றில் தமிழ் மக்கள் பாராளுமன்றத்தின் முன்னால் நடாத்தும் போராட்டம் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, வீதிகளில் வாகனங்களுக்கும், பிரயாணிகளுக்கு இவர்கள் இடஞ்சலாக உள்ளார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கின்றது. அதே வேளை இந்தியாவில் சீமான், வைகோ போன்றோரின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தமிழ்நாட்டு மக்களிடம், பொதுவாகக் குடும்பப் பெண்களிடம் சினத்தைதான் வரவழைக்கின்றது. எந்த நாடும் தனது சீர்நிலை குலைவதை விரும்பவதில்லை. அதனைத் தூண்டும் பேச்சுக்களையும் அது அனுமதிப்பதில்லை.  சிங்கள அரசிற்குத் தெரியும் எந்த ஒரு உலகநாடும் தனது இராணுவத்தை விடுதலைப் புலிகளுடன் இணைத்துக் கொண்டு தன்னை அழிக்கப் போராடாது என்று. அத்தோடு புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களின் அழுத்தம், உலக நாடுகள், யூஎன் ஆகியவற்றின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தின் அது வன்னி மக்களைப் பாதுகாப்பாக போர் வலையத்திலிருந்து வெளியேற்றுவதாக மட்டுமே அமைந்திருக்கும். அதைத்தான் சிங்கள அரசும் வேண்டி நிற்கின்றது.

புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் ஆயுதங்களுக்குப் பணத்தை மட்டும்தான் அனுப்ப முடியும். தாமும் இணைந்து கொண்டு இராணுவத்தைப் பலப்படுத்துவோம் என்று பேச்சுக்காவது இவர்கள் எண்ணினார்களா? கேட்டால் இங்கிருந்து வேலை செய்யவும் ஆட்கள் தேவை என்று முறைத்து விட்டு மறைந்து விடுவார்கள். இன்று புலம்பெயர்ந்த மக்களின் பணத்தில் கொள்வனவு செய்யப்பட்ட அத்தனை ஆயுதங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் அகப்பட்டு தமிழ் மக்களையே அழிக்க உபயோகிக்கப்படப் போகின்றது.

இந்திய இலக்கியவாதி ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருக்கும் போது அவரின் தகவல்படி சிங்கள அரசு தனது உறுப்பினர்களை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிற்கும் அனுப்பி, அங்கிருக்கும் அரசியல்வாதிகள், முற்போக்குவாதிகள், பத்திரிகையாளர்களை சந்திக்கும்படி செய்து, விடுதலைப் புலிகள் இயக்கம் முற்று முழுதான ஒரு பயங்கரவாத இயக்கம், இதனால் தமிழ் மக்கள், சிங்கள மக்கள் அனைவருக்குமே பாதுகாப்பு இல்லை என்று உரை நிகழ்த்தி அவர்களை தம் சார்ப்பாக்கியிருக்கின்றது. அதே போல் உலக நாடுகள் பலவற்றுடனும் சந்திப்பு நிகழ்த்தியிருக்கினறது, ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் உலக நாடுகளில் ஆதரவைப் பெற்று கொள்வதற்கான எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. தான் ஒரு மலையாள சஞ்சிகையில் தொடர்ந்து ஈழத்தமிழர்களில் நிலை பற்றி விளக்கி எழுதி வந்ததாகவும், கேரள அரசியல்வாதி ஒருவர் தன்னுடன் தொடர்பு கொண்டு தாங்கள் தவறான தகவல்களை மக்களுக்கு கொடுக்கின்றீர்கள் என்று கூறித் தன்னுடன் உரையாடியதாகவும் அந்த வேளையில் சிங்கள அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் பயணம் நிகழ்த்தியிருக்கும் தகவலைத் தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

அடுத்தது என்ன?

புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் மரணம்

jg.jpgஉலகப் புகழ்பெற்ற பிரித்தானிய எழுத்தாளர் ஜெ.ஜி. பலார்ட் தனது 78 ஆவது வயதில் மரணமானார். “கிராஷ்’ மற்றும் “த எம்பயர் ஒப்த சன்’ ஆகிய நாவல்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற பலார்ட், பல வருட காலமாக நோயுற்ற நிலையில் மரணமடைந்துள்ளார்.

பிரித்தானியாவில் மான்செஸ்டரிலுள்ள கலிகோ பிரின்டர்ஸ் நிறுவனத்தில் இரசாயனவியலாளராக கடமையாற்றிய பலார்ட்டின் தந்தை மேற்படி நிறுவனத்தின் சீனாவிலுள்ள துணை நிறுவனமான சீன பிரின்டிங் அன்ட் பினிஷிங் கம்பனியின் தலைவராகவும் முகாமைப் பணிப்பாளராகவும் பதவியுயர்வு பெற்று சீனாவுக்கு குடும்பத்துடன் சென்றபோது அங்கு பலார்ட் பிறந்தார்.

சீனாவின் சங்காய் நகரில் பிறந்து வளர்ந்த பலார்ட் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் (தனது 12 ஆவது வயதில்) சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது. இதன்போது அவர் ஜப்பானிய சிறைச்சாலையில் 3 வருடங்களைக் கழித்தார்.

சீனாவிலுள்ள ஜப்பானிய சிறைச்சாலையில் கழித்த தனது இளமைப் பருவத்தை அடிப்படையாக வைத்தே “த எம்பயர் ஒப் த சன்’ நாவலை அவர் எழுதினார். பின்னர் பிரித்தானியா திரும்பிய பலார்ட், 1960ஆம் ஆண்டு முதல் முழு நேர எழுத்தாளராக மாறினார்.

அவரது “த எம்பயர் ஒப் த சன்’ நாவலானது திரைப்படமாக தயாரிக்கப்பட்டு வெளியானது. அத்திரைப்படத்தை பிரபல ஹொலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பையல்பேர்க் இயக்கியிருந்தார். அதே சமயம் கார் விபத்துகளின் போதான பாலியல் நாட்டங்கள் தொடர்பில் அவர் எழுதிய “கிராஷ்’ நாவலானது டேவிட் குரொனென்பேர்க் இயக்கத்தில் திரைப்படமாக வெளிவந்தது. பலார்ட் தனது வாழ்நாளில் 15 நாவல்களையும் எண்ணற்ற சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.

வடக்குப் பாடசாலைகளை நாளை திறக்க வேண்டாமென அரசு அவசர அறிவித்தல்

civiling_flee_vanni_01.png இலங்கையின் வடபகுதியிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்க வேண்டாம் என வடக்குக் கல்வி வலயங்களுக்கு அரசாங்கம் இன்று அவசர அறிவித்தல் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி வழமைபோல் மீண்டும் ஆரம்பிக்கப்படுமென வடமாகாண கல்விப்பணிபாளர் வீ.இராசையா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை இன்று திங்கட்கிழமை காலை முதல் 30,000 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இராணுவத்தினரிடம் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் மக்கள் முல்லைத் தீவிலிருந்து விடுவிக்கப்படலாம் என நம்பப்படுகின்றது.

இது தொடர்பாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இன்று விசேட கூட்டம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறறதாகத் தெரிவிக்கப்படுகிறது.மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் மேமாதம் 4ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்குமாறு யாழ் அரச அதிபர் மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளரை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இடம்பெயர்ந்து வருபவர்களைத் தங்க வைப்பதற்கு வவுனியாவில் மேலும் நான்கு பாடசாலைகளில் அவசர ஏற்பாடுகள்

civiling_flee_vanni_02.png பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தி்னுள் வந்துள்ள சுமார் 5000 பேரைத் தங்க வைப்பதற்காக நான்கு பாடசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஏற்பாடுகள் குறி்த்து இன்று மாலை வவுனியா செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற அவசர உயர்மட்ட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம், தாண்டிக்குளம் பிரமண்டு வி்த்தியாலயம், ஆண்டியாபுளியங்குளம் பாடசாலை, முதலியாகுளம் பாடசாலை ஆகியவற்றில் ஓமந்தை பகுதிக்கு ஏற்கனவே கொண்டு வரப்பட்டுள்ள 5000 பேரையும் தங்க வைப்பது என இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தப்பாடசாலைகளில் இடம்பெயர்ந்தவர்களுக்கான கழிப்பறை வசதிகள், குடிநீர் வசதிகள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கு ஐ.சி.ஆர்.சி மற்றும் யுனிசெவ் ஆகிய நிறுவனங்கள் முன்வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று காலை வவுனியாவுக்கு இராணுவத்தி்னரால் கொண்டுவரப்பட்ட 1500 பேர் மனிக்பாம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரபாகரன் தனது தலைவிதியை இன்னும் சில மணித்தியாலயங்களின் சந்திப்பார் – இராணுவத் தளபதி

sarath-fonseka.jpgபுலிகளின் தலைவர் பிரபாகரன் எஞ்சியுள்ள தனது போராளிகளுடன் சரணடையாவிட்டால் எதிர்வரும் சில மணித்தியாலயங்களில் அவர் தனது தலைவிதியை சந்திக்க நேரிடும் என தொலைக்காட்சிக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

படையினர் இன்று புதுமாத்தளன் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் இறுதி மணல் அணையை உடைத்து மக்களின் பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு வழியமைத்துக் கொடுத்ததை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர். இன்றைய இந் நிகழ்வு மக்கள் யார் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதை தெளிவு படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் சேவையில் 2000 தமிழ் இளைஞர்-யுவதிகள் : அமைச்சர் வி. முரளிதரன்

karuna_amman.jpgகிழக்கு மாகாணத்திலிருந்து 2000 தமிழ் இளைஞர் – யுவதிகளை விரைவில் பொலிஸ் சேவையில் புதிதாக இணைத்துக் கொள்ளவிருப்பதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் அமைப்பது தொடர்பாக நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

நான் பிரபாகரனை நண்பர் என்று கூறவில்லை- கருணாநிதி

20-karunanithi1.jpgநான் என்டிடிவி பேட்டியில் கூறியதை அவர்கள் முழுமையாக ஒளிபரப்பவில்லை. என்டிடிவி எப்போதுமே திமுகவுக்கு விரோதமாகத்தான் செயல்படுகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. என்டிடிவிக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. அவரது இயக்கத்தில் இருக்கும் சிலர் பயங்கரவாதிகளாக இருக்கலாம். அதற்கு பிரபாகரன் என்ன செய்வார். பிரபாகரன் போரில் கொல்லப்பட்டால் நான் வருத்தமடைவேன் என்று கூறியிருந்தார்.

இது சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இது கருணாநிதியின் தனிப்பட்ட கருத்து என்று காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் தான் பேசியது குறித்து விளக்கம் அளித்தார் கருணாநிதி.

அப்போது அவர் கூறுகையில், தொலைக்காட்சியில் வெளியான செய்தி தவறானது. நான் சொன்ன கருத்தை மாற்றி வெளியிட்டுவிட்டது. நான் சொன்ன செய்திகளை முழுமையாக வெளியிடவில்லை. தேவையில்லாமல் பிரச்சனைகளை கிளப்புகிறது அந்த சேனல்.என்.டி.டி.வி எப்போதுமே திமுகவிற்கு எதிராகத்தான் செயல்படுகிறது.

விடுதலை இயக்கமாக உருவான விடுதலைப் புலிகள் இயக்கம், பின்னர் திசை மாறி இப்போது தீவிரவாத இயக்கமாகி விட்டது. ஆனால் இதை தேவையில்லாமல் மாற்றிக் காட்டி விட்டனர் என்று கூறினார் கருணாநிதி.

போர் நிறுத்தத்தை வலியுறுத்தி பெண்கள் நடத்தும் போராட்டம் தீவிரம் – 5 பேர் சுகவீனம்

20-fast.jpgஇலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி சென்னையில் பெண்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஐந்து பெண்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இலங்கையில் படுகொலை செய்யப்படும் அப்பாவி தமிழர்களை காக்க கோரியும், அங்கு போர் நிறுத்தம் செய்வதற்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளுடன் பெண்கள் போராடி வருகின்றனர். பெண்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த 13-ம் தேதி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை வந்தனர்.

சென்னை கொளத்தூரில் முத்துக்குமார் உடல் வைக்கபப்ட்டிருந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். ஆனால் போலீஸார் அனுமதி மறுக்கவே, மதிமுக தலைமைக் கழகமான தாயகத்தில் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். 7வது நாளாக போராட்டம் நீடித்தது. அப்போது பல பெண்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

சில நாட்களுக்கு முன்பு கவிதா (30), சித்ரா (40), சசிகலா (30) ஆகியோருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்களைக் கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மதுரை பழனியம்மாள், காஞ்சீபுரம் சசிகலா, ஜெயமணி, மேகனா, செல்வி ஆகியோரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குளுக்கோஸ் ஏற்றப்பட்டது.

இவர்களில் ஜெயமணி மயக்கமடைந்து விழவே, அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று 8வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நீடித்து வருகிறது.

இலங்கைத் தமிழர்களுக்காக இயன்றதை எல்லாம் கருணாநிதி செய்கிறார்:திருமா

thiruma_8-4.jpgஇலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதற்காக தன்னால் முடிந்தது அனைத்தையும் முதல்வர் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு எதுவுமில்லை என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் திருமாவளவன் பேசியதாவது:

தி.மு.க. அரசின் மீது எந்தக் குறையையும் சொல்ல முடியாது. அதனால்தான் ஈழப் பிரச்னையை எதிரணியினர் தேர்தல் பிரச்னை ஆக்குகின்றனர். ஈழத் தமிழர்களுக்காக 2 முறை ஆட்சியைப் பறி கொடுத்தவர் கருணாநிதி. அவரும், அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர். இந்தியாவிலுள்ள தலைவர்களையெல்லாம் அழைத்து மதுரையில் டெசோ மாநாடு நடத்தினார். இப்போது கூட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டப் பேரவையில் தீர்மானம், மனிதச் சங்கிலிப் போராட்டம், பிரதமருடன் சந்திப்பு என இலங்கைத் தமிழர்களை பாதுகாக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதையெல்லாம் கருணாநிதி செய்து விட்டார். இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.

திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் இணைந்த எங்கள் கூட்டணி இயற்கை கூட்டணி. கூட்டணிக் கட்சிகளில் உள்ள தலைவர்களை மதிக்கத் தெரிந்தவர் கருணாநிதி. உண்மையான தலைவர்கள் இல்லாத கட்சிகளும், விபத்தில், வன்முறையில், சாதி உணர்வுகளைத் தூண்டி தலைவர் ஆனவர்களும் உள்ள கூட்டணி, சந்தர்ப்பவாதக் கூட்டணி. நான் தவறானக் கூட்டணியில் உள்ளதாக ராமதாஸ் கூறுகிறார். ஆனால் அவர் உள்ள கூட்டணிதான் தமிழர்களுக்கு எதிரான கூட்டணி.

ஸ்லம்டாக் மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு : விலை $400,000

rubina.jpgபல ஆஸ்கார்களை குவித்துள்ள “ஸ்லம்டாக்  மில்லியனர்” திரைப்படத்தில் வரும் சிறுவர்களை யாராலும் எளிதில் மறக்க முடியாது. அதில் தேவன் படேல் மற்றும் ப்ரீடோ – லத்திக்காவின் சிறு வயது சிறுவர்களாக இஸ்மாயிலும் ருபீனாவும் நடித்திருந்தார்கள். நேற்று ஒரு பிரிடிஷ் நாளிதழ் “ஸ்லம்டாக்  மில்லியனர்”- சிறுமி ருபீனா விற்பனைக்கு விலை USD $400,000 என்று அறிவித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ருபீனாவின் தந்தை ” குப்பத்தில் கஷ்டப்படும் எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை. எங்கள் குழந்தை ருபீனாவின் நட்சத்திர அந்தஸ்தால் அவரை தத்தெடுக்க பலர் முன் வரலாம். அதனால் இந்த விலையை நிர்ணயித்துள்ளோம். இவரது விலையால் அவளது எதிர்காலத்திற்கும், எங்கள் குடும்பத்திற்கும் நல்லது” என தெரிவித்திருந்ததாக பிரிடிஷ் நாளிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் சிஎனென்-ஐபிஎன்னுக்கு நேரடியாக பேட்டியளித்துள்ள அவரது தந்தை இந்த செய்தியில் உண்மையில்லை. ஆனால் நாங்கள் வறுமையில் வாடுவதும், எங்களுக்கு ஸ்லம்டாக்  மில்லியனர் படக்குழு ஒரு பைசாகூட தரவில்லை என்பதும் உண்மை என தெரிவித்துள்ளார்.