ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

“ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள இந்த சந்தர்ப்பத்தை தமிழ்க் கட்சிகள் தவறவிடக்கூடாது.” – மஹிந்த ராஜபக்ஷ அறிவுரை !

தேசிய பிரச்சினை உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க இந்த சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவறவிடக்கூடாது என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்பதோடு, வேற்றுமைகளை மறந்து ஜனாதிபதியுடன் உரையாற்ற வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் அன்றும் சரி, இன்றும் சரி தேசிய பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் தாம் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“தனுஷ்க குணதிலகவில் எந்தத் தவறும் காணவில்லை.” – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

“ஆண்கள் ஆண்களாக இருப்பார்கள் என்பதால் முழுப் பழியையும் எங்கள் வீரர்கள் மீது சுமத்த முடியாது” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் .

ஒரு குறிப்பிட்ட அளவிலான கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் பேணப்பட வேண்டும் என்றாலும், வீரர்களின் சுதந்திரம் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அவுஸ்திரேலிய பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் குணதிலக்க கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது அவர்களுக்கு வழக்கத்தை விட அதிக சுதந்திரம் அளிக்கப்பட்டதாக நான் உணர்கிறேன், அவுஸ்திரேலியாவில் சிலர் விபசாரத்தில் ஈடுபடுவது ஒரு தொழிலாக இருப்பதையும், அவர்கள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் மிகவும் பொதுவானவை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், எனவே எங்கள் வீரர் மீது அனைத்து பழிகளையும் நாம் போட வேண்டியதில்லை.

வீரர்களின் ஆட்டத்தை பாதிக்காத வகையில் எல்லைக்குள் இருக்கும் வரை அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் எப்போதாவது ஒரு கிளப்புக்குச் செல்வதில் நான் எந்தத் தவறும் காணவில்லை, ஆனால் இது மீண்டும் மீண்டும் நடந்தால், அவர் பயிற்சிகளைத் தவறவிட்டு, விளையாட்டின் மீதான தனது கவனத்தையும் அர்ப்பணிப்பையும் இழக்க நேரிடும். ஆனால் இந்த விஷயங்களை ஒருமுறை அல்லது இரண்டு முறை அனுபவிக்க அனுமதிப்பது தவறல்ல. நான் பார்த்தவற்றின் படியும், வழக்கறிஞர்களின் கூற்றுப்படியும், தனுஷ்க விடுவிக்கப்பட வேண்டும். அவர் விடுதலையானதும் அவரை தொடர்ந்து அணிக்காக விளையாட அனுமதிக்க வேண்டும்,” என்றார்.

இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்ல மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி – நாமல்ராஜபக்ச

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அறிவித்தார்.

தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார். எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான தலைமைத்துவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார். அதற்கான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக தப்பியோடி நாடாளுமன்ற உறுப்பினராக வருகிறார் கோட்டாபாய ..?

தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த வாரம் இலங்கை திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கோட்டாபய ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது பாதுகாப்பு மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் தேவையான இராஜதந்திர  உதவி பெற்றுக்கொள்ளும் வகையில் அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கோட்டாபய ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு வருவதற்காக பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான விசேட வைத்திய நிபுணர் கலாநிதி சீதா அரம்பேபொல இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரம் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க மொட்டு கட்சியால் கோட்டா கம் ஹோம் சமூக ஊடக பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருவதும் குறிப்பிடதக்கது.

மதுபோதையில் மக்களுக்கு இடையூறு – ஆளுங்கட்சி உறுப்பினரை கம்பத்தில் கட்டி வைத்த மக்கள் !

களுது்துறை – கல்பாத்த பிரதேசத்தில், மதுபோதையில் பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

கைது செய்யப்பட்ட நபர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சந்தேகநபர் மேலும் சிலருடன் கல்பாத்த பகுதிக்கு வந்து மது அருந்தியுள்ள நிலையில், அங்கிருந்து கல்பாத்த, பஹுருபொல பிரதேசத்துக்கு அவர் தனியாக சென்று பிரதேசவாசிகளுக்கு இடையூறு விளைவித்துள்ளார்.

இதனையடுத்து, அங்கிருந்த பிரதேசவாசிகள், குறித்த பிரதேச சபை உறுப்பினரை மின்கம்பத்தில் கட்டி வைத்து, காவல்துறை அவசர பிரிவுக்கு அறிவித்துள்ளனர்.

அழைப்பின் பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சந்தேகநபரை கைது செய்து, நாகொட வைத்தியசாலையின் வைத்தியர் முன்னிலையில் பிரசன்னப்படுத்தியபோது, அவர் மது அருந்தியிருந்தமை உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், சந்தேக நபரை இன்று (22) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பெரமுனவின் தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும் ! – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற மாபெரும் வெற்றி இந்நாட்டிற்கு கிடைத்த வெற்றி என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாபெரும் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. எங்களை நம்பி, இந்த பாரிய வெற்றிக்காக வாக்களித்த அனைவருக்கும் எனது சார்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பிலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாபெரும் வெற்றி நாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று நான் சொல்ல வேண்டும். கொவிட் – 19 தொற்று நோயால் உலகம் முழுவதும் செயலற்ற நிலையில் இருக்கும் நேரத்தில் இந்தத் தேர்தலை நடத்த தீர்மானித்தோம்.

இந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில் 70 வீதத்திற்கும் அதிகமானோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு வந்து வாக்களித்தனர்.

நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ஜனநாயக முறையில் ஜனநாயகத்திற்காக பணியாற்ற மக்கள் முன்வந்திருப்பது ஒரு நாடாக நாம் மகிழ்ச்சியடைய வேண்டிய விடயமாகும்.

மேலும், இதுபோன்ற ஒரு ஜனநாயக தீர்மானத்தை மேற்கொண்டு அதை ஒரு தொற்றுநோய் சூழ்நிலையில் செயல்படுத்த முன்வந்த ஒரு சில நாடுகள் மட்டுமே உலகில் உள்ளன.

அத்தகைய முடிவை எடுத்த நாடு இலங்கை. தங்கள் வாக்குகளை பதிவு செய்ய வந்த அனைத்து மக்களின் சுகாதார பாதுகாப்பிற்காக உலக சுகாதார பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றி இந்த தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணையம், சுகாதார சேவை, பாதுகாப்புப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு முடியுமானதாயிற்று.

சவால்களின் மூலம் தான் உண்மையான வெற்றி பிறக்கிறது. போரை வெல்வது, கொவிட் -19 தொற்றுநோயை வென்றது மற்றும் இது போன்ற மிக வெற்றிகரமான தேர்தலை நடத்துவது நம் நாட்டின் பலத்தையும் மக்களின் பலத்தையும் உலகுக்குக் காண்பிக்கும்.

இந்த தேர்தல் வெற்றி தேசத்தின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வெற்றியாகும். இந்த தேர்தலின் வெற்றி, ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தை இந்நாட்டில் செயற்படுத்துவதற்கு முடியும் என்பதை உலகுக்கு நிரூபிக்கிறது.

இந்த வெற்றியை முழு நாட்டிற்குமான வெற்றியாக மாற்ற நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இந்த தேர்தலில் வாக்களித்த அனைத்து மக்களுக்கும், தேர்தல் ஆணையம், பாதுகாப்புப் படையினர், அனைத்து அரச அதிகாரிகள், அனைத்து ஊடகங்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் தேர்தல்களை வெற்றிகரமாக மற்றும் அமைதியாக நடத்துவதற்கு உதவிய பொது மக்களுக்கு நன்றி கூறுகிறேன். என்றார்.