முல்லைத்தீவு

முல்லைத்தீவு

நீதிமன்ற கட்டளையையும் மீறி தமிழர் பகுதியான குருந்தூர்மலையில் கட்டிமுடிக்கப்பட்ட பௌத்த விகாரை !

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்ப்பட்ட தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந்துள்ள குருந்தூர் மலையில் நீதிமன்ற கட்டளையை தொடர்ச்சியாக புறந்தள்ளி அமைக்கப்பட்டு வந்த பௌத்த விகாரை கட்டுமானம் முற்றுப் பெற்றுள்ளது.

கடந்த வருடம் ஜூலை மாதம் 19 ஆம் திகதி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் இங்கு மேற்கொள்ளப்படும் பௌத்த கட்டுமானங்களை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனவும் 12/06 /2022 அன்றைய நாளில் கட்டுமானம் எந்த நிலையில் காணப்பட்டதோ அதே நிலையை தொடர்ந்து பேணுமாறும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் கட்டளையை ஆகியிருந்தது. இருந்த போதிலும் இந்த கட்டளையை மீறியும் தொடர்ந்து கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அந்த கட்டளையையும் மீறி அங்கு கட்டுமான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது தொடர்பில் குருந்தூர்மலை ஆதி ஐயனார் ஆலயத்தினரும் அரசியல் பிரதிநிதிகளும் குருந்தூர் மலை பகுதியில் கடந்த 2022/09/20 அன்று போராட்டம் செய்திருந்தனர்.

அதன் தொடர்சியாக 21/09/2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கு வேறு சில B அறிக்கைகள் தாக்கல் செய்யப்ட்டிருந்ததோடு ஆதி அய்யனார் ஆலயம் சார்பில் சட்டதரணிகளால் நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது . இந்த கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெறுவது தொடர்பில் முல்லைத்தீவு பொலிசில் முறைப்பாடும் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கின் மீதான கட்டளைகாக கடந்த வருடம் நவம்பர் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஒரு கட்டளை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் வழங்கியிருந்தது. அதாவது கடந்த 19.07.22 அன்று ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற கட்டளையை அவமதித்து யாராவது புதிதாக கட்டங்களை அல்லது மேம்படுத்தல்கள்களை குருந்தூர் மலையில் அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியும் என்றும் அவ்வாறு சம்பவங்கள் இடம்பெற்றால் அது தொடர்பில் முல்லைத்தீவு பொலீசார் உரியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் கட்டளைகளை வழங்கியுள்ளது.

இந்த கட்டளை வழங்கப்படும் போது பூரண மடையாத நிலையில் காணப்பட்ட குருந்தூர்மலை விகாரை கட்டுமானம் தொடர்சியாக கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டு தற்போது பூர்த்தியாக்கப்பட்டுள்ளதை இன்றையதினம் (23) குருந்தூர்மலைக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் , கந்தையா சிவநேசன் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இவர்கள் குருந்தூர்மலைக்கு சென்ற வேளை அங்கு தொடர்சியாக பௌத்த கட்டுமான வேலைகள் இன்று கூட இடம்பெற்றுள்ளதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளது, இரவு நேரத்தில் இந்த கட்டுமானங்கள் தொடர்சியாக இடம்பெற்றுள்ளதை அவதானிக்கும் வகையில் ஜெனரேட்டர் பொருத்தப்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டுள்ள அடையாளங்கள் காணப்பட்டுள்ளது. இவ்வாறான கடுமானங்கள் இடம்பெறும் நேரத்தில் 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்பும் அப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் அங்கு பணியில் ஈடுபடும் இராணுவ, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தை சேந்தவர்கள் பொலிஸ் பாதுகாப்புடன் மலையடி வாரத்தில் தங்கியிருப்பதையும் அவதானிக்க முடிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்ட 12 வயது சிறுமியின் சடலம் – முல்லைத்தீவில் சோகம் !

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மூங்கிலாறு கிராமத்தில் காணாமல் போன 12 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியின் சடலம் உருக்குலைந்த நிலையில் சடலம் காணப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் யோகராசா நிதர்சனா (12) என்ற சிறுமியே சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சிறுமியின் ஒரு கை உடலில் இருக்கவில்லை என கூறப்படும் நிலையில், அதனை விலங்குகள் சேதப்படுத்தியிருக்கலாமென கருதப்படுகிறது.

மூங்கிலாறு வடக்கு, 200 வீட்டுத் திட்டம் என்ற கிராமத்தில் கடந்த 15ஆம் திகதி காணாமல் போன சிறுமி, நேற்று வீட்டிற்கு சற்று தொலைவில் வெற்றுக்காணிக்குள் இருந்து சடலம் மீட்கப்பட்டது.

இதேவேளை, நேற்று அந்த பகுதியில் இராணுவத்துடன் இணைந்து தேடுதல் நடத்திய போது, சடலம் காணப்படவில்லையென்றும், இரவோடு இரவாகவே சிறுமியின் சடலம் கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என பிரதேச வாசிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சடலத்தை மீட்ட பொலிசார் புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ள நிலையில், முல்லைத்தீவு பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார்.

சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் பொலிசாரின் விசாரணை வளையத்திற்குள் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மாவீரர் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோரவுள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் !

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு நீதிமன்றில் தடை உத்தரவு கோர உள்ள முல்லைத்தீவு காவல்துறையினர் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் வருடம் தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதற்கமைய 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை மாவீரர் வாரமாகவும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தடை செய்து வருகின்றது. இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கி குறித்த தடை உத்தரவுகள் நாளையதினம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் பெற உள்ளதாக காவல்துறை தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு காவல்துறையினரினால் 12 பேர் மற்றும் அவர்களோடு இணைந்த குழுவினருக்கும் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறு பலதரப்பட்டவர்களுக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் பெறப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.