யாழ்ப்பாணம் வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வாள்வெட்டு

வெளிநாட்டிலிருந்து பணம் பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்கள் அட்டகாசம் !

பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 9 பேர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலமாக கீரிமலை, கல்வியங்காடு பரமேஸ்வரா சந்தி, பாற்பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசி வீடுகளை சேதப்படுத்திய பிரதான சந்தேக நபர் உட்பட 9 பேரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டு நபர்களிடமிருந்து மூன்று மோட்டார் சைக்கில்கள், சம்பவத்துக்கு பயன்படுத்திய இரண்டு வாழ்கள், ஒரு கை கோடாலி, ஒரு இரும்பு கம்பி, மடத்தல், அத்தோடு சம்பவத்துக்கு பயன்படுத்திய பெண்களின் ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர்களிடம் விசாரணைகளை செய்தபோது கல்வியங்காடு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் அனுப்பிய பணத்தின் மூலமே சம்பவத்தை செய்ததாகவும் கூறியுள்ளனர்.

அத்தோ இவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையான பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை நாளை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக வாள் உற்பத்தி செய்த நால்வர் கைது !

யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் சட்டவிரோதமாக வாள் செய்து கொண்டிருந்த நால்வரை காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் வைத்து வாள் செய்து கொண்டிருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் வீட்டினை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.

அதன்போது வாள் செய்து கொண்டிருந்த நால்வரை கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் வீட்டு உரிமையாளர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இளைஞன் ஒருவர் வீடொன்றிற்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் வீட்டின் உரிமையாளர் மீது இனம் தெரியாத நபர்கள் வாள் வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

 

பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) எனும் இளைஞன் கடந்த 28ஆம் திகதி அவரது வீட்டுக்கு அருகில் உள்ள மூன்றாம் குறுக்குத் தெருவில் சுகுமார் என்பவரின் வீட்டுக்கு வெளியே அதிகாலை வேளை சடலமாக மீட்கப்பட்டார்.

இந்நிலையில் சுகுமாரின் வீட்டினுள் , அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழு சுகுமார் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

உயிரிழந்த இளைஞன் இரவு நேரம் எதற்காக அந்த வீட்டுக்கு அருகில் சென்றார் என்பது தொடர்பில் பருத்தித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் , இளைஞனின் சடலம் மீட்கப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடாத்தி உள்ளமை காவல்துறைக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வெடிகுண்டு தாக்குதல் – பின்னணியில் ஆவா குழு என தகவல்!

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில், யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்களால் வெடி குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, மேலுமொரு வெடி குண்டும், எச்சரிக்கை கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட கடிதத்தின் அடிப்படையில் இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கும் ஆவா குழுவினருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அந்த கடித்ததில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

பிரான்சில் வசிக்கும் நபர் ஒருவர் அங்கு வசிக்கும் பெண் ஒருவரிடம் காசோலையை கொடுத்து பணம் பெற்றுள்ளார். அவ்வாறு காசோலையைப் பெற்றுக்கொண்ட பெண், யாழில் உள்ள ஆவா குழுவினரிடம் அந்த காசோலையைக் கொடுத்தே பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், காசோலையைப் பெற்றுக்கொண்ட குழுவினர், அதனை மாற்றுவதற்காக வங்கிக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த காசோலை பணம் பெறமுடியாமல் முடக்கப்பட்டுள்ளதாக வங்கியில்அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றப்பட்டதை அறிந்து கொண்ட குழுவினர், ஆத்திரமடைந்து இந்த தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே, தம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்தினை திரும்ப கையளிக்கம் வரை, பிரான்சில் பணம் பெற்றுக்கொண்ட நபரும், குறித்த குழுவினருக்கு காசோலையை வழங்கிய பெண்ணும் இலங்கைக்கு திரும்ப முடியாது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை பணத்தைப் பெற்றுக்கொண்ட நபர் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட வாகன திருத்தக உரிமையாளரின் மருமகன் என்பதால், கடன் பிரச்சினையை தீர்த்து வைக்கும் வரை உரிமையாளரின் குடும்பத்தினரையும் நின்மதியாக வாழ விடமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் குறித்த கடிதம் எழுத்தப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் இறுதியில் தம்மை ஆவா குழுவினர் என அடையாளப்படுத்தியுமுள்ளனர்.

இவ்வாறு வெடி குண்டு மற்றும் கடிதம் என்பவற்றை மீட்ட காவல்துறையினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.

வாள்வெட்டு குழுவின் அங்கத்தவர்கள் சிலரும் வாள்செய்து கொடுத்த நபரும் யாழில் கைது !

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த  இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சுடலையொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாள்கள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதுடன் , இரண்டு மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை  இவர்களுக்கு வாளினை செய்து கொடுத்த குற்றச்சாட்டில் மானிப்பாய் நகர் பகுதியில் உள்ள கம்மாலை ஒன்றின் உரிமையாளரை கைது செய்த நிலையில் குறித்த நபரிடமும் ஒரு வாளினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், கம்மாலை உரிமையாளருக்கு உதவி புரிந்த இளைஞர் ஒருவரையும் வாள்வெட்டிற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளினை உதிரிப்பாகங்களாக்கி வெவ்வேறு பகுதிகளில் விற்ற நபரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர், அவர்களுக்கு வாளினை செய்து கொடுத்தவர் , வாள் செய்து கொடுக்க உதவியவர் மற்றும் மோட்டார் சைக்கிளை உதிரிபாகங்களாக விற்க உதவியவர் என ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளத்துடன் , மானிப்பாய் பகுதிகளில் இயங்கும் வன்முறை கும்பல்களையும் , அவர்களுக்கு உதவி செய்வோரையும் கைது செய்வதற்கு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாள்வெட்டு கும்பல் – நித்திரைக்கு சென்ற பொலிஸார் !

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வன்முறை கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு 9.30 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடா்பாக மேலும் தொிய வருவதாவது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலா் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனா்.

இதனை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களை தடுக்க முயன்ற போது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்ததுள்ளனா்.

இதனையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களை தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

இது ஒரு புறம் இருக்க வடக்கு மாகாணத்தின் திரும்பும் திசையெல்லாம் ராணுவத்தினர் – பொலிசாரும் அதிகமாக உள்ளனர். அதே நேரத்தில் ஒவ்வொரு சந்திக்கு சந்தி போக்குவரத்து போலிசாரும்  கடமையில் தான் உள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக விசேட அதிரடிப்படை என்ற பெயரிலும் ராணுவத்தினர் உலாவி கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தெரியாத வகையில் இந்த வாள்வெட்டு குழு இயங்கிக் கொண்டிருக்கின்றதா..? திரும்பும் திசையெல்லாம் பாதுகாப்பு பிரிவு என்ற பெயரில் ராணுவத்தினரும் – பொலிசாரும்  இருக்கின்றனர். இப்படி இருந்தும் கூட வடக்கின் பல பகுதிகளிலும் குறிப்பாக முக்கியமான நகர் பகுதிகளில் கூட வாள்வெட்டுச்சசம்பவங்கள் நடப்பதன் பின்னணியின் பாதுகாப்பில் உள்ள பொலிசார் மற்றும் இராணுவத்தினரின் அசமந்த மற்றும் கண்மூடித்தனமான போக்கும் ஒரு காரணம் எனலாம்.

யாழ்ப்பாணத்தில் சினிமாப் பாணியில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு – நால்வர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டா ரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில் அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டா ரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

யாழ்.பல்கலைகழகத்துக்கு அருகே இளைஞரை துரத்தி துரத்தி வாளால் வெட்டிய கும்பல் – தொடரும் பொலிஸாரின் அசமந்த போக்கு !

யாழ்ப்பாணம் பரமேஸ்வர சந்திப்பகுதியில் இளைஞன் ஒருவரை கும்பல் ஒன்று துரத்தி துரத்தி வாளினால் வெட்டியுள்ளது.

மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும் குறித்த பகுதியில்  நேற்று (புதன்கிழமை) பகல் 10.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி இருந்தது.

யாழ். நகர் பகுதியை நோக்கி குறித்த இளைஞன் தனது மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்த நால்வர் இளைஞனை பரமேஸ்வர சந்தியில் வழி மறித்து கடுமையான வாள் வெட்டினை மேற்கொண்டனர்.

கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பித்து, பல்கலைகழகம் பக்கமாக இளைஞன் தப்பியோடிய போதும் , துரத்தி துரத்தி வாளினால் வெட்டப்பட்டுள்ளார். வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றமை மாணவர்கள் மத்தியில், அச்ச நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவியேற்ற போது வாள்வெட்டுக்ககுழுக்களின்“ நடவடிக்கைகளை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறியிருந்த போதும் எந்தளவு தூரம் அவர் இது தொடர்பில் கரிசனை செலுத்தியுள்ளார் என தெரியவில்லை. மேலும் யாழ்ப்பாண காவல்துறையினரின் அசமந்த போக்கும் இந்த வாள்வெட்டுக்குழக்களின் தொடர்ச்சியான அட்டகாசத்துக்கு காரணம். துரித கதியில் இதனை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளா விட்டால் மிக்பபெரிய சமூதாய சீரழிவு ஏற்கபடுவதற்கான வாய்ப்புள்ளதும் நினைவில் கொள்ளத்தக்கது.

வல்வெட்டித்துறையில் பொலிஸார் சுற்றிவளைப்பு – வாள்வெட்டுடன் தொடர்புடைய 13பேர் கைது !

வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த 13 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 5வாள்கள், 2 மோட்டார் சைக்கிள் செயின், 6 சரை கஞ்சா மற்றும் ஒரு கிராம் 650 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தக் கைது நடவடிக்கை இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றது.

பழைய வீடொன்றில் வன்முறைக் கும்பல் ஒன்று வன்முறைக்கு தயாராகி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து வீட்டை சுற்றிவளைத்து சோதனையிட்ட போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் காவல்துறையினர் கூறினர். சந்தேக நபர்கள் 13 பேரும் வல்வெட்டித்துறை காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.