தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

“கிழக்கில் சிங்கள மயப்படுத்தும் திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது.” – பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

“சிங்கள மயப்படுத்தலுக்காக திட்டமிடப்பட்ட மாதுறு ஓயா வலதுகரை திட்டத்திற்கு தமிழ் பிரதேசத்தின் ஒரு அங்குலம்  நிலம் கூட வழங்க முடியாது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் மயிலந்தனை மாதந்தனை மேச்சல் தரை பகுதிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) விஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்த பின்னர் கட்சி தலைவர் ஊடகங்களக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லைப் பிரதேசமான மயிலந்தனைமடு பெரிய மாதந்தனை பிரதேசத்தில் மேச்சல்தரை பகுதியில் கால்நடை பண்ணையாளர்களை அச்சுறுத்தி மாடுகளை வெட்டி அவர்களை பரம்பரையான மேச்சல்தரையில் இருந்து ஓடவைப்பதற்காக முழுமூச்சிலான திட்டம் கடந்த இரண்டு வாரத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பண்னையாளர்களின்  இந்த பிரச்சனைகளை அவர்கள் பல இடங்களில் முறையிட்டனர். ஆனால் எந்த ஒரு இடத்திலும் அவர்களுக்கு முடிவு இல்லாமல் தொடர்ச்சியாக அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. மாதுறு ஓயா வலதுகரையை சிங்களமயமாக்குதலுக்கான நோக்கத்தோடு இந்த பண்ணையாளருக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது நன்றாக விளங்குகின்றது.

இதேவேளை கிழக்கு மாகாண ஆளுநர், வனவளதிணைக்களம்,  மகாவலி அபிவிருத்தி சபை போன்ற அனைத்து கட்டமைப்புக்களும் இங்குள்ள மேச்சல்தரை காணிகளை அபகிப்பதற்கான நடவடிக்கையை உறுதியாக இருக்கின்றனர்.

நீதிமன்ற உத்தரவு இருக்கின்றது. இந்த பிரதேசத்தில் தமிழ் விரோத நடவடிக்கை சிங்கள விரோதிகளால் முன்னெடுப்பதை தடுக்க ஒருவருடத்துக்கு மேலாக இருக்கின்றது கிழக்கு மாகாண ஆளுநருடைய முழு ஒத்துழைப்புடன் கண்ணுக்கு முன்னால் அவருடைய வழிகாட்டலில் நடக்கின்றது என்றால் எந்தளவுக்கு இந்த இனவாத சட்டத்தையும் நீதியையும் மதிக்கின்றார்கள் ?

எனவே தமிழ் பிரதேசத்தை இன சுத்திகரிப்பு நடாத்துவதற்கும் சிங்கள குடியேற்றத்தை நடாத்தி இங்குள்ள மக்களை பட்டினியில் சாவடிக்கின்ற நடவடிக்கையான மதுறு ஓயா அபிவிருத்திக்கு நிதி உதவி வழங்குகின்ற சர்வதேச நிறுவனங்களே  நீங்களும் தமிழ் இன சுத்திகரிப்பிற்கு உடந்தையாக இருக்கின்றீர்கள்.

எனவே உங்களுக்கு இருக்கின்ற நிதியை எந்தவிதமான நிபந்தனையும் போடாமல் சிங்கள இனவாத சித்தாந்தத்திற்கு விலைபோகின்றதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகின்றது என தெரிந்துவைத்திருக்க வேண்டும். இதை தடுத்து நிறுத்த முன்வரவேண்டும் அல்லது உங்கள் அலுவலகங்களுக்கு முன்னால் நாங்கள் போராட்டங்களை செய்வதை தவிர வேறு வழியில்லை.  கோட்டாபாய ராஜபக்ஷ காலத்தில் சந்தித்து இந்த விடையங்களை கூறி பாராளுமன்றத்தில் பெரிதுபடுத்தி பேசிய போது தற்காலிகமாக நிறுத்துவதாக உத்தரவாதம் தந்தாலும் கூட இன்று முன்னரைவிட தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று ரணில் விக்கிரம சிங்கவை செல்லப்பிள்ளையாக நீங்கள் கருதி காப்பாற்றுகின்ற வேளையில் அவரின் ஆட்சி காலத்தில் இந்த இனவாத தமிழ்விரோத செயற்பாடுகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது இன்று யதார்த்தம்.

எனவே நிதி உதவி செய்யும் சர்வதேச நிறுவனங்கள் உடனடியாக கொடுக்க கூடிய நிதி உதவிகளை நிபந்தனைகளை போட்டு இங்குள்ள மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துகின்றதை உறுதி செய்யவேண்டும்.

இந்த திட்டம் மக்களுக்குரிய அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருக்கவேண்டுமே தவிர இந்த மக்களை அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்து ஒரு இனழிப்பிற்கு வழிவகுக்கின்ற முறையில் அமையகூடாது. இதையும் அம்பலப்படுத்துவோம் எனவே இந்த விடயங்களை கருத்தில் கொண்டு  சரியான வகையில் இங்கே பரம்பரையாக இருக்ககூடிய தமிழர் தாயத்தில் இருக்ககூடிய உண்மையான சொhந்தகாரர்களுக்கு நீதிகிடைக்கவேண்டும்.

அதேவேளை எங்களுடைய உள்ளூராட்சி சபைகள் தவிசாளர் பதவிகளை வைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரங்களை வைத்துக் கொள்பவர்கள் இந்த சொந்த மக்களுக்கு இந்த நிலத்துக்குரிய உரிமையாளர்களுக்கு  வந்து தொழிலை செய்வதற்கான போக்குவரத்துக்கு இந்த பாதைகளை சீர் செய்ய முடியாமல் இவ்வளவு காலமும் பாத்துக் கொண்டிருப்பது என்பது மிக மோசமான ஒரு அநியாயம்.

இந்த மக்கள் தங்களுக்கு பல அச்சுறுத்தல் மத்தியில் இந்த பிரதேசத்தில் தங்களுடைய உயிர்களை வைத்துக் கொண்டு பண்ணைகளை பராமரிப்பதென்பது ஒரு இலகுவான விடையமல்ல.

ஒரு பக்கம் சிங்கள இனவாத அச்சுறுத்தல், இன்னொரு பக்கம் யாணையால் அச்சுறுத்தல் மத்தியில் மரத்தில் ஏறி இருந்து கொண்டு இருப்பது என்பது இந்த மண்ணைபறிகொடுக்காமல் இருப்பதற்காக அவர்கள் பரம்பரை பரம்பரையாக தாங்கள் செய்து கொண்டுவருகின்ற இந்த மேச்சல்தரை நிலத்தை பாதுகாக் வேண்டும் என்ற அடிப்படையில் இருக்கின்ற இந்த மக்களின் தேவைப்படுகின்ற உத்தரவாதங்களையும் உதவிகளையும் வசதிகளையும் செய்யாமல் இருக்கும் தமிழ் பிரதேச சபைகள் இயங்குவது என்பது மன்னிக்கு முடியாத ஒரு செயலாகும் என்றார்.

“வடக்கில் நாம் மட்டுமே மக்கள் ஆதரவுடன் உள்ளோம்.” – கஜேந்திரகுமார்

“வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து விட்டன.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறுதெரிவித்தார். அங்கு மேலும் அவர் பேசுகையில்;

வடக்கில் உள்ள நிலைமை போல் தான் தெற்கிலும் நிலைமை இருக்கும் வடக்கிலே தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர மற்றைய அனைத்து தரப்புகளும் மக்கள் மட்டத்தில் செல்வாக்கை இழந்து கொண்டு போகின்ற கட்டத்திலே அவர்கள் நினைக்கின்றார்கள்.

பிரிந்து நின்றால் செல்வாக்கை கூட்டலாம் என்று அது மட்டும் தான் வித்தியாசம். தெற்கிலேமொட்டு மட்டும் யானை செல்வாக்கை முற்றும் முழுதாக இழந்திருக்கின்ற நிலையில் மொட்டுதேர்தலில் நிற்கவே முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.

யானை தேர்தல் காலத்திலே முற்று முழுதாக தூக்கி எறியப்பட்ட நிலையிலே அவர்கள் கூட்டு சேர்ந்தால் மக்கள் செல்வாக்கு எடுக்கலாமென்று நினைக்கிறார்கள். யதார்த்தத்திற்கு முரணாண வகையிலே சிந்தித்து வெற்றி பெறலாம் என்று நினைத்து ஏதோ நடவடிக்கை எடுப்பதாக நினைக்கின்றார்கள்.

மக்களின் உண்மையான யதார்த்தம் மாறப்போவதில்லை. மாறாக மக்கள் எப்படி பார்ப்பார்கள் என்றால் நாங்கள் செய்தி ஒன்றை அவர்களுக்கு கொடுக்கப் போகின்றோம்; ஆனால் அவர்கள் விளங்கிக் கொள்கிறார்கள் இல்லை என சிந்திப்பார்கள்.

தெற்கிலே ராஜபக்சவுகளுக்கு மக்கள் மத்தியில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலே ; ரணில் விக்கிரமசிங்க மஹிந்த ராஜபக்சவை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பதனால் தான் தப்பித்துக் கொள்ளலாம் என நினைப்பது ஒரு வேடிக்கையான விடயமாகவே காணப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக உலகமே நிராகரிக்கின்ற கடந்த தேர்தலிலே மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்தற்காக மொட்டுடன் யானை கூட்டு சேருவது என்பது வேடிக்கையான விடயமாகும்” என்றார்.

“தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவை அழைக்க நேரிடும்.” – சி.வி.விக்னேஸ்வரன்

“தேசிய இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவை அழைக்க நேரிடும்.” என தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையின்போது இந்தியாவின் மேற்பார்வை அவசியம் என்று தமிழ் அரசியல் தலைவர்களான விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் 5ஆம் திகதி இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுக்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதெனவும், 10ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக நான்கு தினங்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதாகவும் அறிவித்துள்ள நிலையிலேயே சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தினை பொறுத்தவரையில், தமிழ் தரப்புடன் பேச்சுக்களை நடத்தி இணக்கப்பாட்டை எட்டவேண்டிய இக்கட்டான நிலைமையில் உள்ளது. குறிப்பாக, சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெற்றுக்கொள்வது, ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல தேவைப்பாடுகள் உள்ளன.

ஆகவே, தமிழர்கள் தரப்பினை புறமொதுக்கிவிட்டு அவர்களால் எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துச் செல்ல முடியாது. இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமையில் தான் தமிழர் தரப்புடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் முன்வந்திருக்கின்றது. அவ்விதமான சூழலில் நாம் ஒற்றையாட்சியை அடிப்படையாக வைத்து பேச்சுக்களை முன்னெடுப்பதில் அர்த்தமில்லை.

எமக்கு தற்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை பயன்படுத்தி விட்டுக்கொடுப்பற்ற பேச்சுக்களுக்கு தயாராக வேண்டும். குறிப்பாக, சமஷ்டி அடிப்படையிலான பேச்சை முன்னெடுப்பதென்பதில் தளர்ந்துவிடக்கூடாது.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சம்பந்தன், சுமந்திரன் போன்றவர்கள் இறுக்கமான பிடிமானத்தில் இல்லாது பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முயலுகின்றார்கள். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதேவேளை அரசாங்கம், பேச்சுவார்த்தைகளுக்கான மத்தியஸ்தராக நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மை அழைத்து வருவதற்கான சாதகமான நிலைமைகள் காணப்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் உள்ளன.

இதனை நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அரசாங்கம் எரிக் சொல்ஹெய்மை அழைத்தால், நாம் நிச்சயமாக இந்தியாவின் மத்தியஸ்தை கோருவோம்.

ஆகக்குறைந்தது பேச்சுக்களின்போது இந்தியாவின் மேற்பார்வையையாவது கோருவோம். இதன் மூலம் அரசாங்கத்தின் நழுவல் போக்கினை தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

“சிங்கள தேசிய வளர்ச்சிக்கு மணிவண்ணன் துணைபோகிறார்.”- தமிழ் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டு !

சிங்கள தேசிய வளர்ச்சிக்கு மணிவண்ணன் துணைபோகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஊடகப்பேச்சாளர் கனகரட்ணம் சுகாஷ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்“.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவின் தீர்மானத்தையும் மதிக்காமல் மத்திய குழு தேவை இல்லையென இருந்துவிட்டு தங்கள் முகமூடிகள் எல்லாம் பறந்து போயுள்ள நிலையில், அவர்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியை விட்டு நீக்கிய முடிவு சரியானது என்பதை அனைவருமே வெளிப்படையாக கூறத் தொடங்கியுள்ளனர்.

மாநகரசபையில் தமிழினப் படுகொலை செய்ய பங்காளிகளாக இருந்த ஈபிடிபியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது மட்டுமல்லாமல் தங்களுடைய பதவிக்காக டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவோடு இணைந்து செயற்படுவதால் இவர்கள் யார் என்று தெரிந்து விட்டது.

ஆரியகுளத்தைப் புனரமைத்து சிங்கள தேசியவாத வளர்ச்சிக்கும் இவர்கள் மறைமுகமாக ஆதரவு வழங்குகின்றனர். அவரது வெளிநாட்டுப் பயணமும் பிசுபிசுத்துப் போயுள்ள நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் மீண்டும் தமிழ் தேசிய முலாம் பூசி தமிழ் தேசிய மக்கள் முன்னணியை பயன்படுத்த வேண்டியுள்ளது. இவ்வளவு காலமும் மறந்து போய் அதை தூசு தட்டமுற்படுகின்றார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியை அவர் உருவாக்கியதாக கூறுவது அப்பட்டமான பொய். நாங்கள் சட்ட மாணவர்களாக இருந்த போது இந்த கட்சியை உருவாக்கியது நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன், மறைந்த பேராசிரியர் கென்னடி ஆகிய நான்கு பேருமே ஆகும்.

கட்சியின் உருவாக்கத்திற்கும் மணிவண்ணனுக்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது. அந்த நேரத்தில் ஒரு வேட்பாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் பின்னர் சிலரால் கொண்டுவரப்பட்டு அறிமுகப்படுத்த ஒருவரே மணிவண்ணன் .“ எனத் தெரிவித்துள்ளார்.

……………………………………………………………………………………………………………………………

இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஒரு பக்கம் நீடித்துக்கொண்டிருக்கும் நிலையில் அரசியல் சார்ந்த முனைப்பான போராட்டங்களை தென்னிலங்கை இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இந்த நேரத்தில் தமிழர்களுடைய நிலைப்பாடு என்ன.? அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன..? என்ற வினாக்களை தென்னிலங்கை ஊடகங்கள் எழுப்ப ஆரம்பித்துள்ளன. இந்த அருமையான சந்தரப்பத்தை பயன்படுத்த வேண்டிய ஒரு சூழல் உ்ள்ளது. மேலும் தமிழ் தலைவர்களுடை்ய முக்கியமான ஒற்றுமையுடன் கூடிய அசைவு இன்றியமையாததாகியுள்ள நிலையில் இன்னமும் இந்த தமிழ்தேசிய கட்சிகள் ஒன்று பட தயாரில்லை என்ற நிலையே நீடிக்கின்றது. கூட்டமைப்பில் அடைக்லநாதன் – சுமந்திரன் இடையேயான மோதல் போக்கு ஒரு புறம், எந்த கோட்பாட்டில் உள்ளார் என்றே தெரியாத விக்கி ஒருபுறம், இவர்களுக்கிடையில் சொந்த கட்சிக்குள்ளேயே பிரச்சினையை தீர்க்க முடியாது தமிழ்தேசியத்தை பெற்றுத்தருவதாக தமிழர்களை வைத்து ஏமாற்றிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேலுமொரு பக்கம் என தமிழ் தலைமைகள் ஒவ்வாரு திசையில் பயணிப்பது கையில் கிடைத்த அருமையான வாய்ப்பை தவறவிட்டது போலாகும். ஒற்றுமையுடன் கூடி செயற்பட்டு தமிழ் மக்களுக்காக செயற்பட வேண்டிய இந்த நேரத்தில் கடந்த கால தலைவர்கள் விட்ட அதே தவறை இன்றைய தலைவர்களும் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

பொருத்திருந்து பார்ப்போம்.., இவர்கள் எங்களை இன்னும் எவ்வளவு காலம் ஏமாற்ற திட்டமிட்டிருக்கிறார்கள் என்று..!

 

“போலியான செயற்பாடுகளால் சர்வதேசத்தை ஏமாற்றும் இலங்கை அரசு.”- கஜேந்திரன் சாடல் !

“அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.”என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“தமிழ் அரசியல் கைதிகள் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கத் தரப்பு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு முரணாக மோசமான சட்டம் என்பதை ஐநா மனித உரிமை பேரவை உட்பட பல்வேறுபட்ட சர்வதேச சமூக அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பல்வேறுபட்ட விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளன.

நாங்கள் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம்.இத்தகைய நிலையில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தாங்கள் இதனை மாற்றி அமைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்கள்.

ஆனால் இன்று வரை அந்த சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. எங்களுடைய நிலைப்பாடு இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். இந்த சட்டம் முழுமையாக நீக்கப்படும் போது அதன் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை மாற்றி அமைக்கிறோமெனக் கூறிக்கொண்டு பலவித ஏமாற்று வித்தைகளை செய்துவருகின்றது.

குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் 16 அரசியல் கைதிகளை விடுவித்துள்ளார்கள். விடுவிக்கப்பட்டவர்கள் ஆறு மற்றும் எட்டு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டியவர்களைத் தான் இந்த அரசாங்கம் விடுவித்தது. மாறாக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை.

ஐ.நா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் நெருங்கி வருகின்ற வேளையில் புலிகளை மீளுருவாக்க முயற்சித்தார்கள், சமூக வலைத்தளங்களில் பிரபாகரனின் படத்தை காண்பித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 100 பேர் வரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து விட்டு அரசியல் கைதிகளை விடுவித்தது போன்று போலியான முகத்தை காண்பிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

சர்வதேச சமூகம் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான கண்காணிப்பை செய்ய வேண்டும். சிறைச்சாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், அங்கங்கவீனர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ள நிலையில் இவர்கள் உள ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள்.

அவர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

13 ஐ இல்லாது செய்யக்கோரி முன்னணியினர் சவப்பெட்டியுடன் ஊர்வலம் – கிட்டுபூங்கா பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் !

13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டிருந்தது. 

இன்று முற்பகல் 10.30 அளவில் நல்லூரில் உள்ள திலீபனின் நினைவு தூபிக்கு அருகிலிருந்து ஆரம்பித்த இந்த பேரணி கிட்டு  பூங்காவரையில் முன்னெடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து முன்னணியின் தலைவரான கஜேந்திரகுமார் உரையாற்றியிருந்தார்.

13 ஆம் திருத்தச் சட்டத்தினுள் முடக்கும் சதிக்கு எதிரான கிட்டுபூங்கா பிரகடனம்

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்’ என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம்.

சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது – தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சிங்கள தேசத்திற்கும், இலங்கைத் தீவின் மீது கரிசனை கொண்டிருக்கும் சர்வதேச சக்திகளுக்கும் இத் தொடர் போராட்டம் வலியுறுத்திக் கூற விரும்புகின்றது.

சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களின் ஏகோபித்த வாக்குகளால் ஆட்சிப்பீடம் ஏறியுள்ள இன்றைய அரசாங்கத்தால் இலங்கைக்கான நான்காவது அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளது. அதை இந்த வருடத்துக்குள் நிறைவேற்றவுள்ளதாக இவ்வரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டும் உள்ளது. அது இறுக்கமான ஒற்றையாட்சிக்கு உட்பட்டதாகவே அமையும் என்பதையும், அரசாங்கம் உறுதிப்படக் கூறியுள்ளது.

May be an image of one or more people, people standing and outdoors

இந்த அரசியலமைப்பை ஒரு தலைப்பட்டசமாக நிறைவேற்றுவதற்குரிய மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் இந்த அரசாங்கம் கொண்டுள்ளது. இலங்கையில் கொண்டுவரப்பட்ட மூன்று அரசியலமைப்புக்களும் இதே போன்றதொரு சிங்கள பெரும்பான்மைப் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டே நிறைவேற்றப்பட்டிருந்தது. அச்சந்தர்பங்களிலெல்லாம் தமிழ்த் தலைமைகள் அந்த ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்களை எதிர்த்திருந்ததுடன், வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வை வலியுறுத்தி வந்ததன் விளைவாகவே, தமிழர்களுக்கு இனப்பிரச்சினையொன்று உண்டு என்னும் விடயத்தைத் தக்கவைக்கக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக, சிங்கள அரசு தமிழருடைய உரிமைக்கான ஆயுதப் போராட்டத்தை பயங்கரவாதமாக சித்தரித்து, இங்கு பயங்கரவாத பிரச்சினை மட்டுமே உள்ளதாகக் கூறி, போரை முடிவுக்குக் கொண்டு வந்து 13 வருடங்கள் கழிந்துள்ள நிலையிலும், இன்றுவரை தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்தும் இருக்கிறது என்கின்ற நிலையை நாம் தக்கவைத்திருப்பதற்கான ஒரேயொரு காரணம், இந்த நாட்டின் பிரதான சட்டமாக இருக்கும் மூன்று அரசியலமைப்புக்களையும் தமிழ் மக்கள் நிராகரித்திருந்தமையேயாகும்.

இவ்வாறிருக்க, 1980 களில் இலங்கையை மையமாகக் கொண்டிருந்த அமெரிக்க – இந்திய பூகோளப்போட்டி காரணமாகவே இந்தியா தனது நலனை அடைவதற்காக தமிழர்களின் இனப்பிரச்சினையைக் கையிலெடுத்திருந்தது. 1987 இல் இலங்கையானது, இந்திய நலன்சார்ந்து செயற்பட தயாரான நிலையில், இந்தியா தனது தேசிய பாதுகாப்பு நலன்களை உறுதிப்படுத்தி, சிங்கள தரப்புடன் உடன்பட்ட பின்னர், எந்த ஒற்றையாட்சிக் கெதிராக தமிழ்த் தரப்பை பயன்படுத்தியதோ, அதே ஒற்றையாட்சிக்குள்ளான 13 ஆம் திருத்தத்தையே தமிழ்க்களுக்கான தீர்வாக இலங்கை அரசு முன்வைத்திருந்த நிலையில், தமிழ்த் தரப்பை இந்தியா கைவிட்டிருந்தது.

இந்நிலையில் அப்போதிருந்த தமிழ்த் தரப்புகளாலும் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தச் சட்டம் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நேர்மையான தலைமைத்துவத்தின் காரணமாக ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடுகள் அனைத்தும் தடுக்கப்பட்டிருந்தது. 2005 இன் பின்னர், இந்திய சீனா பூகோளப்போட்டி மீண்டும் இலங்கையில் உருவாகியிருந்த பின்னணியிலேயே ஒரு இனப்படுகொலையூடாக போராட்டம் மௌனிக்கப்பட்டிருந்தது. இதன் பின்னர், இந்தியா மீண்டும் தனது ஆதிக்கத்திலுள்ள தமிழ்த் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழ் அரசியலை ஒரு துருப்புச்சீட்டாகக் கையாண்டு இலங்கை அரசோடு பேரம்பேசி வருகின்றது.

இலங்கை, சீனாவின் விவகாரத்தில் இந்திய நலன்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் செயற்படுமானால், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ் தரப்புக்களைப் பயன்படுத்தி, தமிழரின் அரசியலை ஒற்றையாட்சிக்குள்ளான 13ஆம் திருத்தத்திற்குள் முடக்குவதற்கும் இணங்கியுள்ளது.

இந்தப் பின்னணியிலேயே, இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட தமிழ்த் தரப்புகளான இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலைக் கழகம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (டி.பி.எல்.எவ்;) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மற்றும்; தமிழ் மக்கள் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி உள்ளிட்ட தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் இணைந்து 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி கூட்டாக கையொப்பமிட்ட கடிதத்தை 18-01-2022 அன்று இந்திய தூதுவரிடம் கையளித்துள்ளனர்.

இதன்மூலம், 13 ம் திருத்தச்சட்டத்திலுள்ள சரத்துக்கள் புதிய அரசியலமைப்பிலும் உள்வாங்கப்படும் பட்சத்தில், இந்திய ஆதிக்கத்துக்குட்பட்ட வடக்கு கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு ஆதரவு வழங்குவதனூடாக, தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்ற நிலைமையையே உருவாக்கி, நாட்டிலுள்ள அனைத்து இனங்களும் ஏற்றுக்கொண்ட ஒரு அரசியலமைப்பை உருவாக்கிவிட்டதாகவும், இனப்பிரச்சினை இதனூடாக தீர்க்கப்பட்டு விட்டதாகவும் உலகுக்கு பறைசாற்றுவதற்கு தயாராகிறார்கள்.

இந்த ஆபத்திலிருந்து தமிழ்த் தேசத்தை மீட்டெடுப்பதற்கு, தமிழ்த் தேச மக்கள் அணிதிரள்வதன் ஊடாகவே தடுத்து நிறுத்த முடியும் என்னும் யாதார்த்தத்தை விளங்கிக் கொண்டு, இந்தத் தொடர் போராட்டம் பின்வருவனவற்றை பிரகடனப்படுத்துகிறது :

• தமிழ்த் தேச மக்கள் தொடர்ச்சியாக ஒற்றையாட்சியை நிராகரித்து, தமிழ்த் தேசத்தை அங்கீகரிக்கின்ற ஒரு தீர்வை 70 வருடங்களுக்கு மேலாக வலியுறுத்தி வந்திருக்கின்ற நிலையிலே, 2009 இல் இனவழிப்புக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரும், ஒற்றையாட்சியை நிராகரித்தும், தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்தைக் கோரியும் ஒவ்வொரு தேர்தல்களுடாகவும் தங்களது ஏகோபித்த ஆணையை வழங்கி வந்திருக்கிறார்கள்.

• வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசமும் – அதன் இறைமையும், சுயநிர்ணய உரிமையையும் அங்கீகிக்கப்படுகின்ற தீர்வுக்குப் பதிலாக – ஒற்றையாட்சிக்குள் இருக்கக்கூடிய ஒரு கட்டமைப்பாக (13 ஆம் திருத்தச் சட்டமாகவோ அல்லது வேறு வடிவத்திலோ) இருக்குமானால் அவ்வகையான செயல், தமிழ் மக்களுடைய ஆணைக்குத் துரோகம் இழைக்கும் வகையிலேயே அமையும் என்ற விடயத்தை இப்போராட்டம் பிரகடனப்படுத்துகிறது.

• தமிழ் மக்கள் – காலம் காலமாக வழங்கிவரும் தமிழ்த் தேச அங்கீகாரத்துக்குரிய ஆணையை மீறி, ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13 ஆம் திருத்தத்தையோ அல்லது வேறு எந்தவொரு திருத்தத்தையோ வலியுறுத்துகின்ற தரப்புக்கள், அம்முயற்சியை கைவிட வேண்டுமென இப்போராட்டமூடாக வலியுறுத்துகிறோம்.

• இந்திய அரசானது இலங்கையோடு நல்லுறவை பலப்படுத்திக்கொள்வதையோ அல்லது தனது பூகோள -அரசியல் நலன்களைப் பேணுவதையோ அல்லது தென் ஆசிய பிராந்திய வல்லரசாக தன்னை நிலைநிறுத்திக்கொள்வதையோ ஈழத்தமிழ் மக்கள் எதிர்க்கவில்லை. இந்தியாவை எமது நட்புசக்தியாகவே கருதுகின்றோம். இந்தியாவின் தேசிய நலன்களைப் பேணுவதில் எமக்கு மிகுந்த விருப்பமும் அக்கறையும் ஈடுபாடும் உண்டு. ஆனால் தமிழ் மக்கள் தமது நட்பு சக்தியாக கருதும் இந்தியா, தனது பூகோள நலன்களைப் பூர்த்திசெய்வதற்காக தமிழ் மக்களைப் பலிக்கடாவாக்கி, தமிழ் மக்களின் நலன்களை முற்றாகப் புறக்கணிக்கும் செயற்பாட்டை நிறுத்துமாறு கோருகின்றோம்.

• தமிழ்மக்கள் 70 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில், தமிழ்த் தேச அங்கீகாரத்தையும் – அதனுடைய தனித்துவமான இறைமையையும் – சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய ‘சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் இப்போராட்டம் கோருகின்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

(அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்)

தமிழ்த் தேசியப் பேரவை

(படங்கள் – குமணன் – முல்லைத்தீவு ஊடகவியலாளர்)

“இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 திருத்தத்தை தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 திருத்தத்தை தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.” என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களுடைய தீர்வு விடயத்தில் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை தமிழர்கள்தான் கூறமுடியும் அதனை எவரும் கூற முடியாது ,திணிக்கவும் முடியாது 13 ஆவது திருத்தத்தை தீர்வாக ஒருபோதும் ஏற்க முடியாது. நாம் அதில் தெளிவாகவுள்ளோம். 13ம் திருத்தத்தை தமிழ் மக்களை ஏற்று கொள்ளவைப்பது தமிழர்களுடைய அபிலாசைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பது தமிழர் தேசத்தை அழிப்பதற்கான ஒரு நடவடிக்கையாகத்தான் நாம் அதனை பார்க்கின்றோம். இதற்கு நாம் ஒருபோதும் ஒத்துழைக்கபோவதில்லை் நாங்கள் இதனை எதிர்ப்பதை இந்தியா தமக்கு எதிராக பார்க்கிறது என்றால் அது இந்தியாவின் முடிவு.

ஆனால் எங்கள் மக்களுடைய நலன்கள் எவருக்கும் நாங்கள் பேரம்பேசி கைவிடத் தயாரில்லை . தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்காக நேர்மையாக செயற்படுகின்ற எந்த நாட்டுடனும் நாங்கள் பயணிக்க மாட்டோம் என கூறவில்லை. மாறாக அனைவரையும் கேட்டுக்கொள்வது தமிழர்களுடைய அடிப்படை அபிலாசைகள் குறிப்பாக திம்பு கோட்பாடுகளில் கூறப்பட்ட அடிப்படை அபிலாசைகள் முழுமையாக பூர்த்தி செய்யக கூடிய வகையிலே அவர்களுடைய ஆதரவை எமக்கு தரவேண்டும் என்ற அடிப்படயில்தான் நாம் கோரிவருகின்றோம்.

இதனை தமிழ்தேசிய மக்கள் முன்னணியாக நாம் அனைவருக்குமே எங்களுடைய தீர்வு யோசனைகளை வழங்கியிருக்கிறோம். மக்கள் பேரவையால் அங்கிகரிக்கப்பட்ட தமிழ் தேசம் அங்கிகரிக்கப்பட்ட தமிழ்தேசத்தின் இறைமை அங்கிகரிக்கப்பட்ட ,தமிழ்தேசம் தன்னுடைய சுயநிர்ணய உரிமையை முழுமையாக அங்கிகரிக்கப்பட கூடிய சமஸ்டி தீர்வைத்தான் நாங்கள் கோரியிருக்கின்றோம். இதை நோக்கியதாக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து அதேவேளை சிங்கள மக்களுக்கு உண்மையை எடுத்து கூறுவதற்கு அவர்கள் தயார் என்றால் அவர்களை அரவணைத்து அவர்களுடன் பயணிப்போம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

இந்தியாவுடன் எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்தியா 13 ஆவது திருத்தத்தை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஏன் என்றால் அது வல்லரசு. தன்னுடைய தேவைக்காக அதனை கூறுகிறது. இங்கு யார் பிழை என்றால் தமிழ் மக்களுடைய வாக்குகளை பெற்று தமிழ் மக்களுடைய நலன்களுக்காக குரல்கொடுக்காமல் இந்தியாவினுடைய எடுபிடிகளாக இருக்கூடிய துரோகிகள் தான் பிரச்சினை.

ஒற்றையாட்சியை நிராகரிக்கின்றோம் சமஸ்டிதான் தேவை என மக்களிடம் ஆணை பெற்று அதற்கு நேர் எதிராக 34 வருடத்திற்கு முன்பாகவே எடுத்து எடுப்பிலே நிராகரித்த 13 ஆவது திருத்தத்தை இன்று நடைமுறப்படுத்த கேட்பது என்றால் அந்த துரோகிகளுக்கு எதிராக செயற்படுவோம்.

நாங்கள் எந்த நாட்டையும் எதிரியாக பார்க்க தயாரில்லை இந்தியா கேட்கும் போது இந்தியாவின் பக்கத்தில் நியாயம் இருக்கும். ஆனால் ஒற்றையாட்சியாக இருக்கும் 13 திருத்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.

மேலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது,

நாம் மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவது 13ஐ கோரும் தரப்புக்களிற்கே பிரச்சனையாக இருக்கும். நாம் மாகாணசபையை கைப்பற்றி, அந்த வெற்றுக்கோசத்தை அம்பலப்படுத்தி விடுவோம் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள். அதனால் கட்டாயம் நாம் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

கடந்தமுறை இராயப்பு யோசெப் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில், மாகாணசபை தேர்தலில் போட்டியிட்டு வென்று, இதிலுள்ள ஓட்டைகளை அம்பலப்படுத்தி, இதை தாண்டி அரசியலை கொண்டு செல்ல செயற்படுவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வாக்குறுதியளித்தனர். மக்களை பகிஸ்கரிக்க அழைப்பு விட வேண்டாமென்றார்கள். அதை நம்பினோம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை.

ஒரு அதிகாரமுமில்லாத ஒன்றை தமிழ் மக்களிடம் திணித்து, வரப்போகிற அரசிலமைப்பில் 13வது திருத்தம் உள்ளதாக கூறி மக்களை ஆதரிக்க வைக்கும் முயற்சியை முறியடிக்க நாம் போட்டியிட வேண்டும்.

நாம் 13ஆம் திருத்தத்தை நிராகரிக்கிறோம். எமக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. கடந்த தேர்தலை எமது கட்சி பகிஸ்கரித்தது. ஆனால் மக்களை பகிஸ்கரிக்க கோரவில்லை. மாகாணசபை முறைமையின் அதிகாரமற்ற தன்மையை அம்பலப்படுத்தாமல், அதை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு கூட்டமைப்பு சென்றுள்ளதால், மாகாணசபை முறையை அம்பலப்படுத்தும் பொறுப்பை நாமே ஏற்க வேண்டும் என்றார்.

13 ஐ அழிக்க அணிதிரளுங்கள் – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் !

13ம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிக்க அணி திரண்டு வருமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி துண்டுப்பிரசுரம் விநியோகித்துள்ளது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ம் திருத்தத்திற்குள் முடக்கம் சதி முயற்சியை முடியடிக்க அனைத்து தமிழ் மக்களதும் பூரணமான ஆதரவை கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாண நகர் பகுதியில் இன்றையதினம் இவ்வாறு துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது

“இலங்கையில் பொலிஸாரினால் தவறாக வழிநடத்தப்படும் நீதிமன்றங்கள்.” – செல்வராசா கஜேந்திரன்

இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக பொலிஸ் மற்றும் நீதித்துறை செயற்படுகிறதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர்,

சர்வதேச நாடுகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை என்பன ஜனநாயகத்தையும் சட்டம் ஒழுங்கையும் பாதுகாக்கும் கவசமாக இருக்கும் நிலையில், இலங்கையில் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைக்கு கருவியாக அவை செயற்படுகின்றன என அவர் குற்றம் சுமத்தினார்.

பொலிஸ் துறையினால் நீதிமன்றங்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.அவர்கள் தவறாக நீதிமன்றங்களை வழிநடத்துகிறார்கள் எனத் தெரிந்தும் அரசாங்கத்தின் இறுக்கம் காரணமாக நீதிமன்றங்கள் செயற்படுவதாக அவர் தெரிவித்தார்.அதற்கமைவாகவே, மாவீரர்கள் தின நிகழ்வுகளை நடத்த தடைவிதிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பல லட்சம் ரூபாய் ஆலய ஊழல்: வாள் வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் நேற்று சரணடைந்தார்!

யாழ் சித்தங்கேணியில் வாள்வெட்டில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவன் நேற்று யூலை 14 இல் சரணடைந்தார். யுலை 11 இல் வாள் வெட்டு இடம்பெற்றது முதல் தலைமறைவாக இருந்த இவர் நேற்று மாலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். இவரினால் வாள்வெட்டுக்கு உள்ளான குலசிங்கம் குலரத்தினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று தற்போது வீட்டுக்கு வந்துள்ளார்.

சித்தங்கேணி பிள்ளையார் கோவிலில் இடம்பெற்ற மாகும்பாபிஷேகத்தையொட்டி உலகெங்கும் இருக்கும் ஆலயத்தின் அடியவர்களிடம் சேகரிக்கப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான நிதி மோசடி செய்யப்பட்டது தொடர்பான வாக்கு வாதத்திலேயே ரஜீவன் வாள்வெட்டில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. மகா கும்பாபிஷேகத்திற்கு ஊரில் நிதிப் பங்களிப்புசெய்தவர்களின் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் வெளிநாடுகளில் இருந்து நிதிப்பங்களிப்பு செய்த பலரின் பெயர்கள் வெளிவரவில்லை. வெளிநாட்டில் இருந்து நிதிப்பங்களிப்புச் செய்தவர்கள் ஆலயத்துடன் தொடர்புகொண்டு தாங்கள் நிதிப் பங்களிப்புச் செய்ததை நிர்வாகத்திடம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கும்பாபிஷேக நிதி கணக்குகளுக்கு பொறுப்பாக இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ரஜீவன் குழுவினருக்கும் ஆலயத்தின் நிர்வாகத் தலைவராக இருந்த குலரத்தினம் குலசிங்கத்திற்கும் இடையே சிறிதுகாலமாக முறுகல் நிலை காணப்பட்டது.

யூன் 11 மாலை வாள்வெட்டு நடப்பதற்கு முன்னரும் இவர்கள் தொலைபேசியில் வாக்குவாதப்பட்டு நேரடியாக பார்த்துக்கொள்வதாக ரஜீவன் குலரத்தினத்திற்கு சவால்விட்டுள்ளார். அதனைத் தொடர்ந்தே அன்றைய தினம் மாலை 3:30 மணியளவில் அருகில் இருற்த சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் ரஜீவன் வாள் கொண்டுவந்து குலரத்தினத்தை தாக்கி உள்ளார்.