ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்“

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்“

சஜித் பிரேமதாசவுக்கு முழுமையான ஆதரவு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக நிபந்தனைகளின் அடிப்படையில் ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அரசியல் உயர்பீட கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடா்பாக கருத்துத் தொிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம்,

கட்சியின் உயர்பீட கூட்டம் இன்று இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக இன்று நாம் நீண்டநேரம் கலந்துரையாடினோம்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்குவது தொடர்பாக 3 விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கலந்துரையாடவுள்ளோம்.

அவ்வாறு நிபந்தனைகளுககு உட்பட்டு ஐக்கிய மக்கள் கூட்டணியினக் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதற்கு எமது கட்சியின் உயர்பீட கூட்டத்தில் இன்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நான் எதிர்க்கட்சி தலைவருடன் கலந்துரையாடவுள்ளேன்.

எனவே எதிர்வரும் ஜனாதிபித தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை வெற்றியடையச் செய்வதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பூரண ஆதரவை வழங்கும்” என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை கட்சியை விட்டு நீக்கிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி !

2022ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடைநிறுத்தியுள்ளது.

எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவருமே இவ்வாறு கட்சியின் பொறுப்புகளில் இருந்து உடன் அமுலாகும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் உயர் பீடத்தின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வரவு -செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக, அவர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“ஒரு குற்றவாளியை ஜனாதிபதி செயலணியின் தலைவராக்கியுள்ளார்கள்.” – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கவலை !

“இனங்களுக்கு இடையேயான இன ஒற்றுமையை ஒழிக்கவா “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி..? என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான, திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

பல தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தை சந்தித்து கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த நாடு அமைதிக்கு திரும்பிய பின்னர் ஸஹ்ரான் எனும் கொடியவனின் மிலேச்சதத்தனமான தாக்குதலினால் பல பாதிப்புக்கள் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் பாதுகாப்புக்கு சம்பந்தமில்லாத சில சட்டங்களை பாதுகாப்புக்கு தொடர்பில்லாமல் நூற்றாண்டு காலமாக சில சமூகங்கள் பின்பற்றிவரும் தனியார் சட்டங்களை மாற்றவேண்டும் அல்லது இல்லாதொழிக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி செயலணிக்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது

தனியார் சட்டங்களுக்கும் பாதுகாப்புக்கும் எந்த அடிப்படையில் தொடர்பிருக்கிறது என்று கேட்க விரும்புகிறேன். இன ரீதியாக சமூகங்களை பிளவுபடுத்தி சமூகங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்ற நிலையை இந்த செயலணி ஏற்படுத்திவிடுமா என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

செயலணிக்குழுவுக்கு தலைமை தாங்கும் மதகுருவான கலகட அத்தே ஞானசார இந்த நாட்டின் பல நீதிமன்றங்களை அவமதித்து, சட்டத்தை கையிலெடுத்ததனால் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவர். அப்படிப்பட்டவர் இந்த செயலணியின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது சிறுபான்மை மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுடன் இந்த செயலணி மீது நம்பிக்கையீனத்தையும் உண்டாக்கியுள்ளது.

இது சம்பந்தமாக நீதியமைச்சரே தனக்கு தெரியாமல் நடந்ததாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் அதிருப்தியுற்று இருப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நியமன விடயம் தொடர்பில் எமது நாட்டில் அமைதியையும், சமாதானத்தையும் விரும்புகின்ற சகல இன மக்களும் ஒற்றுமையாக, சகோதரத்துவத்துடன் வாழ்ந்துவரும் எங்களை இந்த செயலணியின் செயற்பாடுகளினால் அமைதியின்மையும், பிளவையும் உண்டாக்கிவிடுமா எனும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நாட்டை நேசிக்கும் இலங்கையன் என்ற ரீதியில் செயலணி சகல விடயங்களுக்கும் ஆப்பாக அமைந்துவிடும் எனும் கவலை என்னுள் உருவாகியுள்ளது. இந்த நாட்டில் நிம்மதியான, ஒற்றுமையான, நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த அரசிலுள்ள சில தலைவர்கள் முயற்சிக்கும் இந்த தருணத்தில் நாங்கள் வேண்டிக்கொள்வது “ஒரே நாடு ஒரே சட்ட செயலணி”யை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும். நாட்டின் பொருளாதாரம் பாரிய சவாலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் பொருளாதார உயர்வுக்கான திட்டங்களை வகுத்து மக்களின் வாழ்வுக்கு உதவும் நல்ல திட்டங்களை முன்வையுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

“உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லீம் சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. ” – ரவூப் ஹக்கீம்

கட்சியில் ஆதரவாளர்களுடைய செல்வாக்கும், நன்மதிப்பும் இருக்கும் வரைதான் கட்சித் தலைமையில் நான் இருப்பேன்  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறை எஸ்.ரி.ஆர். அமைப்பின் நான்காவது ஆண்டு நிறைவு தின நிகழ்வு  சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபத்தில் அமைப்பின் தலைவர் யாத்தீக் இப்றாஹிம் தலைமையில் கடந்த 27.03.2021 அன்று இடம்பெற்றது. அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையில்  இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கட்சியின் ஆதரவாளர்கள், அடிமட்ட போராளிகளின்  மன உணர்வுகள் சம்பந்தமான பெறுமானத்தை பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி, தலைமையும் சரி உணர்ந்து கொள்ள வேண்டும். கட்சியில்  பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட கௌரவம் மற்றும் எதிர்கால அரசியலில் என்னால் எதுவித  பாதிப்புகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் மௌனமாக இருந்து வந்துள்ளேன்.

பல்வேறு போராட்டங்களின் பின்னர் சர்வதேசத்தின் தலையீட்டினாலேயே   ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான உரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் இயக்கம் இந்த ஆட்சியாளர்களுடன் தேலையில்லாமல் முரண்பட்டு கொள்ளவுமில்லை. ஆனால் அவர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாகவும் ஒருபோதும் இருக்கவும் போவதில்லை.

ஆட்சியாளர்களின் அனுசரணை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வளவோ இருக்கலாம் ஆனால் தமது பதவியில் நீடிக்க வேண்டுமாயின் கட்சி ஆதரவாளர்களின் செல்வாக்கும், நன்மதிப்பும்  தலைமையின் ஆசீர்வாதமும் இல்லாவிட்டால் தங்களின் நிலைமை என்னவென்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் முஸ்லிம் சமூகம் நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். சமூகத்தை துன்புறுத்துவதில் அரசாங்கம் அடையும் இன்பத்திற்கு அளவே இல்லை. அந்த அளவுக்கு நாட்டில் இனவாதம் தலைவிரித்தாடுகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது  ஒரு சிலரின் அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதுதான் எங்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற விடயமாகும்.

முஸ்லிம் காங்கிரஸ்  தனிநபர்களில் தங்கியிருக்கின்ற இயக்கமல்ல. எந்தவித எதிர்பார்ப்புக்கள் இல்லாமல் இருக்கின்ற இளைஞர்களினதும், தாய்மார்களின் துஆக்களினாலும் வளர்க்கப்பட்ட இயக்கமாகும்.

எனவே, இந்த இயக்கத்தினுடைய பொறுப்பு என்பது சமூகத்தின் அவலங்களுக்கு தைரியமாக குரல்கொடுக்கின்ற திராணியுள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆட்சியாளர்களுக்கு கூஜா தூக்குகின்றவர்களாக இருக்கக் கூடாது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான ஏ.எல். தவம், எம்.எஸ். உதுமாலெவ்வை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.