ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

“ஜனாதிபதி ரணிலால் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது.” – சுரேஸ் பிறேமச்சந்திரன்

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கதைகளால் மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது.” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,நேற்றைய தினம் நாடாளுமன்ற விவாதத்தில் ஒரு செய்தி முன்வைக்கப்பட்டிருந்தது. சுமந்திரன், இந்த அரசாங்கம் ஏமாற்றிக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லை, இழுத்தடிக்க வேண்டிய அவசியமில்லை, குறிக்கப்பட்ட சில நாட்களுக்குள் பேச வேண்டிய விடயங்கள் சில இருக்கின்றன அதனை பேசி பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனக்கூறிய போது, அதற்கு ஜனாதிபதி தயாராக இருப்பதாகவும் தமிழ் தரப்பினர் ஒருமித்து வந்தால் பேசலாம் என்று கூறியிருந்தார். இந்த விடயத்தில் அவர்கள் உறுதியாக இருப்பார்களா என்பது எதிர்காலத்தில்தான் தெரியவரும்.

மைத்திரி, ரணில் இருந்த கடந்த நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களுடைய பிரச்சனைகள் 4 வருடங்களாக பேசப்பட்டது. அது எதுவும் நடைமுறைக்கு வரவில்லை.

அதற்கு முன்னர் மகிந்த ராஜபக்ஸ காலத்தில் சர்வகட்சி உருவாக்கப்பட்டு பேசியும் அரசாங்கத்திற்கு தீர்வு திட்டத்தினை கொடுத்து இருந்தார்கள். அதனை மகிந்த ராஜபக்ஷ் கண்டுகொள்ளவில்லை.
பின்பு மஹிந்த ராஜபக்ஷ்வுக்கும் தமிழ் தரப்பினருக்கும் 18 சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. அதிலும் எதுவும் நடக்கவில்லை. தற்போது இவர்களே இந்த விடயங்களை பேசி முடிவுக்கு கொண்டு வரலாம் என்று கூறுகிறார்கள்.

நேற்றைய தினம் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு இணைந்த மாகாணத்திற்கான ஒரு சமஸ்டி அரசியலமைப்பு தொடர்பாக பேச வேண்டும் என்று தாங்கள் எடுத்திருப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன. இதனை யாரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.

இந்நிலையில் தமிழர் தரப்பு நிலைப்பாடு என்பது சமஸ்டி சம்மந்தமாக உள்ளது. அரசாங்கத்தை பொறுத்த வரையில் 13 க்கு மேலே போக தயாராக இருப்பார்களா அல்லது பேசுவதற்ககு முன்வருவார்களா என்ற கேள்வியும் இருக்கிறது.

மாகாண தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது மாத்திரம் அல்ல அரசாங்கம் தான் விரும்பியவாறு நியமனங்களை செய்கின்றது. வடக்கு மாகாணத்திற்கு சிங்கள உத்தியோகத்தர்களை நியமிப்பதனை தவிர்த்துக்கொண்டு தமிழ் உத்தியோகத்தர்களை நியமிக்கலாம். இவ்வாறு செய்தால் தமிழ் மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கும்.

தமிழர்களோடு உறவாடுவது போல் இவர்கள் காட்டிக்கொண்டாலும் திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா ஆகியவற்றில் யுத்தத்திற்கு பிற்பாடு எத்தனை பௌத்த கோயில்கள் வந்திருக்கின்றன, எத்தனை இந்து கோயில்கள் உடைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த இடங்களில் எத்தனை சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். இவர்களது இந்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இது நிறுத்தப்படவில்லை என்பது முக்கிய விடயமாகும்.

எனவே நல்லிணக்கத்தை உருவாக்க விரும்பினால் காணிகள் அபகரிப்பதனை ஜனாதிபதி நிறுத்த முடியும். இதற்கு குழுக்களை அமைப்பதாக கூறுகிறாரே தவிர நிறுத்துவதாக கூறவில்லை.

பாதிக்கப்பட்ட மக்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில், இனி இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படாத வகையிலான தீர்வுக்கு இவர்கள் ஒத்துக்கொள்வார்களா? என்பது தான் தற்போது இருக்கக்கூடிய விடயம்.

ஜனாதிபதி தேர்தல்களை நடத்த மாட்டேன் நாடாளுமன்றத்தை கலைக்க மாட்டேன் என்று கூறுகிறார். அடுத்த 1, 2 வருடங்கள் தேர்தல்களை நடத்தாமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப போகிறோம் என்று மக்களை ஏமாற்றக்கூடிய விடயம் தான் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால் இவர்களால் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியுமா என்பது பெரியதொரு கேள்வியாக இருக்கிறது.

ஏற்கனவே தமிழ் மக்கள் பல முறை ஏமாற்றப்பட்டவர்கள், இந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்கவின் கதைகள் என்பது எவ்ளவு தூரம் உண்மையானது? இதனை நாம் சரியான முறையில் கையாள வேண்டும். மீண்டும் ஒரு முறை தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவதற்கு நாங்கள் காரணகர்த்தாவாக இருந்து விட கூடாது.- என்றார்.

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற நான் இடம் கொடுக்க மாட்டேன் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

இலங்கையை கையேந்தும் நாடாக மாற்ற தாம் ஒருபோதும் தயாராக இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் லலித் அத்துலத்முதலியின் 86ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு நேற்று(23) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இலங்கையர்களாக நாம் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அதற்கு தேவையான வேலைத்திட்டங்கள் இவ் வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் லலித் அத்துலத்முதலி பெயரில் முதுகலைப் பட்டப்படிப்பை கற்கக்கூடிய பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவுள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

தீர்வு தருவதாக ஜனாதிபதி ரணில் கூறியதால்தான் வரவு செலவு திட்டத்தை எதிர்க்கவில்லை என்கிறது தமிழ்தேசிய கூட்டமைப்பு !

இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும்  ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை நாங்கள் வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்றும் கூறியுள்ளார். இனப் பிரச்சினை விடயத்தில் அனைத்து இன மக்களும் திருப்தியடையும் தீர்வையே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (நவ.23) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில்  ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், பாராளுமன்றம் உள்ளிட்ட 16  விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் எதிராக வாக்களிக்கவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலில் தீர்மானித்தது. ஆனால் பின்னர் எதிராக வாக்களிப்பதில்லை என்ற தீர்மானத்தை எடுத்தோம். ஏனென்றால் ஜனாதிபதி கடந்த நாட்களில் பல சந்தர்ப்பங்களில் தமிழ் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தமிழ்க் கட்சிகளுக்கு கலந்துரையாடுவதற்காக அவர் அழைப்பு விடுத்திருந்தார். இதன்படி ஜனாதிபதிக்கு பதிலளித்து அவருக்கு எங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்காக நாங்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை

தெரிவிக்கும் விடயங்களை செயற்பாட்டில் உறுதிப்படுத்தும் போதே நல்லிணக்கம் ஏற்படும். உண்மைகளை மூடி மறைத்தால் நல்லிணக்கம் ஏற்படாது. இந்நிலையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்பட்டு 5 வருடங்கள் கடந்துள்ளபோதும்  காணாமல் போனோர் தொடர்பாக எந்த விசாரணையும் இடம்பெறவில்லை.

சொற்கள் செயற்பாடுகளில் இருக்க வேண்டும். காணாமல் போனோர் தொடர்பாக ஆராய அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு 2017 இல் 5 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.  பின்னர் 2020,2021 வருடத்தில் அதற்கு மேலதிகமாக 300 மில்லியன் ஒதுக்கப்பட்டது. மொத்தமாக 800மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளபோதும் 11மில்லியன் ரூபா மாத்திரமே செலுத்தப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் காணாமல் போனவர்கள் யாரும் இல்லை என தவிசாளர் தெரிவித்திருக்கிறார். இப்படி தெரிவிக்கும் போது எப்படி நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். அத்துடன் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறியது. பலாலி விமான நிலையத்தை சுற்றி காணிகளை விடுவிப்பதாக கூறிய போதும் அதனை நிறைவேற்றவில்லை.

ஒருபுறத்தில் நல்லிணக்கம், மீள்குடியேற்றம் தொடர்பில் கூறுகின்ற போதும், மறுபுறத்தில் அதற்கு எதிரான விடயங்கள் நடக்கின்றன. தற்போதும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதனை விசாரிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.

மேலும் வனஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம் என்பன இணைந்து அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு விசேட சட்டங்கள் மூலம் மக்களின் காணிகளில் வெளியேற்றுகிறார்கள்.

தலைமுறையாக வாழ்ந்த இடங்களில் ஒரே இரவில் எல்லைகளை அமைத்து மக்களை வெளியேற்றுகின்றனர். இப்படி இருக்கையில் எவ்வாறு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும். நாங்கள் ஜனாதிபதியின் முன்னெடுப்புகளை வரவேற்கின்றோம். எல்லாவற்றையும் தீர்ப்போம் என்று கூறியுள்ளார். எல்லா மக்களும் இணங்கும் தீர்மானமாக இருந்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒரு பிரிவு அதனை எதிர்த்தால் அது நிலைபேரானது அல்ல. இதனை நாங்கள் ஏற்கின்றோம். நாட்டின் அனைத்து மக்களும் திருப்தியடைய வேண்டும். பல்வேறு செயற்முறைகளை கடந்து வந்துள்ளோம். நாங்கள் ஒருநாள் ஒன்றாக அமர்ந்தால் தீர்வு காண முடியும். தீர்வு விடயத்தில் அறிந்திருக்க வேண்டிய அனைத்தையும் ஜனாதிபதி அறிந்துள்ளார்.

40க்கும் மேற்பட்ட நாடுகள் சமஷ்டி முறையிலான நாடுகளாக இருக்கின்றன. அந்த நாடுகளே முன்னேற்றமடைந்ததாக உள்ளன. அங்கே அதிகார பரவலாக்கம் உள்ளது. இந்நிலையில் உலக நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படடுள்ளன, எங்கள் மக்கள் சுயமரியாதையுடன் வாழக்கூடிய அந்தத் தீர்வையே நாங்கள் கேட்டுநிற்கின்றோம். அதனை பெரும்பான்மை மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும். டொனமூறுக்கு முன்னர் சிங்களத் தலைவர்களும் அதனை கேட்டுள்ளனர். இதனால் இதில் தவறுகள் இருக்காது என்றார்.

“அரசாங்கத்தை மாற்ற முனைந்தால் இராணுவத்தை பயன்படுத்த வேண்டி வரும்.” – ஜனாதிபதி ரணில் எச்சரிக்கை!

” நாம் ரணில் விக்கிரமசிங்கவை முன்பு நம்பினோம். இப்போது சந்தேகப்படுகிறோம்.” எம்.ஏ.சுமந்திரன்

நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதெரிவித்துள்ளமையை சந்தேக கண்ணோட்டத்திலேயே  பார்ப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 7 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூடியது. இதன்போது வரவு செலவுத் திட்டம் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொண்டோம். பல்வேறு குறைபாடுகளை கண்டறிந்தோம். நாட்டின் நலனுக்கு முரணான விடயங்களை கண்டுள்ளோம். பாதுகாப்பு துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. பல்வேறு வகையான அடிப்படை சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் பாதுகாப்புக்கான நிதி 12 வீதத்தால் அதிகரித்துள்ளன. இது அவசியமான விடயம் அல்ல.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை விடுவிக்கும் சாதகமான விடயங்களை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் நாங்கள் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கின்றோம்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் அண்மைக் காலமாக தொடர்ச்சியாக ஒரு விடயத்தை குறிப்பிடுகின்றார். நீண்ட காலமாக நாட்டில் நிலவும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளார். அதனை நாங்கள் சந்தேக கண்ணோடே பார்க்கின்றோம். அவரை ஒருகட்டத்தில் நம்பினோம். இந்த பிரச்சினையில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்ப்பதாக ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டாலும் அதனை செய்யவில்லை என்றார்.

 

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக தனது கட்சியை வளர்க்க ரணில் முயற்சி.” – வாசுதேவ குற்றச்சாட்டு !

“ராஜபக்சக்கள் மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை வளர்க்க  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.” என இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ 20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு / செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த வரவு / செலவுத் திட்டத்தின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் நடுத்தர மக்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கு மக்கள் மத்தியில் நன்மதிப்பு கிடையாது. அரசாங்கத்தின் தீர்மானங்களை மக்கள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்களாதரவு இல்லாமல் பொருளாதார பாதிப்புக்கு தீர்வு காண முடியாது. நகர மற்றும் பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது கையாள்கிறது. எல்லை நிர்ணய குழு அறிக்கையினூடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. தமக்கு மக்களாணை உண்டு என குறிப்பிடும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உள்ளூராட்சி மன்றத் தேர்தலை உரிய காலத்தில் நடத்த அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படுதோல்வி அடையும் என்பதை உறுதியாக குறிப்பிட முடியும்.  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் பொதுஜன பெரமுன மீதான மக்களின் வெறுப்பை தீவிரப்படுத்தி, அதனூடாக ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை விடுத்து அமைச்சரவை அமைச்சுக்களின் எண்ணிக்கையை விஸ்திரப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளமை முற்றிலும் தவறானது.

அரச செலவினங்களை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினோம் என்றார்.

“ஜனாதிபதி ரணில் மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும்.” – மனோ கணேசன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகத்துக்கு வந்து அங்கே என்ன சொல்ல, செய்ய போகிறார் என்பதை தெரிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் கோரிக்கைகள் தொடர்பிலும், இலங்கையிலேயே பின்தங்கிய பிரிவினராக ஐநா சபையும், உலக வங்கியும் அறிவித்துள்ள பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார நிலைமைகள் தொடர்பிலும் காத்திரமான காரியங்களை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

வடக்கு கிழக்குக்கு வெளியே வாழும் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார பிரச்சினைகளின் “தள வேறுபாடு” களை இன்று ஐக்கிய நாடுகள் சபையே புரிந்துக்கொண்டு எம்முடன் தனியாக பேசுகிறது. இதை ஜனாதிபதியும் புரிந்துக்கொண்டு எம்மிடம் பேச வேண்டும் என அவரிடம் ஏற்கனவே கூறி விட்டேன். ஆகவே வடகிழக்கு வெளியே வாழும் தமிழ் மக்கள், குறிப்பாக மலையக தமிழ் மக்கள் தொடர்பில், பிரதான தலைமை கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணி நிச்சயமாக சாதகமாக நடந்துக்கொள்ளும்.

வடக்கில் ஜனாதிபதி செயலக உப காரியாலயம் ஒன்றை திறந்து வைத்துள்ளார். நல்லது. காணி, வீடமைப்பு, சுகாதாரம் தொடர்புகளில் பல்வேறு குழுக்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளார். இதுவும் நல்லதே. ஆனால், இவை நடைமுறையாகி நல்லது நடக்குமானால் மாத்திரமே அங்கு வாழும் அப்பாவி தமிழ் உடன்பிறப்புகள் மகிழ்ச்சியடைவார்கள். நானும் மகிழ்ச்சியடைவேன்.

மலையகத்தில் ஜனாதிபதி ஆராய்ச்சி செய்ய வேண்டியதில்லை. ஏற்கனவே, ஐநா சபை பெருந்தோட்டபுறங்களில் உணவின்மை 43 விகிதம் எனவும், உலக வங்கி பெருந்தோட்டபுறங்களில் வறுமை 53 விகிதம் எனவும் கூறி உள்ளன. ஐநா விசேட அறிக்கையாளர் டோமோயா ஒபொகடா, பெருந்தோட்டபுறங்களில் நவீன கொத்தடிமை முறைமை இருப்பதாகவும், அதுவும் தொழிலாளர் என்ற காரணத்தை தாண்டி, சிறுபான்மை தமிழர் என்பதால் நிகழ்கிறது எனவும் அறிக்கை சமர்பித்து கூறி விட்டார்.

ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மலையகம் வந்து, பிரச்சினைகளை தேடாமல், தீர்வுகளை அறிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன். அதுதான் துன்புறும் பெருந்தோட்ட மக்களை திருப்தியடைய செய்யும். 200 வருடங்களாக உழைத்து நாட்டை உருவாக்கிய பெருந்தோட்ட மக்களின் இன்றைய நிலைமை பற்றி சர்வதேச சமூகம் சொல்லுவதை கேட்டு நம்நாட்டு ஜனாதிபதி பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புதான் கேட்க வேண்டும். அதை செய்யாவிட்டாலும், இனி விசேட உணவு வழங்கல் மற்றும் ஒதுக்கீட்டு திட்டங்களை அவர் அறிவிக்க வேண்டும் என கோருகிறேன்.

பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகள் தொடர்பில் அரசுக்கு உதவ தாம் தயார் என ஐநா சபை என்னிடம் கூறியுள்ளது. அவரிடமும் கூறி இருப்பார்கள். ஐநா, மற்றும் இந்திய நாட்டு உதவிகளை கோரி பெற்று பெருந்தோட்ட மக்களின் உணவு பிரச்சினைகளை முதலில் கவனியுங்கள்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினரின் நெகிழ்வுப்போக்கு மகிழ்ச்சி அளிக்கிறது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நெகிழ்வாக இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இன்று (19) வவுனியாவில் இடம்பெற்ற, ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலக திறப்பு விழாவில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை.

இன்று நீங்கள் ஜனாதிபதியாகி விட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும். அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்” எனக் கூறியிருந்தார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும்.

நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.

நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

 

“நாட்டை பிளவுபடுத்தாமல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க திட்டமிடுகிறேன்.” வவுனியாவில் ஜனாதிபதி ரணில் !

வடக்கின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் போது சிங்கள, தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க தயார் என்றும் 75 ஆவது சுதந்திர தின விழாவின் போதாவது இந்நாட்டின் அனைத்து மக்களும் ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென தான் பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அலுவலகத்தின் கீழ் செயற்படும், வடமாகாண அபிவிருத்தி விசேட பிரிவின் உப அலுவலகத்தை நேற்று (19) வவுனியாவில் திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

நீண்ட காலமாக வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்கள் பல்வேறு காரணங்களால் சிரமப்படுவதாகவும், அவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்க தாம் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

இந்த அலுவலகத்தில் இருந்தபடி வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட முடியும். யாழ்பாணத்திற்கு மட்டுமே அனைத்தும் வழங்கப்படுவதாக அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார். தற்போது வவுனியாவிலும் அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் இது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்.

அமைச்சுக்களிலுள்ள அதிகாரிகளும் இந்த அலுவலகத்திற்கு நேரில் வந்து வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு முற்படுவார்கள் என நான் நம்புகின்றேன். அனைத்து மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

பயங்கரவாதத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கும் வடக்கு மக்களுக்குள்ள பிரச்சினைகளுக்கும் நாம் தீர்வுகளை வழங்க வேண்டும். அதேபோன்றே, இலங்கை சமூகத்தில் தமக்குள்ள உரிமைகள் தொடர்பில் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. மலையக மக்களுக்கும் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இப்பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும் என்ற சமூக கருத்து நிலவுகிறது.

எனவே இந்த பிரச்சினைகள் அனைத்தையும் தீர்க்க இதுவே சிறந்த சந்தர்ப்பம். இந்தப் பிரச்சினைகள் முறையாகத் தீர்க்கப்பட வேண்டும். இது தொடர்பில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடவும் நாட்டைப் பிளவுபடுத்தாமல் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கவும் நான் எதிர்பார்க்கின்றேன்.

முதலில் மக்களின் சந்தேகங்கள் களையப்பட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயற்படும்போது அந்த சந்தேகம் நீங்கிவிடும். போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கிடைக்கும். 83 இல் இருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம். அதுபோன்றே 2009 இல் இருந்தும் வெகுதூரம் வந்துவிட்டோம். எனக்கு தேசிய கீதத்தின் ஒரு வரி நினைவுக்கு வந்தது. அது, “ஒரு தாயின் பிள்ளைகளாக வாழ்வது” என்பதாகும். 75வது சுதந்திரதின விழாவின் போதாவது ஒரு தாயின் பிள்ளைகளாக வாழக்கூடியதாக இருக்க வேண்டுமென நான் பிரார்த்திக்கின்றேன்.

இங்கு உரையாற்றிய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, 2015ஆம் ஆண்டு வடக்கு மக்களுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். எனினும் ஏதோவொரு காரணத்தால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இப்போது, போனது போகட்டும். நாம் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்த வகையில் நெகிழ்வாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வாறாயினும் நாம் இவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நாட்டின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடியதாக இருக்கும்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு குறித்து மிகவும் மகிழ்ச்சி. வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் இவ்வாறானதொரு அலுவலகத்தை ஸ்தாபித்தமைக்காக ஜனாதிபதிக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அதேபோன்று தமிழ் மக்களின் பிரச்சினைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும் நாம் நம்புகின்றோம்.

இங்கு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,

ஜனாதிபதி, பிரதமராக இருந்த போது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்காக செயற்பட்டுள்ளார். 2015ஆம் ஆண்டு நீங்கள் பிரதமராக இருந்தபோது வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்குவதற்காக செயற்பட்டீர்கள். எனினும் அப்போது இடம்பெற்ற ஒரு சில குறைபாடுகள் காரணமாக எங்களால் அதனைப் பெற முடியவில்லை. இன்று நீங்கள் ஜனாதிபதியாகிவிட்டீர்கள். எனவே, வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. உங்களது வேலைத்திட்டங்களுக்கு எமது ஆதரவை வழங்கும் அதேநேரம் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.” என தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் வவுனியாவுக்கு வருகை – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வவுனியாவிற்கான இன்றைய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜனாதிபதியின் வவுனியா விஜயம் : எதிர்ப்பு தெரிவித்து உறவுகள் போராட்டம்

அரச அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் இணைப்பு காரியாலயம் திறந்து வைப்பு போன்ற பல நிகழ்வுகளில் ஜனாதிபதி கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி விஜயம் மேற்கொள்ளவுள்ள பகுதிகளில் வெடிகுண்டு தகர்ப்பு பாதுகாப்பு பிரிவினர் , விசேட அதிரடிப்படையினர் , இராணுவம், பொலிஸார் என பலதரப்பினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன்,ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் போராட்டங்களை தடுக்கும் முகமாக கலகம் தடுக்கும் பொலிஸாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.