யாழ்ப்பாணம் கொரோனா

யாழ்ப்பாணம் கொரோனா

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா – ஒருவர் பலி !

கொரோன தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேருக்கு யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சைப்பெறச் சென்ற ஒருவருக்கு கொவிட் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொவிட் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 3 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் மீண்டும் கொரோனா..!

யாழ்ப்பாணத்தில் நீண்ட காலத்தின் பின்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பருத்தித்துறையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை விடுதி ஒன்றில் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ச்சியாக 3 வாரங்களுக்கு மேலாக காய்ச்சலால் அவதிப்பட்ட பெண் ஒருவர் பருத்தித்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டார். அங்கிருந்து அவர் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியாலைக்கு மாற்றப்பட்டார்.

இப்பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட எழுமாற்றுப் பரிசோதனையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப் பட்டதாக யாழ்.போதனா வைத் தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பெண் வேறு தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர் எனவும் அவர் கூறினார். இப்பெண் கொரோனா தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்களே தொற்றுக்குள்ளாகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார். எனினும் பொதுமக்கள் தொற்றுநோய் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும். நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் பொது இடங்களில் முககவசம் அணிந்துகொள்வது அவசியம் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி சி.ஜமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார்.

வைத்தியத் துறையும் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனா தொற்று நோய் குறித்த மேலதிக ஆய்வுகளைச் செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொவிட் நோயாளிகளைத் தனிமைப்படுத்தும் விடுதிகள் தற்போது இல்லை. கொவிட் தொற்று உச்சத்தில் இருந்த போது அமைக்கப்பட்ட விடுதிகள் தொற்று நோய் குறைந்த பின்னர் அகற்றப்பட்டுவிட்டன.

இந்நிலையில் தற்போது கண்டறியப்பட்ட நோயாளி விடுதி ஒன்றிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

யாழில் இன்று ஒரே நாளில் 143 பேருக்கு கொரோனா – நிலை இன்னும் தீவிரமடைய வாய்ப்பு !

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று  சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள் 127 பேர் அடங்குகின்றனர்  என்று   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பபாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடம் ஆய்வுகூடங்களில் 746 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

143 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மருத்துவ பீட மாணவர்கள் மூவர், தாதிய மாணவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் அறிகுறிகளுடன் சேர்க்கப்பட்ட 7 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பொதுச் சந்தை தொகுதியில் உள்ள மரக்கறி வியாபாரிகள், கடைகளின் வியாபாரிகள் மற்றும் தொழிலாளிகள் என 127 பேருக்கு தொற்று உள்ளமை இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட  ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்கனவே தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என சுயதனிமைப்படுத்தப்பட்டிருத்த நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.