ஜே.வி.பி

ஜே.வி.பி

பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படும் விழாக்களுக்காக 30 வீத கேளிக்கை வரி – ஜே.வி.பியின் பொருளாதார அறிக்கை உண்மையா..?

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை அறிக்கையின் வரைபென குறிப்பிடும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

 

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, பொருளாதார நிர்வாக சபை மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொருளாதார ஆய்வுப் பிரிவு ஆகியன இணைந்து கடந்த 06 மாதங்களாக மேற்கொண்ட கலந்துரையாடலுக்கு அமைய இந்த இறுதி வரைபு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன், 3/5/ 2024 0034 P EC என வரைவின் முன் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு மட்டுமே எனவும் வலியுறுத்தப்பட்டது.

 

இவ்வாறு பகிரப்பட்டுள்ள ஆவணத்தில், தனிநபர் கையிருப்பு மதிப்புக் கணக்கீடு என்ற துணைத் தலைப்பின் கீழ் பொதுமக்கள் வைத்துள்ள தங்கம், வைரம் மற்றும் இரத்தின நகைகள் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய தங்க கையிருப்புடன் கூடுதலாக தனியார் கையிருப்பு மதிப்பை கணக்கிடுவதே இதன் நோக்கம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அதேபோல், 10 இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்யும் திருமணம், பிறந்தநாள் விழாக்கள், ஒன்றுகூடல் நிகழ்வுகள் போன்றவற்றுக்கு சிறப்பு உரிமம் பெற வேண்டும் எனவும், அதற்கு 30 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. தேசிய கலாச்சார கூட்டு நிதியத்தில் இவை சேமிப்பில் வைக்கப்படும் எனவும் அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பல்பொருள் அங்காடிகளில், உணவகங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்ளும் போது ஒரு தடவைக்கான தனிப்பட்ட பாவனை அதிகபட்ச கொள்வனவுத் தொகை இருபதாயிரம் ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஐந்து பேர் கொண்ட குடும்பத்திற்கு 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டர் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்படுவதாகவும், நகர்ப்புறங்களைத் தவிர ஏனைய அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மட்டுமே உள்நாட்டு எரிவாயு விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை ஆவணம் இன்னும் தயாரிக்கப்படவில்லை என அக்கட்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வந்துள்ள காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுவரும் இந்த ஆவணம் அக்கட்சியினதா என factseeker ஆராய்ந்து பார்த்தது.

 

இது குறித்து தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நிஹால் அபெசின்ஹ மற்றும் கட்சியின் ஊடகப் பிரிவிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தனது பொருளாதார கொள்கை அறிக்கையை இதுவரை வெளியிடவில்லை எனவும், தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் இந்த ஆவணம் போலியானது என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

 

இது தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்னெத்தியிடம் Factseeker வினவியபோது, ​​தேசிய மக்கள் சக்தி தற்போது வரையிலும் நில அளவையாளர்கள், பொறியியலாளர்களின் அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சித் திட்டம் தொடர்பான கருத்துக்களை மட்டுமே வெளியிட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

 

ஆகவே, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணமானது தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கைத்திட்டம் அல்ல என்பதையும் அது போலியான ஆவணம் என்பதையும் Factseeker உறுதிப்படுத்துகின்றது.

“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” – அனுரகுமார திசாநாயக்க

“இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது.” என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் பெயரை வைத்தே சஜித் பிரேமதாச கட்சியின் தலைவராகயிருக்கின்றார். அவரது தந்தை ஒரு முன்னாள் ஜனாதிபதியாக இல்லாமலிருந்தால் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினராக கூட வருவதற்கு சஜித் பிரேமதாசவுக்கு தகுதியில்லை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு நேற்று (27) பிற்பகல் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள வில்லியம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ச. அ. டெஸ்மன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க பங்கேற்றார்.
கல்வி முடிந்தது! ஆசிரிய மாணவர்களின் உரிமையை வென்றெடுப்பது எப்படி எனும் தலைப்பில் இம் மாநாடினை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜயசிங்க உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிர்வாகம் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் பல்வேறு கலை நிகழ்வுகளும் சிறப்புரைகளும் நடைபெற்றன. இங்கு உரையாற்றிய அனுரகுமார திசாநாயக்க,
இந்த நாட்டில் மக்கள் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர். அந்த மாற்றம் எங்கு ஏற்படவேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். இன்று ரணிலுக்கு மாற்றத்திற்காக சிலர் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் இன்று ரணிலுக்கான ஆதரவினை இன்னும் மொட்டுக்கட்சி தெரிவிக்கவில்லை. இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென மகிந்த ராஜபக்ஸ சொல்கின்றார். பசீல் ராஜபக்ஸவிடம் கேட்டாலும் இன்னும் தீர்மானம் எடுக்கவில்லையென்கின்றார்.
தீர்மானம் எடுத்தவர்கள் சிலர் இருக்கின்றார்கள். அவர்கள் யார் என்று பார்த்தால் மகிந்தானந்த அலுத்கமகே. இவர் ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறியிருக்கின்றார். இவர் யார் என்று அனைவருக்கும் தெரியும். ரொகான் ரத்வத்தை ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக கூறுகின்றார். இவர்தான் சிறைச்சாலை அமைச்சராகயிருந்த போது சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதிகளை பிஸ்டோலைக்காட்டி அச்சுறுத்தி மண்டியிடவைத்து அவர்களின் தலைகளில் துப்பாக்கியை வைத்தார். அவர் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்குகின்றாராம். அதேபோன்று கப்பம் வாங்கி உயர்நீதிமன்றில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரசன்ன ரணதுங்க இன்று ரணிலுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கின்றார்.
இதேபோன்று மட்டக்களப்பிலும் மாற்றத்திற்காக ரணிலுக்கு ஆதரவு வழங்கப்படும் என பிள்ளையான் அறிவித்துள்ளார்.மாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு முன்பாக மாற்றமான தலைமைத்துவம் ஒன்று தேவையாகும்.
பல தசாப்தமாக இந்த நாட்டினை ஆட்சி செய்து, பல ஆண்டுகளாக அமைச்சர்களாகயிருந்து பல ஆண்டுகளாக பிரதமராகயிருந்தவர்கள் மாற்றத்தினை எதிர்பார்க்கின்றார்கள். இவர்களது மாற்றம் என்னவாகும் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் எதிர்பார்ப்பு ஒரு மாற்றமாகயிருந்தாலும் ரணில் விக்ரமசிங்கவினால் அந்த மாற்றத்தினை கொண்டு வரமுடியாது.
அதேபோன்று சஜித் பிரேமதாசவினாலும் பொதுமக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தினை வழங்கமுடியாது.சஜித் பிரேமதாச முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் மகனாக இல்லாவிட்டால் என்ன நடந்திருக்கும்.அவர் ஒரு கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதி வேட்பாளராகவும் இருப்பதற்கு அவரிடம் உள்ள ஒரேயொரு தகுதி அவரது தந்தை ஜனாதிபதியாக இருந்தது மாத்திரமேயாகும்.
அவரது தகப்பன் ஜனாதிபதியாக இல்லையென்றால் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினராக வரக்கூடிய தகுதியும் அவரிடம் இல்லை. அவரைப்பற்றி சரத்பொன்சேகாவே பேசுகின்றார். அவர் ஆட்சிக்காலத்தில் சரத்பொன்சேகாவினை மேடையில் வைத்துக்கொண்டு திருடர்களை பிடிக்கப்போவதாக கூறினார்.ஆனால் அவர் ஆட்சிக்காலத்தில் சஜித் பிரேமதாசவையே கசினோ விடயத்தில் பிடித்திருந்தார்.
மாற்றம் ஒன்று வேண்டுமென்றால் அந்த மாற்றத்தினை செய்யக்கூடியவர்கள் யார் என்றால் தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமேயாகும். இந்த நாட்டு மக்கள் மீண்டும் அந்த மிகமோசமான பாதையில் செல்லமாட்டர்கள் என்று நாங்கள் நம்புகின்றோம்.
இன்று ஆசிரியர்கள் தமக்காக வரவு செலவு திட்டத்தில் கொண்டுவரப்பட்ட சம்பள அதிகரிப்பையே கோருகின்றனர். ரணில் விக்ரசிங்கவுக்கு 865 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. இந்த ஒதுக்கீடானது வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்படாத ஒதுக்கீடாகும்.வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை ஆசிரியர்களுக்கு வழங்கமுடியாது என கூறிவிட்டு தனக்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்ளுகின்றார் ரணில் விக்ரமசிங்க.
ஆசிரியர்கள் சாதாரண ஒரு போராட்டத்தினையே முன்னெடுத்தனர்.தமக்கான கொடுப்பனவுக்காகவே அவர்கள் போராட்டம் செய்தார்கள். ஆனால் ரணில் அவர்கள் கண்ணீர்ப்புகை, தடியடி, குண்டாந்தடி பிரயோகம் செய்து அவர்களது போராட்டத்திற்கு பதிலளித்தார்.அவருக்கு அந்த பலம் இருந்ததனால் ஆசிரியுர்கள் மீது இந்த தாக்குதலை முன்னெடுத்தார். அவர் ஒன்றை நினைவில்கொள்ளவேண்டும் இன்னும் மூன்று மாதத்தில் ரணிலிடம் உள்ள அதிகாரம் மக்களிடம் வரும்.
இந்த நாட்டில் இனவாதம் மிகப்பெரும் பிரச்சினையாக மாறியிருக்கின்றது. இந்த நாட்டில் உள்ள முழு அரசியலும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டே செயற்படுகின்றது. வடக்கில் ஒரு அரசியல் தெற்கில் ஒரு அரசியல் கிழக்கில் ஒரு அரசியல் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த நாட்டினை ஐக்கிய படுத்துவதற்கான அரசியல் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நாட்டில் கோத்தபாயவின் வெற்றியானது முஸ்லிம் மக்களுக்கு எதிரான அரசியலிலேயே கிடைத்தது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை வேறுபடுத்துகின்ற அரசியலுக்கு பதிலாக அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற அரசியலே செய்யவேண்டியுள்ளது. அந்த மாற்றத்தினையே தேசிய மக்கள் சக்தி முன்னெடுக்கும்.இந்நாட்டில் இனவாத ரீதியான அரசியலை நாங்கள் முறியடிப்போம்.
இந்த நாட்டிற்கு புதிய அரசியல் ஒன்று தேவையாகும்.மக்கள் பணத்தை சூறையாடுவது முற்றாக நிறுத்தப்படும்,மக்கள் பணத்தை வீணடிக்காத அரசியல் முன்னெடுக்கப்படும், நீதித்துறைக்கு அடிபணியும் அரசியல் அந்த மாற்றத்தினையே நாங்கள் கொண்டுவருவோம் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் ஒன்று உருவானால். தற்போதுள்ள அரசியலானது குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியலாகவே உள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் கேகாலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய மகிந்தானந்த அலுத்கமகே ரணிலை சிறையில் அடைப்போம் என்று கூறினார். ஆனால் நேற்று கூறுகின்றார் ரணில் விக்ரசிங்கவுக்கு ஆதரவு வழங்குவோம் என்று.எவ்வாறு இவர்களால் மட்டும் முடிகின்றது. ரணில் மத்திய வங்கினை கொள்ளையிட்டுள்ளார் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று மாற்றத்திற்காக ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோருகின்றனர்.
இந்த நாட்டில் மக்கள் அமைதியான முறையில் தாங்கள் விரும்பும் ஒருவரை ஆதரிக்கும் உரிமையிருக்கின்றது. இன்று மட்டக்களப்பில் அச்சுறுத்தும் ஒரு அரசியலே இருக்கின்றது. ஆசிரியர்கள் கதைப்பதற்கு பயம், அரச உத்தியோகத்தர்களுக்கு பயம். தாங்கள் விரும்பிய ஒரு அரசியலை செய்வதற்கு நாட்டு மக்களுக்கு உரிமையிருக்கின்றது. பிள்ளையானுக்கு அச்சப்படும் நிலைமையே இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இருக்கும் அனைத்து ஆயுதங்களும் களையப்படும்.ஒரு கூட்டம் நீதிக்கு சட்டத்திற்கு முரணாக அரசியல்செய்வதை அனுமதிக்கமுடியாது. அரசாங்கத்தின் ஆதரவுடன் அவ்வாறு செயற்படுவதற்கு இடமளிக்கமுடியாது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலத்தில் இவ்வாறான குழுக்களை முழுமையாக கட்டுப்படுத்துவோம். அதுஅவசியமான ஒன்றாகும். அவ்வாறு இல்லாவிட்டால் மக்கள் உரிமையினை பாதுகாக்க முடியாது.
கடந்த காலத்தில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்றது. அது தொடர்பில் ஆராய்ந்துசென்றால் இந்த ஒட்டுக்குழுக்கள் பற்றிய விடயங்கள் வெளியேவந்தது. சட்டரீதியாகவுள்ள இராணுவம் மட்டுமே ஆயுதங்களை வைத்திருக்க முடியும். வேறு யாரும் ஆயுதங்களை வைத்திருக்கமுடியாது. அவை களையப்படவேண்டும் என தெரிவித்தார்

நம்பிக்கை தருகின்ற இடதுசாரி இயக்கம் என்ற அடிப்படையில் ஜே.வி.பியுடன் இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன – எம்.ஏ.சுமந்திரன்

13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கை வெளியான பின்னரே தமிழரசுக் கட்சி இறுதி முடிவு எடுக்கும் எனவும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸ்ஸநாயக்க தலைமையிலான குழுவினருக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி.வி.கே.சிவஞானம், எஸ்.குலநாயகம், ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (11) நண்பகல் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்தச் சந்திப்புத் தொடர்பிலே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னேற்ற கரமான பேச்சுவார்த்தை எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டு விடவில்லை. ஆரம்ப கலந்துரையாடல் என்ற போர்வையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையிலான கலந்துரையாடல் இடம் பெறுகின்றது.

நம்பிக்கை தருகின்ற பேச்சுவார்த்தையாக இடதுசாரி இயக்கம் என்ற வகையில் அவர்களுடன் எங்களுக்கு இணங்கிச் செல்லக்கூடிய பல விடயங்கள் இருக்கின்றன.

குறிப்பாக ஊழல் ஒழிப்பு, மக்கள் மத்தியில் சம உரிமை என்ற பல விடயங்கள், பொருளாதார சமத்துவம், போன்ற பல விடயங்களில் நேரடியாகவே இணங்கக்கூடியதாக இருந்தது.

தமிழ்த்தேசிய பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் பழைய சரித்திரங்கள் இருந்தாலும் கூட அவர் கூறியது போன்று தற்போது இருக்கின்ற மாகாண சபை முறைமையை அப்படியே ஏற்றுக்கொள்வதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ்த்தேசியப் பிரச்சினைக்கான தீர்வு அல்ல என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள் இதில் இருந்து முன்னேறிச் செல்வதற்கான வழிவகைகளை இரு தரப்பாகவும் இணைந்து பேசி செல்ல வேண்டும். இரு தரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தாங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிடுவார்கள் அதன் பின்னர் அவர்களுடன் நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையை அடிப்படையாக வைத்து இலங்கை தமிழரசுக் கட்சி உரிய நேரத்தில் முடிவுகளை எடுக்கும் என்றார்.

ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் – அனுர குமார திசாநாயக்க

அரகலயவின் பின்னர் பின்வாங்கிய ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (02) குருநாகலில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரகலயவின் உண்மையான அபிலாசைகள் நிறைவேற்றப்படவேண்டும் என்றால் மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றும் அரசாங்கத்தினை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

2022 மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாசைகளை உறுதிசெய்யக்கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசியல்வாதிகள் இன்னமும் அரகலயவிலிருந்து பாடங்களை கற்கவில்லை மாறாக அதனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல்கட்சியுடனும் தங்களை அடையாளப்படுத்தாமல் பொதுவான அபிலாசைகளிற்காக வீதியில் இறங்கினார்கள். அவர்கள் ஊழல் மோசடி அற்ற ஒழுக்கமும் சட்டமும் காணப்படும் நாட்டை எதிர்பார்க்கின்றனர்.

பொதுவான சமூக நோக்கத்திற்காக அவர்கள் வீதியில் இறங்கினார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

விசா தொடர்பில் விசனத்தை வெளியிட்ட இளைஞனுக்கு நெருக்கடி கொடுத்தால் விளைவு விபரீதமாக இருக்கும் – நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை தனி இளைஞர் ஒருவர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தினால் அரசாங்கம் மீண்டும் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் ஒன்றிணைவார்கள் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

 

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்)திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 

அவர் மேலும் உரையாற்றியதாவது,

 

நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் 52 சதவீதமளவில் பங்களிப்பு செய்கிறார்கள்.தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தொழில் முயற்சியாளர்கள் பொறுப்புக் கூற வேண்டிய தேவை கிடையாது.ஆனால் அவர்கள் மீதே பொருளாதார நெருக்கடி சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளினாலும்,ஊழல் மோசடியாலும் நாடு வங்குரோத்து நிலையடைந்தது.

 

கொவிட் பெருந்தொற்றினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் கொவிட் பெருந்தொற்றினால் எமது அண்மை நாடுகளான மாலைத்தீவு,பங்களாதேஷ் மற்றும் பூட்டான் உள்ளிட்ட நாடுகள் வங்குரோத்து நிலையடையவில்லை. பொருளாதார மீட்சிக்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கம் பேச்சளவில் குறிப்பிடுகிறது.ஆனால் செயலளவில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

 

வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடுதல் சட்டமூலம் தற்காலிகமானதே,07 மாதங்களை வரையறுத்தே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.ஏழு மாத காலத்துக்குள் நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையுமா என்பதை குறிப்பிட முடியாது,ஆகவே தொழில் முயற்சியாளர்களுக்கு 2 ஆண்டுகளேனும் நிவாரணம் வழங்க வேண்டும்.

வெளிநாட்டவர்களுக்கு விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியை இளைஞர் ஒருவர் தனித்து வெளிப்படுத்தியுள்ளார். அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பேச்சுரிமையை அந்த இளைஞர் பயன்படுத்தியுள்ளார்.இந்த இளைஞன் குறிப்பிட்ட விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி,அதற்கு மக்கள் அவதானம் செலுத்தியதன் பின்னரே அமைச்சரவை பழைய முறைக்கு விசா விநியோகிக்க தீர்மானித்துள்ளது.

 

அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் அதனை விடுத்து இந்த இளைஞனுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்டத்தரணிகளும், நாட்டு மக்களும் அந்த இளைஞனுக்கு சார்பாக செயற்படுவார்கள். கடந்த கால நிகழ்வுகளையும் அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றுவோம் – ஜே.வி.பி அழைப்பு!

மே தினத்தை மக்களின் ஆட்சிக்காக மக்களை அணிதிரட்டுகின்ற நாளாக மாற்றிடுவோமென தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா (Tilvin Silva) தெரிவித்துள்ளார்.

 

குறித்த விடயத்தை தேசிய மக்கள் சக்தியின் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தேசிய மக்கள் சக்தி என்ற வகையில் மே தினத்தில் கலந்துகொள்ளல் பற்றி கலந்துரையாடும் நோக்கத்துடன் நாங்கள் இந்த ஊடக சந்திப்பினை நடத்த தீர்மானித்தோம்.

மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினமாகும். அத்தோடு உலகம் முழுவதும் இருக்கின்ற தொழிலாளர்கள் மே தினத்தில் தமது நோக்கங்கள் மற்றும் இலக்குகளை வென்றெடுப்பதற்காகவும் தமது ஒற்றுமையையும் பலத்தையும் காட்டுவதற்காகவும் மே தினத்தைக் கொண்டாடுகின்றார்கள்.

இந்நிலையில், இந்த நாட்டை வங்குரோத்து அடையச் செய்வித்த கொடிய ஆட்சியை தோல்வியுறச் செய்வித்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மக்கள் நேயமுள்ள ஆட்சியை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

 

அதற்கான சக்தியை அணிதிரட்டுவதே எமது தற்போதைய நோக்கமாகும். ஆனால் பெருந்தொகையான மக்களை கொழும்பிற்கு ஒன்றுதிரட்டுவது சிரமமானதென்பதால் பெருமளவிலான மக்களை தொடர்புபடுத்திக் கொள்வதை நோக்கமாகக்கொண்டு நாங்கள் நான்கு இடங்களில் மே தினத்தை கொண்டாட தீர்மானித்துள்ளோம்.

இதற்கமைய, யாழ்ப்பாணம், அநுராதபுரம், கொழும்பு மற்றும் மாத்தறை ஆகிய நான்கு பிரதான நகரங்களில் நான்கு மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் மே தினக் கூட்டத்தை முதலாம் திகதி காலைப்பொழுதிலும் ஏனைய மே தினக் கூட்டங்களை மாலைப்பொழுதிலும் நடாத்தக் கருதியுள்ளோம்.

 

மக்களின் உரிமைகளைப் பறிக்கின்ற இந்த ஆட்சியைக் கவிழ்த்து மக்களாட்சியை உருவாக்குவதற்காக மக்களை அணிதிரட்டுகின்ற மே தினமாக இந்த மே தினத்தை மாற்றிக்கொள்வோமென உழைக்கும் மக்களை முதன்மையாகக்கொண்ட ஒட்டுமொத்த மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்று 60000 இளைஞர்களின் உயிரை பறித்த ஜே.வி.பி இன்றும் இளைஞர்களை அழித்துக் கொண்டு இருக்கின்றது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

நாட்டைக் காப்பாற்ற வருவோம் என்று தம்பட்டம் அடித்தவர்கள் அன்று 60,000 இளைஞர்களின் உயிர்களை பறித்தவர்கள். ஆனால் இன்று இளைஞர்கள் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வதைத் தடுப்பதன் மூலம் அன்று செய்த தீங்குகளை மக்கள் விடுதலை முன்னணி இன்றும் செய்துவருகிறது என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

 

உமண்தாவ பௌத்த உலகளாவிய கிராமத்தில் வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளுக்காகத் தெரிவு செய்யப்பட்ட இளைஞர்களுக்கான முதலாவது வதிவிட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார் .

 

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

 

இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டம் மூல்ம் இஸ்ரேலில் விவசாயத் துறையில் வேலை செய்பவர்களுக்கு விரிவான பயிற்சி மற்றும் மன உறுதியை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சவால்களை எதிர்கொண்டு தமது பணிகளை வெற்றிகரமாகச் செய்வதற்கும் நாட்டிற்கு மீள வந்த பின்னர் தொழில்முனைவோராக வெற்றிபெறுவதற்குத் தேவையான பயிற்சிகள் இங்கு வழங்கப்படும்.

 

எங்களின் முதன்மை நோக்கம் விவசாய தொழில் மற்றும் நிர்மாணத்துறை பயிற்சி அளிப்பதன் மூலம் வாழ்க்கையை கற்பிப்பதாகும். நாட்டில் விவசாயத் தொழிலுக்கு பயிற்சி அளிக்க பல நிறுவனங்கள் உள்ளன. இருப்பினும் நீங்கள் வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் எதுவும் இல்லை. மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கான ஒரே இடம் உமண்தாவ என்று முடிவு செய்தோம். தேவையான ஒழுக்கமான சூழலும் மனவலிமையை அளிக்கக்கூடிய சூழல் இங்கு உள்ளது.

 

விவசாயத் தொழில் எப்படி நவீனப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இங்கு அனுபவபூர்வமாக காண முடிகிறது. பரந்து விரிந்த அறிவை இங்கு பெற்றுக்கொள்ள முடியும். இஸ்ரேல் உட்பட பல நாடுகளுக்கு இளைஞர்களை அனுப்புகிறோம். இவர்கள் வெளிநாடு சென்று திரும்பி வர வேண்டிய சூழலை உருவாக்க விரும்புகிறோம், பணத்தைப் மாத்திரம் தேட வல்ல , தோல்வியடையாது வாழ்க்கையை வெல்லும் குழுவாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்திட்டத்தை இன்று ஆரம்பிக்கிறோம்.

இதுவே சமூக முன்னேற்றத்தின் ஆரம்பம். இந்த நாட்டை தொழிலதிபர்கள், இந்த மண்ணை நேசிக்கும் மக்கள் நிறைந்த நாடாக மாற்றும் வேலைத்திட்டத்தின் அழகுதான் இன்று இங்கு நடக்கிறது.

 

இந்த நாட்டில் இளைஞர்கள் மற்றும் கல்வி தொடர்பில் பாரிய பிரச்சினை உள்ளது. ஆனால் நாட்டில் கல்வி சிந்திக்கக்கூடியவர்களை உருவாக்கவில்லை. நமது கல்வி சிந்திக்க முடியாத சிலரை உருவாக்குகிறது, பின்னர் உயர்கல்வி மனப்பாடம் செய்யும் ஒரு குழுவை உருவாக்குகிறது.

 

மேலும், கற்பனையே இல்லாமல் வெறும் மிதக்கும் ஒரு சிலரை ஊடகங்கள் உருவாக்கும் போது, நம்மால் முடிந்தவரை மக்களை மாற்ற முயல்கிறோம். அதற்கிணங்க இந்த நாட்டை மாற்றியமைத்து கட்டியெழுப்பி ஒரு தேசமாக நாம் வெற்றிப் பயணத்தை ஆரம்பிக்கின்றோம்.

 

நாட்டுத் தொழிலாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பக் கூடாது என்று பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்படும் இவ்வேளை இதனை தேசியப் பொறுப்பாக கருதுகிறோம். அண்மைக் காலத்தில், 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுத் தொழிலாளிகளால் அந்நிய செலாவணியாக நாட்டிற்கு கொண்டு வர முடிந்தது.

 

நாட்டுக்கு தேவையான எண்ணெய் மற்றும் எரிவாயு கிடைப்பது கடினமாக இருந்தது. ஆனால் மற்றொரு குழு வெளிநாட்டு தொழிலாளர்ககளிடம் நாட்டுக்கு பணம் அனுப்ப வேண்டாம் என்று கூறியது. ஆனால் நாம் நாட்டின் நிலைமையை மாற்றியுள்ளோம் என்றார்.

ஜே.வி.பிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து போரிட்டாலும் நாம் எதிர்கொள்ளத்தயார் – நலிந்த ஜயதிஸ்ஸ

மக்கள் விடுதலை முன்னணிக்கு எதிராக அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டாலும் அதனை தாம் வரவேற்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ரணில், சந்திரிக்கா, சஜித், மஹிந்த, கோட்டாபய மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஒன்றாக இணைந்து எங்களுக்கு எதிராக போட்டியிடுவார்களாக இருந்தால் அப்போதுதான் எங்களுக்கு கிடைத்த வெற்றி.

எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து வரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு. அதனை நாம் விருப்பத்துடன் வரவேற்போம்.

கடந்த 1947 ஆம் ஆண்டில் இருந்து ஆட்சி செய்த அனைவருமே இந்த நாட்டை இந்த நிலைக்கு கொண்டு வந்தனர். எனவே இவர்கள் ஒன்றாக இணைந்து எம்மை எதிர்க்கும் போது அதனை மக்களுக்கு இலகுவாக அடையாளம் காட்டமுடியும்.

நாட்டில் தீய விளைவுகளை ஏற்படுத்தியவர்கள் இவர்களே. நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் இவர்களே நாட்டை கொள்ளைடித்தவர்களும் இவர்களே.எமது பக்கம் இருப்பவர்கள், நாட்டை வளச்சி பாதையில் இட்டுச் செல்ல எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்கள்.

புதிய வேலைத்திட்டங்களுடன், புதிய அரசியல் தலைவருடன் மக்களின் திசைக் காட்டியாக எம்முடன் பலர் இருக்கிறார்கள்.

இன்னும் இரு நாட்களில் குறித்த இரு குழுக்கள் குறித்து நாட்டு மக்களுக்கு தெரியவரும் என நினைக்கின்றேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தற்போது சந்திரிகாவின் காலடியில் வைத்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவில் அநேகமான அமைச்சர்கள் தற்போது ரணிலுடன் இருப்பதாக கூறப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்திக்கும் தற்போது வலைவீசப்பட்டுள்ளது” இவ்வாறு நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

தனியார் மயமாகும் இலங்கையின் இலவச கல்வி – எச்சரிக்கிறார் ஜே.வி.பியின் திருகோணமலை செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா !

இலங்கையின் இலவச கல்வியினை பூரணமாக தனியார் மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை இலங்கை அரசு முன்னெடுக்க இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட செயற்பாட்டாளர் அருன் ஹேமசந்திரா தெரிவித்துள்ளார்.

 

திருகோணமலையில் இன்று(16)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிட்ட போது, “அபிவிருத்தி அடைந்த நாடுகள் பலவற்றில் காணப்படும் கல்விக் கடன் முறைமையினால் ஏற்பட்ட பாரிய சிக்கல்களை தொடர்ந்து அவர்கள் இலவசக் கல்வி குறித்து கவனஞ் செலுத்தி வருகின்ற இந்நிலையில் இலங்கை அரசு இலவசக் கல்வியினை தனியார் மயமாக்கும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளது.

இதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது இலங்கையில் பல்கலைக்கழக மட்டத்தில் மட்டும் காணப்பட்ட தனியார் மயப்படுத்தப்பட்ட கல்வியானது தற்போது முழுமையான கல்வி முறைமையையும் அதாவது ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலைக் கல்வியினைக் கூட ஆகிரமிக்கப்போகிறது அவ்வாறு நடக்கும்பட்சத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களது கல்வி நிலை கேள்விக்குறியாக மாறிவிடும்.

இலங்கையில் கல்விக் கொள்கை மடல் எனும் முன்மொழிவு இப்போது இலங்கை அரசினால் முன்மொழியப்பட்டுள்ளது. அதில் இலவசக் கல்விக்கு மாற்றீடாக கல்விக் கடன் திட்டங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினை நீக்கி வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் போன்றன இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இலவசக் கல்வியினை பாதுகாத்துக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும் தேசியப் பாடசாலை முறைமை முற்றாக நீக்கி மாகாணப் பாடசாலைகள் அனைத்தையும் ஒரே தரத்திற்கு கொண்டுவருவதுடன் கல்விக்காக அரசினால் ஒதுக்கப்படும் நிதியானது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படக்கூடும் என்பதால் பின் தங்கிய பாடசாலைகள் இதன் மூலமாக முற்று முழுவதுமாக பாதிப்பிற்கு உள்ளாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட ஜே.வி.பியினருக்கு கரிசனை அதிகம். – இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழர்களின் தேசிய பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை அதிகம். தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம் எனத் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

 

யாழ். ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (9) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

தமிழர்களின் தேசிய பிரச்சனை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்களை விட எமக்குக் கரிசனை உண்டு. தமிழ் மக்களின் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் திடமாக உள்ளோம்.

 

தமிழ் மக்களின் பிரச்சனையை இனம் கண்டுள்ளோம். அதற்கான தீர்வினை பரிந்துரை செய்யவுள்ளோம். தீர்வு என்ன என்பதை மிக விரைவில் தெரியப்படுத்துவோம்.

 

தற்போது அது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி வருகிறோம். அடுத்து தமிழ் கட்சிகளோடு பேசவுள்ளோம்.

 

தமிழ் மக்கள் யாரை ஆதரிக்க வேண்டும் என்பது, அவர்களுடைய சுய விருப்பம். ஆனால் பொதுவான நிலைப்பாடு மாற்றம் வேண்டும் என்ற நிலைமையே தற்போது காணப்படுகின்றது.

 

கடந்த 75 ஆண்டுகளாக நீலம்,பச்சை என மாறி மாறி ஆட்சிக்கு வந்து மக்களுக்கு வாய்க்கரிசி போட்டுள்ளார்கள். எனவே மாற்றம் வேண்டும் என பெரும்பாலான மக்கள் சிந்திக்கின்றனர்.

 

அநுர தான் அடுத்தது எனப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. மாற்றத்தையே ஒட்டு மொத்த இலங்கை மக்களும் விரும்புகின்றனர்.

 

இந்த நிலையில் தமிழ் பொது வேட்பாளர் பேசுவது மீண்டும் நீலம் , பச்சையைத் தான் வீறு கொள்ள வைக்கும். ஆகவே தமிழ் மக்கள் சிந்தித்துச் செயற்படுவார்கள் என நம்புகிறோம் என்றார்.

 

அதேவேளை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கலந்து கொண்டமை தொடர்பில் கேட்ட போது, எமது மாநாட்டிற்குக் கட்சி பேதமின்றி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தோம்.

 

யாருக்கும் தனிப்பட்ட அழைப்பு விடுக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மாநாட்டிற்கு வருகை தந்தார். வந்தவரை நாம் வரவேற்றோம் எனத் தெரிவித்தார்.