எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

மன்னார் – மதவாச்சி பாதையும் நிர்மாணம்

sri-lankan-road.jpgதலை மன்னாரையும் மன்னார் பெரு நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் மூன்று கிலோ மீட்டர் நீளமான பாதையொன்றை நிர்மாணிக்க நெடுஞ்சாலைகள் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நான்கு நிரைகளை கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த பாதையில் 157.10 மீட்டர் நீளமான பாலமொன்றும் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.

ஜப்பான் அரசின் 190 கோடி ரூபா உதவியுடன் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரையும் மன்னார் நிலப்பரப்பையும் தொடர்புபடுத்தும் தள்ளாடி பாலமும் பிரதான பாதையும் புலி பயங்கரவாதிகளால் கடந்த காலத்தில் நாசமாக்கப்பட்டது. மன்னார் மாவட்டம் புலிகளின் பிடியில் இருந்து முழுமையாக மீட்கப்பட்டதையடுத்து மன்னார் மாவட்டத்தை புனரமைக்கவும் பாதைகளை செப்பனிடவும் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, கடந்த வருட பிற்பகுதி முதல் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் இங்கு முன்னெடுக்கப்பட்டன. மன்னார் – மதவாச்சி பாதையும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாதை தலைமன்னாருக்கான பாதையுடன் இணைக்கப்பட உள்ளது.

தள்ளாடி பாலத்துடன் கூடிய புதிய பாதை நிர்மாணிக்கும் பணிகள் 75 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அடுத்த வருடம் மார்ச் மாதமளவில் தலைமன்னாருக்கான பாதை திறந்து வைக்கப்படும் எனவும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கூறியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடனும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு வசந்தம் ஜனாதிபதி செயலணி தலைவருமான பசில் ராஜபக்ஷவின் ஆலோசனையுடனும் மேற்படி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதேவேளை, வடக்கு வசந்தம் திட்டத்துடன் இணைந்ததாக மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ் யோதவெவ அபிவிருத்தி, வாவிகளை புனரமைத்தல், நெடுஞ்சாலைகள் அமைத்தல், பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், அமைத்தல் குடிநீர் திட்டங்கள் மேற்கொள்ளுதல் என்பனவும் அடங்குவதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் உள்நாட்டில் தான் நடைபெறும்

rohitabogallaagama.jpgஇலங்கை அரச படையினர் மீது தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கைக்குள்ளேயே இருக்கக்கூடிய நீதிமன்றங்கள் தான் விசாரிக்குமே தவிர அவை சர்வதேச அமைப்புகளினால் விசாரிக்க இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.

அரச படையினர் மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்பட அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறுகிறார் அதேநேரம் நெடுங்காலமாக யுத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்த நாட்டை அதிலிருந்து வெளிக்கொண்டுவந்து, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயன்ற காரியங்கள் அனைத்திலும் இலங்கை அரசாங்கம் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

டெங்கை வளர்க்கும் சுற்றுசூழல்; இன்று முதல் வழக்கு

mosquito_preventionss.jpgடெங்கு நுளம்புகளை உருவாக்கும் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இன்று (1) முதல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது.

இது தொடர்பான சட்ட மூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின் பிரகாரம் டெங்கு நுளம்புகளை உருவாக்கும் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்து ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் 21 பாடசாலைகளுக்கு 3 தினங்கள் விடுமுறை

students1.jpgபடையி னரின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தின் நிமித்தம் இன்று முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரையும் கொழும்பில் 21 பாடசாலைகள் மூடப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.

இன்று முதல் மூன்றாம் திகதி வரையும் மூடப்படுகின்ற பாடசாலைகளின் பெயர் விபரம் வருமாறு, ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, மஹாநாம கல்லூரி, யசோதரா மகளிர் வித்தியாலயம், போல் ஹென்கொட மஹாமாத்ய வித்தியாலயம், கொழும்பு தெற்கு டட்லி சேனநாயக்க வித்தியாலயம், லும்பினி கல்லூரி, மாளிகாவத்தை பாரன் ஜயதிலக்க வித்தியாலயம், மருதானை அசோகா வித்தியாலயம், கொம்பனித்தெரு புனித ரோசரி சிங்கள வித்தியாலயம், கொம்பெனித்தெரு புனித ரொசரி தமிழ் வித்தியாலயம், கொம்பனித்தெரு ரி. பி. ஜாயாக் கல்லூரி, கொம்பனித்தெரு அல் இக்பால் கல்லூரி, இசிப்பத்தான கல்லூரி, பொரல்ல சுசமயவர்தன வித்தியாலயம், பொரல்ல பண்டாரநாயக்கா வித்தியாலயம், வாழைத்தோட்டம் அல்- ஹிக்மா கல்லூரி, பத்தரமுல்லை சிறிமபோதி வித்தியாலயம், மாலபே ராகுல வித்தியாலயம் ஆகியனவே மூடப்படுகின்ற பாடசாலைகளாகும்.

நாளொன்றுக்கு 5மில். லீற்றர் நீரைப் பெறல்: விசேட நீர் விநியோகம் ஆரம்பித்து வைப்பு

rizad_baduradeen1.jpgநாளொன் றுக்கு 5 மில்லியன் லீற்றர் நீரைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் விசேட நீர் விநியோகத் திட்டமொன்று நேற்று வவுனியா நீவாரணக் கிராமங்களில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

யுனிசெப் நிறுவனமும், மீள்குடியேற்ற அமைச்சும் இணைந்து 400 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளன. வவுனியா மல்வத்து ஓயா நீர்த்தேக்கத்திலிருந்து பெறப்படும் நீரே நன்கு சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்கள் குடிப்பதற்கு ஏதுவானதாக விநியோகிக்கப்படுவதாகவும் அமைச்சர் ரிஷாட் கூறினார்.

மல்வத்து ஓயாவிலிருந்து நாளொன்றுக்கு விநியோகிக்கப்படும் 5 மில்லியன் லீற்றர் நீரை வவுனியாவிலுள்ள நான்கு நிவாரணக் கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தமது அன்றாடத் தேவைகளுக்காகப் பெற்றுக் கொள்ள முடியும். நாளடைவில் இந்நீர்த்தேக்கத்திலிருந்து விநியோகிக்கப்படும் நீரின் அளவை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போர் அன்றாடம் தமது அத்தியாவசிய தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு போதுமான அளவு நீர்வசதி இல்லாமை இதுவரையில் பெரும் குறைபாடாக நிலவி வந்தது. அக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டே இத்திட்டத்தை அமுல் செய்திருப்பதாகவும் அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

இத்திட்டத்துக்கு மேலதிகமாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நான்கு நிவாரணக் கிராமங்களுக்கும் 150 நிலக்கீழ் குழாய்கள் மூலம் நீர் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

‘யாழ்தேவி’ புகையிரத சேவை 6 முதல் தாண்டிக்குளம் வரை – ஓமந்தை ரயில் நிலைய மீள்கட்டுமான பணிகளும் இன்று ஆரம்பம்

sri-lankan-railway.jpgயாழ்தேவி ரயில் சேவை இருபது வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக எதிர்வரும் 06ஆம் திகதி சனிக்கிழமை தாண்டிக்குளம் வரை பயணம் செய்யவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, அன்றைய தினமே ஓமந்தை ரயில்வே நிலையத்தின் மீள்கட்டுமானப் பணிகளும் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் அவர் கூறினார். வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் யாழ்தேவி ரயில் சேவையை யாழ்ப்பாணம் வரை நடத்துவதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும். அதன் ஆரம்ப கட்டமாக, வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு போகும்போது முதன் முதலாக வரும் தாண்டிக்குளம் ரயில் நிலையம் வரை எதிர்வரும் 06ஆம் திகதி யாழ்தேவி பயணம் செய்யவுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து எதிர்வரும் சனிக்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்படும் யாழ்தேவியில் போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் தாண்டிக்குளம் வரை சென்று மீண்டும் கொழும்பு திரும்பவுள்ளனர். சேதமாக்கப்பட்ட ஓமந்தை ரயில் நிலையத்தின் கட்டுமாணப்பணிகளும் அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்படுமெனவும் அமைச்சின் ஊடக செயலாளர் தெரிவித்தார்.

அமைச்சர் தொடங்கொடவின் பூதவுடல் இன்று பாராளுமன்றில்

dodangoda.jpgகாலஞ் சென்ற நீதி, சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் பூதவுடல் பாராளுமன்ற உறுப்பினர்களின் அஞ்சலிக்காக இன்று காலை 9.30 மணிமுதல் 11.30 மணிவரையில் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டிருக்கும். சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த அமைச்சர் சனிக்கிழமை இரவு காலமானார். இதனையடுத்து அவரது பூதவுடல் நேற்று (31) மாலை 3.30 மணி முதல் இன்று காலை 9 மணிவரை கொழும்பு ஜயரட்ண மலர்ச்சாலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.

பாராளுமன்றத்திலிருந்து இன்று காலை 11.30 மணிக்கு அமைச்சரது பூதவுடல் பொதுமக்கள் சகிதம் வாகன பவனியுடன் அவரது சொந்த ஊரான காலி கராப்பிட்டியவுக்கு எடுத்துச் செல்லப்படும். இதேவேளை, அமரசிறி தொடங்கொடவின் மரணத்தையடுத்து ஏற்பட்ட பாராளுமன்ற வெற்றிடத்துக்கு தேர்தலில் கூடுதலான விருப்பு வாக்குகளைப் பெற்ற சந்திம வீரக்கொடி புதிய பாராளுமன்ற உறுப்பினராக நியமனம் பெறவுள்ளார்.

‘பிக்பென்’ கோபுரத்திற்கு வயது 150

bigben_ap_.jpgலண்டன் மாநகரத்தின் மிகப் பிரபலமான ஓர் அடையாளச் சின்னம் இன்று தனது 150வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற பெரிய கடிகாரங்களுள் ஒன்றாக அறியப்படும் ‘பிக்பென்’ கோபுரம் ஒன்றரை நூற்றாண்டுகாலமாக மக்களுக்கு நேரம் காட்டிவருகிறது.

சரியாச் சொல்ல வேண்டுமென்றால் ‘பிக்பென்’ என்பது அந்த கடிகாரத்தோடு சேர்ந்துள்ள பெரிய மணியைத்தான். ஆனால் காலப்போக்கில் அந்த கடிகாரத்துக்கும் அந்தக் கோபுரத்துக்கும் அந்தப் பெயர் ஏற்பட்டுவிட்டது.

இந்த மணிக்கோபுரம் லண்டன் மாநகரத்தின் மிக முக்கியச் சின்னமாக பிரபலம் அடைந்துவிட்டது. லண்டனுக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோபுரதின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

பிக்பென் கடிகாரம் ஓட ஆரம்பித்தது 1859ஆம் ஆண்டும் மே மாதம் 31ஆம் தேதி.

இடம்பெயர்ந்த மக்களுக்கு விசேட அடையாள அட்டை

manig.jpgஇடம் பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி செயலகமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து அடையாள அட்டைக்குரியவரின் விரல் அடையாளங்களுடன் கூடிய அடையாளஅட்டைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றம் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யு எல் எம் ஹால்தீன் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள 10 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வினியோகிக்கப்படவுள்ளது. இவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

முகாம்களில் 2 இலட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் போதும், மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கும், இந்த அடையாள அட்டை மிகவும் உபயோகப்படும் என குறிப்பிட்டுள்ளார்

இடம் பெயர்ந்தோரை தங்கவைக்க ஆறாவது நிவாரணக் கிராமம் – 2500 பேரை தங்கவைக்க முதற்கட்ட ஏற்பாடு

rizad_baduradeen1.jpgவன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களை தங்கவைப்பதற்கென வவுனியாவில் ஆறாவது நிவாரணக் கிராமம் ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சு தெரிவித்தது.

வலயம் -5 என்ற பெயரிலான இந்த நிவாரணக் கிராமத்தில் முதற் கட்டமாக 2500 பேர் தங்க வைக்கப்படவுள்ளனர்.

வலயம்-5 நிவாரணக் கிராமம் அமைப்பதற்கான ஆரம்பப்பணிகளை அமைச்சர் ரிசாத் பதியுதீன் நேற்று ஆரம்பித்து வைத்தார். குறித்த நிவாரணக் கிராமத்தை சுத்திகரிக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை தங்க வைப்பதற்கென ஏற்கனவே ஐந்து கிராமங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 இதன்படி, அருணாசலம் நிவாரணக் கிராமத்தில் (வலயம்- 3) 40,599 பேரும், பொன்னம்பலம் ராமநாதன் நிவாரணக் கிராமத்தில் (வலயம்- 2) 80,548 பேரும், ஆனந்தகுமாரசுவாமி (வலயம்- 1) நிவாரணக் கிராமத்தில் 14,962 பேரும் கதிர்காமர் நிவாரணக் கிராமத்தில் (மெனிக் பாம்) 21,655 பேரும் வலயம் 4இல் 28,919 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

இவர்களுக்கான சகல வசதிகளும் அனர்த்த நிவாரண சேவை மற்றும் மீள் குடியேற்ற அமைச்சின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது.