ஜே.வி.பி

ஜே.வி.பி

“இலங்கையில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் காணப்படுகின்றது.” – அநுரகுமார திஸாநாயக்க

“இலங்கையில் பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் காணப்படுகின்றது.” என ஜே.வி.பியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “பொருளாதாரப் பிரச்சினைகளிலிருந்து நாட்டை மீட்டெடுக்க புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஒரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இன்னொரு தரப்பினர், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட கதிரையின் பாரத்தை சுமக்கும் அளவுக்கு எமது தலைவர்களின் மனதளவில் வலிமையானவர்கள் கிடையாது. இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.

எனவே, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாத, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சி தாவ முடியாத, அமைச்சர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்திய, மனித உரிமையை வலுப்படுத்தக்கூடிய, சிங்கள – தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு முழு உரிமையுடன் வாழக்கூடிய புதிய அரசியலமைப்பொன்று ஸ்தாபிக்கப்பட்டே ஆக வேண்டும்.

ஒரு நாடு வளமடைய வேண்டுமெனில் சட்டத்தின் ஆட்சி அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்.

ஆனால், இன்று எமது நாட்டிலோ பணம் உள்ளவர்களுக்கு ஒரு சட்டமும் பணம் இல்லாதவர்களுக்கு இன்னொரு சட்டமும் தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இப்படியாக ஒரு நாட்டினால் ஒருபோதும் முன்னேற முடியாது. நீதிமன்றக் கட்டமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும்.

நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை இல்லாது போனால், மக்களின் உரிமைகள் மீறப்பட்டுவிடும்.  இந்த அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்.

இன்று உலக நாடுகளாகட்டும், ஐ.நா., ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களாகட்டும், அனைத்துமே இலங்கை தொடர்பாக அதிருப்தியையே வெளிப்படுத்தியுள்ளன.

சிங்கள- தமிழ்- முஸ்லிம். பரங்கியர் என அனைவரும் சமாதானமாக வாழ வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டும்.

மொழி, மத உரிமை முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு நாடாக மாற வேண்டும். மக்களிடத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்தாமல், எம்மால் ஒருபோதும் பொருளாதாரத்தையோ நாட்டையோ முன்னேற்ற முடியாது.“ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

“திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்.” – அனுரகுமார

“திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள்.” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறுமா என்ற ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால், ரணில் தேர்தலை ஒத்திப்போடுவதற்கே முயற்சி செய்கின்றார்.

அரசமைப்பில் அதற்கு இடமில்லை. இதனால் தேர்தல் நடத்தப்படவே வேண்டும். தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்கத்தின் தேவைக்கு ஏற்பவே செயற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆணை இல்லை. 2019 ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்குக் கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் ரணிலுக்கு எதிரான வாக்குகள். அப்படியாயின் ரணிலால் எப்படி ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சோமாலிய நாட்டு கடற்கொள்ளையர்கள் கப்பலைப் பிடித்து வைத்திருப்பது போல் இங்கு திருடர்கள் இலங்கையைப் பிடித்து வைத்துள்ளார்கள். நாட்டை ஆட்சி செய்கின்றார்கள். இவர்களுக்கு மக்கள் ஆணை இல்லை.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தினால் அவர்களின் நிலை என்னவென்று தெரியவரும். அவர்கள் படுதோல்வியடைவார்கள் என அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணை இல்லாத இந்த அரசால் ஆட்சி செய்ய முடியாது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இந்த அரசு தோல்வியடைந்தால் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைக் கேட்பார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டி வரும். அப்போது அதிலும் இந்த அரசு தோல்வியும். அப்போது ஆட்சி கலையும். ஜனாதிபதி இல்லாமல் போவார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும். அதனாலேயே அரச தரப்பினர் இந்தத் தேர்தலுக்கு அஞ்சுகின்றார்கள் எனவும் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

“நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் ஜே.வி.பியிடம் இல்லை.” – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டை மீளக் கட்டியெழுப்பும் திட்டம் எதுவும் மக்கள் விடுதலை முன்னணியிடம் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் பிரபலமடைவதற்காக அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, மக்கள் மத்தியில் கட்டுக்கதைகளை கூறிவருவதாகவும் சாடியுள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க இதனை கூறியுள்ளார்.

அவ்வாறு பெற்றுக்கொள்ளும் பிரபலத்தை தேர்தலில் வாக்குகளாக மாற்ற முடியாது என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் தேசிய தேர்தல் ஆணைக்குழு – ஜே.வி.பி குற்றச்சாட்டு!

சுயாதீன ஆணைக்குழு என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவை குறிப்பிட்டாலும் அதன் செயற்பாடு சூழற்ச்சிகரமாக இருக்கின்றது என ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.

தேர்தலை பிற்போடும் சூழ்ச்சியில் ஆணைக்குழு குறிப்பாக ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா உள்ளார் என்ற சந்தேகம் இருப்பதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்திலேயே ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உள்ளுராட்சித் தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்யும் திகதியை உத்தியோக பூர்வமாக அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இருப்பினும் அந்த ஆணைக்குழு தொடர்ந்து காலம் தாழ்த்திவருவதாக அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஆகவே உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உண்மையை அறிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்தனர் – ரஜமஹா விகாரையின் பிரதமகுரு சாடல் !

சுதந்திரம் அடைந்ததில் இருந்து நாடு வீழ்ச்சியடைந்தமைக்கு காரணம் அதன்பின் நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளே என மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வலவாஹெங்குணவெவே தம்மரதன நாயக்க தேரர் தெரிவித்துள்ளார். அத்தோடு, தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஜே.வி.பியினரே நாட்டை சீரழித்த வன்முறை அலையை கட்டவிழ்த்துவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரஹத் மகிந்த தேரர் காலமானதன் 2282வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மிஹிந்தலை விகாரையில் இடம்பெற்ற சமய நிகழ்வுகளை தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சாதாரண மக்கள் போசாக்கின்மையால் அவதியுறும் வேளையில் ஆட்சியாளர்கள் ஆடம்பர சுகங்களை அனுபவித்து வருகின்றனர் எனவும் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை அழிப்பவர்கள் என்று முத்திரை குத்தப்பட்ட நபர்கள் தேசபக்தர்களாக இருக்க முயற்சிப்பதாகவும் மக்களை ஏமாற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மக்கள் அவர்களை நிராகரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசடி செய்பவர்களை பாதுகாக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரகடனப்படுத்துவதை விடுத்து மக்களை உயர்த்தி பாதுகாப்பது நாட்டின் பாதுகாவலர் என்ற வகையில் ஜனாதிபதியின் கடமையாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மக்கள் ஆணையில்லாத மிதக்கும் மனிதர்கள் சிலர் வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர்.“ – அனுரகுமார விசனம் !

அரசாங்கம், தனியார் துறையினர், விவசாயிகள், வெளிநாடுகளில் உள்ள மக்கள் என அனைவரும் ஒன்றாக இணைந்து கைகோர்த்தால், இரண்டு – மூன்று ஆண்டுகளில் நெருக்கடியில் இருந்து மீள முடியும் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இடைக்கால வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு இன்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களையும் இவ்வாறு ஒன்றிணைக்க வேண்டுமாயின் மக்கள் ஆணையில் புதிய அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அப்படி நடந்தால், நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அந்த அரசாங்கத்திற்கு சுமார் இரண்டு ஆண்டு காலத்தை வழங்கலாம்.

நாட்டின் தற்போதைய ஜனாதிபதியை மக்கள் தெரிவு செய்யவில்லை. அத்துடன் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கிடைத்த மக்கள் ஆணையின் மூலம் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை அமைப்பது மக்களின் ஆணைக்கு முரணானது.

மக்களால் தெரிவு செய்யப்பட்டவரே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியும். அரசாங்கத்தின் இடைக்கால வரவு செலவுத்திட்டம் மக்களின் ஆணைக்கு எதிரானது.  நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு மக்கள் ஆணை அவசியம்.

தற்போது மக்கள் ஆணையில்லாத மிதக்கும் மனிதர்கள் சிலர் வந்து நாட்டை ஆட்சி செய்கின்றனர் எனவும் அனுரகுமார திஸாநாயக்க கூறியுள்ளார்.

கோட்டாபய ஆட்சிக்கு எதிரான இரண்டாவது அலை சுனாமி போல இருக்கும் என்கிறார் அனுரகுமார !

அரசை விரட்டுவதற்கான இரண்டாவது அலை விரைவில் ஆரம்பமாகும். அந்த அலை சாதாரண அலையாக அல்லாமல், சுனாமி போல் இருக்கும். இலக்கை அடையாமல் ஓயமாட்டோம் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

‘இந்த அரசை விரட்டியடிக்க வீதியில் இறங்குவோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் அம்பலாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இன்று வரிசைகளில் நிற்கின்றனர். எனவே, கட்சி பேதம் வேண்டாம். நாட்டை மீட்க மக்கள் சக்தியாக ஒன்றிணைவோம் எனவும் தெரிவித்தார்.

……………..

இதற்கு முன்னர் நடைபெற்ற அண்மைய மாதங்களில் அரசுக்கு எதிரான பாரியளவான வன்முறைச் சம்பவங்கள் கூட ஜே.வி.பியின் உந்துதலாலேயும் – ஆட்சியை பிடிப்பதற்கான சதியும் என கூறப்பட்ட நிலையில் அனுரகுமார திஸ்ஸ நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“நாட்டை அழித்த திருடர்கள் யார்.?.”- ராஜபக்ஷக்கள் தொடங்கி சஜித்பிரேமதாச உள்ளிட்டோரின் ஊழல் மோசடிகளை அம்பலப்படுத்தியது ஜே.வி.பி !

கடந்த இரண்டு தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசியல்வாதிகளின் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (03) அம்பலப்படுத்தினார்.

'நாட்டை அழித்த திருடர்கள் - மொத்தமாக வௌிப்படுத்திய அனுர!

´நாட்டை அழித்த திருடர்கள் – மொத்தமாக வௌிப்படுத்தல்´ எனும் தொனிப்பொருளில் ஊழல் எதிர்ப்புக் குரல் இன்று இலங்கை மன்றக் கல்லூரியில் நடாத்திய விசேட கருத்தரங்கில் கலந்துக் கொண்டு அவர் இதனை தெரிவித்தார். இதன்போது பல குற்றச்சாட்டுக்களை  அவர்கள் பகிரங்கப்படுத்தினர்.

 

 

 

 

  • இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கொன்று இடம்பெற்றது. ஜாலிய வழக்கின் இறுதித் தீர்ப்பு அமெரிக்காவில் இந்த மே மாதம் வரவிருந்தது. இது குறித்த ஒட்டுமொத்த அறிக்கை உள்ளது. அமெரிக்க தூதரகத்தை வாங்க அரசாங்கம் 6.2 மில்லியன் ஒதுக்குகிறது. அதில் 3.3 மில்லியனை அடித்துள்ளனர் . அதாவது 55% அடித்துள்ளனர். அப்படி கொமிஷன் வாங்கியதை அவர் அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டுள்ளார். ஜாலிய விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவின் உறவின சகோதரராவார்.
  • பண்டோரா ஆவணங்கள் மூலம் சுமார் 160 மில்லியன் டொலர் திரு நடேசன் மற்றும் நிருபமா குடும்பத்தினருக்குச் சொந்தமானது என்பது நமக்கு தெரியும். திரு நடேசனின் பெயரில் பசிலுக்கு நிறைய சொத்துக்கள் உள்ளதை தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தோம்.

https://www.facebook.com/watch/?v=701103227606054

  • 2014 கிங் நில்வலா கொடுக்கல் வாங்கலுக்கு சீன நிறுவனமொன்றுக்கு பணத்தை வழங்குவதற்கு நீர்ப்பாசன அமைச்சு அவசரம் காட்டியது. குறித்த சீன நிறுவனம் ரூத் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் கணக்கில் அவ்வப்போது 5 மில்லியன் டொலர்களை மாற்றியுள்ளது. அந்த நிறுவனம் திரு நடேசனுக்கு சொந்தமானது. அப்போது நீர்ப்பாசன அமைச்சராக இருந்தவர் நிமல் சிறிபால டி சில்வா. அந்த நிறுவனம் இலங்கையில் உள்ள கொள்ளுப்பிட்டியில் உள்ள வங்கிக்கு பணம் அனுப்புகிறது.
  • பிரான்ஸ் ஏர்பஸ் நிறுவனம் அதிகளவில் ஏர்பஸ்களை வாங்குவதற்கு சில நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து வந்தமை சர்வதேச விசாரணையில் தெரியவந்துள்ளது. நாங்களும் இந்த ஏர்பஸ்ஸை எடுத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டோம்.
  • சமலின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற எயார் லங்காவின் நிர்வாக சபை கூட்டத்தில் இந்த எயார்பஸ்ஸை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. ஏனென்றால் அவருடைய மகன் அந்த சபையின் உறுப்பினராவார். இதன் மொத்த கொள்முதல் $2.2 பில்லியன் ஆகும்.
  • இந்த கொள்முதலில், நான்கு விமானங்களுக்கு ஒவ்வொன்றிற்கும் $300,000 கப்பம் வழங்க உடன்பாடு எட்டப்பட்டது. மொத்தமாக 16.18 மில்லியன் டொலர்கள். இந்த 16 மில்லியன் டொலர்களும் கிடைக்கவில்லை. ஏனெனில் அரசாங்கம் கவிழ்ந்தது. 2 மில்லியன் டொலர்கள் முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போதைய எயார் லங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவியின் கணக்கிற்கு 2 மில்லியன் டொலர்கள் சென்றுள்ளது. குறித்த தொகை அவுஸ்திரேலியாவில் உள்ள கணக்கிற்கு மாற்றப்படுகிறது. அந்த கணக்கில் இருந்து இலங்கையில் உள்ள மூன்று கணக்குகளுக்கு குறிப்பிட்ட தொகை வருகிறது. அதில் ஒன்று நிமல் பெரேராவின் கணக்கு. அமெரிக்காவில் சிஐஏ முகவராக இருந்த சுபேரு கைது செய்யப்பட்டார்.
  • அவர் எப்படி $12 மில்லியன் சம்பாதித்தார் என்பதை அவரால் விளக்க முடியவில்லை. தற்போது 12 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். அவரது கணக்குகளை பரிசோதிக்கும் போது, ​​மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கப்ரால் அவருக்கு 6.5 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது. சரியென்றால் கப்ராலும் சிறைக்கு செல்ல வேண்டும். எனவே, இன்று சர்வதேச அரங்கில் எங்காவது ஒரு விடயம் அம்பலமாகுமாக இருந்தால் அதில் இலங்கையை சேர்ந்த உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பிலும் அம்பலமாகின்றமை குறிப்பிடத்தக்கது.
  • 2015 முதல் 2019 வரையான காலத்தில் தேசிய மத்திய கலாச்சார நிதியத்தின் நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் கலாசார அமைச்சரின் செலவு அறிக்கை முக்கியமானது. 146 செலவு அறிக்கைள். நிதியம் மற்றும் நிதியத்தின் உறுப்பினர்களின் எந்த அனுமதியும் இன்றி நிதியத்தின் பணம் செலவிடப்பட்டுள்ளது. சஜித் பிரேமதாசவின் நேரடியான உத்தரவின் கீழேயே இந்த செலவுகளை செய்தாக சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.செலவு செய்து முடிந்த பின்னர் 2019.11.15ஆம் திகதி, அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் அவசர பணிப்பாளர் குழு நியமிக்கப்படுகிறது. ரணில் விக்ரமசிங்க, ஜோன் அமரதுங்க, மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, அகில விராஜ் , மனோ கணேசன், பேர்னாட் பிரியந்த இவர்கள் பணிப்பாளர்கள் குழுவில் இருந்தனர். பணிப்பாளர் குழுவின் தலைவர் என்ற முறையில் ரணில் விக்ரமசிங்க இதில் கையெழுத்திடவில்லை. பிரதமரின் செயலாளர் ஏக்கநாயக்க கையெழுத்திட்டுள்ளார். அகில விராஜ் உட்பட மேலும் சிலர் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை அறிக்கை எமக்கு நேற்று கிடைத்தது. அதனை சரியாக தொகுத்துக் கொள்ள முடியவில்லை. மத்திய கலாச்சார நிதியத்தின் சுமார் மூன்று பில்லியன் ரூபா நிதி முறைகேடு தொடர்பாக கோப்பே இது என சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயார்.” – அனுரகுமார திசாநாயக்க

ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயாரென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் பேசிய அவர்,

இதுவரை காலமாக அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தனர். இன்று பொருளாதார நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளினாலும் இனியும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

எனவே இன்று மாற்று அணியொன்றும், மாற்று பொருளாதார திட்டமொன்றும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான சரியான தருணம் இதுவாகும்.  மக்கள் இப்போது சரியான அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். இதுவரை காலமாக பிரதான இரண்டு கட்சிகள் உருவாக்கிய பொய்களில் ஏமாற்றப்பட்டே மக்கள் ஆட்சியை உருவாக்கியுள்ளனர். ஆனால் இன்று அந்த பொய்களை மக்கள் கேட்க தயாராக இல்லை.

இந்த நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றதே தவிர தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் அல்ல. 2005  ஆம் ஆண்டில் நாம் எடுத்த சில தீர்மானங்கள் தாமதாகியிருந்தால் இந்த நாட்டில் தமிழ் சிங்கள யுத்தமொன்று உருவாகியிருக்கும்.

நாட்டில் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இன நல்லிணக்கத்தை உருவாக்கி ஆட்சியை கொண்டுசெல்லும் மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை.

எனவே தான் சகல மக்களின் மனங்களையும் வெற்றிகொண்டு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கின்றோம். அதன் மூலமாகவே நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

“நாட்டை முன்னேற்ற நாம் தயாராக இருக்கிறோம்.” – அநுரகுமார திஸாநாயக்க

இலங்கையின் பொருளாதாரம் அழிவுகரமான சூழலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று கட்சியின் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பொருட்களுக்கு தட்டுப்பாடு உள்ளது, விலைகள் அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது, அதே நேரத்தில் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியும் துறைமுகத்தில் சிக்கியுள்ளது .

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்க் கொண்டு, இலங்கை கடனை அடைக்க முடியுமா என்பது அனைவருக்கும் உள்ள கேள்வியாக உள்ளது.

மக்களின் முன்னேற்றத்துக்காக நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகளை வழிநடத்த மக்கள் விடுதலை முன்னணி சக்தி தயாராக உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.